சென்ற பதிவு 50 வருட
பழசு. இந்தப் பதிவு அவ்வளவு பழசு இல்லை. கிட்டத்தட்ட 40 வருட பழசுதான் என்று சொல்லலாம். இந்த ரீதியில் இன்னும்
ஐந்தாறு பதிவுக்கு பிறகு ஹைதர் காலத்திலிருந்து மோடி காலத்திற்கு நான் வந்து விடுவேன் என்று நீங்கள் நம்பலாம்;
நாற்பது வருஷங்களு க்கு முன்பு இதே ஆகஸ்ட் மாதம், 1980 ஆம் வருஷம், பிரபல நகைச்சுவை எழுத்தாளர் எஸ். வி.வி அவர்களின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒரு நகைச்சுவை இதழ் வெளியிடப் போவதாகவும், அதைத் தயாரித்துத் தரும்படியும் 'கல்கி’ ஆசிரியர் (டெல்லியில் இருந்த) என்னைக் கேட்டுக்கொண்டார். எத்தனை பெரிய கௌரவம்!.
நான் பலருக்குக் கடிதம் எழுதினேன். அவர்கள் அன்பு கூர்ந்து நகைச்சுவை கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் என்று எழுதி அனுப்பினார்கள். ஒரு நகைச்சுவை இதழைத் தயார் செய்தேன். வெளியிடப்பட்ட தேதி ஆகஸ்ட் 24,, 1980!
அந்த இதழ் தற்செயலாக
சென்ற வாரம் எனக்கு கிடைத்தது. இதழில் முக்கியமாக எழுதியவர்கள்:ரா.கி. ரங்கராஜன், எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன், இயக்குனர் ஸ்ரீதர், சாருகேசி, கோபுலு ஆகியவர்கள் கட்டுரைகளுடன், எஸ்.வி.வி. பற்றி அமரர் கல்கி எழுதிய கட்டுரையும், அத்துடன் எஸ். வி. வி. அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றது
அத்துடன் ஆர்ட் புக்வால்ட் கட்டுரை,. ரஷ்ய நகைச்சுவை கட்டுரையும் சேர்த்தேன்.
இத்தனை ஜாம்பவான்கள் கட்டுரைகளுக்கு நடுவே நம்முடைய கட்டுரை
வந்தால் பெருமையாக இருக்கும். அதே சமயம் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவு அதில் நகைச்சுவை
இருக்க வேண்டும் என்று நான் மிகவும் முயன்று “தேள் கண்டார் தேளே கண்டார்!” என்ற ’கமலா’ கதை ஒன்றை எழுதினேன் அத்துடன் கமல், கடுகு என்ற புனைப்பெயர்களில் இரண்டு கட்டுரைகளையும் எழுதினேன்.

அந்த இதழின் கடைசி பக்கம் ‘ஈவினிங் நேரத்திலே’ என்ற தலைப்பிலே ஒரு நகைச்சுவை கவிதையையும்.( எப்போதோ யாரோ எழுதியதை
நான் எழுதி வைத்திருந்தேன்.) போட்டேன். அந்த கவிதை ’மாலைப் பொழுதினிலே’ என்ற கவிதையை பல ஆங்கில வார்த்தைகளைப் போட்டு, அட்டகாசமாக எழுதி இருந்தார். துரதிர்ஷ்டவசமாக, அதை எழுதியவர் யார் என்று குறித்து வைத்துக் கொள்ளவில்லை.
இதெல்லாம் என்னுடைய ‘டாம் டாம்’.
அந்த நகைச்சுவை
இதழில் நான் எழுதிய ‘தேள் கண்டார், தேளே கண்டார்!’ என்ற கதையை இந்தப் பதிவில் போடுகிறேன்.