July 22, 2019

"அம்மாவின் கேள்விகள்”

ராபர்ட் ஃபுல்ஜும் ஒரு பிரபல அமெரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் மிகவும் சிறப்பானவை. நேரில் பேசுவது போல் இருக்கும் அவர் நடை.  
அவரது புத்தகங்கள் கிட்டதட்ட 10 பத்து லட்சம் காபிகள்  அச்சாகி உள்ளன. 27 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இது விக்கிப்பீடியா தரும் தகவல்.

அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு: WHAT ON EARTH HAVE I DONE?  “நான் ஏன் பிறந்தேன்?” என்கிற மாதிரி இது ஒரு சுயவிசாரக் கேள்வி மட்டுமல்ல; நம்மையெல்லாம் சிந்திக்கச் செய்யும் கேள்வி.
  “அம்மாவின் கேள்விகள்”  என்ற தலைப்பில் வர்  இந்த புத்தகத்தை பற்றி முதல் கட்டுரையாக எழுதியுள்ளார் அதைப் படித்து ரசித்தேன். எனக்கு தெரிந்த அளவில் அல்லது புரிந்த அளவில் தமிழ்ப் படுத்தி தருகிறேன்.
                                                                         *     *           *
"அம்மாவின் கேள்விகள்”
சியாட்டில் நகரில் என் வீடு ஒரு சிறுவர் பள்ளிக்கு எதிரில் உள்ளது, மரச்சட்டங்களால்  பள்ளிக்கு வேலி போட்டு இருக்கிறார்கள். சற்று உயரமான வேலி. அதனால்  பள்ளியில் நடப்பதை என் வீட்டிலிருந்து பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகளின் ஆட்டம், பாட்டம்,  கூச்சல் எல்லாம் தெளிவாகக் கேட்கும்.

ஒரு நாள் நான் வீட்டிற்கு முன் பக்க வராந்தாவில் நின்று கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காரில் கொண்டு வந்து, விட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.  ஒரு கார் கதவு திறக்கும் ஓசையும், அதைத் தொடர்ந்து   ‘தபால்’ என்று கதவை மூடும் ஓசையும் கேட்டது.  ஒரு அம்மா சற்று எரிச்சலுடன் இரைவதும் கேட்டது: “ஏய் BILLY, என்னடா செஞ்சு தொலைச்சே?” என்று  கத்துவது கேட்டது. “ ஒன்றுமில்லை, அம்மா”  என்கிற மாதிரி, சிறிது அழுகையைக் கலந்து பதில் சொன்னது குழந்தை.

 சரி, குழந்தை என்னதான் செய்து விட்டது? அந்த பில்லி, ஆப்பிள் ஜூஸ் பாட்டிலைத் திறந்து காருக்குள் கொட்டி விட்டதா? அம்மா கட்டிக்கொடுத்த இடைவேளை உணவு டப்பாவைத் திறந்து, சால்லேட் எடுத்தபோது டப்பா  காருக்குள் கவிழ்ந்து கொட்டிவிட்டதா?   அல்லது காரிலேயே வாயில் எடுத்து விட்டதா? டப்பாவில் இருந்த  முள்கரண்டியை எடுத்து, காரின் முன் சீட்டில் பச்சை குத்துவது போல் குருவி, மீன், பட்டாம்பூச்சி என்று  வரைந்திருந்ததா? அல்லது சிவப்பு  ‘மார்க்கர்’ பேனாவால் கார் சீட்டின் மேலே போடப்பட்டிருந்த எம்பிராய்டரி அலங்காரத் துணியில் கோலம் போட்டு இருந்ததா?  தெரியவில்லை.



 சின்ன வயதில் இந்த மாதிரி குறும்புகளை நான் செய்து இருந்ததனால் அந்த குட்டிப் பையன்  இத்தனை காரியங்களில் ஏதாவது ஒன்றைக் கச்சிதமாக செய்து இருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.  இப்படித்தான் எத்தனையோ முறை என்னைப் பார்த்து என் அம்மா கேட்டு இருக்கிறார். நானும் என் அம்மாவைப் பின்பற்றி என் குழந்தைகளிடம் இப்படிக் கேட்டிருக்கிறேன்.
  “என்னடா செஞ்சு தொலைச்சே?” 
இது அம்மாக்களின் அதிமுக்கியமான, முதல் இடத்தைப் பெறும் கேள்வி.  அம்மாவின்அடுத்த கேள்வி: “டேய், சாமி சாட்சியாகச்  சொல்லித் தொலை. என்ன புனைசுருட்டுக் காரியம் பண்ணினே?”
  அடுத்து  வரும் கேள்வி: “இனி என்னென்ன சில்மிஷம் செய்யப் போறே? என்ன பிளான் வெச்சிருக்கே?”
  இப்படி மூன்று கேள்விகளையும் தனித்தனியே என் அப்பா கேட்க மாட்டார். மூன்று கேள்விகளைப் பிசைந்து, சுருக்கி  விடுவார்.  “What the hell..." என்றுதான் சொல்வார். என்ன, அப்பாவின் குரலில் கொஞ்சம் கரகரப்பும்  கடுமையும் இருக்கும்.
குழந்தைகளுக்குத் தெரியும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில்கள் எதுவும் கிடையாது என்று!  குழந்தைகள் பேசாமடந்தை ஆகிவிடும். இல்லாவிட்டால் மெதுவான குரலில்   “ஒன்றுமில்லை...உம்ம். ஒன்றுமில்லை, உம்ம்ம்” என்று முணுமுணுக்கும். அல்லது  நம் அனுதாபத்தைச் சம்பாதிக்க, களங்கபடமற்ற, ஒன்றுமே தெரியாத அப்பாவியாக  “எனக்குத் தெரியாது ..எனக்குத் தெரியாது”  என்று மூக்கை உறிஞ்சியபடி சொல்லும்.  
 பார்க்கப்போனால் குழந்தை சொல்வது உண்மையான வாக்கு. பெரும்பாலான சமயங்களில்  என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று சிறிதளவு கூட யோசிக்காமல் சில காரியங்களைச் (அல்லது விஷமங்களை)   செய்து விடுகின்றன. அது குழந்தைகளுக்கு மட்டும் கிடைத்த சலுகை.

குழந்தைப் பருவம், அப்புறம்  வளர்ந்த காலகட்டம் ஆகியவற்றை எல்லாம்  கடந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், இப்போது என்னால் அந்த அம்மாவின் மகத்தான கேள்வியைப் பற்றிச் சற்று  சிந்திக்க முடிகிறது.

 அவைஉண்மையிலேயே  வாழ்க்கைக்கான மகத்தான கேள்விகள். சரியான விடை தரப்பட வேண்டிய கேள்விகள்.

 சில சமயம் இந்த கலவரங்களுக்குப் பின்னால் என் அடி மனதில் ஒரு கேள்வி எழும். என் அப்பா, அம்மா கேட்ட கேள்விகளின் எதிரொலி போல்.  “சரி, வாழ்க்கையில், இந்த பூமியில் பிறந்து நான் செய்துள்ளது தான்  என்ன?” என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்.  


அமைதியான மனோபாவத்துடன் நமக்கு நாமே இந்த கேள்வியை கேட்டுக் கொண்டால், இது மிகவும் அர்த்தபுஷ்டியான கேள்வியாக அமைந்து விடும். நம் சிந்தனையைத் தூண்டி விடுவதால்  நாம் செல்ல வேண்டிய வாழ்க்கைப் பாதையில் கொண்டுபோய்ச் சேர்க்கும்.

உதாரணமாக,  ‘இந்த பூமியில் பிறந்து, உருப்படியாக என்ன செய்திருக்கிறாய்?’ என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொண்டால், அது பயனுள்ளதாக அமையும். நாம் எந்த விதமான வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறோம் என்பதுடன், பூமியில் மானிடராய்ப் பிறந்த நம்முடைய    பங்களிப்பு என்ன என்பதையும் அலசிப் பார்க்க உதவும். 

அது ஒருபுறம் இருக்கட்டும்.  “நான் நம்பும் விஷயங்கள் மற்றும் புனிதமானவை  எனக்  கருதும் விஷயங்கள் சம்பந்தமாக என்ன பணியாற்றியிருக்கிறேன்” என்றும் கேட்டுக் கொள்ள வேண்டும். 

  என் மனம், காலாவதியான எண்ணங்கள் தேங்கிய  குட்டையா அல்லது நான் சற்று துடிப்பான மனதை உடையவனாக இருந்தால் ஊசிப்போன  தகவல்களை,  சற்று புதிய, மேம்பட்ட  எண்ணங்களால்  நீக்கிவிட்டு கொண்டிருக்கிறேனா?  

 என் அம்மா என்னிடம் இப்படிக் கேட்ட கேள்விகள் கேட்கும் போதெல்லாம் அவள் மீது எனக்குச் சற்று வெறுப்பு தான் ஏற்பட்டது. அவள் குரலில் இருந்த எரிச்சல் என் ஆத்மாவை ரணப்படுத்தியது.  இப்போது யோசித்துப் பார்க்கும்போது நான் வெறுப்படைந்ததன் காரணம்,  அம்மாவின் கேள்விகளுக்கெல்லாம் தக்க பதில்கள் என்னிடம் இல்லை என்பதால்தான். 

 நட்போடு விவாதம் செய்ய அவள் அழைத்ததாக நான் கருதமுடியாது. பார்க்கப் போனால் அவள் உண்மையிலேயே கேள்வி கேட்பதாகக் கூட நான் கருதவில்லை;  மறைமுகமாக என்னை   “சோம்பேறி, உதவாக்கரை, முட்டாள் என்று அறிவிக்கிறாள்; எல்லா சமயத்திலும்  இல்லை; ஒரு சில சமயங்களில்” என்று சொல்வதே சரி.

  ஆனால் இப்போது அம்மாவை பற்றி நினைக்கும் போது, அம்மாவின் மேல் சற்று மரியாதை ஏற்படுகிறது என்னைப் பற்றியும் அம்மாவின் கேள்விகளை யும் சற்று கவனமாக மனதில் அசைபோடுகிறேன்.

 இந்த மாதிரியான எண்ண ஓட்டங்களால் நான் சற்று சுறுசுறுப்படைந்து, தன் மகன்  Billy-யை சாடிக்கொண்டிருந்த அம்மாவிற்கு சில யோசனைகளைக் கூற எண்ணி  வீட்டிற்கு எதிர்புறம் இருந்த மரச்சட்ட சுவரிடம் சென்று, எட்டிப் பார்த்தேன்.  அந்த பையன் போய்விட்டிருந்தான். அந்த பையனின் அம்மா காரிலேயே உட்கார்ந்து இருந்தாள். மிகவும் சலிப்புடன் ஸ்டீயரிங்கின்  மேல் கைகளை அடித்து கொண்டிருந்தாள். அவள் அழுது கொண்டிருந்த மாதிரி தோன்றியது. ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். 

பெற்றோர்களின் இப்படிப்பட்ட தருணங்கள் என் நினைவில் உள்ளன.  இந்த சமயத்தில் ஊர் பெயர் தெரியாத ஒரு  ‘அறிவாளி’ அந்த அம்மாவின் கேள்விகளுக்கு அவரிடம் விளக்கம் அளிக்க முயலக்கூடாது. 

அம்மாவின் மற்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூற எனக்கு விருப்பமில்லை. அவர் “ நீ யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்கக்கூடும்.  இது சற்று பெரிய கேள்வி, இல்லையா?  
   நீங்கள் கூறப் போகும்  பதில்தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும். 

  சரி. அவர் கேள்வி கேட்பது ஒரு புறம் இருக்கட்டும். உண்மையிலேயே நான் யார் என்று நான் நினைக்கிறேன்? 
யாரும் மறக்க முடியாத உண்மை, நாம் இவ்வுலகில் வருவதும் போவதும் ஒரு ’சீல்’ வைக்கப்பட்ட தனிமையில் தான்.
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய முடியாது. ஏன்,  உங்கள் அம்மா கூட உண்மையை உங்களிடம் தெரிவித்து இருக்கமாட்டாள்.  நீங்கள் என்ன மாதிரி அபிப்பிராயத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறதோ, அதைத்தான் உலகம் சொல்கிறது. சொல்ல வேண்டியதை  அது அப்படியே சொல்லி விடுவதில்லை.
 அதனால் உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுதான் முக்கியமானது. கண்ணாடிக்கு முன் நின்று கொண்டு பார்க்கும்போது ஒரு நீதிமன்றம் அங்கு உருவாகி விடுகிறது எனலாம்.  அந்த நீதிமன்றத்தில் நீங்கள் தான் ஜூரி; நீங்கள்தான் நீதிபதியும் கூட! 

“பிரதிவாதி அவர்களே, அம்மாவின் கேள்விக்கு பதில் கூறுங்கள். பூமியில் பிறந்து நீங்கள் செய்தவை என்ன?”
“ கடவுள் சாட்சியாகச் சொல்லுங்கள். நீங்கள் தற்சமயம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்; அடுத்து, என்ன செய்ய எண்ணி இருக்கிறீர்கள்? 

நீங்கள் யார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்  என்பதற்குப் பதில்  தெரிந்திருந்தால்  சொல்லுங்கள்.                           ##

6 comments:

  1. சார்... பாதிக்கு மேல், மொழிமாற்றம் செய்யப்பட்ட கட்டுரையைப் படிக்கும் உணர்வு வருது. நேட்டிவிட்டி மிஸ்ஸிங்.

    ஆனால் படிக்க வாய்ப்பில்லாத ஒரு கட்டுரையை படிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

    'நான் யார்' அல்லது "நான் யாரென்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்" - இதுக்கு பதில் தேட முயன்றால், உலக வாழ்க்கையில் ஏன் நாம் இருக்கிறோம்.

    ReplyDelete
  2. பசங்க செய்யும் காரியங்கள் என்று சொன்னதும் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது.

    என் ஆங்கில ஆசிரியர் (ஓய்வுபெற்றவர்) வீட்டுக்கு சில வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அவர் மனைவி சொன்ன சம்பவம். அவங்க வீட்டில் இரண்டு பேரன்களும் எதையாவது கச கசவென செய்துகொண்டிருப்பார்கள், இல்லை சண்டை போடுவார்கள், சிரிப்பார்கள். கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பேரன்கள் என்று நாட்கள் ஓடும். ஒரு நாள் மதியம் அவங்க ரூம்லேர்ந்து சத்தமே வரலை. நானும் ரெஸ்ட் எடுக்கறாங்களோ இல்லை ஏதாவது படித்துக்கொண்டிருக்கிறார்களோ என்று நினைத்தேன். வாசல் பக்கம் ஒருவர் வந்து உங்க வீட்டுப் பசங்க மாடில செய்வதைப் பாருங்கன்னு சொன்னப்பறம் போய்ப் பார்த்தால், நியூஸ் பேப்பர் கட்டுகளை (ஒரு மாதத்திற்கானது) மெதுவா மொட்டை மாடிக்கு எடுத்துக்கிட்டு போய், ஒவ்வொரு பேப்பரா உருவி மாடிலேர்ந்து ரோடை நோக்கி வீசி, அது பறந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தாங்க. கிட்டத்தட்ட ஒரு மாதப் பேப்பர்களை இப்படிப் பண்ணியிருக்காங்க. ரோடு பூரா பேப்பரா இருக்கவும்தான் ஒருத்தர் எங்கிட்ட சொன்னதுனால பார்த்தேன் என்றார்.

    ஆனா அதுல உள்ள இன்னொசன்ஸ்... நாம ரொம்பவும் ரசிக்க முடியும் (அப்போ கோபம் வந்தாலும்). அந்த இன்னொசென்ஸ்னாலதான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்றோமோ?

    ReplyDelete
  3. நான் யார்? நான் யார்? நான் யார்? இது தெரிஞ்சால் போதுமே!

    ReplyDelete
  4. இந்த பிறவியில் என்ன செய்தோம்? இந்த என்ன செய்யப் போகிறோம்? இவை இப்போதெல்லாம் அடிக்கடி மனதில் எழும்பும் கேள்விகள்.

    ReplyDelete
  5. கேள்விகள்.... கேட்டுக் கொண்டே இருக்கிறோம். பதில் தான் கிடைப்பதில்லை!

    தமிழாக்கம் செய்த கட்டுரை படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. நான் யார் என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியும். "நான், நானே தான்" என்பதுதான் அது! விரிவான விடை வேண்டுமானால் என்னுடைய பதிவை, நேரம் இருந்தால், படியுங்கள். நன்றி.

    https://chellappaTamilDiary.blogspot.com/2019/08/blog-post.html

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!