August 22, 2016

இரு நகரங்களில்...

மூன்று நட்சத்திரங்கள்

1988-ல் நடந்த உண்மைச் சம்பவம். இதை முதலிலேயே சொல்ல வேண்டியதன் அவசியம், இது உண்மையான சம்பவமாக இருக்க முடியுமா என்ற கேள்வி இந்தப் பதிவைப் படித்து முடித்ததும் உங்கள் மனதில் தோன்றக்கூடும். இது 100 சதவீதம் உண்மைச் சம்பவம்.

 சென்னையிலிருந்து டில்லிக்குத் திரும்பிப்  போ தயார் செய்து கொண்டிருந்தோம். எனக்கு டில்லி அலுவலகத்திற்கு மாற்றலாகிவிட்டது. வீட்டில் இருந்த,தேவையற்ற பல பொருள்களை இலவசமாகக் கொடுத்துவிடுவது  அல்லது விற்று விடுவது என்று தீர்மானித்தோம். வீட்டில்நாலைந்து ஈயப்பாத்திரங்கள் இருந்தன. (இன்றைய தேதியில் ஈயப்பாத்திரங்கள் போயே போய் விட்டன என்று நினைக்கிறேன். ஈயப்பாத்திரத்தில் ரசம்  வைத்தால் அதன் ருசியே அலாதி. ஹும்..விடுங்கள்.)  ஈயம் விலை அதிகம். இலவசமாகக் கொடுக்க மனம் வரவில்லை; விலை கொடுத்து வாங்குவாரும் இல்லை.           

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலைச் சுற்றியுள்ள ஒன்றிரண்டு கடைகளில் வாங்கிக்கொள்வார்கள் என்று யாரோ சொன்னார்கள். என் மனைவியும் நானும் திருவல்லிக்கேணி போனோம். முதலில் தென்பட்ட கடைக்குப் போனோம். ஒரு கிழவர் தாடி, மீசையுடன் களையான முகத்துடன் இருந்தார்.


“ஈயச்சொம்பு இருக்கிறது. வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று கேட்டோம். “கொடுங்க.. எங்க தொழிலே ஈயச்சொம்பு செய்யறதுதான். அது ஒரு காலம்.”என்றார். பையிலிருந்து பாத்திரங்களை எடுத்துக் கொடுத்தோம். ஒன்றிரண்டு ‘டொக்கு’ வாங்கியும்   கரி படிந்தும் இருந்தது. எவ்வளவு தேய்த்தும் போகவில்லை. ஆகவே அப்படியே கொண்டு வந்துவிட்டோம். 

பாத்திரத்தை வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். ஒரு பாத்திரத்தை, ஒரு இரும்புத்துண்டின் மீது கவிழ்த்து வைத்து அடிப்பாகத்தை நாலு தடவை சுத்தியால் அடித்தார்.  கொஞ்சம் கரி விலகியதோடு மட்டுமல்லாமல் ஒரு ஐந்து மூலை நட்சத்திர முத்திரையும் அரைகுறையாக வெளிப்பட்டது.         அதைப்பார்த்ததும் அந்தப் பெரியவர் “நினைச்சேன். இது நம்ம தயாரிப்பு. இதோ பாருங்க ஸ்டார் முத்திரை. காரீயக் கலப்பு இருக்காது. 100 பர்சென்ட் உத்தரவாதம், இன்றைக்கு ஈயம் என்ன விலையோ  அதற்கே  எடுத்துக் கொள்கிறேன்.” என்றார்.

            அதைத் தொடர்ந்து, என்னைப்பார்த்து “உங்கள் நட்சத்திரம் என்ன?” என்று கேட்டார். எதற்கு திடீரென்று நட்சத்திரம் கேட்கிறார் என்று தெரியவில்லை. அவரைக் கேட்கவும் தோன்றவில்லை. “என் நட்சத்திரம் ரேவதி” என்றேன்.
            “சந்தோஷம். அம்மாவின் நட்சத்திரம்?” என்று கேட்டார். என் மனைவி “ஹஸ்தம்” என்றாள்.            “அப்படியா...ரொம்ப விசேஷம்...” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு “குழந்தை இருக்குதா?” என்று கேட்டார். “ஒரு பெண் இருக்கிறாள்” என்றாள் என் மனைவி.            “அவங்க என்ன நட்சத்திரம்?”“அவள் நட்சத்திரம் திருவோணம்” என்றாள் என் மனைவி.            “அடாடா...ரொம்ப ரொம்ப விசேஷம். மகா அபூர்வம்..” என்றார்.  எங்களுக்குப் புரியவில்லை. அவர் தொடர்ந்தார்.  “உங்கள் மூன்று பேர் நட்சத்திரமும் ரொம்பவும் உசத்தியான நட்சத்திரங்கள். அதுவும் ஒரே குடும்பத்தில் இருப்பது பெரிய விஷயம். வைணவ சம்பிரதாயத்தில் மூன்று கோவில்கள் முக்கியமானவை. திருப்பதி வெங்கடாசலபதி, காஞ்சி வரதராஜப் பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி. இந்த  மூன்று பெருமாள்களின் நட்சத்திரங்கள் என்ன தெரியுமா?“ஸ்ரீரங்கம் பெருமாள் ரேவதி, காஞ்சிபுரம் பெருமாள் ஹஸ்தம், திருப்பதி பெருமாள் திருவோணம். உங்கள் குடும்பத்திற்கு மூன்று பெருமாள்களின் அருளும் பூரணமாக உள்ளது.” என்றார்.            

அதுவரை எங்களுக்கே தெரியாத தகவல் இது! மெய்மறந்து நின்றோம். பிறகு அவரை வணங்கிவிட்டு, ஈயப்பாத்திரத்திற்கு அவர் கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். 

           ஒன்றுதான் புரியவில்லை. கடைக்கு வந்தவர்களின் நட்சத்திரத்தைக் கேட்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது ஏன்? யாரால்? அந்தப் பார்த்தசாரதி பெருமாளுக்கே வெளிச்சம்!

டில்லி: பாலம் விமான நிலயத்தில்!
2001ம் வருஷம் செப்டெம்பர் மாதம் 29ம் தேதி. மறுநாள் அமெரிக்காவிற்குப் புறப்பட,  பெட்டி, பைகளையெல்லாம் கட்டி ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறோம்.
“பெட்டியில் ஒரு அங்குலம் கூட இடம் விடாமல் சாமான்களைத் திணிக்கக் கூடாது. விமான நிலையத்தில் பெட்டி மொத்தத்தையும் காலி பண்ணி, மேஜையில் பரப்பி எல்லாவற்றையும் செக் பண்ணிப் பார்க்கிறார்களாம். அமெரிக்காவில் ட்வின்-டவர் மீது தாக்குதல் கடந்த 9ம் தேதி நடந்திருந்ததால் பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதிக்கிறார்கள” என்று என் மகள் தெரிவித்திருந்தாள்.
            “ஏர்போர்ட்டில் பெட்டியில் உள்ளவற்றை மளமளவென்று வெளியே எடுத்துவிட்டு திரும்பவும் போடத் திணறக் கூடாது. அதனால் கொஞ்சம் குறைவாகவே துணிமணிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  தீர்மானித்திருந்தோம். அதன்படியே பெட்டியில் வைத்து மூடிக்கொண்டிருந்தோம். ஆனால் அமெரிக்காவில் தங்கள் உறவினர்களுக்கு சின்னதாக ஒரு பாக்கெட் தருகிறோம் என்று இரண்டு, மூன்று நண்பர்கள் பெரிய பாக்கெட்டுகளைக் கொடுத்து விட்டார்கள்.
            அவற்றை வைத்ததும் பெட்டி ‘வீங்கி’ விட்டது. எடையும் கூடிவிட்டது. ஒரே டென்ஷனுடன் இருந்தோம்.
            இரவு ஏழு மணி இருக்கும். வாயிலில் காலிங் பெல் அடித்தது. “சரி, இன்னொரு பாக்கெட் வருகிறதோ என்னமோ” என்று நெஞ்சு படபடக்கக் கதவைத் திறந்தோம்.
            ஒரு இளம் தம்பதிகள்... பார்த்த முகம்தான்...எங்கே பார்த்தோம் என்று சட்டஎன்று  நினைவுக்கு வரவில்லை.
            “நமஸ்காரம்... ஆர். கே. புரம் விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தில் உங்களைப் பார்த்திருக்கிறோம். நாங்கள் ‘பாலம்’  விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்திலிருந்து வருகிறோம்.” என்றார்கள்.
            “அப்படியா?.. வாங்க... ஏதாவது நன்கொடை தேவையா?” என்று கேட்டேன்.
            “அதெல்லாம் இல்லை. எங்கள் சத்சங்கத்தின் ஆண்டுவிழா இன்னும் பத்து நாள் கழித்து வருகிறது. அதில் வெளியிட சின்னப் புஸ்தகத்தைத் தயார் பண்ணியிருக்கிறோம். WORD FILE-ல் கொண்டு வந்திருக்கிறோம். அதை நீங்கள் PAGEMAKER-ல் புத்தகமாக டிசைன் பண்ணித் தர முடியுமா என்று கேட்க வந்தோம்” என்றார்கள்.
            “அடாடா.. இன்றைக்குப் பார்த்து வந்திருக்கிறீர்களே.. நாளை பகல் நாங்கள் அமெரிக்கா புறப்படுகிறோமே...” என்று சொன்னேன்.
            அடுத்த கணம்,  “கவலைப்படாதீர்கள். நாங்க செய்து கொடுக்கிறோம். இரவு எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை” என்று சொன்னேன். (யாரோ என்னுள் புகுந்து அப்படிச் சொன்னதாகத்தான் எனக்கு அப்போது தோன்றியது.)
            வேலையை ஆரம்பித்தோம். தேவையான படங்களை எல்லாம் ஸ்கேன் செய்துகொண்டோம். பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்ததன. அவர்கள் அதை தட்டச்சு செய்துகொண்டு வந்திருந்தார்கள். சில ஸ்லோகங்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன. அவற்றை என் மனைவி தட்டச்சு செய்தாள். அட்டைப்படம் டிசைன் செய்து ரெடி பண்ணினோம், PAGEMAKER-ல் புத்தகத்தைத் தயார் செய்தோம். இரவு 11 மணி வாக்கில் வேலை முடிந்து பிரிண்ட் எடுத்தோம்.
            “ஸார்...ரொம்ப நன்றி... மார்க்கெட்டில் 
DTP  செய்கிறவர்கள் பத்து நாள், பதினைந்து நாள் ஆகும் என்றார்கள்.... ஊருக்குக் கிளம்புகிற நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்கிறோம். உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை.”
            “அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நீங்கள் செய்வது ஒரு தொண்டு. அதில் எங்களுக்குப் பங்கு கிடைத்தது. எங்களுக்கும் ஆண்டவன் அருளில் பங்கு கிடைக்கும். நாங்கள் நாளைக்குக் கிளம்புவதால் டென்ஷனில் இருந்தோம். அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடந்து 20 நாள் கூட ஆகவில்லை. ஆக எல்லா விமான நிலையங்களிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறோம்.  அதனால் கொஞ்சம் டென்ஷனில் இருக்கிறோம்” என்றேன்.
            “ஸார்... கவலையே படாதீர்கள். உங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் விமானத்தில் ஏற்றி அனுப்புவது என் பொறுப்பு... .பாலம் விமான நிலைய டிராஃபிக் சூப்பிரண்ட் Mr. REDDY எங்கள் சஹஸ்ரநாம சத்சங்கத்தின் உறுப்பினர். அவரிடம் ஒரு வார்த்தை சொல்கிறேன். உங்களை கேட்டிலேயே சந்தித்து அழைத்துப்போவார்.” என்றார்.
            என்னுடைய பிளட் ப்ரஷர் சர்ரென்று குறைந்தது.
            “நாளைக்குக் காலையில் அவரையே உங்களுக்குப் ஃபோன் பண்ணச் சொல்கிறேன்.” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
            அவர் சொன்னபடி, மறுநாள் மிஸ்டர் ரெட்டி ஃபோன் செய்தார்.
விமான நிலைய கேட்டில் காத்திருந்து அழைத்துப் போனார். பெட்டி எதையும் திறக்காமல்
OK பண்ணிவிட்டார். காபி வரவழைத்துக் கொடுத்தார். விமானம் வரை எங்களை அழைத்துச் செல்ல ஊழியரை நியமித்துவிட்டு விடை பெற்றார்.  ராஜ மரியாதைதான்
!
 நிம்மதியாக விமானத்தில் போய் உட்கார்ந்தோம்.
பலனை எதிர்பார்க்காது சிறிய பணியைச் செய்தோம். அதற்குப் பலனைத் தந்தார் ஆண்டவர்.!
முக்கிய குறிப்புஇந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியதுசகோதரி திருமதி எஸ்ஷோபனா.  அவருக்கு என் நன்றி!


3 comments:

  1. அருமையான பதிவு
    தொடருங்கள்
    தொடருவோம்

    ReplyDelete
  2. I believe these incidents happened to you 100% and I have no doubts at all. When you and your wife are so pious and helpful, Lord Ranganatha and Thaayaar ate always with you. A Blessed life indeed.

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    தெய்வத்தின் பரிபூரண கருணைக்குப் பாத்திரமான தம்பதியினர் நீங்கள்!

    ஈயச் சொம்பு - தங்கம் கூட அன்றைய விலையில் 10% குறைத்துக் கொண்டுதான் வாங்குவார்கள். ஆனால், ஈயம் மட்டும் அன்றைய விலைக்கு அப்படியே எடுத்துக் கொள்வார்கள்.

    ஈயச் சொம்பில் மோர் ஊற்றி வைப்பதுண்டு.

    அதே போல அடுப்பில் நேரடியாக ஈயப் பாத்திரத்தை வைக்கக் கூடாது. உருகி விடும்.

    (விறகு) அடுப்பில் தெரியாத்தனமாக அதை வைத்து, ரசம் மட்டுமல்லாமல் பாத்திரத்தையே காணோமே என்று தேடிய கதையைக் கேட்டிருக்கிறேன்.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!