July 05, 2016

தப்பு வந்தால் தப்பமுடியாது

கடவுள் கை கொடுத்த கணங்கள்’
இது “கடவுள் கை கொடுத்த கணங்கள்’ வரிசையில் வரும் பதிவு என்றாலும், இதற்குப் பொருத்தமான தலைப்பு “கடவுள் மீட்ட  நான் ஒரு விளம்பரக் கம்பெனியில் பத்து வருஷம் பணியாற்றினேன். அந்தப் பத்து வருடங்கள் என் வாழ்க்கையின் மிகச் சந்தோஷமான தினங்கள். காரணம், எத்தனையோ வருடங்களாகக் கனவு கண்டு, கடைசியில் ஐம்பதாவது வயதில் எனக்கு இந்தியாவின் மிகப் பெரிய விளம்பரக் கம்பெனியில் யாருடைய, எந்த விதமான சிபாரிசும் இன்றி வேலை கிடைத்தது.
   
 விளம்பரங்களில் சிறு தவறும் வரக்கூடாது. அச்சுப்பிழை இருக்கக்கூடாது. மொழிபெயர்ப்பு ஏதாவது செய்யப்பட்டி ருந்தால் தீர்க்கமாக, சிறப்பானதாக அந்த வாசகங்கள் இருக்க வேண்டும். தப்பு ஏற்பட்டால் வேலையே போய்விடக் கூடும். 
    ஒரு சமயம் இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்ட போது எனக்குக் கடவுள் கை கொடுத்த கணங்களைப் பற்றிக் கூறுகிறேன்.

முதல் எழுத்தைக் காணோம்:
ஒரு பிரபல கம்பெனியின் புதிய தயாரிப்புக்கு விளம்பரங்கள் தயாரிக்கும்  வேலை எங்கள் கம்பெனிக்குக் கிடைத்தது. நான்கு தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும் தயாரிக்கும் பணி. லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும் என்பதால் எல்லாருமே தீவிரமாகச் செயல்பட்டோம்.
            மாதிரி விளம்பரங்கள், டிவி, ரேடியோ விளம்பரங்கள், போஸ்டர்கள் என்று பல்வேறு விஷயங்களைத் தயார் செய்து, அந்தக் கம்பெனியின் உயர் அதிகாரிகளிடம் காட்டி, அவர்கள் தேர்ந்தெடுத்தவற்றை ‘பக்கா’ விளம்பரங்களாக உருவாக்குவதில் ஈடுபட்டோம். டிவி விளம்பரம் தயாரிக்க பம்பாய் போக வேண்டியதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் சென்னையில் பல வசதிகள் இல்லை. கம்ப்யூட்டர்கள் மெதுவாக தலையைக் காட்டிக் கொண்டிருந்த கால கட்டம். உதாரணமாக டிவி விளம்பரங்களில் படங்களின் மீது எழுத்துகள் வரவேண்டுமானால் (இதை SUPER என்பார்கள்.) பம்பாய்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் லண்டன்தான்!
   விளம்பரங்களில் SUPER ஆக வரவேண்டிய வாசகங்களைத் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் தயார் பண்ணும் பணி என்னுடையது. அந்தந்த மொழிபெயர்ப்பாளர்களிடம் ஆங்கிலத்தில் வாசகத்தைக் கொடுத்து, மொழிபெயர்த்து வாங்கிக் கொள்ளவேண்டும். அவற்றைப் படிக்கச் சொல்லி, சரியாக வந்திருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
            டிவி விளம்பரத்தில் விளம்பரம் செய்யப்படும் பெயரையும் அதைப் பற்றி சின்ன SLOGAN-ஐயும் அந்தந்த மொழியில், ஒரே வித LAYOUT-ல் லெட்டரிங் செய்யும் ஆர்ட்டிஸ்ட்டுகள் எழுதிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு மொழி தெரியாது என்பதால், மொழிபெயர்ப்பாளர்கள், சற்றுப் பெரிய எழுத்தில், நிறுத்தி நிதானமாகக் கையால் எழுதிக் கொடுப்பார்கள்.  அதைப்பார்த்து  லெட்டரிங் செய்து, புகைப்படம் எடுத்து, டிவி விளம்பரத்தில் சூப்பராகப் போடுவதற்கு உகந்த அளவில் போட்டோ பிரிண்ட் போட்டுக் கொடுக்க வேண்டும். அதைப் பம்பாயில் விளம்பரப் படத்தைத் தயாரித்துத் தரும் நிறுவனம் உபயோகித்துக் கொள்ளும்.
            இதன்படி நான்கு மொழிகளிலும் வாசகங்களை எழுதி, பிரிண்ட் போட்டுக் கொடுத்தேன். பம்பாய் சென்று படப்பிடிப்பை மேற்பார்வை பார்த்து, தயாரித்து எடுத்துக் கொண்டு வரும் கிரியேட்டிவ் டைரக்டரிடம், ஆர்ட்டிஸ்ட் எழுதியதைக் கொடுத்துவிட்டேன். அந்தந்த மொழிக்காரர்களிடம் காட்டி “OK” என்று கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டேன். 
    கிரியேட்டிவ் டைரக்டரும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பம்பாய் சென்றுவிட்டார்.
 மறுநாள் பிற்பகல், ஒரு மொழிபெயர்ப்பு வேலைக்காக தெலுங்கு மொழிபெயர்ப்பாளரை வரச் சொல்லியிருந்தேன். வந்தவர் என் மேஜை மீதிருந்த லெட்டரிங் செய்யப்பட்ட பேப்பரை சும்மா புரட்டிப் பார்த்தார். கன்னடத்தில் செய்யப்பட்ட லெட்டரிங்கை ஒரு தரம், இரண்டு தரம் பார்த்துவிட்டு “சார், இது என்ன, எப்படி இது ஓகே பண்ணியிருக்கிறது? இதில் தப்பு இருக்கிறது. ஒரு எழுத்து விடுபட்டுப் போயிருக்கிறது, அதுவும் முதல் எழுத்து.” என்றார்.
            எனக்குப் பெரிய அதிர்ச்சி. “அப்படியா? நிச்சயமாகவா?” என்று கேட்டேன். “இதோ பாருங்கள் ஐந்து எழுத்து மலையாளத்தில் இருக்கிறது. தெலுங்கில் இருக்கிறது, தமிழில் இருக்கிறது. கன்னடத்தில் நாலு எழுத்துக்களே ஆர்ட்டிஸ்ட் எழுதியிருக்கிறார். இதைப் புகைப்படம் எடுத்துக் கொடுத்துவிட்டீர்களா?  டிவி விளம்பரத்தில் இதை உபயோ கித்தால், மகா பெரிய தவறு ஆகிவிடுமே” என்று அவர் சொல்லச்சொல்ல என் தலை கிறுகிறுத்தது.
      “அப்படியா? ...கிரியேட்டிவ் டைரக்டரிடம் சொல்லி அதை உபயோகிக்காமல் இருக்கச் சொல்லவேண்டும்” என்று அடுத்த நடவடிக்கைக்கு ஆயத்தமானேன்.
  அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பம்பாய்க்குப் போன கிரியேட்டிவ் டைரக்டர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. எந்த ஸ்டூடியோவில் ‘விடியோ’வைத் தயார் செய்துகொண்டிருக்கிறார் என்பதும், எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. (நினைவு கொள்க: செல்போன் என்ற வார்த்தை உலகிற்குத் தெரியாத காலம் அது!)
            வயிற்றில் புளி கரைத்தது; தலையில் ‘குழம்பு’ கொதித்தது. தப் சூப்பரைப் போட்டு வீடியோ தயாரித்துக் கொண்டுவந்துவிட்டால், விடியோவைப் போட்டுக் காட்டாமல் இருக்க முடியாது. போட்டால் எங்களுக்கு விளம்பர பிசினஸைக் கொடுக்க மாட்டார்கள். “இன்னும் ரெடி ஆகவில்லை” என்று பொய் சொன்னால் இன்னும் ஆபத்து.
            கன்னட மொழிபெயர்ப்பாளர் கம்பெனி ஊழியர் அல்ல. அவர் செய்த தப்பு என்று நான் நழுவ முடியாது. என்ன செய்வது என்று புரியவில்லை. ஆறு மணி ஆகிவிட்டது. ஆனாலும் வீட்டுக்குக் கிளம்ப மனம் வரவில்லை.
    ஒரு உரக் கம்பெனியின் சின்னப் பிரசுரத்தைத் தமிழ்ப்படுத்த வேண்டிய வேலை இருந்தது. அதைச் செய்ய ஆரம்பித்தேன். மணி ஏழு ஆகியிருக்கும். அப்போது போன் வந்தது, ஸ்டூடியோ மேனேஜருக்கு. அவர் வீட்டுக்குப் போய்விட்டதால் நான் எடுத்தேன். ஆஹா...பம்பாயிலிருந்து கிரியேட்டிவ் டைரக்டர்தான்! எனக்குத் தலைகால் பிடிபடவில்லை.
            “என்ன வேண்டும்...நான் மட்டும்தான் இருக்கிறேன். முதலில் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். விளம்பர விடியோவில் சூப்பர் எல்லாம் போட்டுவிட்டீர்களா? என்று சொல்லுங்கள்” என்று பரபரப்பாகக் கேட்டேன்.
  “இல்லை. விடியோ பற்றிப் பேசுவதற்குதான் போன் செய்தேன். விடியோ நாளை பகல்தான் ரெடி ஆகும்”
     “அப்படியா? அதில் கன்னடத்தில் லெட்டரிங் பண்ணின ‘சூப்பரில்’ தப்பு உள்ளது. அதை உடனே KILL பண்ணிவிட வேண்டும். ஒரு எழுத்து விட்டுப் போய்விட்டது.” என்றேன்.
            “அடப் பாவமே? வேறு லெட்டரிங் செய்து அனுப்பமுடியுமா? நாளைக் காலைக்குள் வந்து சேரும்படி கூரியரில் அனுப்ப வேண்டும். அங்கு இப்போது ஆர்ட்டிஸ்ட் இருக்கிறார்களா?”
            “இல்லை. நான் விடுபட்ட எழுத்தை எழுதி, புதிதாகப் பிரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். உங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை, நீங்களே போன் செய்தீர்கள். நான் இப்பவே கூரியரில் அனுப்பி விடுகிறேன். முதலில் உங்களிடம் இருக்கும் கன்னட சூப்பரின் மேல் ஒரு பெரிய ‘எக்ஸ்’ குறியைப் போட்டுவிடுங்கள்.”
    “சரி..சரி.. நான் எதற்கு போன் செய்தேன் என்றால், இங்கு வேலை நாளை மத்தியானம்தான் பூர்த்தியாகும். வீடியோ படத்தை நாளைக்கு மூணு மணிக்குப் சென்னையில் ஒரு ப்ரொஜக்‌ஷன் தியேட்டரில் போட்டுக்காட்ட ஏற்பாடு பண்ணியிருந்தோம். அதை மாலை ஏழு மணிக்கு மாற்றும்படி சொல்லவேண்டும். காலை விமானத்தை என்னால் பிடிக்கமுடியாது. வேலை முடிந்த  பிறகு, பகல் ஃப்ளைட்டில் வருவேன்.”
   “அப்பபடியே சொல்லிவிடுகிறேன். இதோ, கூரியர் கம்பெனி ஆள் வந்துவிட்டார். உங்கள் அட்ரஸ் சொல்லுங்கள்” என்றேன். சொன்னார். புதிதாக எழுதப்பட்ட சூப்பரை அவருக்கு அனுப்பினேன் அப்புறம்தான் உயிர்  வந்தது.
            மறுநாள் பகல் வீடியோவுடன் பம்பாயிலிருந்து வந்து, மாற்றி அமைக்கப்பட்ட நேரத்தின்படி வீடியோ தியேட்டருக்குச் சென்று படத்தைப் போட்டுக் காண்பித்தார் கிரியேட்டிவிவ் டைரக்டர்..
  தியேட்டரிலிருந்து எனக்குப் போன் பண்ணினார். “படம் ஓகே ஆகிவிட்டது.” “தப்பில்லாத சூப்பரைப் வீடியோவில் போட்டீர்களா?” என்று கேட்டேன்.
    “நீங்கள் அனுப்பிய சூப்பர் வந்தது. ஆனால் எந்த மொழியிலும் சூப்பர் போட நேரமில்லை !” என்றார்.
    “அப்பாடி” என்று நான் பெருமூச்சு விட்டேன். மூச்சு விட்ட வேகத்தில் மேஜை மேலிருந்த கண்ணாடி பேப்பர் வெயிட் லேசாகப் பறந்தது என்பது உண்மை !
            கடவுள் கை கொடுத்தது மட்டுமல்ல; கைவிடவும் இல்லை !

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

4 comments:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    நிஜமாகவே ஒரு திரில்லர் சினிமா பார்த்த உணர்வு!

    கடவுள் கை கொடுத்து, காப்பாற்றியும் விட்டார்!

    நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. Great Agasthian.Very nice advertisement experience.
    K.Ragavan.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!