November 17, 2015


 பித்துக்குளி முருகதாஸ் இன்று காலமானார். அற்புதமான பாடகர். குரல் வளம் மட்டுமல்ல; ஹார்மோனியத்தில் புகுந்து விளையாடும் விரல் வளமும் கொண்ட இசைக் கலைஞர்.
முன்பு எழுதிய பதிவை மீள்பதிவாகப் போடுகிறேன்’

பித்துக்குளி முருகதாஸும் நானும்

ஐம்பதுகளில் கொத்தவால் சாவடி, பூக்கடை பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீராமநவமி, நவராத்திரி சமயங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் நடு வீதியில் போடப்பட்ட சுமாரான மேடையில் இசைக் கச்சேரிகள் நடைபெறும். அதில் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பக்தி பாடல் நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது.. தரையில் தான் உட்கார்ந்து கச்சேரிகளைக் கேட்கவேண்டும். அந்த கூட்டத்தில் நான் நிச்சயமாக இருப்பேன். ஒரு பக்கமாக நின்று கொண்டே கூட இரவு12, 1 மணி வரை கச்சேரிகளைக் கேட்பேன்
முருகதாஸின் பயங்கர அபிமானி. வார்த்தைத் தெளிவு,  உச்சரிப்பு சுத்தம், அலட்டல் இல்லாத சங்கீதம் ஆகியவை காரணமாக தமிழ் மொழியின் அழகும், பாடல்களின் சிறப்பும் முருகதாஸின் குரலும் என்னை எங்கோ கொண்டு போய்விடும். பாரதி விழாக்களில் பித்துக்குளி பாடாமல் இருக்க மாட்டார்.
பின்னால் டேப் ரிகார்டர்கள் வந்ததும், நிறைய ரிகார்ட் பண்ணி வைத்துக் கொண்டு கேட்டேன். திருப்புகழ், கந்தர் அனுபூதி, ஊத்துக்காடு, மகாகவி பாரதி ஆகியவர்களின் பாடல்களை எனக்கு அறிமுகப் படுதியவர் பித்துக்குளிதான்.

பிறகு நான் டில்லிக்குப் போய் விட்டேன். டில்லிக்கு பல சமயம் அவர் வந்திருக்கிறர். ( ஏன், யூ.என். ஐ. கேன்டீனுக்குக்கூட வந்திருக்கிறார்.)

 *              *                 *
தமிழுக்கும், இசைக்கும், ஆன்மீகத்திற்கும் இவர் ஆற்றிய பணி மகத்தானது.. ஆனால் சங்கீத அகாடமிக்கு இப்படி ஒருவர் இருப்பதாகக் கூடத் தெரியவே இல்லை. இவரது   79-வது வயதில் தான் இவருக்கு விருது கொடுத்தது!. அதற்கு முன்பு அரசு என்ன செய்தது தெரியுமா. இவர் பக்தி நிகழ்ச்சிகள் நடத்த தென் ஆப்பிரிக்கா சென்றார். அந்த காரணத்துக்காக ரேடியோவில் அவருக்கு வாய்ப்புகளைத் தரவில்லை.
அதுமட்டுமா? ஒரு காலத்தில் ரேடியோவில் ஹார்மோனியம் வாசிப்பதற்குத் தடை..(இந்த   ஹார்மோனியத்  தடை பைத்தியகாரத்தனமானது “ என்று சுப்புடு எவ்வளவோ  எழுதியும் பலனில்லை.)   பித்துக்குளிக்கு வாய்ப்பே தராததிற்கு இதுவும் ஒரு காரணம். இதனால் அவருக்கு  ஒரு அணு அளவும் நஷ்டமில்லை..
டில்லியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் அவரது நிகழ்ச்சிகள் எங்காவது இருக்கிறதா எண்று பேப்பரைப் பார்ப்பேன். சில வருஷங்கள் கழித்து அவரது டெலிபோன் எண்ணைக் கேட்டு வாங்கி கொண்டேன். முருகாவின் வீட்டுக்கே போன் செய்து கேட்டதும் உண்டு. (பித்துக்குளி அவர்களை எல்லாரும் முருகா என்றுதான் குறிப்பிடுவார்கள்; அழைப்பார்கள்.. ஆகவே நானும் அப்படியே குறிப்பிட விரும்புகிறேன்.)
*           *      *
முருகா தனது 60-வது வயதில் தேவி சரோஜாவைத் திருமணம் செய்து கொண்டார். அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு அவர் ரிஷிகேசம் முதலிய இடங்களுக்குச் சென்று விட்டு டில்லிக்கு வந்தார். சங்கர மடத்தில்கச்சேரி. டேப் ரிகார்டருடன் நாங்கள் போயிருந்தோம். கச்சேரியின் இடையில் அவர்  தான் திருமணம் செய்து கொண்டதைப் பற்றி சற்று விரிவாகப் பேசினார். அதுவும் ரிகார்ட் ஆகி இருந்தது. வீட்டுக்கு வந்து  அதைக் கட்டுரையாக எழுதினேன். அதில் முடிவில் ஒரு பாடலைச் சொல்லியிருந்தார். அது சரியாக ரிகார்ட் ஆகவில்லை. மறுநாளே அவர் சென்னைக்கு சென்று விட்டதால். கட்டுரையைத் தபாலில் அவருக்கு அனுப்பினேன்.  பாடல் வரிகளைப் பூர்த்தி செய்து தரும்படியும், கட்டுரையை .வெளியிட  அனுமதியையும்  கேட்டிருந்தேன். அவரிடமிருந்து இரண்டு தினங்கள் கழித்து சம்மதம் வந்தது. கட்டுரை குங்குமத்தில் பிரசுரமாயிற்று. (குங்குமத்தில் வெளியான கட்டுரையைத் தனிப் பதிவாகப் போடுகிறேன்.)
*          *                     *
டில்லியிலிருந்து சென்னைக்குத் தாற்கலிகமாக- 84-ல்  திரும்பி வந்தபோது ஒரு நவராத்திரி சமயம், அவரது இசை நிகழ்ச்சிகள் எங்கு நடக்க இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள  அவருக்குப் போன் செய்தேன்
  ”நவராத்திரியின் போது ஒரு கச்சேரியும் செய்யப் போவதில்லை. ஒன்பது நாளும் குங்குமப் பூஜை செய்யப் போகிறேன். பூஜை முடிந்ததும் சிறிது நேரம் பாடுவேன்..” என்றார்.
“ முருகா... என் மனைவியும் நானும் பூஜையில் கலந்து  கொள்ள வரலாமா? “ என்று கேட்டேன்.
“ வாருங்கள்... சரியாக ஆறு மணிக்கு ஆரம்பித்து விடுவேன்...” என்று சொல்லிவிட்டு, “ சூளைமேட்டில் ஒரு வீட்டில் பூஜை நடக்கும்” என்று சொன்னார். வீட்டு முகவரியையும் தந்தார்.
என் மனைவியும் நானும் ஒன்பது நாளும் பூஜைக்குப் போனோம். பூஜையில் கலந்து கொண்டவர்கள்: மொத்தம் ஆறு பேர்கள்தான். அந்த வீட்டில் இருந்த கணவன்,மனைவி. முருகா. தபேலாக்காரர் மற்றும் நாங்கள் இரண்டு பேர். அவ்வளவுதான். இடையில் ஒன்றிரண்டு பேர் வந்தார்கள்..(அவரது சகோதரியும் வந்திருந்தார். அவருடன் எங்களுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. முருகாவின் எளிய வாழ்க்கையைப் பற்றி சற்று அறிந்துகொண்டோம்)
 சுமார் ஒரு மணி நேர குங்கும அர்ச்சனைக்குப் பிறகு ஹர்மோனியத்துடன் பாடினார். அறையில்  நாங்கள் நாலு பேர் தான். ஆனால் முருகாவோ நாலாயிரம் பேர் உள்ள கூட்டத்தில் எப்படி பாடுவாரோ அப்படி மெய்மறந்து பாடினார். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியும்! அது மட்டுமல்ல அந்த ஒன்பது நாளும் அவர் பாடியதை அவர் அனுமதியுடன் ரிகார்ட் பண்ணினேன். விஜயதசமியன்று அவரது மைலாப்பூர் வி.எம். தெரு வீட்டில் பெரிய அளவில் பூஜையும் பஜனையும் நடந்தது. மகாப் பிரசாதமும் வழங்கப்பட்டது. அதற்கும் போயிருந்தோம்.
(தொடர்பு இருக்கிறதோ இல்லையோ ஒரு குறிப்பை இங்கு எழுத விரும்புகிறேன்.
நவராத்திரி பூஜையின் போது கடைசி மூன்று தினங்கள், பஜனை துவங்குகிற சமயம் ஒரு இளைஞன் பூஜைக்கு வந்தான்.. பதினைந்து பதினாறு வயது இருக்கும். முருகாவுடன் அவனும் மெலிதாகப் பாடினான். வேல் விருத்தம், தேவேந்திர சங்க வகுப்பு பாடல்களில் விறுவிறுப்பான நடையும், வேகமும். இசையும், சந்தங்களும் அபாரமாக இருக்கும் “ ’தரணியில் அரணிய முரண் இரணியன்”  என்று முருகா எடுத்தவுடன் இளைஞனும் சற்று உரத்த குரலில் கூடவே ஈடுபாட்டுடன் பாடினான். அதைக் கேட்டு மெய்மறந்தேன். “ சே! நாம் இதை எல்லாம், மனப்பாடம் செய்யாமல் இருக்கிறோமே’ என்று மனதிற்குள் என்னையே நொந்து கொண்டேன்.)
**       **           **
மூன்றாண்டுகளுக்கு முன்பு எஸ். ஒய். கிருஷ்ணஸ்வாமி ஐ. ஸி. எஸ். அவர்கள் குடும்ப டிரஸ்ட் நிகழ்ச்சியில் அற்புதமாக 3 மணி நேரத்திற்கு மேல் பாடினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், 50 களில் புகழ்பெற்று விளங்கிய அமெச்சூர் நடிகர் டாக்டர் ராமமூர்த்தியின் குடும்பத்தினர் ‘தத்வலோகா’வில் நடத்திய நிகழ்ச்சியில் பாடினார். சற்று தள்ளாமை காணப்பட்டது. ஆனால் மேடை ஏறியதும், ஐம்பதுகளில் நான் பார்த்த அதே முருகா; அதே உற்சாகம்.
முருகா நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

20 comments:

  1. நல்லதொரு நினைவஞ்சலி!

    ReplyDelete
  2. முருகதாஸ் எங்க ஊர்க்காரர் (கோயமுத்தூர்) என்பதில் பெருமை கொள்கிறேன்.

    ReplyDelete
  3. Great singer.Good tribute .
    K.Ragavan
    Bengaluru

    ReplyDelete
  4. வணக்கம்
    நீங்காத நினைவுகள்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. ஒவ்வொரு புதுவருஷப்பிறப்பு நாள்
    திருச்சி மலைக்கோட்டை நாலு வீதிகளிலும் அவர் ஊர்வலமாக
    பஜனை பாடல்கள் பாடி, அப்படியே மலைக்கோட்டையின் படிகள் ஏறி, உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க செல்வார். அத்தனை ரசிகர்களுடன்.

    எனது வீடு ஆண்டார் வீதியில் அவரது ரசிகர்கள் ஏராளம்.

    அவரது குரல் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  6. திரு. பித்துக்குளி முருகதாஸ் பற்றிய நல்ல நினைவலைகள்!

    ReplyDelete
  7. வணக்கம்,

    நீங்கள், பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பாடல்களை ரிக்கார்ட் செய்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள முடியுமா? எங்களுக்கும் அவரைக் கேட்கும் இன்பம் கிடைக்கும்.

    நன்றி,
    வெ.நடராஜன்
    பெங்களூரு

    ReplyDelete
  8. "கண்ணா...கண்ணா... ஆடாது அசங்காது வா வா கண்ணா" என்று அவருக்கே உரித்தான குரலில் பக்திரசம் ததும்பப் பாடுபவர். அந்த பக்தி பா(B)வம்தான் கேட்பவர்களுக்கும் தொத்திக்கும்போல. ஏற்கனவே நன்றாகப் படித்தபோதிலும், மீண்டும் நினைவுகொள்வது நன்றாகத்தான் இருக்கிறது. ஆமாம் அந்த குங்குமம் கட்டுரை எப்போது வரும்?

    ReplyDelete
  9. உஜ்ஙல் பின்னூட்டத்திற்கு நன்றி.
    ஆறு மாதமாக ஒரு வரி படிக்கவில்லை: ஒரு வரி எழுதவில்லை.
    கண்ணில் கோளாறு. பார்வை சரியாக உள்ளது. ஆனால். டபுள் விஷன் மாதிரி இரண்டு கண்ணு ம் வெவ்வேறு அளவிலும் சற்று ஏற்ற இறக்கத்ததுடன் பார்க்கின்றன. விரைவில் .அவை கூட்டணி அமைத்துக் கொள்ளும் என்று மருத்துவர் சொல்லி இருகிறார்.. -- கடுகு

    ReplyDelete
  10. Sir. Namaste. Hope you are safe from the floods.

    ReplyDelete
  11. We r safe. But we had lot of tense momnets. We moved to Besant nagar where power was not shut off. Thank you for your kind enquiry.
    -Kadugu

    ReplyDelete
  12. தங்கள் நலம் அறிந்து மகிழ்ச்சி. நாட்டுலதான் கூட்டணி வெற்றிபெற அவசியம்னா, நம்ம உடம்புலயும் தேவையாயிருக்கே.. புத்தாண்டில் புதுப் பொலிவுடன் வருக...

    ReplyDelete
  13. உடல் உபாதைகள் நீங்கி புதுப் பொலிவுடன் வருக!உங்கள் வருகையை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  14. விரைந்து வருக. உங்களுக்கும் எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. Sir. Namaste. Wish you a very very happy new year.

    ReplyDelete
  16. பொங்கல் வைத்த (சாப்பிட்ட) கையோடு எழுத ஆரம்பியுங்கள். தை மாதம் உங்களுக்கு பொலிக பொலிக என்று ஆரம்பிக்கட்டும்.

    ReplyDelete
  17. இனிய பொங்கல் வாழ்த்துக்கள். தை பிறந்து வழி காட்டட்டும்.

    ReplyDelete
  18. சார், நமஸ்காரம். இப்போ எப்படி இருக்கேள்?

    ReplyDelete
  19. கடுகு சார்.... நலமா? எலெக்ஷன் நேரம் நெருங்குகிறது... அரசியல் சூடு பரவும் நேரத்தில், உங்கள் நகைச்சுவை கட்டுரைகள் வரவேண்டாமா?

    ReplyDelete
  20. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!