March 15, 2014

ஜார்ஜ் பர்ன்ஸ் - சிரிப்புப் புத்தகம்

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர், எழுத்தாளர் ஜார்ஜ் பர்ன்ஸ். நூறு வயது வாழ்ந்தவர்.  தனது 80 வயதில் நடித்து ஆஸ்கர் பரிசைப் பெற்றவர்..
 பரிசை ஏற்றுகொண்டதும் அவர் நிகழ்த்திய சிறிய உரை:
Thank you. Thank you. Thank you. Thank you very much. This is a beautiful moment for me. You know, I've been in show business all of my life and I've loved every minute of it. And being honored tonight by getting this award proves one thing: that if you stay in the business long enough and if you can get to be old enough, you get to be new again.

 I was very fortunate to work with two fine actors like Walter Matthau and Dick Benjamin, and to be directed by Herb Ross, and a script by Neil Simon, and with a great producer like Ray Stark, and for a beautiful studio like MGM. And being surrounded by all that talent was a great break for a newcomer like myself. 

And the last picture I made was thirty-seven years ago, and making "The Sunshine Boys" was so exciting I've decided that I'm gonna make a picture every thirty-seven years. Thank you.

’ஓ,காட்’ படத்திலும்  நடித்தவர்.

அவரது புத்தகங்கள் அத்தனையும்  நகைச்சுவை புதையல்கள்தான்.  வரிக்கு வரி  கிண்டலும் நையாண்டியும்தான். அவரது   THE MOST OF GEORGE BURNS  (800 பக்கம்) உட்பட நாலைந்து  புத்தகங்கள் என்னிடம் உள்ளன.

DR, BURN'S PRESCRIPTION FOR HAPPINESS  என்ற புத்தகத்தில் அவர் எழுதியுள்ள முன்னுரை, முகவுரை, அறிமுக உரை என்று 14 பக்கம் எழுதியுள்ளார். அவற்றைத் தமிழ்ப் படுத்தித் தருகிறேன்.
 *                       *                     *
முன்னுரை: 
இதோ மற்றொரு புத்தகத்தை எழுதிவிட்டு வந்திருக்கிறேன். இது எனது ஐந்தாவது புத்தகம். ஆனால் முதல் முறையாக நான் எழுதும் முன்னுரை. மற்ற எல்லா புத்தகங்களையும் முதல் அத்தியாயத்திலிருந்து நேரடியாகத் தொடங்கி விட்டேன். ஐந்தாவது புத்தகத்தைப் பற்றி எழுதுவதால் மனதில் உற்சாகம் ஏற்படுகிறதா அல்லது முதல் முதலாக முன்னுரை எழுதுவதால் குஷி ஏற்படுகிறதா என்று  தெரியவில்லை.

உண்மையைச் சொல்லப் போனால் நேற்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. அதற்குக் காரணம் ஐந்தாவது புத்தகமா,  எழுதப் போகும் முன்னுரையா அல்லது நேற்று நான் சாப்பிட்ட மெக்ஸிகன் டின்னரா என்று தெரியவில்லை!
முன்னுரைகளைப் பற்றி நிறைய  ஆராய்ச்சி செய்தேன். அவை மிகவும் நீளமாகவும்  இருக்கக் கூடாது; மிகவும் சின்னதாகவும் இருக்கக்கூடாது. முன்னுரையை ரொம்பவும் சிறப்பாகவும் எழுதக்கூடாது. அப்புறம் புத்தகத்தில் உள்ள மற்ற விஷயங்கள் சுமார் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்!  முன்னுரையைப் படு தண்டமாக எழுதுவது ஒரு சாமர்த்தியமான தீர்வு. ஆனால் தண்ட முன்னுரை எழுதலாம் என்றால் அதுவும் சுலபமான காரியமில்லை, எப்படித்தான் பலரால் இதைச் செய்ய முடிகிறது என்று எனக்குத் தெரியவில்லை, 
அடாஸ் முன்னுரை எழுதுவதில் பலர் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  (புத்தகத்தை அவர்களுக்காக வேறு யாராவது  எழுதி இருப்பார்கள்.) . அதனால் தண்ட முன்னுரையை அவர்களால் அனாயசமாக எழுத முடிகிறது!  இது நான் முதன் முதலில் எழுதும் முன்னுரை என்பதை   மறந்து விடாதீர்கள். இது நன்றாக இருந்துவிட்டால், இதுவே  என் கடைசி முன்னுரையாகவும் ஆகிவிடக் கூடும்!

ஒரு நிமிஷம்  இருங்கள்; மனதில் ஒரு  சின்ன சஞ்சலம். என் நண்பர்கள், ஜிம் மற்றும் ஹென்றி  ஒரு புத்தகத்தை சமீபத்தில் எழுதி முடித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு முன்னுரை எழுதி தரும்படி என்னைக் கேட்டார்கள். அவர்களுக்கும் இதே முன்னுரையைத் தான் எழுதித் தந்திருக்கிறேன். இப்போது மனசு சங்கடப்படுத்துகிறது; மனசாட்சி உறுத்துகிறது. அது தான் காரணமா அல்லது அந்த மெக்ஸிகன் டின்னரா என்று தெரியவில்லை!
 என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த   முன்னுரையை அப்படியே  என் புத்தகத்திலும் நான் ஏன் போடக் கூடாது.  போட்டால் என்ன?  அவர்கள் புத்தகத்திற்கு இது மட்டமான முன்னுரையாக  இருந்தால், என் புத்தகத்திற்கும் அந்த அளவு மட்டமாக இருக்குமே!

முகவுரை
எப்போது முதல்முறையாக  முன்னுரை எழுதி உள்ளேனோ, அது மாதிரி  முதல்முறையாக நான் முகவுரையையும் நானே எழுதுவது என்று முடிவெடுத்து விட்டேன். ஆனால் ஒரு சின்னப் பிரச்னை. முன்னுரைக்கும் முகவுரைக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத்  தெரியாது.
ஆகவே என்னுடைய எடிட்டரைக் கேட்கலாம் என்று நினைத்தேன்.
”முன்னுரை என்பது  FOREWORD; முகவுரை என்பது  PREFACE . ஒன்று  'F' ல் ஆரம்பிக்கிறது. மற்றொன்று  'P'-யில்  ஆரம்பிக்கிறது;”என்றார். சட்டென்று எனக்கு விளங்கிவிட்டது. நான் முகவுரை எழுத ஆரம்பிக்கப்  போகிறேன். மனதில் தெம்பு ஏற்பட்டுவிட்டது -- எடிட்டர் சொன்ன விளக்கத்தாலோ அல்லது நேற்றிரவு நான் சாப்பிட்ட மெக்சிகன்  சாப்பாடு ஒரு மாதிரி  ஜெரித்து விட்டதாலோ என்னவோ!
புத்தகத்தைப் படிக்காமலேயே மட்டுமல்ல, புத்தகத்தை எழுதுவதற்கு முன்னாலேயே எழுத ஒரு துணிச்சல் வந்து விட்டது. ஒரு சிறந்த எழுத்தாளர் என்றால்  விளைவுகளை  எண்ணிப் பார்க்காமல்  சில துணிகர முயற்சிகளை  எடுக்க வேண்டும். புத்தகத்தை எழுதி முடித்தபின், இந்த முகவுரை பொருத்தமாக இல்லை என்றால் அதற்கு ஏற்ற மாதிரி புதிதாக ஒரு புத்தகம் எழுதிவிட்டால் போகிறது!

அறிமுக உரை
இவர் எதற்காக இன்னொரு புத்தகம் எழுதுகிறார். என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றி இருக்கக்கூடும். இப்படி உங்களுக்குள்ளேயே மனதில் கேள்வியை வைத்துக் கொண்டிருப்பது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடும். ஆகவே  நானே பதில் சொல்லி விடுகிறேன்.... என்னுடைய பப்ளிஷர் போன் செய்து  “இன்னொருபுத்தகம் எழுதுங்கள்” என்று ஐடியா கொடுத்தார். அதற்கு   DR. BURN'S PRESCRIPTION FOR HAPPINESS    என்று ஒரு தலைப்பையும் வைத்து விட்டார்..”

” முந்தைய புத்தகம் நன்றாக விற்பனைஆயிற்று. இந்த புதிய புத்தகம் 10 லட்சம் காபிகள் விற்கும்” என்றார்.’ “இன்னொரு புத்தகம் எழுத உங்களுக்கு விருப்பமில்லையா? ” என்று கேட்டார். 

அவரிடமிருந்து  டெலிபோன் வந்த சமயம் நான் ஒரு பாடல் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தப் பாடலை மறுபடியும் படித்தேன். இப்போது புத்தகம் எழுத முனைந்து விட்டேன். அது தான் நான்!  சில பேர் அனாவசியமாகக் கவலைப்படுவார்கள், ’நாம் செய்தது சரியா தப்பா?’ என்று!. நம்ம விஷயமே வேறு. நான் எப்பவும் திரும்பிப் பார்க்கமாட்டேன்.

ஆகவே ’டாக்டர் பர்ன்ஸ் பிரிஸ்கிரிப்ஷன்’ புத்தகத்தை எழுதத் இறங்கிவிட்டேன். இவ்வளவு விரைவாக எப்படி நான் டாக்டராகி விட்டேன் என்பது எனக்குப் புரியவில்லை. அதுவும் பள்ளிக்கூடத்தில் நாலாவது வகுப்பைத் தாண்டாத நான்!

பிரசுரகர்த்தர் ஒரு கணிசமான தொகையை அட்வான்சாகக் கொடுத்தார். .
அவருக்கு நான் டாக்டராக வேண்டும் என்று விருப்பம். உடனே டாக்டராகத் தயாராகிவிட்டேன். யாருடைய நாடியையாவது பிடித்துப் பார்க்க வேண்டும் என்று மனம் பரபரக்கிறது..

எல்லாரும் விரும்புவது ஒன்று: மகிழ்ச்சி.  மகிழ்ச்சியை நாடுகிறோம். ஆனால் அதைப் பிடிப்பதுதான் பிரச்னை. கடைக்குப் போய் ’ஒரு பவுண்டு மகிழ்ச்சி பாக்கெட் கொடு’ என்று கேட்க முடியுமா? சரி. மகிழ்ச்சி என்பது என்ன? அதை எங்கு கண்டு பிடிக்க முடியும்? அப்படி கண்டு பிடித்தால அதைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?

அதை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் எங்கே தேட வேண்டும்?  அது தொலைந்து போய்விட்டால் திரும்ப கிடைக்க என்ன செய்ய வேண்டும்?. ஏன் இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன் தெரியுமா?  நான் ஒரு டாக்டர்.
நான் அகராதியைப்பார்த்தேன். “மகிழ்ச்சி என்பது உல்லாசத்தை அனுபவிப்பது” என்று போட்டிருந்தது. சரி உல்லாசம் என்ன என்பதை அகராதியில் தேடினேன். அதில் போட்டிருந்தது, ’மகிழ்ச்சியைப் பார்க்கவும்’ என்று!
சிலருக்குக் காதல். சிலருக்குத் திருமணம்.  சிலருக்கு நிறைய செல்வம் வைத்திருப்பது. வேறு சிலருக்கு ஒன்றுமே இல்லாதிருப்பது.
மகிழ்ச்சி என்பது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான விஷயம்.

மகிழ்ச்சி என்பது ஜேன் என்பேன் அல்லது எஸ்தர்,  அல்லது மேரி... அல்லது  அவளுடைய அம்மா” என்பேன். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் டைப்!
மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அது வரும், போகும். அதற்கு எந்த   விதிமுறைகளும் இல்லை. மேலும்... இருங்கள். எனக்கு இப்போது தோன்றுகிறது  நான் எழுதிய முகவுரை பொருத்தமாக இல்லை என்றால், அதற்காக ஒரு புத்தகம் எழுதத்தேவை இல்லை. புதிதாக முகவுரை எழுதுவேன். ( அட, இது நல்ல ஐடியாவாக இருக்கிறேதே. இதை நான் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்...  சரியான முட்டாள் நான். எதற்குக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்? எனக்குப் படிக்கத் தெரியும். இது நான் எழுதியது தானே!)

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆமாம்... மகிழ்ச்சியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்...  இருக்கட்டும். அதற்கு என்ன அவசரம்? இப்போது துவக்க உரையில் தானே இருக்கிறேன். இன்னும் புத்தகத்தை எழுத ஆரம்பிக்கவில்லையே! படித்துக் கொண்டே வாருங்கள். அங்கங்கே கொஞ்சம் சிரிப்பு வரும். சில இடங்களில் கொஞ்சம் புரிகிற மாதிரி விஷயங்கள் இருக்கும். அதில் இரண்டு, மூன்று உபயோகமானவையாக இருக்கக் கூடும். டாக்டர் என்ற முறையில் பார்த்தால்  இந்த சதவிகிதம் மோசமானதல்ல!

4 comments:

  1. அழகான, ரசிக்க வைக்கிற முன்னுரை..!

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    எப்போதும் வென்றான் என்று ஒரு ஊர் பேர் சொல்வார்கள், அது போல எப்போதும் உற்சாகம் என்று சொல்லலாம் போலிருக்கிறது இந்தப் பதிவைப் படித்ததும்.

    பகிர்வுக்கு நன்றி.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  3. உங்கள் வீட்டில் புத்தகங்கள் வைத்தது போக புழங்க, உட்கார, படுக்க இடம் இருக்குமா? எத்தனை எத்தனை புத்தகங்கள், எத்தனை கதை, கட்டுரைகள் / பதிவுகள், எத்தனை பிரமுகர்கள் நட்பு - ஆஹா, நல்ல வாழ்க்கை! இத்தனைக்கும் ஒத்துழைக்கும் மாமி! நமஸ்காரகள்! ஜார்ஜ் பர்ண்ஸ் முகவுரை அநியாய நீளம், மெக்சிகன் டின்னெர் இரண்டாம் தடவை வரும்போது கொஞ்சம் அலுப்பு! - ஜெ.

    ReplyDelete
  4. வணக்கம்
    இரத்தினசுருக்கம் போல முகவுரை மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!