July 22, 2019

"அம்மாவின் கேள்விகள்”

ராபர்ட் ஃபுல்ஜும் ஒரு பிரபல அமெரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் மிகவும் சிறப்பானவை. நேரில் பேசுவது போல் இருக்கும் அவர் நடை.  
அவரது புத்தகங்கள் கிட்டதட்ட 10 பத்து லட்சம் காபிகள்  அச்சாகி உள்ளன. 27 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இது விக்கிப்பீடியா தரும் தகவல்.

அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு: WHAT ON EARTH HAVE I DONE?  “நான் ஏன் பிறந்தேன்?” என்கிற மாதிரி இது ஒரு சுயவிசாரக் கேள்வி மட்டுமல்ல; நம்மையெல்லாம் சிந்திக்கச் செய்யும் கேள்வி.
  “அம்மாவின் கேள்விகள்”  என்ற தலைப்பில் வர்  இந்த புத்தகத்தை பற்றி முதல் கட்டுரையாக எழுதியுள்ளார் அதைப் படித்து ரசித்தேன். எனக்கு தெரிந்த அளவில் அல்லது புரிந்த அளவில் தமிழ்ப் படுத்தி தருகிறேன்.
                                                                         *     *           *
"அம்மாவின் கேள்விகள்”
சியாட்டில் நகரில் என் வீடு ஒரு சிறுவர் பள்ளிக்கு எதிரில் உள்ளது, மரச்சட்டங்களால்  பள்ளிக்கு வேலி போட்டு இருக்கிறார்கள். சற்று உயரமான வேலி. அதனால்  பள்ளியில் நடப்பதை என் வீட்டிலிருந்து பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகளின் ஆட்டம், பாட்டம்,  கூச்சல் எல்லாம் தெளிவாகக் கேட்கும்.

ஒரு நாள் நான் வீட்டிற்கு முன் பக்க வராந்தாவில் நின்று கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காரில் கொண்டு வந்து, விட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.  ஒரு கார் கதவு திறக்கும் ஓசையும், அதைத் தொடர்ந்து   ‘தபால்’ என்று கதவை மூடும் ஓசையும் கேட்டது.  ஒரு அம்மா சற்று எரிச்சலுடன் இரைவதும் கேட்டது: “ஏய் BILLY, என்னடா செஞ்சு தொலைச்சே?” என்று  கத்துவது கேட்டது. “ ஒன்றுமில்லை, அம்மா”  என்கிற மாதிரி, சிறிது அழுகையைக் கலந்து பதில் சொன்னது குழந்தை.

 சரி, குழந்தை என்னதான் செய்து விட்டது? அந்த பில்லி, ஆப்பிள் ஜூஸ் பாட்டிலைத் திறந்து காருக்குள் கொட்டி விட்டதா? அம்மா கட்டிக்கொடுத்த இடைவேளை உணவு டப்பாவைத் திறந்து, சால்லேட் எடுத்தபோது டப்பா  காருக்குள் கவிழ்ந்து கொட்டிவிட்டதா?   அல்லது காரிலேயே வாயில் எடுத்து விட்டதா? டப்பாவில் இருந்த  முள்கரண்டியை எடுத்து, காரின் முன் சீட்டில் பச்சை குத்துவது போல் குருவி, மீன், பட்டாம்பூச்சி என்று  வரைந்திருந்ததா? அல்லது சிவப்பு  ‘மார்க்கர்’ பேனாவால் கார் சீட்டின் மேலே போடப்பட்டிருந்த எம்பிராய்டரி அலங்காரத் துணியில் கோலம் போட்டு இருந்ததா?  தெரியவில்லை.


June 10, 2019

கிரேசி மறைந்தார்



அருமை நண்பர்   கிரேசி மோகன் மறைந்தார். எவ்விதமான வைரஸு’ம் இல்லாத 
நகைச்சுவை அவர் ரத்தத்தில் 
அபரிமிதமாக இருந்தது. வஞ்சனை இன்றி வாரி வழங்கிய வள்ளல்.  இவர் தமிழ்நாட்டின்  மற்றொரு கலைவாணர்! - கடுகு

##################################



May 15, 2019

இதுதாண்டா கவர்ன்மென்ட்!

இருபது வருஷ சப்ளை
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் அங்கிருந்து வரும் பார்சல்களை  இங்கு நாம் டெலிவரி செய்வதற்கு அவர்கள்  நமக்குக் கட்டணம் செலுத்தவேண்டும்.
 டில்லியில் தபால் துறை அலுவலகத்தில்  சர்வ தேச பார்சல் அக்கவுண்டிங்க் செக் ஷனில் இந்த வரவு-செலவு கணக்குகள், சுமார் 50-60 நாடுகளுக்குத் தயாரிக்கப்படும். (இது சற்று சிக்கலான கணக்கு. அதிகம் விவரித்தால் குழம்பிப் போவீர்கள்.)

          இந்த கணக்கு முறை, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட முறை.  இதில்  “இங்கிலாந்து - இந்தியா” கணக்கு மிகவும் முக்கியமானது. இங்கிலாந்து சார்பாகவும் நாமே கணக்குத் தயாரிக்க வேண்டும். சுமார் 20, 30 நாடுகளுக்குப் போகும் பார்சல்கள் எல்லாம்  லண்டன் வழியாகப் போகும்; லண்டன் வழியாக வரும்  (பிரிட்டிஷ் காலத்தில் அவர்கள் செய்த வழிமுறை.) 

சுதந்திரம் வந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மாதிரி பல்வேறு  நாடுகளிலிருந்து வரும் பார்சல்கள் லண்டன் வழியாக வரும். 
இதன் காரணமாக  இந்தியா - லண்டன் பார்சல் கணக்கு தயாரிக்கப்படும் படிவம் மிகப் பெரியதாக இருக்கும். பெரியது என்றால் நம்பமாட்டீர்கள்,  கிட்டத்தட்ட இரண்டு அடிக்கு மூன்றடி இருக்கும். சற்று தடிமனான காகிதத்தில் இருக்கும். காலப் போக்கில் பெரும்பாலான நாடுகள் காணாமல் போய்விட்டன அல்லது பெயரை மாற்றிக் கொண்டன. அல்லது நேரடியாகக் கணக்குகளை அனுப்பத் தொடங்கி விட்டன.
இந்த 'பிரிட்டன்- இந்தியா' கணக்கு மாதா மாதம் தயாரிக்கப்பட வேண்டும். நான்கு காபிகள் தயாரிக்க வேண்டும்.   அதுவும் ஒரே ஒரு நபர் செய்யும் வேலை. ஆக வருஷத்திற்கு 48 பாரங்கள் மட்டுமே  தேவைப்படும். 1950, 60  வாக்கில் எப்போதோ, என்ன அடிப்படையிலோ 1,000  பாரம் அச்சடித்து விட்டதால் (20 வருஷ சப்ளை!)  தீரவே இல்லை. ரிகார்ட் ரூமில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த   கட்டுகளில் அடியில் இருந்த கட்டுகள் அப்பளமாகப் போய் விட்டன.
புதிதாக, கச்சிதமாக,  சரியான தகவல்களுடன் அச்சடிக்கலாமென்றால், கையில் இருப்பது தீரும் என்றே தோன்றவில்லை. 
இந்த சமயத்தில் 1970 வாக்கில் ஒரு நாள்  ஒரு  சுற்றறிக்கை வந்தது.   எல்லா டிபார்ட்மெண்டும்  தேவையில்லாத பழைய ஃபைல்கள், ரிஜிஸ்டர்கள், பில் பண்டில்களை மூன்று நாட்களுக்குள் களைந்து விடவேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தார்கள்.  அப்பளமாகிப் போன இந்த FORMS  பண்டில்கள் உட்பட பல பழைய ரிகார்டுகளை அக்கவுன்ட்ஸ் ஆபீசர்  களைந்து விட்டார்.   ‘அப்பாடா’ என்று எல்லாரும் மூச்சு விட்டோம்.
       அதற்குப் பிறகு சில வாரங்கள் கழித்து, ஸ்டோர் செக் ஷனிலிருந்து ஒரு டெலிபோன் வந்தது. அதிர்ச்சிக் குண்டைப்  போட்டார்கள்.  எந்த படிவத்தைக் களைந்துவிட்டு ‘அப்பாடா’ என்று மூச்சு விட்டோமோ, அதே படிவம் ஆயிரம் காபி அச்சகத்திலிருந்து வந்திருந்தது! நாங்கள் கேட்காமலேயே அச்சடித்து அனுப்பி இருந்தார்கள். அடுத்த இருபது வருஷ சப்ளை!!!

April 30, 2019

தாமதம்

அன்புடையீர்,
தவிர்க்க முடியாத சில்லறைக் காரணங்களால் அடுத்த பதிவு போடத் தாமதமாகிறது. - கடுகு

April 03, 2019

கோடி கோடி நன்றிகள்


தெற்குக் கோடி! அமெரிக்க விண்வெளி ஸ்தாபனம் உள்ள இடம் கேப் கெனவரல் புளோரிடா மாநிலத்தில் கிழக்குக் கரையோரம் உள்ளது கென்னடி ஸ்பேஸ் சென்டர்.  ஒரு சமயம்  அங்கு சென்று பார்த்தேன்.
அடுத்த வாரம் விண்ணில் ஏற்படவிருக்கும் ஸ்பேஸ் ஷட்டில், ராக்கெட்டின் முதுகில்   இணைக்கப்பட்டு செங்குத்தாக நின்று கொண்டிருந்தது.  மனிதனின் அபார சாதன களின் உன்னத சிகரம் ஸ்பேஸ் ஷட்டில்.  உலகின் பல அற்புதமான முன்னேற்றங்களுக்கும் வசதிகளுக்கும்ம் வழிவகுத்து உள்ளது விண்வெளி ஆராய்ச்சியில் பெற்ற வெற்றிகள். ஏன், தோல்விகளும் கூட !

விண்வெளி பயண முயற்சிகளில் உயிரிழந்த வீரர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அங்கு அமைத்திருக்கிறார்கள். சற்றே வளைந்த, பிரம்மாண்டமான சுமார் 20 அடிக்கு 30 அடி அளவு, கருப்பு கிரானைட்  பலகை   பதிக்கப்பட்டு, வீரர்களின் பெயர்களை பாறையில் முழுவதுமாக செதுக்கி  எடுத்து விட்டு,  பாறையின் பின்னால் இருந்து இயற்கையான சூரிய வெளிச்சம் வருமாறு செய்திருக்கிறார்கள்.  பெயர்கள் வெள்ளியால் பொறிக்கப்பட்டவை போல் கிரானைட்டில் மின்னுகின்றன.
   எப்போதும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வகையில் இந்த கிரானைட் பலகையின் பின்னால் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, அவை  சூரியனை நோக்கி மெல்லத் திரும்பும் வகையில் மோட்டாரைப் பொருத்தி இருக்கிறார்கள்.

இந்த நினைவுச் சின்னத்தின் அருகே அஞ்சலியாக சில வாசகங்களை   கிரானைட்டில் பொளிந்து   வைத்து இருக்கிறார்கள். அதைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.”
”புதிய எல்லைகளை வெற்றிகொள்ள மனித சமுதாயம் முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம் இம்முயற்சிகளுக்காகத் தங்கள் உயிர்களை நீத்தவர்கள் உண்டு .விண்வெளியை வெற்றிகரமாக வெற்றி கொள்வதற்காக உயிருக்கு ஆபத்தான முயற்சிகளை  மேற்கொள்ளலாம் என்று நம்பி,  தங்கள் உயிரையே தியாகம் செய்த அமெரிக்க வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அஞ்சலியாக இந்த நினைவுச்சின்னம் மே 9, 1991 அன்று அர்ப்பணிக்கப்படுகிறது.”

இந்த வாசகத்தை படித்ததும் என் கண்களில் நீர் தளும்பியது. இன்றைய இன்டர்நெட்,   பிராட்பேண்ட்,  ஸ்மார்ட்போன்,  டிவி நிகழ்ச்சிகள் என்று பல நூறு வசதிகளை அவர்கள் அனுபவிக்கவில்லை.  அவர்களின்  உயிர்த் தியாகம்  நமக்கு நினைத்துக்கூடப் பார்க்காத பல வசதிகளுக்குப் பாதை அமைத்துள்ளது!
அவர்களின் தியாகத்தை என்றும் மனதிலிருத்தி வைப்போம்! அவர்களுக்குக் கோடி நன்றிகள் உரித்தாகும்.


வடக்கு கோடி
 ஃபோர்டு கார் என்றதும் நினைவுக்கு வரும் நகரம் டெட்ராய்ட். அங்கு ஃபோர்ட் மியூசியம் உள்ளது. அபாரமான மியூசியம்.  அதை முழுதாகப் பார்க்க மூன்று நாள் தேவைப்படும் என்றால் நம்ப மாட்டீர்கள். அங்குள்ள கார்கள், ரெயில் என்ஜின்கள் ,குட்டி விமானங்கள் போன்ற பல முக்கிய பொருட்களை விவரிக்க தனிக் கட்டுரையே தேவைப்படும்.  


மியூசியத்திற்குள் நுழையும்போது,கூடத்தில் தரையில் பதிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பெரிய மண்வெட்டி, சிமென்டில் சற்று புதைந்த மாதிரி வைக்கப்பட்டிருக்கிறது.

 மியூசியத்திற்கு அடிக்கல் நாட்டியவர் உபயோகித்த மண் வெட்டி அது!  ஈர சிமென்ட்டில்,  தனது ஆள்காட்டி விரலால் அவர்பெரிதாகk கையெழுத் திட்டிருக்கிறார்.    அப்படி கையெழுத்திட்டவர்: தாமஸ் ஆல்வா எடிசன்!

 அvar ஹென்றி ஃபோர்டின் மிக நெருங்கிய நண்பர்.  எலக்ட்ரிக் பல்பு உள்பட ஆயிரத்து நூறு கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்தவர் எடிசன் அந்த மேடை இருந்த இடத்தில் அvar நின்று, கையெழுத்திட்டிருக்கிறார்.  அந்த இடத்தில் நாம் நிற்கிறோம் என்பதை நினைத்தபோது மனதில் சிலிர்ப்பு ஏற்பட்டது.
        எடிசன் தன்னுடைய ஆராய்ச்சிகளைச் செய்த இடம் நியூ ஜெர்ஸியில் உள்ள ’தெற்கு ஆரஞ்சு’ என்ற பகுதி.   அது நியூஜெர்சியில் உள்ள ஊர். 
 அங்கு உள்ள புத்தக சந்தைக்கு நான் அடிக்கடி போவேன். அப்போதெல்லாம் , அவரது   கண்டுபிடிப்புகளையும், முயற்சிகளையும்  நினைவு கொள்வேன்.

பின் குறிப்பு
தாமஸ் ஆல்வா எடிஸன் பற்றிய ஒருநெகிழ்ச்சியூட்டும் தகவல்:

எடிசன் சிறுவனாக இருந்தபோது, ஏழ்மை காரணமாக் ரயில்களில் பேப்பர் விற்பது உண்டு. அப்படி ஒரு சமயம் ரயிலில் பேப்பர் விற்றுக் கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் எடிசனிடம் டிக்கெட் கேட்டார். டிக்கெட் இல்லை. ஈவு இரக்கம் இல்லாத aந்த அந்த பரிசோதகர் ‘சின்னப்பையன் பிழைப்புக்காக ஏதோ செய்கிறான்’ என்று ஒரு கணம் கூட நினைக்காமல், கோபத்தை எல்லாம் திரட்டி எடிசனின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தார். அந்த அறை பாதி கன்னத்திலும், பாதி எடிசனின் காதிலும் பட்டது. அதன் விளைவு என்ன தெரியுமா? எடிசன் முழுச் செவிடாகி விட்டார். இவர்தான் தொலபேசியையும் கிராமபோனை யும் கண்டுபிடித்துப் புகழ் பெற்றார். காது கேட்காதவர் செய்த சாதனை இது! இதை நாம் மறக்கக் கூடாது.