முன் குறிப்பு. இது சில வருஷங்களுக்கு முன்புஎழு தப்பட்டது,
சகோதரி ஷ்யாமா அவர்கள் எழுதியுள்ள ‘சாவியுடன் சில நாட்கள்‘ புத்தகத்திற்கு ஒரு சிறுகுறிப்பு எழுதித் தரவேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டேன்.
ஷ்யாமாவின் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்தேன். படிக்கும்போது சாவி அவர்களைப் பற்றிய பற்பல சம்பவங்கள் எனக்குத் தோன்றியது. அவற்றை ஓரளவு இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்.
ஷ்யாமாவின் புத்தகத்தில் நான் நிறைய பக்கங்களை எடுத்துக் கொள்வது தவறு. அவர்தான் என்னை முகவுரை எழுதிக் கொடுங்கள் என்று என்னைக் கேட்ட தவறைச் செய்தார் என்றால் நானும் பதிலுக்குத் தவறு செய்வது சரியில்லை!
ஆகவே சுமார் 10- 15 பக்கங்களுக்குள் சுருக்கமாக எழுத எண்ணியுள்ளேன்.
‘வாஷிங்டனில் திருமணம்’ போன்ற பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய நாவலைப் போல் இன்னும் யாராலும் எழுதப்படவில்லை. அந்த நாவலைப் படித்த நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனானது வியப்பானதல்ல. கல்கியின் எழுத்தைப் படித்து அவரது பக்தனானேன். எனக்கு எழுத்து மோகம் பிடித்ததற்குக் காரணம் கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன் மற்றும் ஆர்.கே.நாராயணன் ஆகியோரின் படைப்புகள்!
தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பை சாவி ஏற்றதும், முன்பின் அறிமுகம் இல்லாத எனக்கு.’கதிரு’க்குக் கதை எழுதித்தர முடியுமா என்று கடிதம் எழுதினார். ‘ஈகோ’ என்பது முற்றிலும் இல்லாத மிகப்பெரிய ரசிகர். ‘நான் எழுதாத நகைச்சுவையா? நான் எழுதாத கதைகளா? நாவல்களா?’ என்று தனக்குத்தானே மார்பில் மெடல்களைக் குத்திக் கொள்பவர் அல்ல அவர்.
ஷ்யாமா அவர்கள், இப்புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளபடி, குமுதம் இதழின் மீது அவருக்கு அபார மதிப்பு உண்டு. அதன் காரணமாக குமுதத்தில் எழுதும் எல்லா எழுத்தாளர்களுக்கும் அவர் மகா ரசிகர். அதனால்தான் எனக்கு அவர் கடிதம் எழுதினார். (இப்படியே அவர் பலருக்கும் எழுதியிருப்பார்.) “நகைச்சுவை கதை எழுதுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். எனக்குத் தலைகால் புரியவில்லை. நமக்கும் நகைச்சுவை எழுதும் திறமை இருக்கிறது என்று, எனக்கே நான் ‘ஷொட்டு’ கொடுத்துக் கொண்டு எழுதி அனுப்பினேன். ‘மிஸ்டர் பஞ்சு’ என்ற தலைப்பில் ஒரு கதையை! இதழின் அட்டையிலேயே ‘அகஸ்தியன் எழுதிய ‘மிஸ்டர் பஞ்சு’ –ம் பக்கம்’ என்றும் போட்டு விட்டார். இதுதான் சாவி. இப்படித்தான் தகுதி உள்ளவர்களையும், என்னைப்போல் தகுதி குறைந்தவர்களையும் தூக்கி விடுவார். இத்தனைக்கும் அப்போது என்னை நேரில் பார்த்தது கூடக் கிடையாது.