January 25, 2012

நான் ஒரு புண்ணாக்கு மன்னன்


சுகமாகக் கண்ணயர்ந்து கொண்டிருந்தேன். டீச்சர்ஸ் ரூமில் அந்த பிரம்பு ஈஸிசேரில் உள்ள மூட்டைப் பூச்சிகளுக்கு என்னுடைய " பி-பாஸிடிவ் ரத்தத்தைத் தானம் செய்தபடியே, தம்பூர் சுருதி மாதிரி லேசாகக் குறட்டை விட்டபடியே பாதி விழிப்பும் பாதி தூக்கமுமாக இருந்து கொண்டிருந்த சமயம்.

"சாரே... சாமுவேல் சார்... தூங்கறாப்பல இருக்குது... லீஷர் பீரியட் என்றால் எப்படித்தான் ஸ்விட்ச் போட்டாப்ல தூக்கம் வந்துடுமோ... சார்... சார்... '' என்று குரல் கேட்டு விழித்தேன். ஸ்கூல் பியூன் பீட்டர்.
"ஏம்பா... பீட்டர் இப்படி கத்தறே.?.. என்ன விஷயம்... ஓசிப் பொடி வேணும்னா, தூங்கற மனுஷனை எழுப்பணுமா?'' என்று சுள்ளென்று அவன் மேல் எரிந்து விழுந்தேன்.
"ஓசிப் பொடியும் வேண்டாம், ஓமப்பொடியும் வேண்டாம்... எச்.எம். கூப்பிடுது.''
"சரியான எச்.எம்... சொச்சம்... ஹூம்... அரை செகண்ட் நிம்மதியா இருக்க விடமாட்டாரே இந்த ஹெட்மாஸ்டர்... என்னப்பா பீட்டர். என்ன சமாசாரம்? ஸ்கூல் கடிகாரம் கெட்டுப் போய்டுத்தா? அதை ரிப்பேர் பண்ணிகிட்டு வரணுமா?... இல்லை, ஹெட்மாஸ்டர் வூட்டு நாய் ரோஸிக்கு வவுத்து வலியா? மருந்து வாங்கிகிட்டு வரணுமா? எல்லாத்துக்கும் இந்த சாமுவேல்தான் அகப்படுவான்... ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி இல்லைப்பா... இந்த ஜியாகரிபி டீச்சர்தான்'' என்று அலுத்துக்கொண்டுவிட்டு ஹெட்மாஸ்டர் அறைக்குச் சென்றேன்.