Showing posts with label பேட்டிகள். Show all posts
Showing posts with label பேட்டிகள். Show all posts

January 07, 2015

”என் கதை பெரிய கதை” --ஹேமாவின் அம்மா..

திரையுலகில் ஹேமமாலினி காலெடுத்து வைத்த சமயம், தினமணிக் கதிருக்காகப் போட்டோ எடுக்க  டில்லி கரோல்பாக்கில் இருந்தஅவரது வீட்டிற்குப்   போய், சந்தித்த விவரங்களை என்னுடைய ‘அன்புள்ள டில்லி’ தொடரில் எழுதி இருந்தேன். சுட்டி: ஹேமா
பல வருஷங்கள் கழிந்த பிறகு அவரது அம்மா திருமதி ஜெயா சக்ரவர்த்தி அவர்களைப் பேட்டி கண்டு  ஒரு கட்டுரை எழுதினேன். அதை இங்கு தருகிறேன்.

இந்திப் பட உலகில் ‘அம்மா’ என்றால் ஹேமமாலினியின் அம்மாவான என்னைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று அர்த்தம். நான் வெறும் ஹேமாவின் அம்மா மட்டுமல்ல, நான் ஜெயா சக்ரவர்த்தியும்கூட. பலருடைய ஆதரவினாலும் என்னுடைய விடாத முயற்சியினாலும்தான் ஹேமா இன்று ஒரு பெரிய நட்சத்திரமாக இருக்கிறாள். ஏதோ அவள் சினிமா ஸ்டாராக ஆகிவிட்டாள். அதன் பின்பு சாதாரணமாகப் பலர் உறவு கொண்டாடுவது போலவோ, ஜம்பம் அடித்துக் கொள்வது போலவோ நான் இப்படிக் கூறவில்லை.
ஹேமா என்றைக்குப் பிறந்தாளோ அன்றைக்கே அவளை ஒரு கலையரசியாகச் செய்ய வேண்டுமென்று நான் முடிவெடுத்து விட்டேன். இன்று அவள் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறாள் என்றால் அதைக் கண்டு நான் நியாயமான முறையில் அடக்கத்துடன் ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்.

என் கதை பெரிய கதை.
நாங்கள் ஒரு மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் தகப்பனாரும் மற்றவர்களும் நன்றாகப் படித்தவர்கள். என் தாத்தாவிற்கு மகா மகோபாத்யாய பட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொடுத்துக் கெளரவித்து இருந்தது. அவர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர்.