
``கேட்டிங்களா சேதியை? உங்களைத்தான். எங்கு இருக்கிறீர்கள்? பொழுது விடிய வேண்டியதுதான். வாசல் வராந்தாவில் சுவாமி எழுந்தருளி விடுவார். சமையற்கட்டிலிருந்து கழுதை மாதிரி நான் கத்தினாலும் காதில் விழாது'' என்று பொரிந்து கொண்டே திருமதி பஞ்சு வந்தாள். குறுக்கெழுத்துப் போட்டிக் கூப்பன் ஒன்றைப் பூர்த்தி செய்யும் மும்முரத்தில் மிஸ்டர் பஞ்சு இருந்தார்.``விடிந்தும் விடியாததுமாய் ஏன் இடி இடிக்கிறாய்? நான் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். என்ன சேதி?''
``இந்தப் பாழாய்ப் போன போட்டிக்கு மாசாமாசம் அழுத தண்டத்தை உண்டியில் போட்டிருந்தால் இத்தனை வருஷத்துக்கு நாமும் கிருஷ்ணா, ராமா என்று வட இந்திய யாத்திரை போக முடிந்திருக்கும்.''
``பஞ்சு மாமி, நீ `நாமும்' என்று அழுத்திச் சொல்வதிலிருந்து வேறு யாரோ போகிறார்கள் என்பதும், அதனால்தான் மாமி, சாமி வந்தது மாதிரி பேசுகிறாள் என்பதும்...''
``போதும் எத்தனை `தும்' போடப் போகிறீர்கள் இன்னும்?''
``போடவில்லை. தும் க்யா சமாசார் சொல்ல வந்தாய் தாயே?'' என்றார் பஞ்சு.
``பக்கத்து வீட்டிலே இருக்கிறாரே காயாம்பூ, அந்த ஆளுக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்குது.''
``அவனை யாராவது அடிச்சால் சரி, எனக்குத் திருப்திதான்.''
``போறுமே, இந்த மாதிரி ஜோக்கெல்லாம். அந்த அழகு ராணி பிரியம்வதாவிடம் சொல்லுங்கள். அவள் விழுந்து விழுந்து சிரிப்பாள். கேளுங்களேன்... அந்த ரோடு கான்டிராக்டர் ஆசாமிக்கு `லக்'கடிச்சிருக்குது.''
``கடிச்சிருக்குதா? காயாம்பூவை எது கடிச்சாலும் சந்தோஷம்தான். அடியே.... அடியே ...கோபித்துக் கொள்ளாதே! விஷயத்தைச் சொல்லு'' என்று பஞ்சு சரணாகதிப் பல்லவி பாடினார்.
``ஏதோ டூரிஸ்ட் பஸ் கம்பெனிக்காரர்கள் பாத்திரச் சீட்டு மாதிரி சுற்றுலாச் சீட்டு ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் காயாம்பூ ஒரு சீட்டு எடுத்தாராம். முதல் மாசமே இவருக்குச் சீட்டு விழுந்திடுத்து. அதனால் இவரை வட இந்தியா போகிற டூரிஸ்ட் பஸ்ஸில் இலவசமாக அனுப்புகிறார்கள்.''-- பஞ்சு மாமியின் குரலில் லேசான எரிச்சல் இருந்தது.``அதுக்கு என்னை என்ன செய்யணும் என்று சொல்றே? நானும் ஒரு சீட்டுக் கட்டறேன். சரிதானே! குறுக்கெழுத்துப் போட்டியில் பிரைஸ் விழுந்தால் நாமே ஜம்முனு ஜம்மு வரைக்கும் போய் வரலாம்.''
``என் தலையெழுத்து இந்த வீட்டுச் சமையலறை வாசற்படியைத் தாண்டக் கூடாது என்றிருக்கும் போது...'' பஞ்சு மாமி சட்டென்று நிறுத்திக் கொண்டதற்குக் காரணம், அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டதுதான். பஞ்சுவும் மாமியும் திரும்பிப் பார்த்தார்கள்.
