Showing posts with label ஜி பி ஓ வாழ்க்கை. Show all posts
Showing posts with label ஜி பி ஓ வாழ்க்கை. Show all posts

December 02, 2012

ஜி.பி.ஓ வாழ்க்கை-6

ஜி.பி.ஓ வாழ்க்கை-6
( முதல் 5 பதிவுகளைத் தேடிப் பிடித்து படியுங்கள்.)

ஜி.பி.ஓ  ரிக்ரியேஷன் கிளப் உறுப்பினராகச் சேருவதற்கு ஒரு விண்ணப்பப் படிவத்தைத் தந்தார்கள்.வழக்கமான கேள்விகளுடன் கடைசியில் ஒருபாரா அளவுக்கு இடம் விட்டு,  அதில்: உங்களுக்குத் தெரிந்த கலை, விளயாட்டு, நாடக ஆர்வம்,  இசைக் கருவிகளில் தேர்ச்சி போன்ற விவரங்களை எழுதவும்: என்று போடப்பட்டு  இருந்தது.


மோனோ ஆக்டிங், நாடகம் எழுதுவது, நடிப்பது, நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவது என்று பாதி உண்மையாகவும் பாதி ரீலாகவும் என்னைப்பற்றி  அளந்து விட்டேன்.\விரைவில் கிளப் தேர்தல் நடந்தது. அதற்கு முன்பு  ஜெனரல் பாடி மீட்டிங் நடந்தது. ( பொதுக்குழு கூட்டம் என்று தூய தமிழில் எழுதினால் அதில் அரசியல் வாடை வரும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டேன்!)
யார் யாரோ போட்டி இட்டார்கள். கூட்டத்தில் காரசாரமாக விவாதங்கள் நடந்தன. ‘இதை எப்படி செலவு செய்தீர்கள்:  பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி செய்யப்பட்டு இருக்கிறதா?  MANDATE  இருக்கிறதா? EX-POST FACTO சாங்கஷன் கொடுத்தீர்களா, ஜெனரல் பாடி மீட்டிங்கிற்கு 15 நாள் நோட்டிஸ் கொடுத்திருக்கவேண்டுமே, 13 நாள் தானே கொடுத்திருக்கிறீர்கள்?  என்பது போன்ற கேள்விகள். ( அன்று வீட்டுக்குப் போனதும் அகராதியை எடுத்து, பல ஆங்கில  வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன்!)  ஒரு விஷயம்: ஊழல் என்ற வார்த்தை  வரவில்லை அதிருப்தியை தெரிவித்தார்களே  தவிர  ’கசப்பு  அர்ச்சனை’ எதுவுமில்லை.  எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் ’அரசியல்    வைரஸ்’ அவ்வளவாக பரவாத காலகட்டம் அது! மீட்டிங்கில் யார் உரக்கப் பேசினார்களோ அவர்கள் எல்லாரும் தேர்தலில் வெற்றி  பெற்றார்கள். ( அடுத்த  ஜெனரல் பாடி மீட்டிங்கில் அவர்களை நாம் காய்ச்சலாம் என்ற ஆர்வத்தால்  பலர் ஓட்டு போட்டிருப்பார்களோ என்னவோ!)

August 04, 2012

ஜி பி ஓ வாழ்க்கை, -5


”தொலைந்து போன ரிஜிஸ்டர் தபால் கிடைத்த மாதிரி, மாயமாய் மறைந்து போன பர்ஸ் கிடைக்க வேண்டுமே என்று செங்கற்பட்டு திம்மராஜா குளக்கரையில்  இருந்த சக்தி வாய்ந்த ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டேன்.

சஞ்சீவி மலையைத்  தூக்கிக் கொண்டு வந்த அவருக்கு  ஒரு பர்ஸை எடுத்து வருவது பெரிய காரியமா?
என்ன, நீ என்ன ராமனா?   என்று நீங்கள் கேட்கலாம்... நானும் ஒரு ராமன் தான். என் அம்மா  என்னை “ஏண்டா தடி ராமா என்று கூப்பிடுவது உண்டு! 

’பாலும் கசந்ததடி, படுக்கையும் நொந்ததடி’ என்பது போல் ரயிலில் வழக்கமாக ஓசியில் படிக்கும் தினத்தந்தியும் பிடிக்கவில்லை, ’ஒரு கை குறைகிறதே’ என்று கூப்பிட்ட  ரம்மி நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளவும் மனம் வரவில்லை. 
ரயில் வழக்கத்திற்கு மாறாக காட்டுப்பாக்கத்தில் நின்றபோது .திரைப்படங்களில் வருவது போல் திடீரென்று டி. டி.  ஆர் . பெட்டியில் நுழைந்தார். பர்ஸோடு சீஸன் டிக்கட் போய்விட்டதால், நான் அகப்பட்டுக்கொள்ளப்போகிறேன் என்று உதறல் எடுத்தது. இத்தனைக்கும் டிக்கட் வாங்கிக்கொண்டு தான் ரயிலேறியிருந்தேன். பயம், திகில், . குழப்பம் . கவலை எல்லாம் சேர்ந்து இருந்ததால் டிக்கட் வாங்கியிருந்ததும் மறந்து விட்டது,
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையாகுட்டி, டி.. டி. ஆரைப் பார்த்து ”ஹலோ கண்ணன் சார்! குட்மார்னிங் ”என்று சொன்னார் . பையாகுட்டிக்கு எல்லா டி. டி. ஆர். களும் கார்டுகளும் நண்பர்கள்தான் ஏன், என்ஜின் டிரைவர்களும் கூட

கண்ணன் வந்தார் அவரிடம் பையாகுட்டி” என்ன கண்ணன் சார்  பொண்ணுக்கு ஏதாவது அமைந்ததா” என்று கேட்டார். 
உடனே கண்ணனின் பெண் எப்படி இருப்பாள் என்று ஒரு மாதிரியாக அதாவது எனக்குப் பிடித்த மாதிரியாக கற்பனைப் பண்ணி்ப் பார்த்தேன்.

July 27, 2012

ஜி பி ஓ வாழ்க்கை, –4 : எங்கே போயிருக்கும்


ஒரு ரிஜிஸ்டர்ட் தபால் கணக்கில் குறைந்த கவலையில் இரவு தூங்காமல் கழிந்தது. அதே சமயம் ஏதேதோ பயங்கர ’கனவுகள்’(?) வந்ததால் மனதில் அமைதியில்லை.
மறு நாள் ரயிலைப் பிடித்து, பீச் ஸ்டேஷனை அடைந்து, ஜி.பி.ஓ விற்குள் எப்படி நுழைந்தேன் என்பதெல்லாம் தெரியாது. “எங்களுக்கு  வந்த பையில் கூடுதலாக ஒரு ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கிறது என்ற தகவல் அறிய கவலையுடனும் ஆர்வத்துடனும் செக் ஷனுக்குள் சென்றேன்.”
ஹெட்கிளார்க் இருந்தார் என்னைப் பார்த்ததும் “இன்னும் ஒரு மெஸேஜும் வரவில்லையேப்பா. கவலைப்படாதே வந்து விடும். ஒரு தபால் அதிகமாக இருந்தால் அவர்களுக்கும் தலைவலி.... முதலில் ஒரு தபால் குறைந்த விவரங்களை, எரர் புக்கிலே ( ERROR BOOK) ஒரு குறிப்பு எழுதி பி..பி..எம்.முக்கு அனுப்பு.  (பி பி எம் = பிரெஸிடென்ஸி போஸ்ட் மாஸ்டர்.)

நானே என்மேல் குற்றப் பத்திரிகைத் தயாரித்து அனுப்ப வேண்டும். எழுதினேன். அனுப்பினேன்.. அரை மணி நேரம் கழித்து பி.பி.எம்-இன் பியூன் எரர் புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். அதில் “தவறுக்கான காரணமானவரிடம் விளக்கம் வாங்கி அனுப்பவும்” என்று எழுதி இருந்தார். விளக்கம்?  என்ன சொல்வது?  ஒரு தபால் எப்படி குறைந்தது என்று தெரிந்தால், இப்படி ஏன் எரர் புத்தகத்தில் குறிப்பு எழுதப் போகிறேன்?.
ஜி.பி.ஓ.வில் வேறு ஒரு செக் ஷனில் செங்கல்பட்டிலிருந்து வரும் ஒரு சீனியர் இருந்தார். அவருடன் லேசான பழக்கம்தான் இருந்தது. அவரிடம் போய் விவரங்களைச் சொன்னேன். அவரிடம் சொல்லும் போது என் குரலிலும் முகத்திலும் பயம் இருந்தது
”ஒண்ணும் கவலைப்படாதே. ஒரு மண்ணும் ஆகாது.  தானாக மெஸேஜ் வரும். ஆர்.எம்.எஸ்.காரரிடம் போயிருக்கும். அவனால் உடனே மெஸேஜ் அனுப்ப முடியாது.  அவன்  குறிப்பு எழுதி தபால் பையில்போட்டு அனுப்புவான். அவனுக்கு இது மாதிரி தினமும் நடந்து கொண்டுதான் இருக்கும்..உன் விளக்கத்தை இரண்டு நாள் கழித்து அனுப்பலாம், நான் எழுதித் தருகிறேன்” என்று தைரியம் கொடுத்தார். 

தபால் பைகள் வர வர கூடவே இருந்து பிரித்துப் பார்த்தேன். விஜயவாடா ஆர்.எ.ம்.எஸ். பையில் ஒரு கவர் இருந்தது. பிரித்தேன். அதில் உள்ளே ஒரு ஓலை மாதிரி நீளமான குறிப்பு இருந்தது. தலைப்பில் ’எரர் எக்ஸ்ட்ரேக்ட்’ (ERROR EXTRACT) என்று எழுதி இருந்தது. ’ஒரு ரிஜிஸ்டர் தபால் லிஸ்டில் எழுதப்படாமல் கூடுதலாக வந்து விட்டது. புதிய லிஸ்ட் போட்டு அனுப்பவும்’ என்பதைப் படித்தேன். ஹெட் கிளார்க் “பாத்தியா நான் சொன்னேனே. தபால் அகப்பட்டு விட்டது, போ, இனிமேல் ஜாக்கிரதையாக வேலை செய்” என்றார்.
எல்லாம் இந்த நம்பர் ஸ்லிப்பு ஒட்டும் போது ஏற்பட்ட சிறிய அலட்சியத்தால் வந்த வினை. ஸ்லிப்பு ஒட்டுவதற்கு விரலில் பசையை எடுத்துத் தடவும்போது சற்று அதிகப்படியாக பசையையோ அல்லது கைவிரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் பசையையோ கவரின்மீது எங்கேயாவது கவனக்குறைவாக தீற்றியிருப்பார்கள். அதன் காரணமாக அந்தக் கவரின் மேலே வைக்கப்படும் கவருடன் அது ஒட்டிக்கொண்டு விட்டது (இரட்டைப் பிறவிபோல!) இதனால் பட்டியல் போடும்போது அது கண்ணில் படாமல் டிமிக்கிக் கொடுத்து விட்டுப் போய்விட்டது.

July 21, 2012

ஜி பி ஓ வாழ்க்கை-3



ஜி பி ஓ வாழ்க்கை-1:http://kadugu-agasthian.blogspot.com/2012/02/blog-post_06.html
ஜி பி ஓ வாழ்க்கை-2: http://kadugu-agasthian.blogspot.com/2012/04/2.html

ஜி பி ஓ வாழ்க்கை முதல் இரண்டு பகுதிகளைப் படிக்காதவர்கள் மேலே தரப்பட்டுள்ள சுட்டியைக் கிள்ளிவிடவும். இப்போது ஜி பி ஓ வாழ்க்கை-3 தொடருகிறது:

ரிஜிஸ்ட்ரேஷன் செக் ஷனில் பத்திலிருந்து ஆறு ட்யூடியில் வருவதற்கு எவரும் தயங்கும் ஒரு சீட்: இன்ஷூரன்ஸ் தபால் சீட்.
இன்ஷூரன்ஸ்  தபால்களைப் பட்டியல் போட்டு பையில் போட்டு சீல் வைத்து அனுப்புவது முக்கியமான வேலை.
அதே மாதிரி  இன்ஷூரன்ஸ் தபால்கள் வரும் பைகளை திறந்து சரியாக எல்லாம் வந்திருக்கின்றனவா என்று சரிபார்த்து பீட் வாரியாகப் பிரித்து தபால்காரர்களிடம் கொடுத்து கையெழுத்து வாங்க வேண்டும்.
இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட கவர்களில் உள்ளே பணம் வைக்கப்பட்டிருக்கும். (இன்று இப்படி பணம் அனுப்புவது குறைந்துதான் போயிருக்கும்.) இத்தகைய ஒரு கவர் கணக்கில் தவறிவிட்டால் ஆபத்துதான். தவற வாய்ப்பில்லை என்றாலும் தவறக்கூடும் என்பதே அச்சுறுத்தும்

இதெல்லாம் எனக்குத் தெரியாது என்பதால் முதல் நாளே இன்ஷூரன்ஸ் செக் ஷனில் போட்ட போது எந்த விதத் தயக்கமும் இல்லாமல் அந்த சீட்டுக்குப் போனேன். தனியாக, கூண்டு மாதிரி கம்பி வலை போட்ட அறையில் வேலை செய்ய வேண்டும் சட்டென்று அறைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி யில்லை .(ஆகவே அங்கிருந்து இன்ஷூரன்ஸ் தபால் மட்டுமல்ல, நாற்காலி கூட திருடு போகாது.)
ஜாக்கிரதையா நிதானமா வேலை செய்யப்பா. கவரில் பெரிய பெரிய தொகை 100, 200 (!) என்று இருக்கும். கவர் கணக்கில் வராவிட்டால் நம்ம தலையில் தான் பழி விழும், அபராதம் விழும்.. கவரில் ஒரு டாக்குமெண்ட் இருந்தாலும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதாக இருக்கும்.”-  ஹெட்கிளார்க் சொன்னார்.
’10-6’ ட்யூட்டி என்பதால் தெம்பாக கூண்டுக்குள் புகுந்தேன். ”வேலையில் புலி. அதனால் தான் கூண்டுக்குள் என்னை அனுப்பிவிட்டார்கள்என்று இன்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அன்று இருந்த மன நிலையே வேறு.

பொறுப்புள்ள வேலையே தவிர சுமை அதிகம் இல்லாத வேலை.  

April 17, 2012

ஜி.பி.ஓ. வாழ்க்கை-2

அதிர்ச்சிகள்!
ஜி.பி.ஓவில். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள், எலலாமே பிரமிப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. ஆனால் பல அதிச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எனக்குத் தெரியாது!
முதலாவது, ஆபீஸ் என்றால் மேஜை நாற்காலி, அறைகள், அலமாரிகள் என்றெல்லாம் நான் பண்ணிக் கொண்டிருந்த கற்பனைகள் யாவும் நீர்க் குமிழிகளக உடைந்து போனது மட்டுமல்ல, அதற்கு நேர் மாறாக  ஏமாற்றமும் அதிர்ச்சியும் தரும் பல அம்சங்கள் இருந்தன! ஆபீஸில் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த பொருள்கள் எதுவுமே இல்லை, கனத்த மரச்சட்டங்களில் ( நரசிம்ம பல்லவனின் சிற்பிகள்!?) செய்த (அல்லது பொளிந்த!) மேஜை,   நாற்காலிகள், எராளமான விழுப்புண்களுடன் இருந்தன. இதைவிட கொடுமை 50 பேர் பணியாற்றும்  ஒரு செக் ஷனில் 40 நாற்காலிகள்தான். இருந்தன, போரில் அதிக காயம் படாத வீரனைப் போல் சுமார் பொலிவுடன் இருந்த நாற்காலிகள்  கனமான சணல் கயிற்றால் மேஜைக் காலுடன் கட்டப்பட்டிருந்தன,  ஒரு சில சீனியர்கள் தங்களுக்குத் தாங்களே விருப்ப ஒதுக்கீடு செய்து வைத்திருந்தார்கள்!
ஆகவே  அங்கு இங்கு ஸ்டூல்களைத்  தேடிக் (வேட்டையாடி!) கொண்டு வரவேண்டும் ஒரு ஸ்டூலில் இரண்டு பேர் உட்கார்வது தவிர்க்க முடியாது!
அடுத்தது, முழுக்கை சட்டை போட்டுகொண்டு  ’நீட்’டாக வந்தது எவ்வளவு தப்பு என்பது தெரிந்தது  ரிஜிஸ்டிரேஷன் டிபார்ட்மென்டில் ‘புக்’ செய்யப்பட்ட தபால்களை ஆர்.எம்.எஸ் வழித்தடங்கள் வாரியாகப் பிரித்து, பட்டியல் போட்டு எழுதி  பைகளில் போட்டு அனுப்பவேண்டும். பட்டியல்களைக் கார்பன் பேப்பர் வைத்து எழுதவேண்டும். சாதாரண கார்பன் பேப்பர்இல்லை: டபுள் சைட் கார்பன் பேப்பர்,
ஆகவே  சற்று கவனக் குறைவாகக் கார்பன் பேப்பரின் மேல் முழங்கையை வைத்து லேசாகத் தேய்த்து விட்டால், சட்டை கரியாகி விடும்!

தபால்களை பண்டில் கட்டி பைகளில் போட்டு, பைகளின்  வாயைக் கட்டி (வாயைக் கட்டி, வயிற்றை கட்டி என்பது இதுதானோ!) அரக்கு முத்திரை போடவேண்டும். . அந்த பைகள் உலகம் சுற்றிய பைகள் என்பதால் டில்லி அழுக்கு,  நாக்பூர் மண் மணம், விஜயவாடா ரயில் பிளாட்பாரத்தின் மூக்கை துளைக்கும் சுகந்தம்,  இந்திய  திரு  நாட்டின்  பல  மாநிலங்களின் அழுக்கு எல்லாம்  இருக்கும்.  பைகளைச் சுத்தம் செய்யும் இயந்திரங்கள் ஒரு சில இடங்களில் இருக்கிறது என்றார்கள். ( இது வதந்தியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்!) தபால் பைகளைப் பற்றி ஒரு சில  சுவையான விஷயங்கள் பின்னால் எனக்குத் தெரிய வந்தது. அவை பின்னால் வரும்!