Showing posts with label தமிழ் முத்து. Show all posts
Showing posts with label தமிழ் முத்து. Show all posts

July 02, 2011

பாடலுக்குள் பாடல்


பாடலுக்குள் பாடல்
இந்த திருப்புகழ் பாடலில் ஒரு அழகு உள்ளதாகப் எப்போதோ  படித்தேன்.
பாடலின் ஒவ்வொரு இரண்டாவது வரியை மட்டும்  ( தடித்த எழுத்தில் உள்ளது) படித்ததால் அதுவும் ஒரு முழு பாடலாக அமைந்திருப்பதைக் காணலாம்.
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
     கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு

கனலெழ மொழிதரு சினமென மதமிகு
     கள்வைத்த தோற்பை ...... சுமவாதே

யுகஇறு திகளனலு மிறுதியி லொருபொருள்
     உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி

ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
     லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே

ம்ருகமத பரிமள விகசித நளினநள்
     வெள்ளைப்பி ராட்டி ...... இறைகாணா

விடதர குடிலச டிலமிசை வெகுமுக
     வெள்ளத்தை யேற்ற ...... பதிவாழ்வே

வகுளமு முகுளித வழைகளு மலிபுன
     வள்ளிக்கு லாத்தி ...... கிரிவாழும்

வனசரர் மரபினில் வருமொரு மரகத
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

==== திருப்புகழ்

பொருள்:

ககனமும் அநிலமும் அனல்புனல் நிலம் அமை ... ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்ற பஞ்சபூதங்களால் ஆனதும்,

கள்ளப் புலாற்கிருமிவீடு ... கெட்டுப்போன மாமிச நாற்றமும், கிருமிகள் உள்ளதுமான வீடு,

கனலெழ மொழிதரு சினமென மதமிகு ... நெருப்புப் பொறி பறப்பதுபோல பேச்சுக்கள் பிறந்து, கோபம் என்ற ஆணவம் மிகுந்த

கள்வைத்த தோற்பை சுமவாதே ... மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி,

யுகஇறுதிகளிலும் இறுதியில் ஒருபொருள் ... யுகங்கள் முடிந்தாலும் தான் முடிவடையாத ஒப்பற்ற அந்தப் பேரின்பப் பொருளை

உள்ளக்கண் நோக்கும் அறிவூறி ... எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக,

ஒளிதிகழ் அருவுருவெனு ... ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற

மறை யிறுதியில் உள்ளத்தை நோக்க அருள்வாயே ... வேதங்களின் முடிவினில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக.

ம்ருகமத பரிமள விகசித நளினநள் ... கஸ்தூரியின் வாசம் வீசும், நறுமணமுள்ள மலர்ந்த தாமரையின் மீது வீற்றிருக்கும்

வெள்ளைப்பிராட்டி இறைகாணா ... வெள்ளை நிறத்தளான ஸரஸ்வதியின் கணவனான பிரமனால் (அடியையோ, முடியையோ) காணமுடியாதவரும்,

விடதர குடில சடிலமிசை ... ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், வளைந்த ஜடாமுடியின் மீது

வெகுமுக வெள்ளத்தை யேற்ற பதிவாழ்வே ... ஆயிரம் முகங்களைக் கொண்ட கங்கை நதியை ஏற்றவருமான சிவபிரானின் செல்வமே,

வகுளமு முகுளித வழைகளு மலி ... மகிழ மரமும், அரும்புகள் விடும் சுரபுன்னையும் நிறைந்துள்ள

புன வள்ளிக் குலாத்திகிரிவாழும் ... தினைப்புனம் உடைய வள்ளிமலையாம்* சிரேஷ்டமான மலையில் வாழும்

வனசரர் மரபினில் வருமொரு மரகத ... வேடர் மரபில் தோன்றி வளர்ந்த, ஒப்பற்ற பச்சை நிறமுள்ள

வள்ளிக்கு வாய்த்த பெருமாளே. ... வள்ளி நாயகிக்கு மிகப் பொருத்தமாக வாய்த்த பெருமாளே.

December 05, 2010

ஒருமையுடன் நினதுதிரு மலர்

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும் பொய்மை
பேசாதிருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்கவேண்டும்
மதிவேண்டும்  நின் கருணை நிதி வேண்டும்  நோயற்ற
வாழ்வில் நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி  உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
                                                                 திருவருட்பா- ராமலிங்க அடிகள்

November 20, 2010

ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும்

                  ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும்
இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும்
முயன்ற வினை 
காட்டுவிப்பானும் இருவினைப்
பாசக்கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும் ஒருவனுண்டே
தில்லை அம்பலத்தே!


இவ்வுலகத்தினர் அனைவருக்கும் அமுது படைப்பவனும், மாயையில் அழுத்துவிப்பவனும், உலகை இயக்குபவனும், ஜீவாத்மாவின் வினைகளுகேற்ப அவர்களுக்கு உரிய பலனை வழங்கி ஆட்டுவிப்பவனும் ஒருவன் உண்டு
அவன் தில்லை அம்பலத்தே உள்ள ஐயன்

October 12, 2010

சென்றால் குடையாம்

சென்றால் குடை,யாம்;  இருந்தால் சிங்காசனம் ஆம்
நின்றால் மர அடி ஆம்;  நீள் கடலுள் - என்றும்
புணை ஆம்; மணி விளக்கு ஆம், பூம் பட்டு ஆம்; புல்கும்
அணை ஆம் திருமாற்(கு) அரவு.
- பொய்கை ஆழ்வார் ( முதல் திருவந்தாதி)

பெருமாள் செல்லும்போது ஆதிசேஷன் குடை ஆவான்;
உட்கார்ந்தால் சிம்மாசனம் ஆவான்;
 நின்றால் பாதுகை ஆவான்;
அவர் சயனித்தால் படுக்கை ஆவான்;
மங்கல விளக்கு ஆவான்;
அவருக்குப் பூம்பட்டு ஆவான்,
அவர் அணைத்துக் கொள்ள தலையணை ஆவான்!

நாமும் ஆதிசேஷனைப் போல  இப்படிப் பல விதமாகப் பகவானுக்குப் பணி செய்து வாழ்வோம்!

October 07, 2010

வாயு மைந்தன்

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக,  ஆருயிர் காக்க  ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்-  

இது அனுமனைக் குறிக்கும் துதிப் பாடல்.

பஞ்சபூதங்களையும் (காற்று , வானம், நீர், நெருப்பு,  நிலம்,)  இந்தப் பாடலில் கொண்டு வந்துள்ளார் கவிச் சக்ரவர்த்தி கம்பர். 

அனுமன் வாயுவின் மகன்;
ஆகாயம் வழியாகத் தாவி.
கடல் மேல்  செல்கிறன்.
பூமியின் மகள் சீதாபிராட்டியை க் காண்கிறான்.
அயல் நாட்டில் தீயை வைக்கிறான்

September 24, 2010

கம்பன் வைத்த ஐஸ்!

கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழுதிய அழகானப் பாடலை
இங்கு தருகிறேன்.

கம்பனின் எழுத்தாணியின் கூர் மழுங்கி விட்டது.
மாவண்டூரில் உள்ள சிங்கன் என்பவரின் இரும்புப் பட்டறைக்குச் செல்கிறார். அவரிடம் தனக்கு ஒரு எழுத்தாணி செய்து தருமாறு கேட்கிறார். சிங்கன் விரைவாகச் செய்து தருகிறார்,. கம்பரும் மனம் மகிழ்ந்து சிங்கன் மீது ஒரு பாடல் இயற்றிக் கொடுக்கிறார். (இது ஒரு ஊகம்தான்!)
இதோ அந்தப்  பாடல்!

ஆழியான் ஆழி; அரன் மழுத்தான் என்பான்;
ஊழியான் அங்கை எழுத்தாணி அருள் என்பான்;
கோழியான் குன்றெரிய வேல் என்பான்;
மாவண்டூர் சிங்கன் உலைக்களத்திற் சென்று!

September 04, 2010

கமனியக் கனவினை

பாரதியாரின் பாஞ்சாலி சபதம் ஒரு உணர்ச்சிக் காவியம்.  எந்த இடத்திலிருந்து படித்தாலும்  நெஞ்சை உருக்கி விடும். கவிதை வரிகள் வெள்ளம் போல் பாய்ந்துள்ளன. ஒரு அழகான வர்ணனையை பார்க்கலாம்  இப்போது.
    
   தருமர் சூதாட்டத்தில் தோற்றுப் போய்க்கொண்டே இருக்கிறார். கடைசியில் பாஞ்சாலியையேப் பணயம் வைத்து விட்டார். பாரதியாருக்கு நெஞ்சு  துடிக்கிறது. பாருங்கள் பாஞ்சாலியை எப்படி வர்ணிக்கிறார் என்று!
 *            *              *
 பாவியர் சபைதனிலே,
1.புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
2.ஆவியில் இனியவளை
3.உயர்த்து அணி சுமந்து உலவிடு செய்யமுதை,
4.ஓவியம் நிகர்த்தவளை,
5.அருள் ஒளியினைக்
6.கற்பனைக்கு உயிரதனைத்
7.தேவியை,
8.நிலத்திருவை,
9.எங்கும் தேடினும் கிடைப்ப அரும் திரவியத்தை,

படிமிசை இசையுறவே  நடை
10.பயின்றிடும் தெய்விக மலர்க்கொடியைக்
11.கடிகமழ் மின்னுருவை,
12.ஒரு கமனியக் கனவினைக்
13,காதலினை,
14.வடிவுறு பேரழகை
15 இன்பவளத்தினைச்

சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத்தில் அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்!
 ---------------------

 கமனிய == விரைந்து மறையும் (   FLEETING)
இது தான் பொருள் என்று நினைக்கிறேன்.  பொருள் தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது)

August 30, 2010

தமிழ் முத்து - தன்னேர் இல்லாத தமிழ்

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது
தன்னேர் இல்லாத தமிழ்!
                                            -   தண்டியலங்காரம்

 உலகின் இருளைப் போக்கக்கூடியவை இரண்டு.:
1. சூரியன்
2.. நிகரில்லாத தமிழ் மொழி

June 12, 2010

கற்றது கை மண்- தமிழ் முத்து

கற்றது கை மண் அளவு் கல்லாதது உலகு அளவு என்று
கற்ற கலை மடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும் பந்தயம் கூற வேண்டாம், புலவீர்
எறும்பும் தன் கையால் எண் சாண்
                                                            -ஔவையார்
 :
கலைமடந்தை ஓதுகிறாள் - கலைவாணியே இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாள்
எண் சாண் - எறும்பும் அதன் கையால் எட்டு ஜாண்

June 03, 2010

கொங்குதேர் வாழ்க்கை

கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி
 காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ,  நீயறியும் பூவே.

-இறையனார்.


உரை
பூக்களைத் தேர்ந்து/ ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே அழகிய சிறகுகளையும் கொண்ட வண்டே, நீ சொல்வாயாக! நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக! மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ!

May 23, 2010

நாரணன் விளையாட்டு

நாரணன் விளையாட்டு எல்லா நாரத முனிவன் சொல்ல
வாரணக் கவிதை செய்தான் அறிந்து வான்மீகி என்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந்தூர் உவச்சன்
காரணி கொடையான் கம்பன் தமிழினாற் கவிதை செய்தான்.
                                                              (இராமாவதாரப் பாயிரம்.)

(உவச்சன்  =மணியோசை.
உவச்சர் என்பார் காளிகோயில் முதலியவற்றில் பூசை புரியும் வகுப்பினராதலால், அவர்க்குக் கையால் மணியொலிப்பித்தலும் தொழிலாம்.

April 21, 2010

தமிழ் முத்து - 9 வேயுறு தோளி பங்கன்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்

உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!

வேயுறு தோளி பங்கன் - மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்

விடம் உண்ட கண்டன் - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்

மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு

April 11, 2010

தமிழ் முத்து- 7 அரவம் கரந்ததோ

அரவம் கரந்ததோ  அச்சுமரம் இற்றுப்
புரவி கயிறுருவிப் போச்சோ - இரவிதான் செத்தானோ
இல்லையோ தீ வினையோ பாங்கி எனக்கு
எத்தால் விடியும் இரா.        
                                     - ஒப்பிலாமணிப்  புலவர்
-----------
 தலைவனின் வரவுக்காக காத்திருக்கும் தலைவி, இரவுப் பொழுது நீண்டு கொண்டே போகிறதே என்ற ஆதங்கத்தில், சூரியன் வராததற்குக் காரணம் அவனைப்  பாம்பு கடித்ததோ என்பது போன்ற பல காரணங்களை வெறுப்புடன் பட்டியல் இடுகிறாள்!

April 03, 2010

தமிழ் முத்து - 7 சூலாயுதம் கொண்டு

சூலாயுதம் கொண்டு எமதூதர் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டால்
வேலா வேலா என்றழைப்பேன் அவ்வேளையில்
மாலான வள்ளி தெய்வ யானையுடன் மயில் விட்டிறங்கி
இரு காலால் நடந்து வரவேணும் என் திருத்தணி கந்தப்பனே

---????

March 24, 2010

தமிழ் முத்து -6 ஓங்கலிடை...

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருள் அகற்றும் ஆங்கு          அவற்றுள்
மின்னேர் தனியாழி வெம் கதிரோன்; ஏனையது
 தன்னேர்  இல்லாத தமிழ்"!                   -                      தண்டியலங்காரம்

உலகின் இருளை அகற்றுபவை  இரண்டு. அவை:
1. கதிரோன் அதாவது     சூரியன்.
2. நிகரற்ற தமிழ் ( மொழி)

March 20, 2010

தமிழ் முத்து - 5 -- நல்லாளை இட மருவும் தியாகய்யா

நல்லாளை இட மருவும்  தியாகய்யா
           உம்மிடத்தில் நியாயம் காணோம்.
கல்லாலே எறிந்தோர்க்கும், செருப்படியால்
           உதைத்தோர்க்கும், கடிந்து போரில்
வில்லாலே அடித்தோர்க்கும்  கொடுத்தீரே
            அல்லாமல்,  விழி நீர் சோர
எல்லாம்  உன்  செயலேன்றே  இருப்போர்க்கு
           யாதொன்றும் ஈகிலீரே!

( இயற்றியவர்: தெரியவில்லை)

March 10, 2010

தமிழ் முத்து- 3 அந்தகக் கவியின் அற்புதப் பாடல்

அந்தகக் கவியின் அற்புதப் பாடல்
சோனையும் காத்து, நல்லானையும் காத்துத் துரோபதைதன்
தானையும் காத்து, அடைந்தானையும் காத்து. தடத்தகலி
மானையும் காத்து, அனுமானையும் காத்து, மடுவில் விழும்
ஆனையும் காத்தவே, என்னைக் காப்பது அரிதல்லவே!
           -- .பார்வை இல்லாத காரணத்தால்  ’அந்தகக் கவி’ வீரராகவ முதலியார் என்று  அழைக்கப்பட்ட புலவர்  எழுதியது.பாடல். எந்த நூலில் உள்ளது என்று தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது)

சோனை= கோவர்த்தனகிரி
நல் ஆனை =  பசுக்கள்
தானை  = ( திரௌதியின்) ஆடை
அடைந்தானையும் = சரண் அடைந்த விபீஷணன்
தடத்து அகலி மானையும் = அகலிகை
அனுமானையும் = அனுமான்
மடுவில் விழும் ஆனை = கஜேந்திரன்

March 04, 2010

தமிழ் முத்து -2

புறநானூற்றுப் பாடல்

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.
         - பாண்டியன் அறிவுடை நம்பி

விதிர்த்தும்,=சிதறுதல்

March 01, 2010

தமிழ் முத்து-1

நம் தமிழ் இலக்கியங்களில நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் அழகான பாடல்கள் ஏராளமாக உள்ளன. தனிப் பாடல்களிலும் பல முத்துகள் உள்ளன. என் கண்ணில் பட்ட, அழகு சொட்டும் பாடல்களைப் பல வருடங்களாக என் நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைத்துக்கொண்டு வருகிறேன். அவற்றைத் தொடர்ந்து இப்பகுதியில் போட எண்ணியுள்ளேன்.
-----------------
வான் கலந்த மாணிக்க வாசகா! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!
-திருவாசகத்தின் சிறப்பு பற்றி ராமலிங்க சுவாமிகள்