Showing posts with label சிறப்புக் கட்டுரை. Show all posts
Showing posts with label சிறப்புக் கட்டுரை. Show all posts

November 12, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 3

ஷார்ட்டியின் மனமாற்றம்


  அடுத்த மூன்று மாதத்தை எப்படி,எங்கு கழிப்பது என்பதை மேலெழுந்த வாரியாகத் திட்டமிட்டு விட்டு, தன் நண்பரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஷார்ட்டிக்கு டாக்டர்  லூமிஸ் போன் செய்தார்; தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரும் வந்தார்.
    அவரிடம் லூமிஸ் “வீட்டிற்குப் போய், துணிமணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு வா. நாம் தென் அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணமாகப் போகப் போகிறோம்” என்றார்.

    இதைக் கேட்ட ஷார்ட்டி சற்று தயங்கியபடி சொன்னார் “சுற்றுப்பயணம் வர எனக்கு ஆசைதான். ஆனால் ஒரு முக்கிய வேலையை முடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. ஒரு வாரம் கூட நான் இங்கு இல்லாமல் இருக்க முடியாது” என்றார்
  அவரிடம் டாக்டர் லூமிஸ் தனக்கு வந்த கடிதத்தைப் படித்துக் காண்பித்தா.ர் அதை பொறுமையாகக் கேட்ட ஷார்ட்டி “என்னால் உங்களுடன் வருவதற்கு இயலாது. கடந்த சில வாரங்களாக ஒரு முக்கிய வியாபார ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். வெண்ணை திரண்டு வந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஊரை விட்டு போக முடியாது. நான் இங்கு இருந்தாக வேண்டும். வேறு சமயம். நாம் இரண்டு பேரும் சுற்றுப்பயணம் போனால் போகிறது” என்றார். அதே மூச்சில், “ஆமாம், அந்த பெண்மணி என்ன எழுதினார்? திரும்பப் படியுங்கள்” என்றார். “மழ்ச்சியை அனுபவியுங்கள். நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்துவிட்டது.. அப்படியா?” என்று கேட்டார்.
   சில கணங்கள் அவர் அமைதியாக இருந்தார். டாக்டர் லூமிஸும் எதுவும் பேசவில்லை. ஷார்ட்டி அந்தப் பொன்மொழியை மனதில் அலசிக் கொண்டிருந்தார்.
    அவருக்கு ஏதோ ஒரு விழிப்பை அந்தப் பொன்மொழி ஏற்படுத்தி இருக்க வேண்டும். பிறகு ஷார்ட்டி சொன்னார்: “இவர்கள் முடிவு எடுப்பதற்காக நான் மூன்று மாதங்கள் காத்து இருந்தேன்; அவர்கள் இன்னும் முடிவெடுக்க வில்லை. இனிமேலும் காத்திருப்பதற்கு நான் என்ன பைத்தியக்காரனா? எனக்காக அவர்கள் காத்திருக்கட்டும். சரி, டாக்டர் எப்போது போகலாம் என்கிறீர்கள்?” என்று கேட்டார்!.
                                *                                 *                             *
உருகிப்போன  ஸ்டீல்!
      லூமிஸும் ஷார்ட்டியும் உல்லாசக் கப்பலில் தென் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்கள்  ஒவ்வொரு நாளும் அவர்கள் மனதில் இருந்த பல பிரச்சினைகளின் கனமும், அழுத்தமும் கடல் பயணத்தில் மெல்ல மெல்ல ஆவியாகிப் போனதாக இருவரும் உணர்ந்தார்கள்.

November 07, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 2

டாக்டர் லூமிஸ் (1877–1949)  தனது இந்த அனுபவம் பற்றி ஒரு விவரமான கட்டுரையைப் பின்னால் எழுதினார். அதன் தலைப்பு “ஒரு சீன தோட்டத்தில்!” அதிலிருந்து சில வரிகளைப் பார்க்கலாம்.

டாக்டர் லூமிஸின் கட்டுரை:
 “ஒரு கடிதத்தின் கதையைப் பல தடவை பலரிடம் நான் சொல்லி இருக்கிறேன். அந்த ஒரு கடிதம் நிகழ்த்திய மாற்றம் அளவிட முடியாதது. முதலில், கடிதத்தைத் தருகிறேன். அது சைனாவில் இருந்து வந்தது.
    அன்புள்ள டாக்டர்,
        இந்த கடிதத்தை பார்த்து வியப்படையாதீர்கள். என் முழுப் பெயரை இங்கு நான் எழுதவில்லை. என் பெயரும் உங்கள் பெயர் தான் என்பதை மட்டும் மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
       என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்காது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் மருத்துவமனையில் நான் இருந்தேன். வேறு ஒரு டாக்டர் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்குக் குழந்தை பிறந்தது; அன்றே அது இறந்து விட்டது.
               என்னை கவனித்து வந்த டாக்டர் ஒரு நாள் என்னிடம், ”உங்களுக்கு ஒரு சின்னத் தகவல். உங்கள் பெயரையே உடைய ஒரு டாக்டர் இங்கே இருக்கிறார். இங்கு அட்மிட் ஆனவர்களின் பெயர்கள் எழுதியுள்ள நோட்டீஸ் போர்டில் உங்கள் பெயரைப் பார்த்த அவர் உங்களைப் பற்றி என்னிடம் விசாரித்தார்; உங்களைப் பார்க்கவும் விரும்பினார்.... குழந்தையை இழந்த நீங்கள் யாரையும் சந்திக்க விரும்புவது சந்தேகம் என்று அவரிடம் சொன்னேன்” என்றார்.
      “அதனால் என்ன? அவரைப் பார்க்க எனக்குத் தயக்கம் இல்லை” என்று நான் கூறினேன்.

                  சிறிது நேரம் கழித்து நீங்கள் என் அறைக்கு வந்தீர்கள். என் படுக்கைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டீர்கள். எனக்கு ஆறுதல் கூறினீர்கள். மற்றபடி என்னிடம் அதிகம் எதுவும் பேசவில்லை. உங்கள் முகபாவமும், குரலில் இருந்த கனிவும் என் கவனத்தை ஈர்த்தன. அது மட்டுமல்ல, உங்கள் நெற்றியில் கவலையின் அறிகுறியாக பல ஆழமான கோடுகள் இருந்ததையும் பார்த்தேன். உங்கள் பரிவான ஆறுதல் வார்த்தைகளாலோ என்னவோ வெகு விரைவிலேயே என் உடல் நலமடைந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்.
       அதன் பிறகு உங்களை நான் சந்திக்கவில்லை. ஆனால் தாங்கள்  இரவு பகல் என்று பாராது மருத்துவ மனையிலேயே இருப்பதாகச் சொன்னார்கள்.

.
       இன்று பகல் சைனாவில் பீஜிங் நகரில் ஒரு அழகான வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளேன். வீட்டின் தோட்டத்தைச் சுற்றி உயரமான மதில் சுவர்கள் இருந்தன. அதன் ஒரு பகுதியில், அழகிய சிவப்பு, வெள்ளை மலர்ச் செடிகள் காட்சியளித்தன. அங்கு சுவரில் சுமார்  இரண்டு அடி நீளமுள்ள ஒரு பித்தளைத் தகடு   பதிக்கப்பட்- டிருப்பதைப் பார்த்தேன். அதில் சீன மொழியில் ஏதோ பொறிக்கப் பட்டிருந்தது. அதைப் படித்து மொழிபெயர்த்துச் சொல்ல ஒருவரைக் கேட்டுக் கொண்டேன். அவர் படித்துச் சொன்னார்:
     “மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!” என்பதே அந்த வாசகம்.

அந்த வாசகத்தை பற்றி விடாது மனதில் அசை போட்டேன். எனக்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை. இறந்துபோன குழந்தையை எண்ணி இன்னும் வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கணம் என் மனதில் ஒரு திடீர் முடிவு தோன்றியது.  ‘இனியும் நான் காலம் தாழ்த்தக் கூடாது. நான் ஏற்கனவே தாமதம் செய்து விட்டேன்’ என்று என் உள்ளுணர்வு எனக்குத் தெரிவித்தது. ‘இறந்துபோன குழந்தையைப் பற்றிய எண்ணி விசனத்திலேயே மூழ்கி இருக்கிறாயே’ என்று என் உள் மனது கேட்டது.
    குழந்தையை பற்றி எண்ணம் வந்ததும், மருத்துவமனையில் நீங்கள் என்னை வந்து பார்த்தது நினைவுக்கு வந்தது. அது மட்டுமல்ல, ஓய்ச்சலே இல்லாமல் உழைப்பதன் அடையாளமாக உங்கள் நெற்றியில் விழுந்திருந்த கோடுகளும் நினைவுக்கு வந்தன. எனக்குத் தேவைப்பட்ட அனுதாபத்தைக் கனிவுடன் நீங்கள் அளித்தீர்கள்.
     உங்களுக்கு என்ன வயது  என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை என் தந்தை ஸ்தானத்தில் நான் வைக்கக்கூடிய அளவு வயதானவர் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. எனக்காக நீங்கள் அன்று செலவழித்த சில நிமிடங்கள் உங்களைப் பொருத்தவரை ஒன்றும் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு குழந்தையை இழந்த, அதுவும் அது பிறந்த தினத்தன்றே பறிகொடுத்த ஒரு பெண்ணுக்கு அது மிக மிகப் பெரிய விஷயம்.
   பதிலுக்கு நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவ்வப்போது எண்ணுவது வழக்கம். அது அறிவீனம் என்று எனக்குத் தெரியும்.
   இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்த தினம், நீங்கள் தனியாக ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து, சீன தோட்டத்துப் பொன்மொழியை தீர்க்கமாகச் சிந்தியுங்கள்!
    மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!     
                                                                                  ---  மார்க்கெரட்
       

November 01, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 1



முதலில் சில வார்த்தைகள்.
சில வாரங்களுக்கு முன்பு, ‘நான்கு யோக முறைகள்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய விடுதியில் மூன்று நாட்கள் ஒரு பயிலரங்கம் நடந்தது.  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை விடுதியிலேயே நடந்தது. விடுதியில் தங்கும் வசதி இருந்தது இடைவேளை உணவுக்குப் பிறகு, ஓய்வின் போது அந்த விடுதியின் வரவேற்பு கூடத்தில் இருந்த நாலைந்து ஷெல்ஃப்களில்  நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்தேன். அதனருகில் வசதியான சோபாக்கள் இருந்தனப் அந்த புத்தகங்களில் பல புதையல்களைக் கண்டுபிடித்தேன். எல்லாவற்றிற்கும் சிகரமாக எனக்குக் கிடைத்தது, சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு புத்தகம். அதில் பல அற்புதமான கட்டுரைகள் இருந்தன. பத்து தலைப்பில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இருந்தன. மகிழ்ச்சி, நம்பிக்கை, துணிவு, மனோதிடம், சுய ஒழுங்கு, மன அமைதி, பாசம், மனநிறைவு, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை என்று வகுக்கப்பட்டிருந்தன. எல்லாம் தத்துவ தலைப்புகள் என்று  உதட்டைப் பிதுக்கி அலட்சியப்படுத்தாதீர்கள். மனதைத் தொடும் நிகழ்வுகள், பல புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகளின் பகுதிகள், உணர்ச்சிகரமான   சம்பவங்கள், வாழ்க்கை வரலாறுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், பொன்மொழிகள் என்று பிரமாதமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரைகள்! ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னுரையாக புத்தகத்தைத் தொகுத்தவர் விளக்கங்களை மிக மிக சுவைபட எழுதி மேலும் சிறப்பு சேர்த்திருந்தார்!.


விடுதியில் தங்கியிருந்த மூன்று நாட்களுக்குள் மொத்த புத்தகத்தையும் படிக்க முடியவில்லை. ஆகவே வலை போட்டுத் தேடி, புத்தகத்தை வாங்கினேன். அந்த புத்தகத்தில் இருக்கும் எல்லா கட்டுரை களையும் தமிழ்ப் படுத்திப் போட மனம் விழைகிறது. பதிப்புரிமை, போன்ற பிரச்சினைகள் வரக் கூடும் என்பதால் ஒரு கட்டுரையைத் தழுவி, என் சொந்த சரக்கையும் சேர்த்து  ‘படித்தேன், ரசித்தேன்’ என்கிற மாதிரி ஒரு கட்டுரை எழுதி உள்ளேன். இது சற்று நீண்ட பதிவாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் போடுகிறேன். பதிவுகளுக்கு இடையே அதிக இடைவெளி இருக்காது.

  “அது சரி, புத்தகத்தின் தலைப்பு போன்ற விவரங்களைச் சொல்லுங்கள்” என்று நீங்கள் கேட்பதற்கு முன், நானே தந்து விடுகிறேன்: LIGHT FROM MANY LAMPS. Edited with commentaries by LILLIAN EICHLER WATSON..

 இனி புத்தகத்திற்குப் போகலாம்.
******

November 20, 2016

இப்படியா படம் எடுப்பாங்க?

நான் எழுதியதா?
எந்த எழுத்தாளரும் தான் எழுதிய கதை, திரைப்படமான பிறகு அதைப் பார்த்து திருப்தியோ, மகிழ்ச்சியோ அடைய மாட்டார்கள். காரணம் அவர் விவரித்த கதாபாத்திரங்களைப் பற்றி அவருடைய கற்பனையில் தோன்றிய மாதிரி திரையில் இல்லை என்று ஏமாற்றம் அடைவார்கள். படத்தின் இயக்குனர் கதையைப் படித்தபோது எந்த மாதிரி கற்பனை கதாசிரியரின் எழுத்து உண்டாக்குகிறதோ அதைப் பின்பற்றி திரையில் உருவாக்குகிறார்கள். இரண்டு பேருடைய கற்பனையும் ஒத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஆனால், தான் நினைத்தபடி கதாபாத்திரம் திரையில் வராதது பற்றி ஏமாற்றம் அடையலாம்; ஆனால் திரைப்பட இயக்குனர் மீது கோபம், வெறுப்பு, எரிச்சல் கொள்ளக்கூடாது.
          தங்கள் கதை படமானபிறகு அதைப் பார்த்துவிட்டுக் கூறிய சில கசப்புக் கருத்துகளை நான் குறித்து வைத்திருக்கிறேன்.
  சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

November 06, 2016

ஹலோ பிரிசிடெண்ட்: ஹலோ வைஸ் பிரிசிடெண்ட்

 ### அமெரிக்க அதிபரின் பதவி ஏற்பு விழா. ###

முன்னுரை: இப்போது AL ROKER, DEBORAH ROKER என்ற இருவர் (தம்பதியர்) எழுதிய BEEN THERE, DONE THAT புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன்.
          இவர்கள் இருவரும் மீடியா உலகில் பிரபலமானவர்கள். இருவரும் சேர்ந்து 16 EMMY AWARDS என்ற விருதைப் பெற்றிருப்பவர்கள்.
 ரோக்கர் NBC-யின் TODAY SHOW நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 30 மில்லியன் பேர் பார்க்கும் நிகழ்ச்சியாம் இது. அவருடைய மனைவி டெபோரா, ABC என்ற நிறுவனத்தின் செய்தியாளர். TALK SHOWக்களும் நடத்தி உள்ளவர். உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் செய்திருப்பவர். GOOD MORNING AMERICA போன்ற பல பிரபல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் புகழ் பெற்றவர்.
          தங்கள் அனுபவங்களையும், அதில் கற்ற பாடங்களையும், இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான குடும்பப் பாங்கான பல அறிவுரைகளையும் சுவையாக, நம்மிடம் நேரில் பேசுவது போல் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள்.   நாற்பது கட்டுரைகள். (ரோக்கர் இருபது , டெபோரா இருபது.)  
மறக்க முடியாத அதிபர் பதவி ஏற்பு விழா என்ற தலைப்பில் ரோக்கர் எழுதிய கட்டுரையை சற்று சுருக்கி, தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.
றக்க முடியாத அதிபர் பதவி ஏற்பு விழா
என்னுடைய ரேடியோ, டிவி ஷோக்களில் பெற்ற 37 வருட அனுபவங்களில், எத்தனையோ மறக்க முடியாத பல நிகழ்ச்சிகளை விவரித்து இருக்கிறேன். பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள், மக்கள் புரட்சிகள், பயங்கரமான SANDY புயல் எனப் பலப்பல.
          ஆறு அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், முதன்முதலாக, ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்ட விழாவை வாழ்நாளில் நான் காண்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்திராத எனக்கு, அப்படி ஒரு விழாவைப் பார்க்கும் வாய்ப்பு வந்தது என்னை அசத்தி விட்டது என்பது உண்மை.

September 01, 2016

’கோல்ட்’வின்னின் பொன்/பென் மொழிகள்


ஹாலிவுட் தயாரிப்பாளர் SAMUEL GOLDWYN (1882-1974) நிறைய ஜோக் அடிப்பார். சிரிப்புப் பொன்மொழிகளை உதிர்ப்பார். (இவற்றைத் தயார் பண்ணிக் கொடுக்கச் சிலரை வேலையில் வைத்திருந்தார் என்றும் கூறப்படுவதுண்டு.)அவர் பல வருஷங்களுக்கு முன் STELLA DALLAS என்று ஒரு படம் எடுத்தார். அதில் BARBARA STANWYCK என்பவர் கதாநாயகியாக நடித்தார். 

ஒரு முக்கியமான காட்சியில் கதாநாயகி கண்ணீர் விட்டு அழுதபடியே பேசி நடித்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த கோல்ட்வின்னுக்கும் கண்களில் நீர் கசிந்துவிட்டது. அந்த ஸீன் படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயகியிடம் “நீங்கள் அழுதுகொண்டே நடித்தது மிகவும் நன்றாக இருந்தது. இதே காட்சியைத் திரும்பவும் எடுக்க விரும்புகிறேன். இப்போது அழக்கூடாது; ஆனால் பொங்கி வரும் அழுகையைக் கஷ்டப்பட்டு அடக்குவதுபோல் நடித்து வசனங்களைப் பேசுங்கள். பிரமாதமான காட்சியாக அமைந்து விடும்.” என்றார்.
கதாநாயகியும் அப்படியே நடித்தார். அதைப் பார்த்த கோல்ட்வின்னுக்கும் அழுகை பீறிட்டு வந்தது.


இந்தக் காட்சியைப் பற்றிப் பின்னால் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தான் அழுததைச் சொல்லிவிட்டு “இவைதான் என் வாழ்க்கையின் மிக மிக சந்தோஷமான கணங்கள்” என்றாராம்.
இது எப்படி இருக்கு?
+++++++++
பிடித்த பொன்மொழி  
அவருக்குப் பிடித்த ஒரு பொன்மொழியும் அதைப் பற்றி அவர் எழுதிய சிறிய கட்டுரையையும் இங்கு தருகிறேன்.

உன்னைப் பொறுத்தவரை நீ உனக்கு
உண்மையாக இரு” - ஷேக்ஸ்பியர் .

நான் ஹார்வர்ட் பல்கலை கழகத்திலோ, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலோ படிக்கவில்லை என்பது ஊரறிந்த ரகசியம்.
நான் ஒரு தொழிற்சாலை ஊழியராக இருந்தபோது, இரவுப் பள்ளியில் படித்து கற்றுக்கொண்ட சிறிதளவு கல்விதான் என் படிப்பின் அளவு, நான் ஷேக்ஸ்பியரைக் கற்றுணர்ந்த பெரிய மேதை அல்ல.  இருப்பினும்,மேலே குறிப்பிட்டுள்ள அவரது  பொன்மொழியை வெற்றிகரமான வாழ்க்கைக்கு முக்கியமான வழிகாட்டி என்று நான் கருதி வந்துள்ளேன். ‘வெற்றிகரமான’ என்று நான் கூறுவதை அந்த வார்த்தை தரும் அர்த்தத்தை நூறு சதவிகிதம் நம்புகிறேன்.
ஹாலிவுட்டில் நான் இருந்த வருடங்களில், நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் நான் கூறிவந்த புத்திமதி ஒன்றே ஒன்றுதான். நடிகை, நடிகர்கள் அவர்களுடைய கால கட்டத்தில் பிரபலமாக இருந்தவர்களைப் போல தாங்களும் இருக்க விரும்புவது, வேறொருவருடைய டைரக் ஷன் பாணியைப் பின்பற்ற டைரக்டர்கள் முயற்சி செய்வது, மிகவும் வெற்றிகரமாக இருக்கும் கதை வசனகர்த்தாக்களைப் போல் எழுத திரையுலக எழுத்தாளர்கள் பிரயத்தனம் செய்வது ஆகிய யாவற்றையும் ஒதுக்கச் சொல்வேன். அவர்களிடம் நான் கூறுவதுண்டு: “நீங்கள் நீங்களாகவே இருங்கள்”

September 20, 2013

MAD Magazine-க்கு சஷ்டியப்த பூர்த்தி



புகழ் பெற்ற நகைச்சுவைப் பத்திரிகையான   MAD இதழுக்கு 60 வயது ஆகிவிட்டது.. ‘ MAD  பத்திரிகையும்  நானும்’ என்ற பதிவை முன்பே (இங்கு சொடுக்கவும்)எழுதி உள்ளேன். இது இரண்டாம் பதிவு.
சமீபத்திய ஆண்டுகளில்  MAD  இதழ்களை   நான் பார்க்க வில்லை. ஆனால் அமெரிக்கா வரும் சமயம் புத்தகசாலையில் புரட்டிப் பார்ப்பதுண்டு. பிரசுரகர்த்தர்  வில்லியம் கெய்ன்ஸ்  காலமாகி விட்ட பிறகு பத்திரிகையின் ஜீவன் குறைந்து விட்டதாக எனக்குத் தோன்றியதும் ஒரு காரணம். திரைப்படங்கள் பார்ப்பதை நான்  எப்போதோ நிறுத்தி விட்டேன் என்பதால்  அமெரிக்கத்  திரைப்படங்களை நையாண்டி செய்யும் படக்கதைகள் பல  புரிவதில்லை.

சென்ற   வருஷம் ஒரு அகராதி சைஸ் 1000 பக்க   MAD கலெக் ஷன் புத்தகம் கிடைத்தது. அதனால் பழைய பித்து பிடித்துக் கொண்டது!
சமீபத்தில்  60 ஆண்டு நிறைவை ஒட்டி, தீபாவளி மலர்  அளவில் கனமான   ஆர்ட் பேப்பரில் . TOTALLY MAD- 60 years of Humor,Satire, Stupidity and Stupidity என்ற பெயரில்  புத்தகம் வெளியிட்டிருக்கிறர்கள். அபாரமான புத்தகம். பழைய இதழ்களிலிருந்து பல நகைச்சுவை அம்சங்களை தொகுத்துத் தந்திருந்தாலும் புதிதாகச் சில கட்டுரைகளையும் சேர்த்திருக்கிறார்கள்.
MAD பத்திரிகையைப் பற்றிய   பல சுவையான  கூடுதல் தகவல்களை இங்கு தருகிறேன்.
MAD பத்திரிகையில் விளம்பரங்களைப் போடுவதில்லை என்பது கெயின்ஸின்  கொள்கை. தொண்ணூறுகளில்  MAD உயர்ந்த பட்சமாக கிட்டத்தட்ட  21 லட்சம் காபிகள் விற்றது. சமீப காலத்தில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாம்.
கறுப்பு வெள்ளையிலிருந்து கலருக்கு மாறியபோது செலவை ஈடு கட்ட விளம்பரங்களை MAD போட ஆரம்பித்தது. அத்துடன்,வருஷத்தில் 8 இதழ்கள் என்பதை 6-ஆகக் குறைத்து விட்டது.
ஒரு சிலர் MAD பத்திரிகை மீது அவ்வப்போது வழக்கு தொடுத்து இருக்கிறர்கள். அதனால், MAD பத்திரிகையில், ஆசிரியர், உதவி ஆசிரியர்,பிரசுரகர்த்தர்,என்ற பெயர்ப் பட்டியலில் தங்களது வழக்கறிஞரின் பெயரையும் சேர்த்து விட்டார் வில்லியம் கெயின்ஸ்!

MAD பத்திரிகை மீது போடப்பட்ட  வழக்குகளில் இரண்டு  சுவையானவை.

April 29, 2013

சகுந்தலா தேவி

கம்ப்யூட்டரையே கணிதத்தில் வென்றவர் சகுந்தலா தேவி. 
 சமீபத்தில் காலமானார்.,

தன் ‘அபூர்வ’ சக்தியால் உலகப் புகழ் பெற்ற இவரைiக் கணக்குப் புலி என்றோ, கணித மேதை என்றோ, பிராடிஜி  என்றோ கூற முடியாது.அவரிடம் ஒரு அதிசய சக்தி இருந்தது. அது இறைவன் கொடுத்த அபூர்வத் திறமை. பெரியபெரிய எண்களைப் பெருக்குவது, வர்க்க மூலம், (ஸ்கொயர் ரூட். க்யூப்ரூட், கண்டு பிடிப்பது போன்ற திறமை இருந்தது.

சுமார் 40 வருஷத்திற்கு முன்பு அவரைச் சந்தித்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் சகஜமாகப் பேசினார்.

அவரிடம், “  பெரிய பெரிய கணக்குகளை கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களால் எப்படி . போட முடிகிறது?  அந்த சமயங்களில் ஏதாவது ஆழ்மனதில் யோசிக்கிறீர்களா ? உங்களுக்கே உங்கள் திறமையைக் கண்டு வியப்பு ஏற்படுகிறதா?” என்றெல்லாம் கேட்டேன்.

“ எனக்கு விடை தெரிகிறது, சொல்கிறேன். எப்படி தெரிகிறது என்பதை என்னாலேயே  விளக்க முடியாது.  ... சரி.. உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்... 17-ஐயையும் 18-ஐயையும் கூட்டினால் என்ன வரும்?”என்று கேட்டார்.

நான் உடனே  “35”என்றேன்..

“ சரி.. எப்படி இவ்வளவு சீக்கிரம் சொன்னீர்கள்? மனதிற்குள் கூட்டிப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

 ” இல்லை..இது என்ன பெரிய கணக்கு.. கூட்டாமலேயே எனக்கு விடைதெரியும்” என்றேன்


“ அதாவது உங்கள் மூளை எப்படிக் கூட்டியது என்று உங்களுக்குத் தெரியாது. அது மாதிரிதான் எனக்கும்.. மனதில் வரிசையாக எண்கள் தெரிகிறது” என்றார்.

“ நீங்கள் தூங்கும்போது கனவு காண்பதுண்டா?” என்று கேட்டேன்.

“ ஏன், காண்பதுண்டு. எல்லா விதத்தில்லும் நான் சாதாரணமானவள்தான்... இந்தத்  திறமை எப்படி எனக்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.. இப்படி அதிசயத் திறமை உள்ளவர்கள் பலர் பல நாடுகளில் இருந்துள்ளார்கள்” என்றார்.

( அவரது பேட்டியைக்  குமுதத்தில் நான் எழுதினேன்)’

January 06, 2012

சொர்க்கத்திலிருந்து வந்த ஏழு

சமீபத்தில் ஒருநாள் பத்திரிகையில் வந்த செய்தி: ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை ஒரு பெண்மணி ஈன்றெடுத்தாள். இந்த மாதிரி செய்தியை ஆபீசிலும், பஸ்ஸிலும், வம்பு மடங்களிலும் சிறிது நேரம் பேசிவிட்டு சினிமா, கிரிக்கெட், அரசியல் என்று வேறு விஷயங்களுக்குப் போய் விடுவோம்.

நாலு குழந்தைகளைப் பெற்ற பெண்மணி வசதியானவளா, நாலு குழந்தைகளை எப்படி வளர்ப்பாள், எப்படி பராமரிப்பாள், 24 மணி நேரமும் உழைக்க வேண்டுமே, உதவிக்கு யாராவது இருக்கிறார்களா? முக்கியமாக நாலு குழந்தைகளை வளர்ப்பதற்கு நிதி வசதி இருக்குமா, அவளும் அவள் கணவனும் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பார்கள் என்றெல்லாம் நாம் பொதுவாக யோசித்துப் பார்ப்பதில்லை.

ஒரு சமயம் அமெரிக்கா சென்றபோது பழைய புத்தகக் கடையில் ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். அந்தப் புத்தகத்தின் தலைப்பு : Seven from Heaven.The Miracle of the McCaughey Septuplets. சொர்க்கத்திலிருந்து வந்த ஏழு! ஏழு என்ன?
ஏழு
குழந்தைகள், ஒரே பிரசவத்தில்..! அந்த ஏழு குழந்தைகளின் பெற்றோர் தங்கள் அனுபவத்தைப் புத்தகமாக எழுதி இருக்கிறார்கள்.
.
‘‘மேடம்... உங்கள் கர்ப்பத்தில் ஏழு குழந்தைகள் உருவாகியுள்ளன’’ என்று மகப்பேறு டாக்டர் சொன்ன தருணத்திலிருந்து குழந்தைகளைப் பெற்று, மருத்துவமனையிலிருந்து ஏழு குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்த விவரங்களையும், குழந்தைகளை வளர்த்த அனுபவங்களையும், சந்தி்த்த பிரச்னைகளையும், மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளையும் அவர்கள் விவரித்ததையும் படித்து நெகிழ்ந்தேன்; மகிழ்ந்தேன்; வியந்தேன்; சிலிர்த்தேன். பல நிகழ்ச்சிகளில் உலகில் மனிதாபிமானமும், நெஞ்சில் ஈரமும், கருணையும் வாடிப் போகாமல் துளிர் விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

சாதாரணப் பணியில் இருக்கும் நபர் எப்படி ஏழு குழந்தைகளை வளர்ப்பார். அங்குள்ள சட்டப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனி அறை இருக்க வேண்டும் அதாவது அவர்களுடைய வீட்டில் (7+1) எட்டு படுக்கை அறைகள் இருக்க வேண்டும். அவர்கள் இருந்தது அயவோ மாநிலத்தில் கார்லைல் என்னும் சிறிய ஊர் இவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி உள்ளூர் தேவாலயம் முன்நின்று செயல்பட்டது. ஏழு குழந்தைகள் என்பது உலக ரிகார்டாம்! இந்தக் குடும்பத்தினருக்கு உதவ முன்வருபவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டது. நிதி வசூல் செய்தார்கள். குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு ஏழு படுக்கை அறைகள் கொண்ட ஒரு புது வீட்டைக் கட்டி முடிக்க ஊரே திரண்டு உதவி செய்தது.

October 07, 2010

தபால் தலை



சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்பு சென்னை ஜி.பி,ஓ.வில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். முதல் நாள் உதவி போஸ்ட்மாஸ்டரிடம் அழைத்துப் போனார் ஹெட் கிளார்க். போகும்போது கட்டடத்தின் உயர்ந்த கூரையையும். பார்சல், மணீயார்டர், போஸ்டல் ஆர்டர்  செக்ஷன்களையும், ‘கவுன் டர்’களையும் மலைப்புடன் பார்த்தபடி சென்றேன். எங்கு பார்த்தாலும் பேப்பர் கட்டுகள்.. பீரோக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன..  மேஜை, நாற்காலிகள் கிளைவ் காலத்தைச் சேர்ந்தவைகளாக இருந்தன. ஒரே இரைச்சல். டமால்,. டமால் என்று முத்திரை குத்தும் ஓசை வேறு. பெரிய ஹாலில் சுமார் 50,60 தபால்காரர்கள், தபால்களைப் பிரித்துக் கொண்டும் ‘பீட்’ பிரகாரம் அடுக்கிக்கொண்டும் தமிழிலும், தெலுங்கிலும் பேசிக்கொண்டிருந்தார்கள்.(ஆம், தெலுங்கும் ஜி. பி. ஓ.வின் முக்கிய மொழியாக இருந்த காலகட்டம் அது! .”ஐயோ இந்த புராதன கட்டடத்தில், இந்த சத்தத்தில் எப்படி வேலை செய்யப் போகிறோம் என்று லேசான கவலை ஏற்பட்டது. சம்பளம் ரூபாய் 55 என்று தெரிந்தபோது இடிந்து போனது தனிக்கதை. மூன்று மாதத்திற்குப் பிறகு பயிற்சி காலம் முடிந்து விட்டது என்று கூறி சம்பளம் 125 ரூபாயாக ஆக்கப்பட்டது.
    வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குப் பிறகு ஜி. பி. ஓ.  வின் அகன்ற படிகளில் ஏறும் போது இடது பக்கம் தரை தளத்தில் பளிச்சென்று ஒரு அறை இருப்பதைப் பார்த்தேன். அந்த அறையின் மேஜை நாற்காலிகள் பள பள என்றிருந்தன. ட்யூப் லைட்டுகள் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன. கண்ணாடி போடப்பட்ட போர்ட்டுகளில் தபால் தலைகள் அழகாக வைக்கப்பட்டிருந்தன வெளியே போர்ட்டில்  PHILATELIC BUREAU  என்று எழுதப்பட்டிருந்தது. ஓஹோ,, இது  தபால் தலை சேகரிப்பவர்களுக்காக விசேஷ விற்பனை அறை என்று தெரிந்து கொண்டேன். அவர்களுக்கென்ன விசேஷ ராஜ மரியாதை என்று எண்ணிக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது. தபால் தலை சேகரிப்பது  KING OF HOBBIES AND HOBBY OF KINGS  என்று!. எனக்கென்னவோ தபால் தலை சேகரிப்பதில் ஆர்வம் ஏற்படவில்லை. ( நான் ராஜாவாக இல்லாததும் ஒரு காரணம்!) சில வருடம் ஜி. பி. ஓ. வில் குப்பை கொட்டிக்கொண்டிருந்து விட்டு டில்லி சென்றேன்.
அங்கு  பார்லிமென்ட் வீதி  தபால் நிலையம் எங்கள் அலுவலகத்தின் தரை தளத்தில் இருந்தது. புதிய தபால் தலைகள் வெளியிடும் போது அங்கு நல்ல கூட்டம் இருக்கும், தபால் நிலையத்தின் அகன்ற படிகளில் நிறைய பேர் பழைய தபால் தலைகளைப் பரப்பி வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள், அந்த  குவியல்களில் தேடித் தேடி தேவையான தபால் தலைகளை பலர்  வாங்கிக் கொள்வார்கள். ஆளைப் பார்த்து விலையைச் சொல்லுவார்கள் இந்த வியாபாரிகள். இவர்களில் பலர் மற்ற நாட்களில் அயல் நாட்டு தூதரகங்கள் உள்ள வீதிகளில்  சதா அலைந்து கோண்டிருப்பார்கள். தூதரகங்களின் அருகில்  உள்ள. குப்பைத்தொட்டிகளில் உள்ள தபால் உறைகளை எடுத்துக் கொண்டுபோய் தபால் தலைகளை ஜாக்கிரதையாக எடுத்துச் சேகரிப்பார்கள் என்று பின்னால் தெரிந்தது.
என்னுடன் பணி புரிந்து கொண்டிருந்தவர்கள் தபால் தலைகளையையும் முதல் நாள் கவர்களையும்  வாங்குவார்கள். இருந்தும் எனக்கு இந்த ஹாபியின் மீது ஆர்வம் ஏற்படவில்லை.
எழுத்துth துறையில் ஆர்வம் இருந்ததால்  புத்தகசாலைகளே கதி என்று இருந்தேன். குமுதம், தினமணி கதிர், கல்கி என்று பல பத்திரிகைகளில் என் எழுத்துகளுக்கு இடம் கிடைத்தது. டில்லியில் ஓரளவு பெயர் தெரிந்த ஆசாமியானேன்.