Showing posts with label கேரக்டர். Show all posts
Showing posts with label கேரக்டர். Show all posts

October 04, 2011

கோபி -- கேரக்டர்

புல்லாங்குழல் வித்வான் கோபாலன் என்னும் கோபிக்கு பெயர் பொருத்தம் அபாரம்! மனுஷனுக்கு எப்போது எதற்குத்தான் கோபம் வரும் என்பது தெரியாது. இவர் கோபமெல்லாம் தன் மனைவி, மக்களிடம் மட்டும் தான்! வீட்டை விட்டு வெளியே வந்தால் பரம சாந்த சொரூபி. மேடையில் உட்கார்ந்தால் இசை மன்னன் தான்!
கோபம் மட்டும் அவருடைய குறைபாடு அல்ல. தன் மனைவி, குழந்தை குட்டிகளின் நலனைப் புறக்கணிக்கும் அளவுக்கு, சொந்த சௌகரியம், சுகம் ஆகியவைகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் அளிப்பார்.
"ஊரெல்லாம் என்ன நல்ல பேர் இருந்து என்ன பிரயோஜனம்? வீட்டில் காலை வைத்தால் நரசிம்ம மூர்த்தி தான். "தோடியில் ஒரு கோடி காட்டும் போதே ஓடிப் போய் பாராட்டலாம்.' என்று சுப்புடு எழுதுகிறார். நீங்கள் உச்சி குளிர்ந்து போகிறீர்கள். இந்த தடவை நானே சுப்புடுவைப் பார்த்து சொல்கிறேன், உங்கள் குணத்தைப் பற்றி. அந்த அழகையும்தான் அவர் பத்திரிகையில் எழுதட்டுமே'' என்பாள் மனைவி.
"போய்ச் சொல்லேன்..  இன்னும் குடிகாரன், ஸ்திரீ லோலன், கடன்காரன், அப்பனைக் கொன்றவன், அண்ணன் வீட்டில் திருடியவன், குழந்தையின் கழுத்தை முறிக்கிறவன், கள்ளச் சாராயம் காச்சறவன் என்றெல்லாம் போய்ச் சொல்லு...... மூணு மணி நேரம் கச்சேரி பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தால் ஒரு கப் பால், காபி என்று ஒரு மண்ணும் கிடையாது.....

July 25, 2011

திருவாளர் பரந்தாமன் - கேரக்டர்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். திருவாளர் பரந்தாமனுக்கு உள்ள லட்சியம் எத்தனை சங்கங்களில் பிரசிடெண்டாக ஆகிறோமோ அத்தனைகளில் ஆக வேண்டும்.  அவருக்குப் பிரதம மந்திரி பதவியோ, ஏன் ஜனாதிபதி பதவியோ கிடைத்தால் கூட அதை ஏற்கத் தயங்குவார். ஆனால் 'ஆபீஸ் நேரத்தில் தூங்கி விழுவோர் சங்கம்' என்பது போன்ற சங்கம் ஏதாவது ஒன்றில் பிரசிடெண்டாக இருக்கிறீர்களா என்று கேட்டால் போதும், இந்திர பதவியே கிடைத்த மாதிரி பூரித்துப் போவார்.
டில்லியில் உள்ள அறுபத்து நான்கு தென்னிந்திய சங்கங்களில் ஒன்பதில் இவர் பிரசிடெண்ட்; பத்தொன்பதில் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர். இத்தனை சங்கங்களில் இவருக்கு எப்படி  சந்தா கொடுத்துக் கட்டுப்படியாகிறது என்று ஆச்சரியப்பட வேண்டாம். எப்போது கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாரோ, இனி சந்தாவாவது ஒண்ணாவது! அவர் பெயரில் பாக்கி இருக்கும்.
சந்தா தொகைகளைக் கட்டித் தீர்க்க வேண்டுமானால் குறைந்த பட்சம் அவர் வீட்டு டி.வி.யை விற்றால்தான் முடியும். பல சங்கங்களில் தேர்தல்கள் நடக்கும்போதுதான் சந்தா வசூலிப்பார்கள். ஒரு சமயம்  தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் பிறகு அந்த சங்கத்தில் தேர்தல் வராமலே பார்த்துக் கொள்வார்!
பளிச்சென்ற வெள்ளை அரைக்கை சட்டை, வேட்டி, கறுப்புப் பளபளப்பு தேயாத செருப்பு, ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடி, கையில் கார் சாவி -- இதுதான் திருவாளர் பரந்தாமன். பெரிய கம்பெனி ஒன்றின் டில்லிப் பிரதிநிதி.  மாளவியா நகரில் மாளிகை. மூன்று போன்கள். எல்லாம் கம்பெனி போன்கள்.
பரந்தாமன் ஒரு கூட்டத்திற்கு முதல் தடவையாக வருகிறார் என்றால் அந்த சங்கத்திற்கு உடனடியாக அதிர்ஷ்டம் அடிக்கும். எப்படி?
"இந்த அசோசியேஷன்ல லைப் மெம்பருக்கு முன்னூறு ரூபாயா? என்னைப் போட்டுக் கொள்ளுங்கள்.. யார் செகரட்டரி? ஓ! நீங்களா? எந்த மினிஸ்ட்ரி?... நம்ம ராமபத்ரனுக்குக் கீழே இருக்கிறீர்களா? நாளைக்கு ராமபத்ரன் கிட்ட சொல்லுங்க, எனக்குப் போன் பண்ணச் சொல்லி. "மினிஸ்டர் கிட்ட சொல்லுங்கள்' என்று ஓடி வந்தான். டிரான்ஸ்ஃப்ர் கேன்ஸல் ஆச்சு. ஒரு வார்த்தை. ஒரு தேங்க்ஸ்... பேச்கூடாது!... ஆமாம்...செகரட்டரி ஸார். தமிழ்நாட்டு வெள்ள நிவாரண நிதிக்கு நம்ம தியேட்டர் டிராமா போட்டுப் பணம் வசூல் பண்ணி அனுப்ப வேண்டும். நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன்... இன்னிக்கி என்ன அஜண்டா? ஆபீஸ் பேரர் எலக் ஷனா?... நடக்கட்டும்'' என்பார்.
பின்பு விவாதங்களில் பங்கு கொள்வார். "வருஷத்தில் நாலு டிராமாவாவது போடணும். சாவனீர் விளம்பரப்  பணம்  மூணு வருஷமா வராமல் பாக்கியிருக்கிறதை ரைட் ஆப் பண்ணிடலாம். இந்த வருஷம் சாவனீர் என் பொறுப்பு... பத்து விளம்பரம் நான் வாங்கித் தர்ரேன்.'' -- இந்த ரீதியில் பேசி எல்லாரையும் பிரமிக்க வைப்பார்.

June 25, 2011

கேரக்டர் -அருணாசலம்

சவர்க்கர் குல்லாய், தடித்த பிரேம் மூக்குக் கண்ணாடி, கணுக்காலுக்கு நாலங்குலம் மேலேயே நின்று விடும் பாண்ட், கட் ஷூ, தலையணை மாதிரி உப்பியிருக்கும் ஜிப்-பை, ஐந்தாறு பேனாக்கள், டைரி, பொடி டப்பி, மூக்குக் கண்ணாடி உறை ஆகியவைகள் ஜேபியில் திணிக்கப்பட்டிருக்கும்., மிதமிஞ்சிய தற்பெருமை.  அளப்பு. -- இதுதான் அருணாசலம்.
அவன் சண்டப் பிரசண்டமாகப் பேசுவதைக் கேட்டு, ``கவர்மென்ட் ஆப் இந்தியாவே உன் தலையில் ஓடுகிறதா?'' என்று யாரும் அவனைக் கேட்க மாட்டார்கள். மற்றவர்கள் கேட்க விடாமல் அவன்தான் மூச்சு விடாமல் பேசுகிறவனாயிற்றே!
சர்க்கார் வண்டியே இவனால்தான் ஓடுகிறது என்று எண்ணி இவன் அண்டர் செக்ரட்டரியோ என்னவோ என்று கருத வேண்டாம். கால்நடை இலாகாவில் ஒரு எல்.டி.சி. -சாதாரண குமாஸ்தா.
``ஏன் அருணாசலம், நம்ப ராஜுவின் கலியாணத்திற்கு நீ வரவில்லை?'' என்ற சர்வசாதாரண கேள்விக்குக் கூட அத்தியாயங்களில் பதில் சொல்வான். எல்லாம் ஆபீஸ் விவகாரமாகத்தான் இருக்கும்.
அருணாசலம் சொல்வதை அப்படியே வாயைத் திறந்து கொண்டு கேட்டால்தான் பிழைத்தீர்கள். நடுவே ஏதாவது பேசினால் போச்சு, மற்றொரு தனி ஆவர்த்தனம் ஆரம்பமாகி விடும்.

``என்னப்பா அருணாசலம்! ஆபீசிலிருந்து இவ்வளவு லேட்டாக வருகிறாய்?'' என்று ஒருவர் கேட்டு விட்டார் ஒரு நாள்.
``பஸ்ஸா விடுகிறான்? ஒரு மணியாக பஸ்ஸே வரவில்லை. நாளை ஜெனரல் மானேஜருக்குப் போன் பண்ணி உலுக்குகிறேன். சே, எதுக்கு? வீணாக கண்டக்டரை சஸ்பெண்ட் பண்ணிடுவாங்க. அவன் வயிற்றெரிச்சலை எதுக்குக் கொட்டிக் கொள்ள வேண்டும்?''
``ஏனப்பா, ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொள்ளக் கூடாது?''
``ஆபீசில் `ஐயாயிரம் தருகிறேன். வாங்கிக்கோ' என்கிறார்கள். நான்தான் வேண்டாம் என்று இருக்கிறேன். பெட்ரோல் ரேஷன் இன்னும் பத்து வருஷத்தில் வரப் போகிறது. ஸ்கூட்டர்காரன் எல்லாம் திண்டாடப் போகிறான். நாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ள வேண்டும்? அதனால்தான் `போய்யா, உன் ஐயாயிரம்  வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.''
வெற்றிலை பாக்கு, பூ, பழத்துடன் தட்டில் ரூபாயை வைத்துக் கொடுக்கிறார்களோ என்று எண்ணி விடாதீர்கள். எல்லா சர்க்கார் ஊழியருக்கும் ஸ்கூட்டர் அட்வான்ஸ் கிடைக்கும். இவனுக்கு மட்டும் விசேஷமாக கொடுப்பது போல் சொல்லும் போது ஆச்சரியத்தினால் கண்கள் மலரப் பார்த்தால்தான் அவனுக்கு அபாரத் திருப்தி ஏற்படும்.

December 31, 2010

பரணி - கேரக்டர்

கணக்கு வழக்கு இல்லாத அளவுக்கு புகையிலைத் தோட்டம், எலுமிச்சம்பழத் தோப்பு, திராட்சைக்காடு என்று பணத்தைச் சாகுபடி செய்யும் தோட்டங்களை ஆந்திராவில் வைத்திருக்கும் மிகப் பெரிய செல்வந்தரின் ஒரே மகன் பரணி. சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் "குழந்தை'! நூறு ரூபாய்க்குக் குறைந்த நோட்டைக் கையால் தொடுவதே பாவம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு "பாக்கெட் மணி' பக்கெட் பக்கெட் டாக "நாயினா' அனுப்பிக் கொண்டிருக்க, சென்னையில் ஒரு கோஷ்டியையே சேர்த்துக் கொண்டு அட்டகாசமாக இருப்பவன் பரணி.
இருபத்திரண்டு வயதில் பி.யூ.சி. பரீட்சையின்மேல் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் பரணியைச் சுற்றி நாலைந்து நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். "டேய் பசங்களா, இன்னிக்குக் கிளாஸ் "கட்'டுடா'' என்றால் எல்லா நண்பர்களும் "கட்'டிடுவார்கள். காரணம், அன்று பரணி சினிமா, ஓட்டல் என்று முழு தின புரோகிராம் போட்டிருப்பான்.
"டேய், பரணி, இன்னிக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல். நான் லீவு போடலைடா'' என்று நண்பன் முரளி சொல்வான்.

December 05, 2010

பட்டாபி -- கேரக்டர்

பட்டாபிக்கு தெரியாதது சிரிப்பு. தெரிந்தது, முணுமுணுப்பு!
ஏழெட்டுக் கப்பல்கள் ஒரே சமயத்தில் கவிழ்ந்து போனவன் கூட சிறிது முக மலர்ச்சியுடன் இருப்பான். நம் பட்டாபியைப் பார்த்தால் எட்டுக் கப்பல்கள் கவிழ்ந்ததுடன், இன்கம்டக்ஸ் ரெய்டும் நடந்து, வீடும் ஏலத்திற்கு வந்து விட்டது போன்று படு சோகத்துடன் காட்சியளிப்பார்!
இவருக்கு என்ன கவலை? ஒன்றுமில்லை. ஒரு கவலையுமில்லையே என்று நினைத்துக் கவலைப்படும் ஆத்மா!
மண்ணடி இரும்புக் கடை ஒன்றில் நாற்பத்தியேழு வருஷம் பணியாற்றி விட்டு ரிடையர்  ஆனவர் பட்டாபி. முழு வழுக்கை. நீண்ட அரைக்கை சட்டை (காமராஜர் மாடல்), கச்சம் வைத்த வேட்டி, இடது கையில் பொடி டப்பா, வலது கையில் நியூஸ் பேப்பர்.. ஒரே சமயத்தில் பாகற்காய், எட்டிக்காய், இஞ்சி, கொய்னா ஆகியவற்றை அரைத்துச் சாப்பிட்ட மாதிரி முக விலாசம்.
இவரது பையன்கள், பெண்கள் எல்லாருக்கும்  கலியாணம் ஆகி குழந்தை குட்டிகளுடன் இருக்கிறார்கள். இருந்தாலும் பட்டாபி சதா முணுமுணுத்துக் கொண்டிருப்பார். சரி பட்டாபியின்  முணுமுணுப்பை டேப் ரிகார்ட் செய்து போட்டுப் பார்க்கலாமா?

November 20, 2010

ராஜாமணி -- கேரக்டர்

ராஜாமணிக்குத் தெரியாத விஷயங்கள் எதுவும் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவிலோ, கலைக்களஞ்சியங்களிலோ, ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையிலோ  இதுவரை அச்சாகவில்லை. உண்மையில் உலகிலுள்ள எல்லா விஷயங்களிலும் அவருக்கு அவ்வளவு தேர்ச்சியா என்று வியப்படையாதீர்கள்.  ராஜாமணி பேச ஆரம்பித்தால் அப்படித் தான் ஒரு பிரமை உங்களுக்கு உண்டாகும்! இலக்கியம், அரசியல், சினிமா, பக்தி,  ஜோசியம், பொருளாதாரம், கிசுகிசு,  விஞ்ஞானம், மருத்துவம் என்று எந்தத் துறையிலும் அவர் புகுந்து விளையாடுவார்.  
முப்பது வயது. நிறைய படித்துக் கொண்டிருப்பவர்.ஆதலால் சோடாபுட்டி கண்ணாடி! மழமழ வென்று வாரிவிடப்பட்ட கிராப்பு. மழமழ வென்று ஷேவ் செய்யப் பட்ட முகம். நல்ல சிகப்பு. பளிச் சென்ற வெள்ளை பாலிஸ்டர் ஸ்லாக், சரிகை வேஷ்டி, கையில் ஒரு புத்தகம், படித்த இடத்திற்கு அடையாளமாக அதன் நடுவே ஒரு விரலை விட்டுப் பிடித்துக்கொண்டிருக்கும் பாங்கு - இவை  ராஜாமணியை ஓரளவு விவரிக்கும்.
ஜப்பான் கம்பெனி ஒன்றில் பிரதிநிதி. குறைந்த வேலை. நிறைந்த சம்பளம். கல்யாண மார்க்கெட்டில் இருப்பவர்.
அதோ ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையிலிருந்து வெளியே வருகிறார். வாருங்கள் அவரைச் சந்திக்கலாம்.
"ஹலோ  ராஜாமணியா ... .என்ன நிறைய புத்தகம் வாங்கியிருக்கிறீங்க...?''
"நிறைய இல்லை. நாலு புஸ்தகம் தான். ஜென் புத்தீஸம், ஹோரரி அஸ்ட்ராலஜி, தொல்காப்பிய விளக்கம். அப்புறம் திருவரங்கன் உலா நாவல் ..''
"ஜோஸ்யத்தில் எப்போதிலிருந்து இன்ட்ரஸ்ட்? ...''

November 06, 2010

பட்டப்பா - கேரக்டர்


பழைய கோணிப்பை பிஸினஸில் லட்ச லட்சமாகப் பணம் பண்ண முடியும் என்றால் யாரும் சாதாரணமாக நம்பமாட்டார்கள். ஆனால் பட்டப்பா லட்சாதிபதியானதே பழைய கோணி பிஸினஸில்தான். அவர் கோணிகளை ஆயிரம், பத்தாயிரக் கணக்ககில்தான் வாங்குவார்; விற்பார். சில சமயம் லட்சக்கணக்க்கில் வாங்கிப்போட்டு டிமாண்ட் வரும்போது விற்பார். பெரிய பணக்காரராகாவிட்டாலும் பழைய கோணி பட்டப்பா என்று பலர் (அவருக்குப் பின்னால்) குறிப்பிடுவார்கள். ஊரில் பெரிய மனுஷனாக இருக்கவேண்டும் என்ற காம்ப்ளெக்ஸ் உண்டு. அதன் காரணமாக உலகில் உள்ள எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார்-கோணிகள் நீங்கலாக!

வாட்ட சாட்டமான உயரம்; உடல் அமைப்பு. தலையில் முடியிருந்தாலும் உச்சியில் மட்டும் ஒரு வழுக்கை வட்டம். சில்க் ஸ்லாக். மூன்று பட்டனாவது திறந்திருக்கும். கழுத்தில் இரட்டை புலிப்பல் சங்கிலி. அகல சரிகைப் பட்டை வேஷ்டி, கவர்ச்சிகரமான குள்ள குண்டுத் தனம்- பட்டப்பா உடை விஷயத்தில் மட்டும் மாறுதல் செய்து கொண்டே இருப்பார்.

October 24, 2010

அருமைநாயகம் - கேரக்டர்

அருமைநாயகம் நன்றாகப் படித்தவர். திறமையை விட. சர்வீஸ் காரணமாகப் பதவி உயர்வு பெற்று பம்பாய் அணு கமிஷனில் ஓர் உயர் அதிகாரியாக இருக்கிறவர். வெள்ளை மனது ஆசாமி. தலை முடியும் வெள்ளை. பக்திமான். கிறிஸ்துவும் கிருஷ்ணனும் மேரியும் மாரியம்மனும் அவர் வணங்கும் தெய்வங்கள்.
"என்னைப் பொறுத்த வரை எல்லா சாமியும் ஒன்றுதான்.'' என்பார். அவரது அறையில் சுவரை மறைத்துக் கொண்டு பலவித தெய்வப் படங்கள் மாட்டப்பட்டிருக்கும்.
அருமைநாயகம் அப்பாவி மனிதராகக் காட்சி அளிப்பார். "இவர் எப்படி இந்த பதவிக்கு வந்தார்?'' என்று பலருக்கு அவ்வப்போது சந்தேகம் எழும். "போகிறார், நல்ல மனிதர். சமயத்தில் சிறு பிள்ளை மாதிரி  ஏதாவது பேசுவார். தொலைந்து போகட்டும். புரமோஷன் கொடுக்கலாம்,'' என்று சொல்லியே பதவி உயர்வுகள் தரப்பட்டனவே தவிர, இவர் திறமைக்காக அல்ல!
சாதாரண பியூனிடம் கூட "ஏம்பா, இந்த பைலைக் கொண்டுபோய் கொடுக்கிறியா?... இல்லை, வேண்டாம், நீ உட்கார்ந்துகிட்டு இரு. நான் அந்தப் பக்கம் போகும்போது கொடுக்கிறேன்... சரி, பொடி இருந்தால் கொடு, என்பார்''

September 28, 2010

 வரதராஜுலு - கேரக்டர்

குறிப்பு:  சாவி அவர்கள் தன் அலுவலக மேஜையில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது எப்போதோ கோபுலு வரைந்த ஒரு ஓவியம்  அவர் கையில்  அகப்பட்டது. கோபுலு வரைந்திருந்த இந்த ஓவியத்தை திரு. சாவி எனக்கு அனுப்பி, அதற்கேற்ற மாதிரி ஒரு கேரக்டர் எழுதச் சொன்னார்.
         பிளாஸ்டிக் ஹாண்ட்பாக், வலைப்பையில் டிபன் பாக்ஸ், உயிரை எந்த நிமிடத்திலும் விடத் தயராக இருக்கும் ஆயிரம் ஒட்டுக்குடை, பட்டை பெல்ட், உயரம் குறைவான, "பிடிக்கும் பாண்ட்'  -- இவைதான் திருவாளர் வரதராஜுலுவின் ஸ்டாண்டர்ட் அலங்காரங்கள். பாலைவனத்தின் நடுவே ஓடும் சிற்றாறு போல், பரந்த வழுக்கைத் தலையின் நடுவில் நெளிந்து பறக்கும் மூன்று தலைமுடிகளும், புருவங்களுக்கிடையே உள்ள இரண்டு சுருக்கங்களும் அவரைக் கோபக்காரராகக் காட்டுவதைக் கவனிக்காமல், அவரிடம் பேச்சுக் கொடுத்தால், வந்தது வம்பு.
வரதராஜுலுவுக்கு பல விஷயங்களின் மேல் சதா கோபம். அவர் கைப்பையிலி ருக்கும் கடிதங்களின் பிரதிகளைப்
பார்த்தால் தெரியும், அவர் கோபத்திற்குக் காரணங்கள். காரசாரமான கடிதங்கள் எழுதுவதுதான் வரதராஜுலுவின் ஒரே வேலை.
ஜெயில் வார்டராக இருந்து ரிடையரான இவருடைய கண்களுக்குப் பலர் குற்றவாளிகளாகத் தென்படுவார்கள். பதவி இல்லாததால் அவர்களைச் சிறைக்குள் அடைக்க முடியவில்லை. ஆகவே தன்னுடைய கோபத்தைக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் தீர்த்துக் கொள்கிறார். யாருக்கு வேண்டுமானாலும் எழுதுவார். ஐ.நா. காரியதரிசி முதல் காட்டாங்குளத்தூர் கர்ணம் வரை எல்லாருக்கும் எழுதுவார்.
காலை ஒன்பதரைக்குச் சாப்பிட்டுவிட்டு, டிபனைக் கட்டிக் கொண்டு - வெறும் மோர் சாதம் தான் -  கிளம்பினார் என்றால் நேரே லைப்ரரிக்குத்தான் போவார்.

August 30, 2010

ஜெயம் - கேரக்டர்

லிப்ஸ்டிக் முதல் ராட்சஸ டீசல் இஞ்சின்வரை ஏகப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் பெரிய பம்பாய்க் கம்பெனியின் டில்லிப் பிரதிநிதி திருவாளர் ஜெயம். சீஃப் ரெஸிடன்ட் எக்ஸிக்யூட்டிவ்' என்ற அட்டகாசமான பெயராக இருந்தாலும் அவர் செய்வது, சர்க்கார் அலுவலகத்தில் அவரது கம்பெனி சம்பந்தப்பட்ட ஃபைல்களை வேகமாக நகர்த்தி வெற்றிகரமான முடிவிற்கு கொண்டுவரும் லியாசன் அதிகாரி வேலைதான். மகாராணி பாக் என்ற இடத்தில் ஒரு பெரிய மாளிகை. ஆபீஸ் கம் கெஸ்ட் ஹவுஸ். மூன்று கார்கள். நான்கு டெலிபோன்கள். டெலக்ஸ். உதவி மானேஜர், டைப்பிஸ்ட் என்று ஏழெட்டு பேர்.
பம்பரத்திற்கு மறு பெயர் ஜெயம் என்று சொல்லும்படி எப்போதும் படு பிஸி. டெலிபோனில் யார் யாரையோ `பிடித்து'ப் பேசிக் கொண்டிருப்பார். பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றொரு டெலிபோன் அலறும். "யார்... அடடே! வர்மாஜி, குட்மார்னிங்... கார் தானே? அப்பவே அனுப்பிட்டேனே.. இரண்டு நாள் என்ன, மூணுநாள் கூட வெச்சுகிட்டு அனுப்புங்க. நான் எங்கே ஸார் கலியாணத்திற்கு வருகிறது. சரி, கட்டாயம் இரண்டு நிமிஷம் தலையைக் காட்டுவேன். ஓ.கே.....''

August 13, 2010

கிருஷ் -- கேரக்டர்

கிருஷ்ணசாமி என்ற பெயர் கர்நாடகமாக இருகிகிறது
என்று அதை நசுக்கி `கிருஷ்' என்று ஆக்கிக் கொண்டிருக்கும் கேரக்டரைச் சந்திக்க வேண்டுமானால் காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் திருவல்லிக்கேணியில் உள்ள லட்சுமி லாட்ஜின் மூன்றாவது மாடியில் உள்ள கோடி அறையில் சந்திக்கலாம். அதன் பிறகு அவன் ஆபீஸ், சினிமா கிளப், `தீர்த்தம்' என்று போய் ரூமிற்குத் திரும்ப நேரமாகும்! பல இரவுகள் கிளப்பிலேயே தங்கிவிடுவான்.
கிருஷ் ரொம்ப ரொம்ப நல்ல ஆசாமி. நாற்பத்திரண்டைத் தாண்டிய கட்டைப் பிரம்மச்சாரி. ஒரு பெரிய மருந்துக் கம்பெனியில் சேல்ஸ் மானேஜர். வேலையில் அசகாய சூரன். லெட்டர்களுக்குப் பதில் `டிக்டேட்' பண்ணினால் யாரும் கை வைக்க முடியாது! அபார ஞாபக சக்தி. எந்த மாட்டை எப்படிக் கறக்கவேண்டும் என்று தெரிந்தவன். கை நிறைய சம்பளம். மாங்காடு காமாட்சியின் மேல் எவ்வளவு பக்தியோ அவ்வளவு பக்தி `ஜானி வாக்கர் ரெட் லேபிள்' புட்டி மீதும்! தன் சகோதரியின் குழந்தைகளுக்குத் துணி மணி என்று தாரளமாகப் பணம் செலவு செய்வான்; அதே சமயம் ரம்மியிலும் நிறைய பணத்தைக் கரைப்பான். ஊர் கவலைகளைத் தன் தலையில் போட்டுக்கொள்ளும் கவலை இல்லாத மனிதன் இவன்! ("வாழ்க்கையை ஒரு மோர்க்குழம்பாக ஆக்கக் கூடாது. அது அதற்கு ஒரு கம்பார்ட்மெண்ட் பண்ணி வைத்திருக்கிறேன்.'')

July 18, 2010

கேரக்டர்: மாணிக்கம் -கடுகு

ஜவஹர்லால் நேருவின் வெயிஸ்ட் கோட் போல, சர்ச்சிலின் சுருட்டு போல, சார்லி சாப்ளினின் தொப்பியைப் போல, மேஸ்திரி மாணிக்கத்திற்கு ஒரு இமேஜை அளிப்பது அவர் கையில் இருக்கும் கொல்லுருதான்!
இவர் தங்க ஸ்பூனுடன் பிறக்கவில்லை. இரும்புக் கொல்லுருவுடன் பிறந்தவர்; அதைப் பற்றி மிகவும் பெருமையும் படுபவர். தன் தொழிலின் மேல், தன் கை வித்தையின் மேல் அபார மதிப்பு.
இத்தனைக்கும் வேலையில் அவர் மன்னன் அல்ல. அதில் உள்ள குறைபாடுகளைத்  தன் பேச்சினால் ஈடுகட்டிவிடுவார்!
நல்ல உயரம், `வி' கழுத்து பனியன் மாதிரியான சட்டை கட்டம் போட்ட வேட்டி. பெரிய முண்டாசு. பெரிய மீசை. கழுத்தில் தாயத்து. வாயில் புகையிலை. வலது கையில் கொல்லுரு. இடது கையில் ஒரு பித்தளை (சாப்பாட்டுத்) தூக்கு. பார்த்தவுடனேயே இவர் ஒரு கொல்லத்துக்காரர் என்பது தெரிந்து விடும்.!
"என்னப்பா மாணிக்கம். கிணற்றடியில் ஒரு சின்ன மேடை போடணும். சௌகரியப்பட்டபோது போடு'' என்று சொல்லி விடுங்கள் போதும்; ஆரம்பித்து விடுவார் மாணிக்கம்! "சாமி... இன்னும் ஆறு மாசத்துக்கு ஒழிவு கிடையாது. பொங்கலுக்குத் தொறந்துடணும்னு திட்டம் போட்டுட்டாங்க, பேஸ்மெண்டே வரலை சினிமா தியேட்டர்... மாணிக்கம், வேலை மளமளன்னு ஆவட்டும்'னு சொல்றாரு காண்ட்ராக்டர்.. அவசரப்பட்டா ஆவறதுக்கு எலெக்ட்ரீ வேலையா?...கடகால் போட்டால்,  பச்சைக் குழந்தையைப் பாத்துக்கற மாதிரி கவனிச்சுக்கிட்டு இருக்கணும்!

June 30, 2010

பையாகுட்டி -- கேரக்டர்

காஞ்சீபுரம் பாசஞ்சர், காட்டாங்கொளத்தூர் ஸ்டேஷனிலிருந்து புறப்படும் சமயம், திறந்த கோட்டுப் பறக்க, வேட்டியை டப்பா கட்டு கட்டியபடி ஓடி வந்து தொத்திக் கொள்ளும் ஆசாமி தான் திருவாளர் பையாகுட்டி. பெயருக்கு ஏற்றார்ப் போல் சிறிய கச்சலான ஆசாமி தான் பையாகுட்டி. ஒருகையில் எல். ஜி. பெருங்காயப் பை, மற்றொரு கையில்  குடை, ரிடையரான பிறகு ஒரு தனியார் கம்பெனியில் "மாடு' போல் உழைக்கும் ஜீவன்.
அந்த வண்டியில் பையாகுட்டி ஏறியதும் கலகலப்பு ஏற்படும். "வாய்யா பையாகுட்டி.... அக்சப்டென்ஸ் என்ன?'' என்று யாராவது கேட்பார்கள்.
 ஆம், பையாகுட்டியின் வாழ்க்கையில் ரேஸ், ரம்மி, குறுக்கெழுத்துப் போட்டி, ஐரிஷ் ஸ்வீப் ஸ்டேக்ஸ், நியூயார்க் காட்டன் ஆகியவைகள் தான் முக்கிய பங்கு பெற்றிருந்தன!
வாய் ஓயாமல் பேசுவார் பையாகுட்டி. "ஏண்டா ராமு, ராத்திரி உன்னை, த்ரீ மெயிலில் காணோம்? ஒரு கை குறைஞ்சுதுன்னு  ஒரு பாசஞ்ஜரைப் போட்டுக் கொண்டோம். பாவிக்கு என்னமா ஆடித்துத் தெரியுமா கை! எல்லாரையும் துரத்தித் துரத்தி அடிச்சான். இத்தனைக்கும் "பிரும்மச்சாரி'யும் "பத்து'வும் எவ்வளவு திருட்டு ஆட்டம் ஆட முடியுமோ அவ்வளவு ஆடினார்கள். பெரிய கல்லுளிமங்கனப்பா அவன். எல்லாரையும் சுருட்டி பைக்குள்ளே போட்டுக் கொண்டான்.

June 20, 2010

தாடித் தாத்தா - கேரக்டர்

மூன்றே தெருக்கள் கொண்ட கிராமத்தின் நடுத்தெருவில், கூரை வேய்ந்த வீட்டின், மழமழவென்று மெழுகப்பட்ட திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்தான் தாடித் தாத்தா. இவர் கிராமத்தின் உயிர் நாடி. ஒரு காலத்தில் பிரைமரி ஸ்கூல் வாத்தியாராக இருந்து ஓய்வு பெற்றவர். ஆதலால் "கல்விமான்'!
ஊரின் தனிநபர் பஞ்சாயத்து (ஒன் மேன் ட்ரிப்யூனல்). நாடி ஜோஸ்யர், நாட்டு வைத்தியர், அரசியல் அறிஞர், பகுதி நேர போஸ்ட்மாஸ்டர், தெருக்கூத்து வாத்தியார் - எல்லாம் இவரே. ஊரில் இவருக்குத் தெரியாமல் அல்லது இவரது ஆலோசனை இன்றி ஒரு காரியமும் நடக்காது.
"யாரு ... பச்சையா போவறது. இப்படி வா ... இந்த தபால் பையைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. ரன்னர் வருவான்.ஆமாம்... ராத்திரி இன்னா களத்து மேட்டிலே தகராறு. மறுபடியும் மருதாசலம் தண்ணி போட்டு விட்டு வந்துட்டானா? எத்தினி தபா சொல்லியிருக்கேன்! அவனுக்குப் புரிஞ்சாதானே. நம்ம வைத்திய  சாஸ்திரங்கள்ளே சுத்தமாகப் போட்டிருக்குது...
” சேத்திரமது  துமியளவும் தவிர்த்திடு. நேத்திரமது நேய மாகும். சாத்திரம் கூறும் சத்தியமதை பாத்திரமே நீ அறிவாய், பாத்திரு, புன்னைவன நாயகனே'' என்று கல்லுளி சித்தர் பாடலே  பாடியிருக்காரு.  இதெல்லாம் யாரு படிக்கிறாங்க.  "சின்னிம்மா' பாட்டு பாடறாங்க, பட்டணம் தான் "போவலாமடி பொம்பளை'ன்னு ... ஹும், யாரைச்சொல்லியும் பயனில்லை. குரு ஓட்டம் போய் சனி வூட்டை வுட்டு நகந்தாத்தான் வெசாழ தசை வருது. அது இருக்குதே இன்னும் இரண்டு மண்டலத்துக்கு மேலே ....''

June 12, 2010

குந்தன்மல் சௌகார் -கேரக்டர்

"நகைகளின் பெயரில் கடன் கொடுக்கப்படும்'  என்று எழுதப்பட்ட போர்டு தொங்கும், அந்த எட்டடிக்கு எட்டடி சின்னக் கடையின் கல்லாவின் முன் சப்பணம் கட்டி உட்கார்ந்துகொண்டு, எதிரே இருக்கும் பளபளக்கும் தராசில் இரண்டொரு வெள்ளி நகைகளை நிறுத்துக் கொண்டிருக்கும் நபர்தான் குந்தன்மல் சௌகார். அந்த சின்ன ஊரின் ஒரே லேவாதேவிக்காரர்.
பளிச்சென்று வெள்ளை மல் வேட்டி, வெள்ளை ஜிப்பா, பிரிமணை மாதிரி முறுக்கப்பட்டு தலையில் கட்டப்பட்டுள்ள வெள்ளை முண்டாசு, இவைகளுக்கு "மேட்ச்" ஆவது போன்ற வெள்ளை "தொங்கு' மீசை! வாழ் நாள் முழுவதும் வெள்ளையப்பருடனும் வெள்ளி நகைகளுடனுமே கழித்து விட்டதால் இப்படி வெள்ளையாகக் காட்சி அளிக்கிறாரோ!.
"என்ன சௌகாரே,  நீங்க என்ன மல் துணியைப் பீஸ் கணக்கில் வாங்கிடுவீங்களா? முண்டாசிலிருந்து திண்டு வரை ஒரே மல் தானா?'' என்று கேட்டால், "ஸுத்தம் ஸோறு போடும். நமக்கு எதுக்கப்பா ஆடம்பரம்? நம்ப பேரே என்னா தெரியுமா? குந்தன்மல்''  என்பார்.  "ஸர்ரி... ஸர்ரி... என்னா கையிலே, வெள்ளி கொலுஸா? இப்பத்தானே மூட்டுக்கினு போனே, மல்லாக்கொட்டை வித்தேன்னு சொல்லி.... சரி, அம்பது ரூபாய் வாங்கிட்டு போ.... அரே கோன் ஹை.... இஸ்கோ பச்சாஸ் ருப்யா தேதோ'' --தன் உதவியாளருடன் மட்டும் இந்தியில் தான் பேசுவார்.

May 26, 2010

நடேசன் - கேரக்டர்

மதுராந்தகத்தில் ஏராளமான நஞ்சை புஞ்சை நிலங்களுக்கும், ஊரில் ஏழெட்டு வீடுகளுக்கும், வாழை, வெற்றிலைத் தோட்டங்களுக்கும் அதிபரான நடேசன் சுயமாகச் சம்பாதித்தது ஒன்றுமில்லை. எல்லாம் பரம்பரை பரம்பரையாக வந்தது. நடேசனின் `ஆட்சிக் காலத்தில்' இந்த பரம்பரைச் சொத்துகள் சிறிது குறைந்தனவே தவிர கூடவில்லை.
தோப்பிற்கோ, களத்துமேட்டிற்கோ நடேசன் போவது அபூர்வம். அவரைச் சந்திக்க வேண்டுமானால் செங்கற்பட்டு கோர்ட்டுத் தாழ்வாரங்களில்தான் பார்க்கலாம்! அந்த கோர்ட் பியூனுக்கு அடுத்தபடி அதிக `சர்வீஸ்' போட்டவர் அவர்தான்! முப்பது வருஷங்களாக கோர்ட் வராந்தாக்களில் உலாத்திவரும் நடேசனுக்கு கோர்ட்டில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு சுவரும் பரிச்சயமானவை. வாரத்தில் இரண்டு மூன்று நாளாவது கோர்ட்டிற்கு வராவிட்டால் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும். வரப்பு வழக்கு, சொத்து வழக்கு, குத்தகை கேஸ், வீட்டு வாடகை பாக்கிக வழக்கு, தோப்பு காண்ட்ராக்ட் வழக்கு, வட்டி பாக்கி வழக்கு என்று ஏதாவது வழக்கு நடந்துகொண்டே இருக்கும்!
நடேசனால் லாபமடைந்தவர்களில் கோர்ட் ஊழியர்கள் நீங்கலாக முக்ககியமானவர், `வாய்தா' வரதராஜன். இவர் ஒரு வக்கீல். வாய்தா எக்ஸ்பர்ட். நடேசனுக்கு எதிராக கேஸ் போடுபவர்களை, வாய்தாக்கள் வாங்கியே படாத பாடு படுத்துவார். வரதராஜனின் வீட்டிற்கு `நடேச நிலையம்' என்று பெயர் வைத்தாலும் தகும். எல்லாம் நடேசனின் பணம்தான்!

May 20, 2010

அம்பி - கேரக்டர்

வேலங்கோடு வெற்றி அம்மன் திரைப்படக் கம்பெனியின் தயாரிப்பு  மானேஜரான அம்பியின் உண்மைப் பெயர் அவருக்கே ஞாபகமில்லை. அவரது திருமணப் பத்திரிகையில் கூட  தியாகராஜன் என்னும் `அம்பி' என்று மாற்றி அச்சடித்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! தமிழ்ப் பட உலகில் முப்பது வருஷங்களாக இருக்கும் ("இருக்கும் என்று சொல்லாதீர்கள் அண்ணா. குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் என்று சொல்லுங்க'') அம்பிக்கு இண்டஸ்ட்ரியில் தெரியாத நட்சத்திரங்களோ, டெக்னீஷியன்களோ, தயாரிப்பாளர்களோ கிடையாது, படே படே ஸ்டார்களைகூடப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். நீ, வா, போ என்றுதான் பேசுவார் உரிமையுடன். அவர் சர்வீசில் எத்தனையோ கம்பெனிகளைப் பார்த்துவிட்டார். பள்ளங்கள் கோபுரங்களாகியிருக்கின்றன. கோபுரங்கள் மறைந்து போயிருக்கின்றன!

அதோ வருகிறார், அம்பி!
மேல்பட்டன் போடாத ஸ்லாக், பாண்ட். ஹவாய் சப்பல், கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி அமெரிக்கன் கிராப். நெற்றியில் குங்ககுமப் பொட்டு. முகத்தில் மூன்று நாள் வளர்ச்சி புகையிலைக் கறையேறிய பல்வரிசை, கையில் பெரிய டைரி அதைவிட பெரிய டைரி அளவு காகிதங்கள் திணிக்கப்பட்ட சட்டைப்பை.
"என்ன அம்பி. ஆளையே காணோம்?''

May 12, 2010

ராவ்பகதூர் ராமேசம் - கேரக்டர்

பளபளவென்று வழுக்கை. பின்புறம் சீப்பை வளைத்து ஒட்ட வைத்தாற்  போல் (நரைத்த) முடி. நல்ல சிவப்பு. கணுக்காலுக்கு மேல் நிற்கும் பட்டை ஜரிகை வேஷ்டி,  தும்பைப் பூப்போன்ற மல் ஜிப்பா. விசிறி மடிப்பு அங்கவஸ்திரம், வெள்ளிப் பூண் கைத்தடி. இதுதான் ராவ்பகதூர் ராமேசம். மணி என்ன ஆகிறது? நாலரையா? அப்படியானால், ராமேசம் பீச்சிற்குக் கிளம்ப நேரமாக் விட்டது! "டிரைவர், ஐயாவிற்கு நேரமாகிறதே. வண்டி எடுக்கவில்லை?'' என்று திருமதி ராமேசம் கேட்பாள்.
வண்டி வந்ததும் ராமேசம் ஏறி உட்கார, சமையல்காரர் ஒரு ஃப்ளாஸ்க் தண்ணீரைக் கொண்டு வந்து காரில் வைப்பார். சரியாக ஏழு மணிக்கு ராமேசம் திரும்பி வந்துவிடுவார். பீச்சில் ஒரே இடத்தில் அவரது ஒரே நண்பரான மாத்ருபூதத்துடன் கடந்த 16 வருஷங்களாக உட்கார்ந்து, உலக விஷயங்களை அலசிவிட்டு வருவார். தினமும் என்னதான் பேசுவார்கள்?
         இதோ ஒரு சாம்பிள்; "மாத்ருபூதம், இந்த தாட்சரின் கவர்மென்டில் மிஸ்டர் ஹீத்தைப் போடாதது தப்பு, லங்காஷைர் பகுதிகளில் ஹீத்திற்கு சப்போர்ட் இருக்குது. நார்த் ஹாம்ப்டன், ஏவன்மௌத் பக்கத்தில் இவளுக்கு சாலிட்டாக இருக்குது சப்போர்ட். இதைப் பார்த்தால் நைன்டூன் தர்ட்டியில் பொப்பிலி ராஜா செய்ததைப் பாராட்டணும்....
கம்பூச்சியா விவகாரம் சின்ன பூச்சியாக இருந்து இப்போ வளர்ந்துட்டுது.. என்னைக் கேட்டால் காம்பிளிகேஷன்ஸ் ஜாஸ்தியாகத் தான் போகும். வீணாக நம் மண்டையை உடைச்சிண்டு என்ன லாபம்?...பாரேன், இந்த பாலமுரளியும் பாலசந்தரும் பாலகர்கள் மாதிரி சண்டை போட்டார்களே, என்ன  ஆச்சு...? கடைசியிலே அகாடமிகாரர்கள் கவர்மென்ட் அறிக்கை மாதிரி ஒரு ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க... நேற்று ரேடியோவிலே டைகர் கச்சேரியைக் கேட்டியா? என் டாட்டர்-இன்-லாவிடம் டேப் பண்ணச் சொன்னேன். டைகருக்கு அப்புறம் தோடி பாட, ஆளைத் தேடி கண்டுபிடிக்கணும்....

May 01, 2010

நாணா. - கேரக்டர்

சைலன்சர் இருந்தும், சைலன்சர் இல்லாத மோட்டார் சைக்கிளைவிட அதிகமாக படபட சப்தம் போடும் மூன்றரை ஹார்ஸ் பவர் மிலிடிரி மோட்டார் சைக்கிளில் அட்டகாசமாக, அண்ணாமலை மன்றத்தின் ஸ்டேஜின் வாசல் கதவு வரை வந்து வண்டியை ’ஜங்க்’ என்று நிறுத்துபவன்தான் நாராயணசாமி என்னும் நாணா.
நல்ல உயரம். நல்ல அகலம். ஆஜானுபாஹுவான ஆள். பூப் போட்ட ஸ்லாக், மேல் பட்டன் திறந்திருக்கும், கழுத்தில் தங்கச் செயின், இடது கையில் டிஜிட்டல் கடிகாரம்.  கழுத்தில் லாவகமாகச் சுற்றப்பட்டிருக்கும் கர்ச்சீஃப். இடது கையில் சாவிக்கொத்து.
நாணா இருக்குமிடத்தில் அட்டகாசமான சிரிப்பு இருக்கும். ஊர் வம்பு இருக்கும். சென்னையிலுள்ள அமெச்சூர் நாடக நடிகர்களைப் பற்றியும் குரூப்களைப் பற்றியும், அரட்டையும் கீழ்வெட்டும் இருக்கும். நகர சபாக்களைப் பற்றி  நுனி நாக்கு விமர்சனம் இருக்கும்.
நாற்பதைத் தாண்டிய நாணா ஒரு அமெச்சூர் நாடகக்குழுவின் சர்வாதிகாரி. இருந்தும் எல்லாரும் அவனை ’நாணா’, ’நீ’, ’வா’, என்று சர்வ உரிமையுடன் பேசுவார்கள். அவர்களுக்குத் தெரியும், நாணாவிடம் தாராளமாக உரிமை எடுத்துக் கொள்ளலாம் என்று. சில சமயம் கோபம் வந்து நாணா கத்த ஆரம்பித்தால் எல்லோரும் கப்சிப் தான்.
நாணா, நாடகத்தில் நடிப்பதை நிறுத்தி பல வருஷங்களாகின்றன. இருந்தும் நாடகத்தின் மேல் தீராத மோகம்.
"என்னடா, பசங்களா.... மணி ஐந்தரை ஆச்சு. சரியா ஆறாவது மணிக்கு டிராமாவிற்குப் பெல் அடித்துவிடுவேன்... எவனாவது ரெடியாகவில்லை என்றால் அவன் இனிமேல் நம்ம குரூப் பக்கமே தலைவைத்துப் படுக்கவேண்டாம்.... யாரு தர்மலிங்கமா? மேக்கப் போட நீ வந்துட்டியா இன்னிக்கி... உங்கப்பா எங்கே? மனோஹர் டிராமாவிற்குப் போய்ட்டாரா? பத்து ரூபாய் அவங்க ஜாஸ்தி கொடுக்கிறாங்க அதனாலே இவர் ஓடிப் போய்ட்டாரு... சரி.... சரி.... பின்னால் பேசிக்கிறேன். நீ வேலையைக் கவனி.

April 14, 2010

கேரக்டர்: பூபதி - கடுகு

குறுகலான மார்க்கெட் வீதியின் ஆரம்பத்தில் உள்ள பழையகால கடையில், சுற்றும் பல வித டின் டப்பாக்கள் சூழ, நடுநாயகமாகச் சின்ன ஸ்டூலில் சம்மணமாக உட்கார்ந்து கொண்டு, ஒரு கையால் உத்திரத்திலிருந்து தொங்கும் கயிற்றைப் பற்றியபடியே மற்றொரு கையால் சாமான்களை எடுத்துக் கொடுத்து, பணத்தை வாங்கிப் பக்கத்தில் உள்ள கல்லாப் பெட்டியில் பணத்தைப் போடுபவர் பூபதி. ஊரின் ஒரே நாட்டு மருந்து கடையின் அதிபர்.
கடை பரம்பரை சொத்து. மருந்து சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும் டின்களின் மேல் உள்ள துருவே, கடையின் வயது ஐம்பதுக்கு மேல் என்பதை நிரூபிக்கும். அந்த டப்பாக்களின் மேலே கோணல் மாணலாக வசம்பு, திப்பிலி, கண்டங்கத்திரி, இந்துப்பு, கிச்சிலிக்கிழங்கு, குங்கிலியம், ஏலரிசி என்று பல நாட்டுமருந்துப் பெயர்கள்.  கடைப் "பையனு'ம் ரொம்ப புராதன ஆசாமிதான்.
பளிச்சென்ற வெள்ளை வேட்டி. ஸ்லாக், கழுத்தில் தங்கப் பூண்போட்ட ஒற்றை ருத்திராட்சம், இடது கையில் தங்கச் செயின் போட்ட கோல்ட் வாட்ச், விரலில் இரண்டு மூன்று மோதிரங்கள், உட்கார்ந்தே வியாபாரம் செய்வதால், சற்றுப் பருமனடைந்த உடல், உப்பி இருக்கும் கன்னம், புல்தரை போன்ற மீசை, சதா பேசிக்கொண்டிருக்கும் வாய் ---இவைதான் பூபதி.