January 28, 2018

நான் ஏன் எழுதுகிறேன்?



சுய விசார கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியாது என்பதாலேயே அத்தகைய கேள்விகள் என் மனதில் தோன்றாதவாறு பார்த்துக் கொள்வேன்! உதாரணமாக, ’எனக்குஏன் முழுக்கைச் சட்டை பிடிக்கிறது’, ’நான் ஏன் இட்லிக்கு மிளகாய்ப் பொடியும், தோசைக்கு  சட்னியும் போட்டுக் கொள்கிறேன்’, ’பால் பேனாவை விட இங்க் பேனாதான் எனக்கு ஏன்  பிடிக்கிறது’ என்பது போன்ற பல கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியாது.  ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்று கேள்வி என் மனதில் இதுவரை தோன்றியதே இல்லை.
என்னைப் பார்த்துதான் பலர் "நீ ஏன் எழுதுகிறாய்? ஏன் எழுதுகிறாய்" என்றும், இதைவிட சலிப்புடனும் கேள்விகள் கேட்டி ருக்கிறார்கள். சமயத்திற்குத் தகுந்த மாதிரியும், ஆளுக்குத் தகுந்த மாதிரியும் பதில் சொல்லி இருக்கிறேன்.     இப்போது அந்த மாதிரியும் பண்ண முடியாது என்பதால், மாற்று விடையைக் குடைந்துப் பார்த்தேன். அதன் பலன் தான் இந்தக் கட்டுரை.  “நீங்கள் மண்டையைக் குடையாமல் இருந்திருக்கலாம். ’திருப்பரங் குன்றத்தில் சிரித்தால் திருத்தணியில் எதிரொலிக்கும்’ என்பார்கள். அதுபோல் நீங்கள் மண்டையைக் குடைந்து அது எங்கள் மண்டையில் எதிரொலித்து குடை குடையென்று குடையப் போகிறதோ? என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!

January 19, 2018

சிரிப்புக் கட்டுரைகள்: (1. மேட் இன் அமெரிக்கா 2, மேட் இன் ரஷ்யா)

    நான் செய்த தவறு - ஆர்ட் பக்வால்ட்         அமெரிக்கத் தயாரிப்பு               -            

     ஒரு விஷயத்தை உங்களிடம் மறைக்கப் போவதில்லை. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாக அதைச் சொல்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு நிம்மதி. எனக்குக் கார் ஓட்டத் தெரியாது.

அமெரிக்கர்கள் பரந்த மனப்பான்மை உடையவர்கள். ஒருத்தன் குடிகாரனாக இருப்பதை ஏற்றுக் கொள்வார்கள். கடத்தல்காரனாக இருக்கலாம். ஏன், எழுத்தாளனாகக் கூட இருக்கலாம். ஆனால் கார் ஓட்டத் தெரியாதவன் என்றால் அவனிடம் ஏதோ குறை இருக்கிறது என்று கருதுவார்கள்.
   என் குறையை பல வருடங்களாக வெளியில் சொல்லாது இருந்தேன். என் நண்பர்கள் என்னைச் சந்தேகத்துடன், அலட்சியத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.
     எனக்கு எப்போது தொல்லை ஏற்பட்டது என்றால், ஸ்டோருக்குப் போய் ஏதாவது சாமான்களை வாங்கி, ‘செக்கொடுக்கும் போதுதான்.
  சென்ற வாரம் பெரிய சூப்பர்மார்க்கெட்டுக்குச் சென்றேன். ஒரு டைப்ரைட்டர் வாங்கப் போனேன்.
சேல்ஸ்மேன் பல மாடல்களைக் காட்டினார். ஒரு மெஷினைத் தேர்ந்தெடுத்தேன். “விலையைச் செக்காகக் கொடுத்து விடட்டுமா?” என்று கேட்டேன்.

January 10, 2018

ஆசிரியர் சாவியுடன் சில நாட்கள்

முன் குறிப்பு. இது சில வருஷங்களுக்கு முன்புஎழு தப்பட்டது,

சகோதரி ஷ்யாமா அவர்கள் எழுதியுள்ள சாவியுடன் சில நாட்கள் புத்தகத்திற்கு ஒரு சிறுகுறிப்பு எழுதித் தரவேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டேன்.

ஷ்யாமாவின் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்தேன். படிக்கும்போது சாவி அவர்களைப் பற்றிய பற்பல சம்பவங்கள் எனக்குத் தோன்றியது. அவற்றை ஓரளவு இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

ஷ்யாமாவின் புத்தகத்தில் நான் நிறைய பக்கங்களை எடுத்துக் கொள்வது தவறு. அவர்தான் என்னை முகவுரை எழுதிக் கொடுங்கள் என்று என்னைக் கேட்ட தவறைச் செய்தார் என்றால் நானும் பதிலுக்குத் தவறு செய்வது சரியில்லை
 ஆகவே சுமார் 10- 15 பக்கங்களுக்குள் சுருக்கமாக எழுத எண்ணியுள்ளேன்.

வாஷிங்டனில் திருமணம் போன்ற பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய நாவலைப் போல் இன்னும் யாராலும் எழுதப்படவில்லை. அந்த நாவலைப் படித்த நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனானது வியப்பானதல்ல. கல்கியின் எழுத்தைப் படித்து அவரது பக்தனானேன். எனக்கு எழுத்து மோகம் பிடித்ததற்குக் காரணம் கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன் மற்றும் ஆர்.கே.நாராயணன் ஆகியோரின் படைப்புகள்!

தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பை சாவி  ஏற்றதும், முன்பின் அறிமுகம் இல்லாத எனக்கு.கதிருக்குக்   கதை எழுதித்தர முடியுமா என்று   கடிதம் எழுதினார்ஈகோ என்பது முற்றிலும் இல்லாத மிகப்பெரிய ரசிகர். நான் எழுதாத நகைச்சுவையா? நான் எழுதாத கதைகளா? நாவல்களா?’ என்று தனக்குத்தானே மார்பில் மெடல்களைக் குத்திக் கொள்பவர் அல்ல அவர்.

ஷ்யாமா அவர்கள், இப்புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளபடி, குமுதம் இதழின் மீது அவருக்கு அபார மதிப்பு உண்டு. அதன் காரணமாக குமுதத்தில் எழுதும் எல்லா எழுத்தாளர்களுக்கும் அவர் மகா ரசிகர். அதனால்தான் எனக்கு அவர் கடிதம் எழுதினார். (இப்படியே அவர் பலருக்கும் எழுதியிருப்பார்.)  நகைச்சுவை கதை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். எனக்குத் தலைகால் புரியவில்லை. நமக்கும் நகைச்சுவை எழுதும் திறமை இருக்கிறது என்று, எனக்கே நான் ஷொட்டு கொடுத்துக் கொண்டு எழுதி அனுப்பினேன். மிஸ்டர் பஞ்சு என்ற தலைப்பில் ஒரு கதையைஇதழின் அட்டையிலேயே அகஸ்தியன் எழுதிய மிஸ்டர் பஞ்சு ம் பக்கம் என்றும் போட்டு விட்டார். இதுதான் சாவி. இப்படித்தான் தகுதி உள்ளவர்களையும், என்னைப்போல் தகுதி குறைந்தவர்களையும் தூக்கி விடுவார். இத்தனைக்கும் அப்போது என்னை நேரில் பார்த்தது கூடக் கிடையாது.

December 30, 2017

வேண்டாம் முதல்வர் பதவி


       குறிப்பு:  எனக்கு  வரும் கேள்விகளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி திரும்பத் திரும்பப் பலரால் கேட்கப்படுகிறது. அதற்குப் பதில் அளித்தால் ரொம்ப நீண்டுப் போய்விடும் என்ற காரணத்தால் பதில் கூறாமலேயே தள்ளிப் போட்டு வந்தேன். ஆனால் பல்லாயிரக்க ணக்கான வாசகர்கள் (எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கான அளவு மிகை என்ற உண்மையைக் கூறிவிடுகிறேன்.!) ஓர் ஆர்வத்துடன் கேட்கும்போது பதில் சொல்லாவிட்டாலும் நன்றாக இருக்காது. ஆகவே இங்கு பதில் சொல்லிவிடுகிறேன்.
     கேள்வி இதுதான்; நீங்கள் ஏன் முதலமைச்சர் ஆகக் கூடாது?
     பதில்: ஒரே வார்த்தையில் சொல்வதானால்வேண்டாம்என்று சொல்ல வேண்டும் விளக்கமாகக் கூறாவிட்டால் திருப்தி ஏற்படாது. (எனக்குத்தான்!)
           *                *
     முதல் அமைச்சர் என்றால் தினந்தோறும் அலுவலகம் போகாவிட்டாலும், பேட்டி காண வரும் எம்.எல்.. க்களையும் பார்க்காமல் இருக்க முடியாது. அதற்காகக் காலையிலேயே எழுந்திருந்து (கஷ்டமான காரியம்) ஷேவ் பண்ணி (ரொம்பக் கஷ்டமான காரியம்) குளித்து (ரொம்ப ரொம்பக் கஷ்டமான காரியம்) தயாராக வேண்டும் !
     உதவி கேட்டு வரும் பிரமுகர்களைப் பார்த்து சிரிக்க வேண்டும். ஒரே ஒரு வேலை காலியாக உள்ள இடத்தில்நம்ப ஆளை போடணும்என்று கேட்டுக் கொண்டு தனித்தனியாக ஏழு எம்.எல்.ஏக்கள் வந்து கேட்பார்கள். “கட்டாயம் போட்டுடறேன்என்று ஏழு பேருக்கும் மனதறிந்து பொய் சொல்ல வேண்டும். ( பொய் சொல்வது லட்டு மாதிரி என்றாலும், ஒரு நாளைக்கு ஆயிரம்  லட்டு சாப்பிட முடியுமா?). ஏழு பேரையும் விரோதித்துக் கொண்டு என் மைத்துனியின்     பிள்ளைக்கு அந்த வேலையைக் கொடுக்க வேண்டும், (யாரை விரோதித்துக்   கொண்டாலும் என் மைத்துனியை விரோதித்துக் கொள்ள முடியாது!)
     அலுவலகத்துக்கு சென்றால் எனக்குப் புரியாத, தெரியாத, தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லாத   ஆயிரம் விஷயங்களை பற்றித்  தீவிர ஆலோசனைக்குப் பிறகு (!) முடிவு எடுத்து,  ஃபைல்களில் எழுதி அனுப்ப வேண்டும்.
     கவர்மென்ட் ஆபீஸில் யாரும் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மை என்பது எனக்குத் தெரியும். எல்லா கோப்புகளையும் முதல்வருக்கு அனுப்பிவிடுகிறார்களே! ஏதாவது ஒரு ஃபைலில்இதற்கு காம்பவுண்ட் வரி ஒரு சதவிகிதத்திலிருந்து ஒன்றே கால் சதவீதமாக மாற்றலாம்என்று அதிகாரி எழுதியிருப்பதைப் படித்து, இதனால் சர்க்காருக்கு வருவாய் என்று எண்ணிச் சம்மதம் தெரிவித்துவிடுவேன். (காம்பவுண்ட் என்றால் வீட்டைச் சுற்றி எழுப்பப்படும்  சுவர் வரி என்றுதான் புரிந்து கொள்வேன்!)