June 11, 2014

தானே ஏற்றுக் கொண்ட எளிமை


சிறிய துவக்க உரை
ஒரு சமயம் கல்கத்தா போயிருந்தேன். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போவது என் வழக்கம். கல்கத்தாவில் ‘நியூ மார்க்கெட்’ ரொம்பப் பழமையானது என்றும் அங்குள்ள காலேஜ் வீதி  பழைய புத்தகங்களின் சொர்க்கம் என்றும் என் அலுவலக வங்காள நண்பர் சொல்லி இருந்ததால், கல்கத்தா போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாக அங்கு சென்றேன்.
அங்கு எனக்கு கிடைத்த  ஒரு புத்தகம்   PETER'S QUOTATIONS. லாரன்ஸ் பீட்டர் என்பவரால் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட அபாரமானப் பொன்மொழிகள் புத்தகம். அவர் ஒரு தொகுப்பாளர் என்றுதான் நினைத்திருந்தேன்  சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் பழையப் புத்தக் சந்தைகளில் அவர் எழுதிய ஒன்றிரண்டு புத்தகங்கள் கண்ணில் பட்டன,

சமீபத்தில் அவர் எழுதிய  ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’  என்றபுத்தகத்தை பற்றிய ஒரு துணுக்கைப் படிக்க நேர்ந்தது, அவர் ஒரு பிரபல எழுத்தாளர் என்பது எனக்கு அது வரைத் தெரியாது . அதனால் அவர் புத்தகங்களைப் படிக்க, லைப்ரரியில் தேடினேன்.
1979-ல் பிரசுரமான PETER'S PEOPLE  என்ற புத்தகம் கிடைத்தது. அதில் தனது ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’ புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு  அவர் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டார்  என்பதை ஒரு   கட்டுரையில்  விவரித்து இருந்தார். கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. அதைச் சற்று சுருக்கி (சுமார்)  தமிழில் தருகிறேன்.
அத்துடன் அந்த குறிப்பிட்ட துணுக்கையும் கடைசியில் தருகிறேன்.

நானே ஏற்று கொண்ட எளிமை - லாரன்ஸ் பீட்டர்
என் குழந்தைப் பருவம் மிகுந்த ஏழ்மை மிக்கது. பின்னால் நான் படித்து வேலைக்குச் சேர்ந்த பிறகு படிப்படியாக, மெதுவாக என் வாழ்க்கைத்தரம் உயர ஆரம்பித்தது.   பிறகு 1969-ல் நான் எழுதிய PETER PRINCIPLE என்ற புத்தகம் மிகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் காரணமாக என் வாழ்க்கைத் தரத்தை ஓரளவு உயர்த்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை ஒரு அவநம்பிக்கையுடன்தான் அணுகினேன்.
வசதிமிக்க என் உறவினர்களில் பலர் தங்கள் செலவினங்களை மிதமிஞ்சி  அதிகப் படுத்திக் கொள்வதையும்,   தேவையற்ற அந்தஸ்துகளையும் பொறுப்புகளையும் ஏற்று, சிக்கல்கள் நிறைந்த  வாழ்க்கையில் அகப்பட்டுக் கொண்டிருப்பதையும் என் மனவி IRENE-ம் நானும் பார்த்துள்ளோம். அது மட்டுமல்ல,   இப்படி வாங்கப்பட்டப் பொருள்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும்,  தங்கள் காலத்தையும், சக்தியையும் அவர்கள் செலவழிப்பதையும் கவனித்துள்ளோம். அவர்கள் பல பொருள்கள் வாங்கினார்கள் என்பதைவிட பல பொருள்கள் அவர்களை வாங்கிவிட்டன என்பதே சரி!

May 28, 2014

தொச்சு போட்ட சோப் -கடுகு

வீட்டினுள் நுழைந்தபோதே சமையலறையிலிருந்து தொச்சுவின் குரல் கேட்டது. என் முகத்தில் விழிக்காதே என்று சில வாரங்களுக்கு முன்பு அவனைக் கோபித்து அனுப்பியிருந்தேன்.  அதனால்தானோ என்னவோ, நான் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்குள் (அதாவது சமையலறைக்குள்) படை எடுத்திருக்கிறான். உள்ளே படையலும் நடந்து கொண்டிருக்கும்!

அருமை அம்மாவிற்கும் அக்காவிற்கும் சோப் போட்டு விட்டு. பையிலும்  (தொப்பையிலும்) நிரம்பிய பிறகு, கையிலும் வாங்கிக் கொண்டு போவான். ஆகவே என்ன சோப் போடுகின்றான் என்றுகேட்க, பூனை போல் வீட்டிற்குள் நுழைந்தேன்.

என் மாமியார், ஆமாண்டி, கமலா, உழைச்சாத்தான் லாபம், லாபம் மட்டுமில்லை, நமக்குக் கிடைக்கிற பொருளும் உசத்தியாக இருக்கும்.... அப்ப என்னடா சொல்றே...நம்ப வீட்டிலேயே செய்யலாம்னு சொல்றியா? என்று கேட்டாள்.

வீட்ல செய்யக் கூடியது என்பதால்தானே டிவியிலே சொன்னாங்க...அக்கா எல்லாத்தையும் குறிச்சுக் கொடுத்தாள். நானும் மார்க்கெட்டெல்லாம் அலைஞ்சு எல்லாச் சாமானும் எங்கெங்கே கிடைக்கறதுன்னு கண்டு பிடிச்சுட்டு வந்தேன். ஆட்டோவிற்கே நூறு ரூபாய்க்கு மேலே ஆயிடுத்தே?என்றான் தொச்சு.

“நூறு ரூபாய்தானேடா... நான் தறேன்...என்று கமலா சொன்னதும்...

“போதும் அக்கா...இதுக்கெல்லாம் போய் உன்கிட்ட பணம் வாங்கிப்பேனா?... போன வாரம் கூட பம்பாய்க்கு போன் பண்ணதுக்காக நூறு ரூபாய் கொடுத்தே...

தொச்சு சொல்வதைக் கேட்ட போது எனக்கு ஒரே எரிச்சல். அதே சமயம் குழப்பம். இவர்கள் என்ன திட்டம் போடுகிறார்கள். என் அருமை சதி, பதிக்கு எதிராக என்ன சதி செய்கிறாள் என்று புரியவில்லை.

தொச்சு...இன்னும் ஒரே ஒரு தோசை போடறேண்டா...என்று மாமியார் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் சொன்னதும், சமையலறையில் நிசப்தம் நிலவியது. தொச்சுவின் வாய்க்கு வேறு வேலை கிடைத்து விட்டதே!

“என்ன கமலா...யாரு வந்திருக்கிறது, உன் தம்பிக்காரனா?என்று வார்த்தைகளைப் பாவக்காய் ஜூஸில் தோய்த்துக் கேட்டேன்.

May 20, 2014

அஞ்சறைப் பெட்டி


படித்தது, பார்த்தது, ரசித்தது, 
                   சிரித்தது, கேட்டது, திரித்தது 
                           என்று சில குட்டித் துணுக்குகள்!

1.சில பதிவுகளுக்கு முன்பு GONE WITH THE WIND புத்தகத்தைப் பற்றி குட்டித் துணுக்குப் போட்டிருந்தேன். அதே தகவல் இரண்டு நாளுக்கு முன்பு வெளியான  READER'S DIGEST  பத்திரிகையில் வெளியாகி உள்ளது!
சுட்டி: : GONE WITH THE WIND

2. மணற்கொள்ளை என்பது ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளிச் செல்வதைக் குறிக்கும்.  ஜமைக்காவில் ஒரு பகுதியில்    பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு நிறுவனம்.  அதற்காக மணலை வாங்கி மலையாக குவித்து வைத்திருந்தது. அதிலிருந்து 500 டிரக் மணல்  திருடு போய்விட்டதாம்! (ஆதாரம்: TIME).

3. அமெரிக்காவின்  தெற்கு கரோலினா மாநிலத்தின்   கடல் பகுதியில் 1857’ம் ஆண்டு ஒரு கப்பல் மூழ்கி விட்டது. இப்போது  வெகு ஆழத்தில் அது கண்டு பிடிக்கப்பட்டது. அதில்  சுமார் 3600 சவரன் தங்கம் கிடைத்தது. (ஆதாரம்: TIME).

4. சோனி நிறுவனம் பற்றி இரண்டு தகவல்கள்.

**. நிதி நிலமை அவ்வளவு திருப்திகரமாக இல்லயாம். அதனால் 5000 ஊழியர் களுக்கு  ‘டாட்டா’  கொடுக்கத்  திட்டமாம்.

**சோனியின் புதிய காசெட் டேப் விரைவில் மார்க்கெட்டுக்கு வரப் போகிறது அதில் என்ன விசேஷமாம்? (அதன் கொள்ளளவு 185 டெராபைட்.) கிட்டத்தட்ட  60 மில்லியன் (அதாவது 6 கோடி) பாடல்கள் அதில் பிடிக்குமாம். ஒரு செகண்ட் கூட விடாமல் கேட்டால் கூட 100 வருஷம் தேவைப்படும்! (ஆதாரம்: டைம் இதழ்)

5. ஒபாமா சொன்னது
சில வாரங்களுக்கு முன்பு  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிபர் ஒபாமா   ஒரு  உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன தகவல்: நாலு  நிமிஷத்திற்கு  ஒன்று என்ற கணக்கில் நாட்டில் பல வீடுகள் ஸோலார் பேனல்கள்  வீடுகளாக  மாறி வருகின்றன.

May 10, 2014

வாயைத் திறந்தால் ஆபத்து!


அமெரிக்கக் காமெடியன் புகழ் பெற்ற Groucho Marx (1890-1977) நாடக, திரைப்பட நடிகர்   மட்டுமல்ல நல்ல நகைச்சுவை எழுத்தாளரும் கூட. டி..வி ஷோக்களிலும் கலக்கி இருக்கிறார்.
மார்க்ஸ் பிரதர்ஸ் என்ற பெயரில் அவரும், CHICO, ZEPPO, HARPO  என்ற அவரது மூன்று சகோதரர்களும் புகழ் பெற்று விளங்கினார்கள்.
 
Groucho எழுதும் கடிதங்கள் மிகுந்த நகைச்சுவையுடன் இருக்கும். 1965-ல் அமெரிக்க  LIBRARY OF CONGRESS  அவரது கடிதங்களைத் தொகுத்து வைக்க விரும்பியது. இது மிகப் பெரிய கௌரவம். GROUCHO LETTERS  என்ற பெயரில் வெளியான புத்தகத்தை, பின்னால் பிளாக் எழுதுவதற்கு உதவும் என்று அப்போதே 1970-ல் வாங்கி விட்டேன். ("பின்னால் பிளாக் எழுதுவதற்கு உதவும் என்று அப்போதே 1970-ல் வாங்கி விட்டேன்" என்பது  ரீல் தானே என்று கேட்பவர்களுக்கு என்னுடைய பதில்: ஆம்!)

சமீபத்தில் அவர் எழுதிய GROUCHO MARX AND OTHER SHORT AND LONG TALES என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது. நியூயார்க்கர்,  நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அதில் இருந்த WHY HARPO DOESN’T TALK என்ற கட்டுரையில் ஒரு சுவையான தகவல் இருந்தது. அந்தக் கட்டுரையைச் சுருக்கித் தருகிறேன்.

·                *                 *

ஒரு சமயம் ILLIONOIS மாநிலத்தில் ஒரு சிறிய ஊரில் எங்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  எங்கள் குழுவில் நாங்கள்  நாலு பேர்,  துணை நடிகர்கள் நாலு பேர்,  நடிகைகள் எட்டு பேர் இருந்தோம். ஒரு புதன்கிழமை மாலை அந்த ஊருக்குப் போய் சேர்ந்தோம். ஹால் மிகவும் சிறியதாக இருந்தது.
மறுநாள் மியூசிக் ரிகர்சல் பார்க்கப் போனோம். இசையைப் பொறுத்தவரை நான் ஒரு பெரிய பூஜ்யம். இருந்தாலும் குழுவின் தலைவைனாயிற்றே நான்! அதனால் போனேன்!
ஸ்டேஜிற்குள் நுழைந்ததும். எங்கிருந்தோ ’தாதா’ மாதிரி ஒரு ஆசாமி வந்தார். “யாருப்பா நீ.. போர்டைப் பார்க்கலை? இங்கே சுருட்டு குடிக்கக் குடிக்கக்கூடாது. ஆமாம்.. உனக்கு ஐந்து டாலர் அபராதம் போடறேன்” என்றார்.  
“முதல்லே நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டேன்.
“ நானா?.. என்னையா கேட்கறே? நான் ஜான் வெல்ஸ். இந்த ஹாலின் மானேஜர்; சொந்தக்காரன். இங்கு சட்டவிதிகள் இருக்கின்றன. அந்த போர்டில் என்ன போட்டிருக்கிறது என்பதைப் பார்.
“போர்டா? .. அதோ அதுவா?.. அது என் கண்ணிலே படவில்லையே. கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலையிலே போட்டுவிட்டால் போதுமா? போர்டை ஏதாவது பாத்ரூமுக்குள்ளே மாட்டி வெச்சு, கதவை மூடி வெச்சிருக்கலாமே” என்றேன்.”
“ ஐயா.. நக்கல் புலியா? இப்படி சொன்னதுக்கு நீ ஐந்து டாலர் அபராதம் கட்டணும்” என்றார் அதிகாரமாக.

April 30, 2014

அமெரிக்கா :ஒரு லாபம் - ஒரு நஷ்டம் -ஒரு வியப்பு -ஒரு சிரிப்பு


1.ஒரு லாபம்
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ நகருக்கு ஒரு சமயம் போயிருந்தேன். அங்கு சில நாள் தங்கி  பல இடங்களைச் சுற்றிப் பார்க்கத் திட்டம் என்பதால் ஒரு வாடகை காரை எடுத்துக் கொள்ள விரும்பினோம். விமான நிலையத்திலேயே வாடகைக்கார் கம்பெனி இருந்தது. அங்கு போவதற்கு விமான நிலையத்திற்குள்ளேயே ஓடும் ரயிலில் ஐந்து, ஆறு நிமிஷம் பயணம்  செய்து போகவேண்டும். 
 அங்கு போனோம். ஏராளமான கார்கள் நின்று கொண்டிருந்தன. நிறைய பேர் கார் ’புக்’ பண்ணிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ஒரு கார் புக் செய்தோம்.  “ இதோ ஐந்து நிமிஷத்தில் கார் வந்துவிடும். காரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள் வெயிட்” என்றார் ஒரு பணியாள்.காத்திருந்தோம்.  5. 10, 15 என்று நிமிஷம் ஆயிற்று. காரைக் காணோம். ஆனால் அந்த அந்தப் பணியாள் அவ்வப்போது வந்து பணிவுடன், “ சாரி.. டூ மினிட்ஸ்? என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
சுமார் 20 நிமிஷம் கழித்து, கார் வந்தது. கார் சாவியை எங்களிடம் கொடுத்து விட்டு அந்த அலுவலர். “  சாரி. டிலே ஆகிவிட்டது. காரில் முழு டாங்க் பெட்ரோல் நிரப்பி இருக்கிறது. சாதாரணமாக, காரைத் திருப்பிக் கொடுக்கும்போது முழு டாங்க் பெட்ரோலுடன்தான் கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை.. ஆனால் உங்களை காக்க வைத்ததற்காக உங்களுக்குச் சின்ன சலுகை தருகிறோம். காலி டாங்குடன்கூட காரைத் திருப்பிக் கொடுக்கலாம். இந்த சீட்டைக் காட்டினால் போதும்: என்றார். ‘கிட்டத்தட்ட 100 டாலர் பெட்ரோல் இலவசமாகத் தருகிறார்’ என்ற மகிழ்ச்சியோடு காரை எடுத்துக் கொண்டு போனோம்.

2.ஒரு நஷ்டம்!
சான் ஃப்ரான்சிஸ்கோவில் பல இடங்களைச் சுற்றி பார்த்தோம்.