February 27, 2014

அமெரிக்கா - இங்கும் அங்கும்

மூன்று பெண்மணிகள்
* உலகின் மிகப் பிரபலமான   இதழ் TIME வாரப்  பத்திரிகை.  சுமார் ஐந்து கோடி வாசகர்களைக் கொண்டது அமெரிக்காவின் புகழ் பெற்ற  இதழ்  அதற்கு 90 வயது  ஆகிறது.   முதன் முறையாக சமீபத்தில் ஒரு பெண்மணி (NANCY GIBBS ) அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1988-முதல்  ஆசிரியர் இலாகாவில் இருந்த அவர் இது வரை 174 அட்டைப்படக் கட்டுரை எழுதியுள்ளார்.

பொறுப்பை ஏற்றதும் அவர் ஒரு ஒரு புதிய துவக்கம் என்ற தலைப்பில் ‘ஆசிரியர் குறிப்பு எழுதியிருந்தார். அதன் அழகான கருத்தும்,  சிநேக பாவத்துடன் எளிமையான ஆங்கில நடையில் எழுதப்பட்டிருந்ததும் என்னைக் கவர்ந்தது. மொழிபெயர்த்துப் போடலாம் என்று நினைத்து முயற்சியில் இறங்கினேன்.சில வரிகளைத் தமிழாக்கம் செய்தேன். திருப்தியாக வரவில்லை.(ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க,மேலே உள்ள
’ஒரு புதிய துவக்கம்’ என்பதைச் சொடுக்கவும்.)


* புகழ் பெற்ற READERS' DIGEST  இதழிற்கும்   ஒரு பெண் தான் ஆசிரியராகி இருக்கிறார்.  LIZ 
VACCARIELLO பல புதிய மாற்றங்களைச் செய்து கலகலப்பாக்கி வருகிறார்.  .

* இதையெல்லாம் மிஞ்சும் தகவல்: நம் நாட்டில்  உள்ள ரிசர்வ் பாங்க் கவர்னர் பதவி போன்றது .அமெரிக்காவில்  ஃபெட்ரல் ரிசர்வ்  சேர்மன் பதவி. முதல் முறையாக   ஜேனட் எல்லன்  என்ற ஒரு பெண்மணி சேர்மனாக பொறுப்பேற்று இருக்கிறார். 
ஜேனட்டின் கணவர்: ஜார்ஜ்  அகெர்லாஃப் 2001-ம்  ஆண்டு பொருளாதாரத் திற்கான  நோபல் நினைவுப் பரிசைப் பெற்றவர்.
பஸ்ஸில் வந்த பிரதமர்.
இது பிரிட்டிஷ் பிரதமர் பற்றிய தகவல். சிலமாதங்ககளுக்கு முன்பு பிரிட்டிஷ் பிரதமர்   டேவிட் கேமரூன் அமெரிக்கா வந்திருந்தார். தனது பல வேலைகளுக்கிடையே  மன்ஹாட்டனில் (நியூயார்க்)  இங்கிலாந்து  சுற்றுலாதுறை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள     இளவரசர் ஹாரியுடன் பஸ்ஸில் வந்திறங்கினார்.

இதற்காக லண்டனிலிருந்து சுற்றுலாதுறையின் டீலக்ஸ் பஸ் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார்கள். “ எங்கள் சுற்றுலாதுறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட  சிறிய முயற்சியாகும்” என்றார் கேமரூன்.

February 14, 2014

சில புத்தகங்கள்: சில வரிகள். கடுகு

சில புத்தகங்கள்: சில வரிகள்.
  புத்தகங்களைப்   படிப்பது  ஒரு சுவையான பொழுதுபோக்கு. அதை விட சுவையான பொழுதுபோக்காக நான் கருதுவது அந்தப் புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தேடிப் படிப்பது.  எத்தனை விதமான, வித்தியாசமான. சுவையான, துணுக்குகளும் விமரிசனங்களும், அனுபவங்களும், அவை எழுதப்பட்ட சூழ்நிலைகளும் படிக்கப் படிக்க நம் மனதைக் கொள்ளை கொள்ளும். எழுதியவரின் அனுபவங்கள் மட்டுமல்ல, அச்சிட்டவர், பிரசுரம் செய்தவர், விற்பனை செய்தவர், படித்தவர்களின் அனுபவங்கள் அதிக சுவையுள்ளவைகளாக இருக்கும்.  
 
புத்தகம் என்றால்  அதில் எழுதப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல, புத்தகத்திற்குத் தலைப்பு தேர்ந்தெடுத்தது, சமர்ப்பணம், முகவுரைகள், முன்னுரைகள், விமர்சனங்கள், அட்டை வடிவமைப்பு, அச்சுப் பிழைகள், பாராட்டுகள், பரிசுகள் என்று நிறைய உள்ளன. இந்தக் கட்டுரை இந்த பத்திரிகையில் வந்த கட்டுரையின் காபி’ என்று ‘நக்கீரன்கள்’ கண்டுபிடித்துச் சொன்ன குற்றச்சசாட்டுகள் – எல்லாமே தெவிட்டாத விஷயங்கள்தான்.
BOOKS ON BOOKS என்ற வகை வரிசையில் நிறைய புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன நோபல் பரிசுகள் பின்னனணியில் இர்விங்க் வாலஸ் ’தி பிரைஸ்’ என்ற நாவலை எழுதினார். அது வெகு வரைவில் பிரபலமாகி விட்டது. நோபல் பரிசுகள் பற்றிய பல சுவையான தகவல்கள் அதில் இருந்ததாலும் அது மிகவும் புகழ் பெற்ற நாவலாகவும் ஆகிவிட்டது. 
அவர் அந்த நாவலை எழுத  எடுத்துக்கொண்டப் பிரயாசைகளை விவரித்து  ஒரு புத்தகமாகமே எழுதினார், The Writing of One Novel என்ற தலைப்பில். அதுவும் மிகப் பிரபலமான புத்தகமாக பெயர் பெற்றது. அதிலிருந்து சில பகுதிகளை எடுத்து தினமணி கதிரில் நான் எழுதினேன்.
(இடைச்செருகல்: அப்போது ஆசிரியர் சாவியிடம் ஒரு ஐடியா கொடுத்தேன். ”கதிரில் வாசகர்கள் கேள்விக்கு இர்விங்க் வேலஸ் பதில் எழுதினால் வித்தியாசமாகவும் பரபரப்பாகவும் இருக்கும்” என்றேன். “எழுதுவதற்கு
இர்விங்க் வேலஸ் சம்மதித்தாலும், சன்மானம், அதுவும் டாலரில் கொடுத்துக் கட்டுப்படி ஆகுமா?”  என்றார். சில வாரங்கள் கழித்து அவர் அமெரிக்க சென்றார். யார் யாரையோ  எப்படியோ பிடித்து  (சன்மானமில்லாமல்?)  வேலஸிடம் சம்மதம் பெற்று வந்து விட்டார்.)  

January 30, 2014

சுட்டியான WITTY வரிகள்

பொன்னை விரும்பும் பூமியிலே, பொன்மொழிகளை விரும்பும் ஜீவன் நான்  பல வருஷங்களாக அவைகளைத்  தேடிப் படித்து நோட்டுப் புத்தகம் நோட்டுப் புத்தகமாக எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் இந்தியன் எக்ஸ்பிரஸில் (?) CHING CHOW  என்ற தலைப்பில் பொன்மொழிகள் கார்ட்டூன்கள் வரும்.   அவைகளை எழுதிக் கொள்வேன். பிறகு புத்தகசாலைகளில் கிடைத்த பல பொன்மொழி புத்தகங்களைப் பார்த்து எழுதிக் கொள்ள ஆரம்பித்தேன். சமீப 15-20 ஆண்டுகளில்  பொன்மொழி, நகைச்சுவை வரிகள், மனதைத் தொடும் வாசகங்கள், சாதுரியமான நையாண்டி  வரிகள் என்று பல புத்தகங்களை வாங்கிச் சேர்த்துவிட்டேன்.
போதாதற்கு இன்டர்நெட்டில் ஆயிரக்கணக்கில் இவை இறைந்து கிடக்கின்றன. அத்துடன்  ஃபேஸ்புக்கிலும் பலர் புகுந்து விளையாடுகிறார்கள்!

சில வரிச் சிரிப்பு புத்தகங்கள்: 20000 Quips - Evan Esar, Wit-Des MacHale, Ultimate Wit - Des MacHale, 10000 One Liners - Henny Youngman,  3400 clever Quotations- Mckenzie, 5000 One liners -Fechtner, Proverbs,Wit and Wisdom -Louis Bremen, Lifetime Speakers' Encyclopedia Vol-I and Vol-II (600 +600  பக்கங்கள்), Quotoon  (இன்னும்  பல!)-  இப்படி சில புத்தகங்களைச் சேர்த்துவிட்டேன்.

நான்  திரட்டியவைகளிலிருந்து கொஞ்சம்:
§   Action don't speak louder than words. They shout.
§   If speaking is silver, listening is gold. 

January 20, 2014

உல்லாசமாவது பயணமாவது - கடுகு

என் அருமை மனைவி கமலா அன்றாடம் நியூஸ் பேப்பரைப் படிப்பாள்
அவள் படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை, என் மனம் ஹிட்ச்காக் படம் பார்ப்பது போல் திக் திக்கென்று சஸ்பென்ஸுடன் அடித்துக் கொள்ளும். மனைவி பேப்பர் படித்தால் அதில் என்ன சஸ்பென்ஸ் என்று நீங்கள் கேட்கிறீர்களா? உங்களுக்கு என் மனைவி கமலாவைத் தெரியாது.
              பேப்பர் என்றால் அரசியல், சினிமா, இலக்கியம், விளையாட்டு என்று பல பல செய்திகள் வரும். இவைகளில் எதுவும் என் மனைவியின் கண்களில் படாது. அவள் பார்வைக்கு அகப்படுபவை விளம்பரங்கள்தான். தள்ளுபடி விற்பனை, ஐம்பது சதவிகிதம் விலை குறைவு என்று வரும் விளம்பரங்களை, ஏதோ பகவத் கீதை படிப்பது போல் மிகவும் உன்னிப்பாகப் படிப்பாள். படித்துக் கொண்டு இருக்கும் போதே, "உங்களைத்தான்... பேப்பரைப் பார்த்தீர்களா?'' என்று கேட்பாள்.
              நானும் ஏதோ ஒரு பெரிய ’விபத்து' வரப் போகிறது என்று பயந்து கொண்டே, "என்ன... பேப்பரா? பார்த்தேன், மொத்தமும் சரியாகப் பார்க்கவில்லை'' என்று சொல்வேன்.
              "பில்லா அண்டு ரங்கா ஷாப்பில் பனாரஸ் பட்டுப்புடவை எல்லாம் தள்ளுபடி விலையில் விற்கிறார்கள்.''
              "அப்படியா?''
              "கொட்டை கொட்டையாக விளம்பரம் வந்திருக்கிறதே? கண்ணைத் திறந்து கொண்டு பேப்பரைப் படித்தால் தெரியும். இதோ பாருங்கள்.''
              பொடி எழுத்தில் வரி விளம்பரமாக அந்த "சேல்' விளம்பரம் வந்திருக்கும்.
              "350 ரூபாய் புடவை 150-க்கு கொடுக்கிறான்... 200 ரூபாய் லாபம்'' என்பாள்.
              150 ரூபாய்க்கு வாங்கி 350 ரூபாய்க்கு விற்றால் 200 ரூபாய் லாபம் என்பது, நான் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டது, கமலா படித்தது புதுக் கணிதமோ?

January 13, 2014

என் முன்னுரைகள்-1


1. சேட்டைக்காரன் எழுதிய மொட்டைத்தலையும் முழங்காலும்.
       இது சேட்டைக்காரனின் புத்தகத்திற்கு நான் எழுதும் முன்னுரை. பொதுவாக முன்னுரை என்பது பாராட்டு உரையாகத்தான் இருக்கும். அதுவும் படிக்காமலேயே பல முன்னுரைகள் எழுதப்படுவதும் உண்டு. நானும் சேட்டையின் கதைகளைப் படிக்காமல் இருந்திருக்க வேண்டும். அப்போது அட்டகாசமான பாராட்டுரை எழுதி இருப்பேன். இன்டர்நெட்டில் எதையோ வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சேட்டையின் வலையில் அகப்பட்டுக் கொண்டேன்.
அவரது கதை/கட்டுரைகளைப் படித்தேன். படிக்கப் படிக்க சிரிப்புத் தாங்க முடியவில்லை. வயிற்றெரிச்சலையும் தவிர்க்க முடியவில்லை. பொறாமைதான் காரணம். அவரது சரளமான நடையும், வரிக்கு வரி வரும் நகைச்சுவை வெடிகளும் என்னை அசத்திவிட்டன. பல சமயம் சட்டென்று வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
அதுவும் அவர் அள்ளித் தெளித்திருக்கும் ஏராளமான உபமானங்கள் எல்லாம் சூப்பர். கீழ்ப்பாக்கத்தில் ஐம்பது வருஷம் சர்வீஸ் போட்ட ஆசாமி மாதிரி சிரித்தேன்.
   சேட்டைக்காரனுக்கு சிலேடையும் அனாயாசமாக வருகிறது. தன்னைத்தானே எள்ளி நகையாடுவதும் பிரமாதமாக இருக்கிறது.
அவர் கட்டுரைகளைப் படித்தபோது எனக்குத் தோன்றியது: இந்த ஆசாமி வலைப்பூவில் எழுதக் கூடாது; பொதுஜனப் பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்பது என் கருத்து, அவா, விருப்பம், யோசனை, அறிவுரை, வேண்டுகோள், கட்டளை.
   அவர் கட்டுரைகளிலிருந்து ஒருசில வரிகளை இங்கு தரலாம் என்று பார்த்தபோது அது முடியாத காரியம் என்று உணர்ந்தேன். எல்லா வரிகளும் நகைச்சுவை மணிகள். படித்தேன் என்பதற்குச் சாட்சியாக இருக்கட்டும் என்று ஒன்றிரண்டு கொடுக்கிறேன்.

* வெரிகுட்! இவ்வளவு கோட்டை விட்டும் எங்க ஒட்டகப் பண்ணையிலே முதலீடு பண்ணனும்னு உங்களுக்கு எப்படித் தோணிச்சு?”
 “பணத்தை விட்ட இடத்துலேதானே சார் பிடிக்கணும்? சரவணபவனிலே சாப்பிட்டுட்டு வசந்தபவனிலே போயா வாய் கொப்பளிக்க முடியும்?"
*நாளைக்கு வரச்சொல்லும்மா! டயர்டா இருக்கு, நான் கொஞ்ச நேரம் பல்லு விளக்கப்போறேன்!”
*அதாவது, ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒவ்வொரு சம்சாரம்னு சொல்ல வந்தேன். என் சம்சாரம் பேரு கோதை, உங்க சம்சாரம் பேரு ராதை!”
* பீர்க்கங்கரணைத் தண்ணித்தொட்டிக்கு பீட்டர் இங்கிலாண்டு சட்டை போட்டுவிட்டது போல, ஆல்ப்ஸ் மலையிலிருந்து உருண்டுவந்த ஐஸ்பாறை போன்று உருண்டையாக ஒருவர் என்னை நெருங்கினார்.
* ”என் வாழ்க்கையிலேயே இப்பத்தான் முதமுதலா டம்ளர்லே உப்புமா சாப்பிட்டிருக்கேன்,”  என்று மனைவியை மனமுவந்து பாராட்டியவன்.
*அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்ச நேயர் எப்படி சாப்பிடறது?
* எனது நாக்கு அடைமழை பெய்த ஆதம்பாக்கம் சாலைபோல ஊறத்தொடங்கியது.

    முன்னுரையை எழுத ஆரம்பிக்கும்போது சேட்டையை அதிகம் புகழக் கூடாது என்று தீர்மானத்துடன்தான் துவங்கினேன். அவரது நகைச்சுவை என் தீர்மானத்தைத் தவிடுபொடியாக்கி விட்டது.
  சேட்டைக்காரனை நான் சந்தித்தது இல்லை; அவருடன் பேசியதும் இல்லை! சேட்டையின் எளிமையான, சரளமான, யாரையும் புண்படுத்தாத, எப்போது படித்தாலும் சிரிப்பு வரவழைக்கக் கூடிய கதை, கட்டுரைகளை நான் எழுதிய கட்டுரைகளைவிட அதிகம் ரசித்துப் படித்தேன்; ரசிகனானேன்
மேலும் பல உயரங்களைத் தொட்டு, கொடிகட்டிப் பறப்பார் சேட்டை என்பதில் எனக்குக் கடுகளவும் சந்தேகமில்லை.
--கடுகு
========================
2.. சுஜாதா தேசிகன் எழுதிய "என் பேர் ஆண்டாள்”
 
முகவுரை  எழுதுவதைப்போல் கஷ்டமான காரியம் எதுவுமில்லை.( அதைப் படிப்பது அதை விடக் கஷ்டமான காரியம் என்பது வேறு விஷயம்!)

புத்தகம் எழுதுபவர்களுக்குபுத்தகம் எழுதி முடித்த பிறகு பொதுவாக ஏற்படும் இரண்டு பிரச்சினைகள்: முதலாவதுபுத்தகத்திற்கு என்ன பெயர் வைப்பது? அடுத்தது: யாரிடம் முகவுரை எழுதி வாங்கிப் போடுவது? முதல் பிரச்சினையை அவரே  முட்டி மோதி (மனைவியுடன்?) ஒரு மாதிரிபிரமாதமானத் தலைப்பைத்  தேர்ந்தெடுத்துவிடுவார்.