October 20, 2013

காலம் மாறிப் போச்சு

நான் 1962-ல் - அதாவது 50 வருஷத்திற்கு முன்பு- டில்லிக்கு மாற்றாலாகிப் போனபோது அங்குள்ள பல விஷயங்கள் எனக்குப் புதுமையாகப் பட்டன. அவற்றைத் தொகுத்து ‘அரே டில்லிவாலா- என்று ஒரு கட்டுரையை எழுதி குமுதத்திற்கு அனுப்பினேன். அது குமுதத்தில் இரண்டு பக்கக் கட்டுரையாகப் பிரசுரம் ஆயிற்று. (எழுத்துத்  துறையில் நான் காலை வைத்ததற்கு அதுவே பிள்ளயார் சுழி போட்டது).
அந்த டில்லிப் புதுமைகள் பல இன்று காணாமல் போய்விட்டன.
சிலவற்றைப் பார்ப்போம்.
 நடமாடும் இஸ்திரி சேவை: தள்ளு வண்டியில் இஸ்திரி பெட்டியுடன் வீதிகளில் பலர்  வருவார்கள்.  நாம் கொடுக்கும் துணிகளுக்கு இந்த ‘பிரெஸ்வாலா’க்கள் நம் வீட்டு வாசலிலேயேஇஸ்திரி போட்டுக் கொடுப்பார்கள். நாளடைவில் ’நடமாடும்’ என்பதை எடுத்துவிட்டார்கள். ஆங்காங்கு மரத்தடி நிழலில் இஸ்திரி பெட்டியுடன் தொழிலை  நடத்த ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு இஸ்திரி பெட்டியுடன் இன்னொரு பெட்டி சேர்ந்து கொண்டது. அது டிரான்சிஸ்டர்!. ‘தம்மாரே தம்’ ‘ மெஹ்பூபா மெஹ்பூபா’’’ஜூட்டு போலே கவ்வா காட்டே’ போன்ற பாடல்கள் ஹனுமான் சாலிஸா மாதிரி விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும். சமீப காலத்தில் என்ன மாறுதல் வந்திருக்கிறது என்று தெரியவில்லை. டிவிடி பிளேயர் வந்திருக்கும் என்று நினக்கிறேன்!

டில்லி பிஸ்கெட்:
டில்லி  மார்க்கெட்களில் பிஸ்கெட் பண்ணித் தரும்  கடைகள் இருந்தன - நம் ஊர் வறுகடலைக் கடைகள் மாதிரி.. கோதுமை மாவு, பால், டால்டா  (இன்று டால்டா இருக்கிறதா என்று தெரியவில்லை!) முதலியவற்றைக் கொடுத்து விட்டு வந்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு போனால் நாம் கொடுக்கும் மாவுக்கு எவ்வளவு வருமோ அவ்வளவு பிஸ்கெட்கள் தட்டு தட்டாக  ரெடியாக இருக்கும். ஒரு பிஸ்கெட் கூட  அவர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
சென்னை போகிறவர்கள் எல்லாரும், பெரிய எண்ணை டப்பா அளவு டின்னில் எடுத்துக் கொண்டு போவார்கள். நாளடைவில்  இந்த மாதிரி பிஸ்கெட்களை சிறு தொழில் நிறுவனங்கள்  சொந்தமாகத் தயாரித்து பிளாஸ்டிக் கவரில்  ’பேக்’செய்து விற்க ஆரம்பித்தார்கள். அதனால் மார்க்கெட்   பேக்கரிக்கடை    தொழில் நலிந்து போய்விட்டது.

சண்டே பஜார்
ஞாயிற்றுக் கிழமைகளில் டில்லி செங்கோட்டைக்கு எதிரே உள்ள சாந்தினி சௌக்கில் நடைபாதைக் கடைகள் நூற்றுக்கணக்கில்  முழுத்தெருவிலும் முளைத்துவிடும்.
செங்கோட்டைக்கு புது டில்லிப் பகுதிகளிலிருந்து போகிறவர்கள் தாரியாகஞ்ச் என்ற வீதி வழியாகத்தான் போகவேண்டும். தாரியாகஞ்ச்  தெருவின் ஒரு பக்கம்  நடைபாதைகளில்  பழைய புத்தகங்கள் பரப்பி இருக்கும். நான் அங்கு வாங்கிய புத்தகங்கள் ஏராளம்.
திடீரென்று அந்தக் கடைகளை அங்கு பரப்பக் கூடாது என்று துரத்தி விட்டார்கள்.  எல்லாரும் செங்கோட்டைக்குப் பின்னால் இருக்கும் மைதானத்தில் கடை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தார்கள். அங்கு போக எனக்குப் பிடிக்க வில்லை.  அதற்கு ‘சோர் பஜார்: - (திருட்டுப் பொருள்கள் மார்க்கெட்!) என்று பெயர்.  இன்னும் அங்கு சண்டே மார்க்கெட் இருக்கிறதா என்று தெரியவில்லை. காரணம் டில்லியில் பேட்டைக்குப் பேட்டை ஒரு நாள் இப்படிப்பட்ட மார்க்கெட் வந்து விட்டது!

டில்லியில் மாறாததும் உண்டு
டில்லியில் மாறாதது பல விஷயங்கள் இருக்கலாம்.  நான் டில்லியை விட்டு வரும் வரை மாறாத  ஒன்றைச்  சொல்கிறேன்.
டில்லிக்குப் போன தினம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளை பார்த்தேன். அதில் ஆசிரியர் கடிதத்தில் டில்லி பஸ்களைப் பற்றி  ஒரு கடிதம் வெளியாகி இருந்தது.   அந்த கால கட்டத்தில் டில்லி பஸ்களை  Delhi Transport Underaking   என்ற அமைப்பு நிர்வகித்து வந்தது. கடிதத்தில், இந்த டி.டி.யு பஸ்களில் ரூட் போர்டுகள் இருப்பதே இல்லை.   “ பஸ் எங்கே போகிறது? என்று கண்டக்டரைக் கேட்பதாக இருக்கிறது. பல சமயம் கண்டக்டரைக் கேட்பதற்குள் பஸ் புறப்பட்டுப் போய்விடுகிறது. எத்தனை தடவை புகார் எழுதினாலும் பயனில்லை” என்று யாரோ ஒருவர் புலம்பி இருந்தார். 2002-ல்  டில்லியை விட்டுச் சென்னை வரும் தினம், பேப்பரில் கிட்டதட்ட இதே ரீதியில் ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. என்ன வித்தியாசம்  DTU என்பது DTC   ( (டில்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்) என்று மாறிவிட்டது!
அந்த நாள் முதல் இந்த நாள் வரை வான்மதியும், மீனும், டில்லி பஸ்ஸும் மாறவில்லை என்பது உண்மை!

டில்லி கலியாணங்கள்
டில்லியில் பெரும்பாலான கலியாணங்கள் பிரம்மாண்டமான ஷாமியானா பந்தலில்தான் நடைபெறும். வீதியை அடைத்துக் கொண்டு  பந்தல் போட்டுவிடுவார்கள். குதிரை மீது அமர்ந்து அரும் மணமகனை பேண்ட் வாத்தியம் முழங்க டான்ஸ் ஆடி அழைத்து வருவார்கள். நுழைவாயிலுக்கு சுமார் 50 கெஜ தூரம் வந்ததும் மேலும் பலர் டான்ஸ் ஆடுபவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். ”சாச்சி வா”, ”அத்தை வா”, ”அங்கிள் வாங்கோ” என்று பலரைக் கைபிடித்து  இழுத்து ஆடச் சொல்வார்கள். டிரம்காரர் சரக்கு போட்டவர் போல -  போல் என்ன? போட்டவர்தான்!- வெறியுடன் டிரம் அடிக்க அடிக்க, ஆடுபவர்கள் மாப்பிள்ளை மேலே போக விடாமல் ஆடிக்கொண்டு (தள்ளாடிக்கொண்டும்!)  இருப்பார்கள். நம்புங்கள், பல சமயம் இந்த 50 கெஜ தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் கூட ஆகிவிடும்.பந்தலுக்குள் நுழைந்ததும் 90 பங்கு கூட்டம் காணாமல் போவிடும். ஆம்,எல்லாரும் சாப்பிடப் போய்விடுவார்கள்!.கலியாணப் பெண், பிள்ளை, புரோகிதர் மற்றும் 7,8 பேர் தான்  மணமேடையில் இருப்பார்கள்!
டில்லிக்குப் போன புதிதில், கலியாண வீட்டார் ‘யாரும் நம்மைச் சாப்பிடக் கூப்பிடவில்லையே’ என்று காத்திருந்து விட்டு, சாப்பிடாமலேயே வந்திருக்கிறேன்.
டில்லிக் கலியாணங்களில் சீர் வரிசையில் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். ஒரு தையல் மெஷின். (டெய்லர் மாடல் அல்ல: கை மெஷின்!) எனக்குத் தையல் மோகம்  (இரண்டு அர்த்தத்திலும்!)  உண்டு என்பதால். சீர் வரிசையில் இருக்கும் மெஷின் கண்ணில் தவறாது படும்!

எல்லாருக்கும் தைத்துக் கொடுக்கிற வேலை‘நம் பெண் தலையில்  விழுந்துவிடக்கூடாது என்பதற்காக சமீப காலங்களில் பெண் வீட்டுக்காரர்கள் மெஷினை‘  அம்பேல் ஆக்கிவிட்டார்கள்!

சென்னையில்  மாறிப் போச்சு
தொடாதே!
டில்லியில் காய்கறி கடைக்குப் போனால் முதலில் ஒரு தகரத்தட்டை (பழைய பிலிம்ரோல் டப்பாக்கள்!) நம்மிடம் கொடுப்பார்கள். கறிகாய்களைப் நாம் பொறுக்கிக் கொடுக்கவேண்டும்.
இருபது வருஷத்திற்கு மேல் டில்லியிருந்துவிட்டுச் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். நம் ஊர், நம்ம மொழியில் பேசலாம் என்று மனதில் ஒரே உற்சாகம்.  ( சர் வால்டர் ஸ்காட் பாடல் ஞாபகம் இருக்கிறதா? Breathes there the man with soul so dead /  Who never to himself hath said, /  This is my own, my native land!)

சென்னை வந்ததும்ஆவலாக சைனா பஜார் சென்றேன். நடைபாதையில் காய்கறி கடைகள் இருந்தன. வெண்டைக்காய் அழகிய  LADIES FINGER மாதிரி இருந்தது.(டில்லியில் அதற்கு  ‘பிண்டி’ என்று கரடு முரடான பெயர்!)
இரண்டு காயை எடுத்திருப்பேன்.  “இன்னா பொறுக்கறே?.நான் எதுக்குக் குந்திக்கினு இருக்கேன்.... பாத்தியாடி அருக்காணி, வெண்டைக்காயைப் பொறுக்க வந்துட்டாரு இவரு டில்லி பாதுஸா  மா(தி)ரி” என்றார்.

இப்போது சென்னையில் எல்லா காய்கறி கடைகளிலும் நம்மை டில்லி பாதுஷாவாக ஆக்கி விட்டார்கள். ஆம், இப்போதெல்லாம் பிளாஸ்டிக் தட்டை எடுத்துப் போடுகிறார்கள். நாமே பொறுக்கி கொள்ளலாம்.யாரும்  “பாத்தியாடி அருக்காணி” என்று குரல் கொடுப்பதில்லை!
நல்ல மாறுதல்!

இன்னும் நிறைய இருக்கின்றன. பின்னால் பார்க்கலாம்.

October 13, 2013

அடுத்த பதிவு

அனைவருக்கும்  நவராத்திரி வாழ்த்துகள்.
தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.
-கடுகு                                                                 

October 04, 2013

கேட்ட ஞாபகம் இல்லையோ!




அந்த காலத்தில் கேட்ட சில வசனங்கள், கேட்டவர்களுக்கே  மறந்து போயிருக்கும்.  புதிய தலைமுறையினர் கேட்டிருக்கவே மாட்டார்கள். அவற்றை இப்போது புதிய  தொழில் நுட்பத்தில் - அதாவது டிஜிட்டலில்- தருகிறேன்.

1968-ல் கேட்டது
 அடப்  பாவமே, பெட்ரோல் விலையை லிட்டர் ஒரு ரூபாயிலிருந்து ஒரு ரூபாய் 15 நயா பைசாவாக  ஏத்திட்டாங்களே... மோபெட்டிற்குப் பெட்ரோல் போட்டுக் கட்டுப்படியாகாது. இனி மேல் நடை ராஜாதான்!

1970 களில் சொன்னது.
என்ன அமெரிக்கா வேண்டி கிடக்குது, கலியாணம் பண்ணிக்கறதுக்கு முன்னேயே டைவர்ஸுக்குத் தயாராகி விடுகிறார்கள்.. விவாகரத்துக்குன்னு பல வக்கீல்கள் இருக்காங்களாம்....அந்தக் கலாசாரம் எல்லாம்  எல்லாம் நம்ம  ஊர்ப்பக்கம் தலைகாட்ட முடியாது.

 60 களில்
ஏம்பா பழைய பேப்பர் கிலோ ஆறணாவுக்குத்  எடுக்கிறேன்னு  சொல்றியே,.. ஊரெல்லாம் விலைவாசி எப்படி ஏறிண்டே இருக்குது, நீ மட்டும் குறைச்சுண்டே வர்றே?

60 களில்
என்னடி ஜயா, உன் நாட்டுப் பொண்ணு இப்படி செய்யறா? ஆம்பிளைக் குழைந்தைக்கு பூ போட்ட சட்டை, பெண் குழைந்தைக்கு பேண்ட்.. நன்னாவா இருக்கு?. நாளைக்கு பெரிவங்களா போனால்கூட இப்படிதான் போடுவா.. போ.. கலி முத்திப் போச்சு!

1962-ல்
லட்சுமி, கிளம்பலையா, மவுண்ட் ரோட் இந்தியா காஃபி ஹவுஸுக்கு? காபிக் கொட்டை வாங்கிண்டு வர வேண்டாம்? ஆளுக்கு ஒரு கிலோ தர்றங்களாம்.

1958-ல்
என்ன சம்பந்தியோ! .. பிள்ளை வீட்டுக்காராளை “ சாப்பிட வாங்கோ”ன்னு அழைக்கவேண்டாமோ.. நாமே போய் உட்கார்ந்து சாப்பிட அவ்வளவு கதி கெட்டா கிடக்கிறோம்?
1945-ல்
டாக்டரை எதுக்கு வீட்டுக்கு வரச்சொல்லணும்?. 5 ரூபாய் பழுத்து விடும். நாமே அவர் வீட்டுக்குப் போயிடலாம். இரண்டு ரூபாயுடன் முடிந்துவிடும்.
1953-ல்
“ இந்த கிட்டு,750 ரூபாய் கொடுத்து ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் வாங்கிட்டானாம்.. தலைகால் புரியலை!”

1944-ல்    
 “ டேய், ராமு. போடா, சீக்கிரம். கடைத்தெரு மணிகண்டன் ஷாப்லே ஸ்டாண்டர்ட் கிளாத் தர்றாங்களாம். இந்தா அஞ்சு  ரூபாய் .. அஞ்சு கெஜம் துணி வாங்கிண்டு வா. ஓடு.”

1950-ல்
சைக்கிளில் லைட் இல்லாம போயிட்டேன். போலீஸ்காரன் பிடிச்சுட்டான். ஒரு ரூபா அழுதேன்.
--------------------
ஆர். ஜகன்னாதன் அவர்களின்  உபயம்:
'70 களில் - 
என்னமோ போன் வந்துடுத்தாம், ஆத்திர அவசரத்துக்கு ஒரு போன் பண்ணிக்கலாமான்னு கேட்டா அலட்டிக்கிறா!

September 27, 2013

ஆ, அமெரிக்கா-2

ஐயோ சிக்கடாஸ்
  
“கொசுத் தொல்லை தாங்கலையேடா, நாராயணா” ( என்று   எல்லா வலைப்பதிவுகளிலும் ((என் வலைப்பதிவுகளுக்கு நீங்கலாக!?) பின்னூட்டம் போடும் அன்பர்களுக்கு ஒரு சிறப்புச் செய்தி, 

அமெரிக்காவில் கிழக்குக் கரையோரம் உள்ள மாநிலங்களில் ஒரு படையெடுப்பு 17 வருஷங்களுக்கு ஒரு முறை  ஜூலை- ஆகஸ்ட்
மாதங்களில் தவறாமல் நடந்து வருகிறது. கிட்டதட்ட கரப்பான் பூச்சி மாதிரி இருக்கும் சிக்கடாஸ் (CICADAS)  மில்லியன் கணக்கில் -- இல்லை, இல்லை பில்லியன் கணக்கில் - வந்து வீதியில் உள்ள  மரங்களையெல்லாம் அப்பிக் கொள்கின்றன. அவை போடும்  இரைச்சல்  (கோஷ்டிகானம்!) கிட்டதட்ட வயல் வெளிகளில் வைக்கப்படும் தண்ணீர் பம்புகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடும்!

இந்த வருடம் படையெடுப்பு வருஷம். சுமார் 300 வருஷங்களாக இது நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். 17 வருஷம் அவை அங்கு இருக்கிறதாம்? மண்ணுக்குள்!

இந்த வருடம் சிக்கடாஸின் எண்ணிக்கை  அந்தந்த  பகுதி மக்கள் எண்ணிக்கையைப் போல்  தோராயமாக 600 மடங்காக  இருந்ததாம்!
ஐயோ, சிக்கடாத் தொல்லை தாங்கலையேடா, நாராயணா” என்று பின்னூட்டம் போடவிரும்புபவர்கள் 2030 வரை காத்திருக்க வேண்டும்!
 2030-ல் அவை விஜயம் செய்யும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை!

ரயிலில் கவிதை
அமெரிக்காவில் விமானம், ரயில், பஸ். கார், சொந்த ஹெலிகாப்டர் என்று பல வேறு வாகனங்களில் ஊருக்குள்ளும், ஊர் விட்டு ஊரும் சளைக்காமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

September 20, 2013

MAD Magazine-க்கு சஷ்டியப்த பூர்த்தி



புகழ் பெற்ற நகைச்சுவைப் பத்திரிகையான   MAD இதழுக்கு 60 வயது ஆகிவிட்டது.. ‘ MAD  பத்திரிகையும்  நானும்’ என்ற பதிவை முன்பே (இங்கு சொடுக்கவும்)எழுதி உள்ளேன். இது இரண்டாம் பதிவு.
சமீபத்திய ஆண்டுகளில்  MAD  இதழ்களை   நான் பார்க்க வில்லை. ஆனால் அமெரிக்கா வரும் சமயம் புத்தகசாலையில் புரட்டிப் பார்ப்பதுண்டு. பிரசுரகர்த்தர்  வில்லியம் கெய்ன்ஸ்  காலமாகி விட்ட பிறகு பத்திரிகையின் ஜீவன் குறைந்து விட்டதாக எனக்குத் தோன்றியதும் ஒரு காரணம். திரைப்படங்கள் பார்ப்பதை நான்  எப்போதோ நிறுத்தி விட்டேன் என்பதால்  அமெரிக்கத்  திரைப்படங்களை நையாண்டி செய்யும் படக்கதைகள் பல  புரிவதில்லை.

சென்ற   வருஷம் ஒரு அகராதி சைஸ் 1000 பக்க   MAD கலெக் ஷன் புத்தகம் கிடைத்தது. அதனால் பழைய பித்து பிடித்துக் கொண்டது!
சமீபத்தில்  60 ஆண்டு நிறைவை ஒட்டி, தீபாவளி மலர்  அளவில் கனமான   ஆர்ட் பேப்பரில் . TOTALLY MAD- 60 years of Humor,Satire, Stupidity and Stupidity என்ற பெயரில்  புத்தகம் வெளியிட்டிருக்கிறர்கள். அபாரமான புத்தகம். பழைய இதழ்களிலிருந்து பல நகைச்சுவை அம்சங்களை தொகுத்துத் தந்திருந்தாலும் புதிதாகச் சில கட்டுரைகளையும் சேர்த்திருக்கிறார்கள்.
MAD பத்திரிகையைப் பற்றிய   பல சுவையான  கூடுதல் தகவல்களை இங்கு தருகிறேன்.
MAD பத்திரிகையில் விளம்பரங்களைப் போடுவதில்லை என்பது கெயின்ஸின்  கொள்கை. தொண்ணூறுகளில்  MAD உயர்ந்த பட்சமாக கிட்டத்தட்ட  21 லட்சம் காபிகள் விற்றது. சமீப காலத்தில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாம்.
கறுப்பு வெள்ளையிலிருந்து கலருக்கு மாறியபோது செலவை ஈடு கட்ட விளம்பரங்களை MAD போட ஆரம்பித்தது. அத்துடன்,வருஷத்தில் 8 இதழ்கள் என்பதை 6-ஆகக் குறைத்து விட்டது.
ஒரு சிலர் MAD பத்திரிகை மீது அவ்வப்போது வழக்கு தொடுத்து இருக்கிறர்கள். அதனால், MAD பத்திரிகையில், ஆசிரியர், உதவி ஆசிரியர்,பிரசுரகர்த்தர்,என்ற பெயர்ப் பட்டியலில் தங்களது வழக்கறிஞரின் பெயரையும் சேர்த்து விட்டார் வில்லியம் கெயின்ஸ்!

MAD பத்திரிகை மீது போடப்பட்ட  வழக்குகளில் இரண்டு  சுவையானவை.