November 27, 2012

நான் பாக்யராஜ் அல்ல!

உலகிலேயே எனக்குப் பிடிக்காத விஷயம் இரண்டு, முதலாவது: பூகோள பாடம். (காரணம், கடந்த 25 வருஷங்களாக அந்த பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதால்.) இரண்டாவது: பள்ளிக்கூடத்தில் இரண்டாவது பீரியட். (காரணம், அந்த பீரியட்டில் எனக்கு எந்த கிளாஸும் கிடையாது. ஆகவே லேசாகத் தூக்கம் வரும். அந்த தூக்கத்தை அனுபவிக்க விடாமல் டீச்சர் ரூமுக்கு அடுத்த அறையில் உள்ள மியூசிக் கிளாஸிலிருந்து பலவித சங்கீதக் கதறல் வரும். அதுவும் அந்த மியூசிக் டீச்சர் கோகிலா இருக்கிறாளே... ஹூம்... அவங்க பேர் கோகிலாங்கறதுக்குப் பதிலா காக்கா என்று இருக்க வேண்டும்!)

அப்படித்தான் அன்று பூமத்திய ரேகையைப் பற்றியும் வடகிழக்குப் பருவமழையைப் பற்றியும் போதித்துவிட்டு, டீச்சர் ரூமிற்கு வந்து மூட்டைப்பூச்சிகளின் சாம்ராஜ்யமான ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு மினி கொட்டாவி விட்டேன். கோகிலாவின் பாட்டு கிளாஸ் (அதாவது கூப்பாட்டு கிளாஸ்) துவங்குமுன் ஒரு கோழித் தூக்கம் போடலாம் என்று.
லேசாகக் கண் அயர்ந்தேன். "சார்... சாமுவேல் சார்... சார்...'' என்று யாரோ தீந்தமிழில் குரல் கொடுத்தார்கள். (உண்மையைச் சொல்லப்போனால் தீய்ந்த தமிழ்க்குரல் அது! அவ்வளவு கர்ண கடூரம்!) கண்ணை விழித்தேன். எதிரே, மியூசிக் டீச்சர் கோகிலா ஆசீர்வாதம்.

"என்னம்மா...'' என்றேன், மனதிற்குள் சபித்துக்கொண்டே.
"ஸ்கூல் ஆன்யூவல் வருதே. அதுக்குக் கலை நிகழ்ச்சி நடத்தப் போறோம். கமிட்டியில் நாம் இரண்டு பேரும் இருக்கிறோம்.''
"யார் இப்படி கமிட்டி போட்டது? இப்பதான் போன மாசம் ஸ்போர்ட்ஸ் கமிட்டியிலே, அதுக்கு முன்னே பிக்னிக் கமிட்டியிலே, சோஷல் சர்வீஸ் கமிட்டி, தேரடி கமிட்டி, தெருப்புழுதி கமிட்டி எல்லாத்துக்கும் இந்த சாமுவேல்தான் அகப்பட்டான்! ஹெட்மாஸ்டரை நானே போய் கேட்கறேன்.''
"எங்கேயும் போகவேண்டாம். நானே வந்துட்டேன். என்ன சாமுவேல், ரொம்ப கோபமாக இருக்கீங்க...'' - ஹெட்மாஸ்டர்தான்!

 "கோபமும் இல்லை, பாபமும் இல்லை சார்... அடுத்த மாசம் இன்ஸ்பெக் ஷன் வருது.  சிலபஸ் கம்ப்ளீட் பண்ணணும்.'' அசடு வழிந்தேன்.
"சாமுவேல், உங்கள் பூகோள பாடத்தைப் பற்றி எந்த இன்ஸ்பெக்டரும் கவலைப்பட மாட்டார்... பூகோளப் பாடம் ஒண்ணுதான் ரொம்ப வருஷமாக மாறாமல் இருக்கு, நம்ப கோகிலாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க. நீங்க ஒரு காரியத்தில் இறங்கினால் பிரமாதமாக நடத்திப்புடுவீங்க...''

ஹெட்மாஸ்டர் எபனேசர் காரியவாதி. அதனால்தான் எனக்கு ஐஸ் வைத்தார்.
"ஆமாம் ஸார்! நம்ம சாமுவேல் ஸார்தான் பசங்களை நல்லா கவனிச்சு சொல்லிக் கொடுப்பார்'' என்றாள் கோகிலா.

அந்த சமயத்தில் தமிழாசிரியர் பாண்டியன் உள்ளே வந்தார். "வேலும் மயிலும் துணைன்னு சொன்னவங்க எந்த வேலைச் சொன்னாங்க தெரியுமா, நம்ப சாமுவேலைத்தான்'' என்று சொல்லி கடகடவென்று சிரித்தார். ஜோக் அடித்தால் மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்க மாட்டார்!
"ஏன்யா, வேலு.. கலை நிகழ்ச்சிகளுக்கு ஏதாவது ஐடியா வெச்சிருக்கீரா...? "திருவள்ளுவர் - ஔவையார் உரையாடல்னு ஒரு அரைமணி நேர நாடகம் எழுதியிருக்கிறேன். தள்ளிவிடுகிறீரா?''

November 19, 2012

நாலு பேரு சொன்னாங்க!

மே வேஸ்ட் சொன்னது:
ஹாலிவுட் நடிகை  மே வேஸ்ட் சரியான வாயாடி. அசைவ ஜோக் ராணி! அவரைப்பற்றி ஏராளமான துணுக்குகள் உள்ளன. பல அச்சில் போட முடியாதவை.
மே வேஸ்ட், தன்னுடன் நடிப்பவர்களை  மிஞ்சிவிடத்தான் பார்ப்பார். ‘நைட் ஆஃப்டர் நைட்’ என்ற படத்தில் அவருடன் நடித்த அலிஸன் ஸ்கிப்வொர்த்திற்கு பல சீன்களில் நடிக்க வாய்ப்பே தராமால், தன்னைத்  தானே  முன்னுக்குத் தள்ளிக்கொண்டார். ஷூட்டிங் முடிந்ததும்,  அலிஸன் கோபமாக அவரிடம் “இத பாரு, உனக்கு ஒண்ணு சொல்றேன், , நான் ஒரு நடிகை என்பதை தெரிஞ்சுக்கோ” என்றார் .
மே வேஸ்ட், ” அப்படியா...? கவலைப்படாதே.. நீ சொன்ன ரகசியத்தை யார் கிட்டேயும் நான் சொல்லமாட்டேன்!” என்றார் கூலாக!
==========================
பிக்காஸோ சொன்னது
உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காஸோ ஒரு குறும்புப் பேர்வழி. ஓவியங்கள், சிலைகள், பீங்கான் பொருட்கள் என்று ஏராளமாக
உருவாக்கியவர்.
(50,000 -க்கு மேல் இருக்குமாம்  .

அவருடைய  வண்ண ஓவியங்களை அதிக அளவில் வாங்கியவர் கெர்ட்ரூட் ஸ்டீன் என்ற அமெரிக்கப் பெண்மணி.
கெர்ட்ரூட்டை வண்ண ஒவியமாக  பிக்கஸோ வரைந்தார். அதைப் பார்த்த ஒருவர் , பிக்காஸோவிடம், ”நீங்கள் வரைந்த ஓவியம் மாதிரியே கெர்ட்ரூட்  இல்லையே?” என்றார்.”
”அப்படியா.. கவலைப்படாதீர்கள்! சீக்கிரம் அது மாதிரி ஆகிவிடுவார்!” என்றார் பிக்காஸோ அலட்டலாக!

+    +  +
பிக்காஸோவின் ஒரு ‘பொன்மொழி” மறக்க முடியாதது.
அவர் சொன்னார்: என் அம்மா எனக்குக் கொடுத்த அட்வைஸ்: ” நீ ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தால் மேஜர் ஜெனரலாக வேண்டும்.  சர்ச்   பாதிரியானால், போப்பாண்டவராக ஆகவேண்டும்:” இதைப் பல தடவை சொல்லியிருக்கிறார்.  நான் என்ன செய்தேன் தெரியுமா? ஓவியன் ஆனேன். அதனால் பிக்காஸோவாக ஆனேன்!"
(I became an artist and became Picasso!)

November 14, 2012

ஒரு மனிதர்:16000 புத்தகங்கள்!


ஒரு மனிதர்:16000 புத்தகங்கள்!

நான் கல்லூரியில் படித்த போது, லிங்கன் வரலாறு துணைபாடமாக வைத்திருந்ததை எனக்குக் கிடைத்த பரிசாக இன்றும் கருதுகிறேன். அந்த புத்தகத்தை பரீட்சைக்காகப் படித்த போதிலும் அவரது வாழ்க்கைப் பலவிதத்தில் எனக்குள் சிறந்த பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பது நிஜம்.


கெட்டிஸ்பர்க் போர்க்கள மைதானத்தில் 1863 நவம்பர் 19-ம் தேதி அவர் நிகழ்த்திய அற்புதமான உரை ஆங்கில தெரிந்த அனைவரும் படித்து ரசித்து மனப்பாடம் செய்ய வேண்டிய உரை என்பேன். என் வீட்டுக் கூடத்தில் எட்டுக்கு ஆறு அடி அளவு பேப்பரில் பெரிய எழுத்தில் உரையை எழுதி ஒட்டி வைத்திருந்தேன். பாரதியாரின் கவிதையைப் படிப்பது போல, பல தடவை படித்துப் படித்து மெய் மறந்திருக்கிறேன். இந்த பதிவின் முடிவில் உரையைத் தருகிறேன். 

சில வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்த போது கெட்டிஸ்பர்க் போய்  போர்க்கள மைதானத்தைப் பார்த்து
வந்தது ஒரு மறக்கமுடியாத அனுபவம். அதை ஒரு சுற்றுலா இடமாகப் பிரமாதமாகச் செய்திருக்கிறார்கள்.
 வழிகாட்டி இளைஞர்கள், அந்தக்கால போர்க்கள தளபதிகள் மாதிரி உடை அணிந்து விளக்கினார்கள். இடை இடையே கதாபாத்திரங்களாக மாறி உணர்ச்சிப் பெருக்குடன் பேசி நடித்தார்கள். (அந்த வழிகாட்டிகள் கல்லூரியில் சரித்திரம் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள். சிலர் ஆசிரியர்கள். கோடை விடுமுறைகளில் இப்படி பணியாற்ற அவர்கள் அமர்த்தப்படுகிறார்கள்.)
 *                  *

கெட்டிஸ்பர்க்கில் லிங்கனின் உரையைக் கல்லில் பொளிந்து வைத்திருக்கிறார்கள். அதைப் படிக்கப் படிக்க உடலில் புது ரத்தம் பாய்ந்தது.
அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியான ஆபிரஹாம் லிங்கன்  காலத்தால் அழியாத புகழ் பெற்றவர். ஒரு விதத்தில் அவர் அமெரிக்காவின் ‘மகாத்மா காந்தி’ என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  இல்லை.. இல்லை. இது சரியில்லை. காரணம், நாம் மகாத்மா காந்தியைக் கிட்டத்தட்ட மறந்து விட்டோம். ஆனால் அமெரிக்க மக்கள் லிங்கனை மறக்கவில்லை. அவரைப் பற்றிப் புத்தகங்களாக எழுதித் தள்ளுகிறார்கள். நம்ப மாட்டீர்கள், இது வரை அவர் சம்பந்தமாக 16000, ஆம்,பதினாறாயிரம் புத்தகங்கள்  வெளி வந்துள்ளன. அச்சில் 20 புத்தகங்கள் இருக்கின்றனவாம்,.

இந்த  மாதம்  VAN DRREBLE என்பவர் எழுதியுள்ள ஒரு பத்தகம் வெளியாகிறது, ஒரு லட்சம் காபிகள் அச்சிடுகிறார்கள்.  லிங்கன் வரலாறு கிட்டதட்ட ஒரு ‘பொன்னியின் செல்வன்’. லிங்கன் ஆராய்ச்சியாளரான டேவிட் ஹெர்பர்ட் டொனால்ட் எழுதிய லிங்கன் புத்தகம் 1995’ல் பிரசுரிக்கப்பட்டது. இது வரை ஒரு லட்சம் காபிகள் விற்றிருக்கின்றன. மற்றோர் 1 லட்சம் புத்தகம்: 2008-ல் வெளியான ஜேம்ஸ் மெக்ஃபெர்ஸன் எழுதிய  Abraham Lincoln as Commander in chief’ என்ற புத்தகம்.   James Swanson-னின்  MAN HUNT-12 day chase for Licoln Killers அசத்தல் விற்பனயாக 
3,75,000 காபிகள் விற்றிருக்கிறது.!
 எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு இருப்பது TEAM OF RIVALS என்ற புத்தகம் 2005- வெளியாயிற்று. இது வரை 13 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகி இருக்கிறது. ( இவையெல்லம் ஆதார பூர்வமானத் தகவல்கள்.)


லிங்கனின் 200-வது ஆண்டு நினைவாக, யாருமே எண்ணி பார்த்திராத ஒரு புதுமையை வாஷிங்டனில் உள்ள  FORD’S THEATRE CENTRE-ல் செய்திருக்கிறார்கள்.
 
லிங்கன் புத்தகத்தூண் அமைத்திருக்கிறர்கள். உயரம்: 34 அடி! 

லிங்கன் புத்தகங்களை எல்லாம் திரட்டி, தூண் அமைக்கத் திட்டமிட்டார்கள். கிட்டத்தட்ட 7000 புத்தகங்கள் தான் கிடைத்தனவாம். ஒவ்வொரு புத்தகத்தையும் அச்சு அசலாக அலுமினிய தகடில் செய்து, அட்டைப்படத்தை  அச்சடித்து. அவற்றை அடுக்கி  வெல்டிங்க் செய்து உருவாக்கி இருக்கிறார்கள். (மீதி 9000 புத்தகங்கள் கிடைத்ததும் இன்னொரு தூண் எழுப்புவார்களோ என்னவோ!)

புத்தகத்தூண் படத்தைப் பாருங்கள்.
====================
சில புள்ளி விவரங்கள்.
லிங்கன் பற்றிய புத்தகங்கள்: 16000 (உத்தேச எண்ணிக்கை)
அவரது வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் மட்டும் : 5796
லின்கன் ஆராய்ச்சியாளர்  HAROLD HOLZER மட்டும் 42 புத்தகங்கள் எழுதி/எடிட் பண்ணி உள்ளார்.
 ==================


November 09, 2012

மகத்துவம் மிக்க முருங்கைக்காய்


முருங்கைக்காய் ஒரு அசாதாரணமானது.
மருத்துவ குணங்கள் கொண்டது.
இதை நான் சொல்லவில்லை.  NATIONAL GEOGRAPHIC  பத்திரிகையின் நவம்பர் 2012 இதழில் வந்திருந்த விவரத்தை  இங்கு தருகிறேன்,
ஆங்கிலத்தில் அதன் பெயர் MORINGA.


அலட்டல் அம்புஜம்!