December 31, 2010

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

வணக்கம்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பழைய பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். 1845ல் பிரசுரமான புத்தகம். பிரமாதமாக இருந்தது நகைச்சுவை. படிக்கும் போதே உள் மனதில் ’இதுமாதிரி நாமும் முயற்சி பண்ணலாமே' என்று தோன்றியது.
எழுத ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் எழுதி முடிக்கத் திட்டமிட்டேன். ஆனால் பல காரணங்களால் 10, 20 பக்கங்கள் எழுதியதும் தொடரமுடியவில்லை. அதன் பிறகு திடீரென்று `’உன்னால் எழுதிவிட முடியும்' என்று என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு ஒரே மூச்சில் எட்டு அத்தியாயங்கள் எழுதினேன். தனித் தனி எபிஸோட் மாதிரி அமைந்திருப்பதால் அத்தியாயங்கள் எழுதிக் கொண்டே போகலாம்.
கதையின் பெயர்: அம்புஜத்தின் அர்ச்சனைகள். அத்தியாயங்கள் ஒரு தொடர்புடன்  இருந்தாலும் தனித் தனி அர்ச்சனைகளாகவும் படிக்க இயலும். கதைக்குப் படம் போட யாரைப் பிடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். படங்கள் இல்லாமல்கதை ரசிக்குமா என்று சந்தேகம் எற்படுகிறது/. ஓவியர்  ஒருவர் அகப்பட்டு, அவரும் காலதாமதம் செய்யாமல் படம் போட்டுக் கொடுத்தால், பொங்கலன்று அந்தத் தொடரைத் துவங்குகிறேன்..

மீண்டும் அனைவ்ருக்கும்  நலவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் - கடுகு

பரணி - கேரக்டர்

கணக்கு வழக்கு இல்லாத அளவுக்கு புகையிலைத் தோட்டம், எலுமிச்சம்பழத் தோப்பு, திராட்சைக்காடு என்று பணத்தைச் சாகுபடி செய்யும் தோட்டங்களை ஆந்திராவில் வைத்திருக்கும் மிகப் பெரிய செல்வந்தரின் ஒரே மகன் பரணி. சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் "குழந்தை'! நூறு ரூபாய்க்குக் குறைந்த நோட்டைக் கையால் தொடுவதே பாவம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு "பாக்கெட் மணி' பக்கெட் பக்கெட் டாக "நாயினா' அனுப்பிக் கொண்டிருக்க, சென்னையில் ஒரு கோஷ்டியையே சேர்த்துக் கொண்டு அட்டகாசமாக இருப்பவன் பரணி.
இருபத்திரண்டு வயதில் பி.யூ.சி. பரீட்சையின்மேல் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் பரணியைச் சுற்றி நாலைந்து நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். "டேய் பசங்களா, இன்னிக்குக் கிளாஸ் "கட்'டுடா'' என்றால் எல்லா நண்பர்களும் "கட்'டிடுவார்கள். காரணம், அன்று பரணி சினிமா, ஓட்டல் என்று முழு தின புரோகிராம் போட்டிருப்பான்.
"டேய், பரணி, இன்னிக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல். நான் லீவு போடலைடா'' என்று நண்பன் முரளி சொல்வான்.

December 26, 2010

அட்லான்டாவில் ஒரு நெகிழ்ச்சி

அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் உள்ள எமரி சர்வகலாசாலை பட்டமளிப்பு விழா  திறந்த வெளியில் மேடை.
கீழே நாற்காலிகளில் பட்டம் பெற வந்திருக்கும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள். அதில் நானும் ஒருவன்.
    லேசான காலை இளம் வெய்யில் இதமாக இருக்கிறது.
    நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. ஒரு பெண் மேடையின் மூலைக்கு வந்து நிற்கிறாள்.
    டீன், புரொபசர், என்று பலர் உரை நிகழ்த்துகிறார்கள். அவர்களின் உரையை அந்தப் பெண் சைகை மொழியால் "மொழி பெயர்க்கி"றார். (காது கேளாதவர்களுக்காக டி.வி.யில் வருவதைப் பார்த்திருப்பீர்கள். அதே மாதிரி.)
    எதற்காக இப்படி செய்கிறார்கள்? ஒருக்கால் அமெரிக்காவில் இது வழக்கமாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டேன்.
    ஒவ்வொருவர் பெயராகக் கூப்பிட, மாணவர்கள் மேடைக்குச் சென்று பட்டத்தைப் பெற்றார்கள். நிகழ்ச்சி முடிவுறப் போகிறது என்று நினைத்த சமயம், டீன் மைக்கில் வந்து, ""கடைசியாக மிகச் சிறந்த ஸ்டூடண்ட் பரிசு அறிவிக்க முன் வந்திருக்கிறேன். அவர் பெயரைக் கூப்பிடுமுன் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். அவருக்கு பாராட்டைத் தெரிவிப்பதற்குக் கைகளைத் தட்ட வேண்டாம். அதற்குப் பதில் கைகளை உயர்த்தி விரல்களை "வா வா' என்று அழைப்பது மாதிரி காட்டுங்கள். காரணம், பின்னால் சொல்கிறேன்.
    ”முதலில் மாணவர் பற்றி ஒரு சின்ன குறிப்பு.
    ”நமது "ராலின்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்"தில் பட்டம் பெற இருக்கும் அவர், இதே சர்வகலாசாலையில் சமூக சேவை படிப்பிலும் தேறியுள்ளார். அத்துடன் டெகடூர் பகுதியில் ஒரு தொண்டு அமைப்பையும் நிறுவி சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். ஒரே சமயம் இரண்டு பட்டங்களையும் பெறப் போகிற அவருக்குக் காது கேட்காது. பேச வராது... நான் சொன்னபடி விரல்களை நீங்கள் அசைத்தால், அவரைப் பாராட்டுகிறீர்கள் என்று அவர் தெரிந்து கொள்வார்'' என்று கூறிவிட்டு, அந்த ஸ்டூடண்டின்--  அவர் ஒரு பெண் -- பெயரை அறிவித்தார்.
  ஒரு மாணவி அப்பெண்ணை மேடைக்கு அழைத்து வர, மைதானமே எழுந்து நின்று விரல்களை அசைத்துப் பாராட்டைத் தெரிவித்தது. பலர் கண்களில் நீர்.  மாணவியோ மலர்ந்த முகத்துடன் சிரித்துக் கொண்டே மேடைக்கு வந்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டாள்.

( இதே  நாள் நடந்த அனைத்துக் கல்லூரி பட்டமளிப்பு விழாவைப் பற்றி  பின்னால் எழுதுகிறேன்.  BE PREPARED TO SHED  MORE TEARS!)

இயந்திரசாமி - 4

December 22, 2010

யார் கையெழுத்து?

புதிதாக, இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தபோது ஒரு கடிதம் கிடைத்தது. அது உலகப் பிரமுகரின் (கடித பாணியில் எழுதப்பட்ட) சுற்றறிக்கை. அந்த பிரமுகரின் கையெழுத்தை மட்டும் இங்கு தந்திருக்கிறேன். அவர் யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்!
 =================
 பின்குறிப்பு:   கேள்வியிலேயே பதிலும் ஒளிந்து கொண்டிருக்கிறது .