April 30, 2015

கோபுலு


ஓவியமேதை கோபுலு காலமானார்.

 அருமையான, எளிமையான மனிதர். 

அவருடைய நட்பு எனக்குக் கிடைத்தது  மா பெரும் பேறு. 

அவருக்கு  என் கண்ணீர் அஞ்சலி.


  -கடுகு

----------------------------------------------------------------------------------------------

April 27, 2015

ஸ்டார் டிவி. ஒழிக


என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. "மாப்பிள்ளை. இந்தாங்கோ கொஞ்சமா ஹார்லிக்ஸ் கலந்துண்டு வந்திருக்கேன் . மூளையைக் கசக்கிக்கொண்டு எழுதறதுக்குச் சக்தி வேண்டாமா?' என்று சொல்லி என் மாமியார் ஒரு டம்ளர் ஹார்லிக்ஸை என் முன் வைத்தாள்.
இதுவரை  என்னைப் பார்த்து நேரடியாகப் பேசி அறியாத (ஏன் ஏசியும் அறியாத, அதாவது நேரடியாக ஏசி அறியாத!) என் அருமை மாமியார்,. 1. மாப்பிள்ளை என்று கூப்பிட்டார், 2. ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தார், 3. என்னை எழுத்தாளன் என்று அங்கீகரித்தார்.!! 

எத்தனை அதிசயங்களைப் படைத்தாய், இறைவா! இப்படி அதிசயங்களால் திக்குமுக்காடிப் போய் விட்டதால் தொச்சுவும் அவன் நால்வகைப் படைகளும் என் வீட்டுக்கு வந்து முகாமிட்டு இட்லி, தோசை சம்ஹாரம் செய்து கொண்டிருப்பதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை!
அந்த சமயம் என் மூளைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. என் மாமியார் மாறியதன் மர்மம் விளங்கியது. எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு தொச்சு வந்து விட்டுப் போனதிலிருந்து ஏற்பட்ட மாற்றம்! இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி என்ன நடந்தது?

என் அருமை மனைவி கமலாவும் அவளுடைய அருமை அம்மாவும், அதாவது என் மாமியாரும் மாவடு வாங்கப் போயிருந்தார்கள். மாவடு வாங்கப் போய் இவர்கள் மாங்காய் பார்டர் போட்ட புடவையை வாங்கி வந்துவிடப் போகிறார்களே (சாதாரணமாக அவள் அப்படிச் செய்வது வழக்கம்!) என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். தனிமையும் கவலையும் சேர்ந்து ரொம்ப போரடிக்கவே டிவியைப் போட்டேன். இதைவிட டி.வி. அதிகமாக போர் அடிக்காது என்ற அல்ப ஆசையுடன்!

April 15, 2015

நாலு விஷயம்:.எட்டணா-1, எட்டணா- 2, பெயர் விநோதம்- 1, பெயர் விநோதம்--2

சென்னை:  எட்டணா  விஷயம் -1
இது சுமார் 60 வருஷத்திற்கு முந்தைய கதை. ஐம்பதுகளில்நான் சென்னை  ஜி.பி.ஓ-வில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்குள்ள பல டிபார்ட்மெண்டுகளில், வி.பி. கிளெய்ம்ஸ் என்பதும்  ஒன்று. [அது என்னமோ அந்த டிபார்ட்மெண்டே சுமார் பத்து பதினைந்து பெண் ஊழியர்கள் கொண்ட அல்லி ராஜ்யம் தான்  என்பது தொடர்பில்லாத [(சுவாரசியமான!) குட்டித் தகவல்!]
அந்த காலத்தில் ஏராளமான வி.பி.பி லெட்டர்கள், பார்சல்கள். புத்தகப் பாக்கெட்டுகள், நாட்டு மருந்துகள் இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்கா. சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் போகும்.  அங்கு பார்சல்கள் டெலிவரி ஆகும்போது , பார்சலின் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை வசூல் செய்து நமக்கு அனுப்புவார்கள். சில சமயம்  எட்டணா, ஒரு ரூபாய் குறைவாக அனுப்பி இருப்பார்கள். . உடனே  வி.பி. கிளெய்ம்ஸ், ஜி.பி.ஓவிலிருந்து கடிதம் போகும்.  "இன்ன பார்சலுக்கு எட்டணா குறைவாக அனுப்பியிருக்கிறீர்கள். அந்தத் தொகையை அனுப்பவும்” என்று  கார்பன் பேப்பரை வைத்து, மூன்று காபி  எழுதி, அந்த நாட்டிற்கும், நம் ஆடிட் ஆபீசிற்கும் அனுப்பி வைக்கப்படும். பதில் உடனே வராது. நினைவூட்டல் கடிதம் எழுதி அனுப்பப்படும்.

”சிங்கப்பூர் டாலர், ரூபாய் ஆகியவைகளின் மதிப்புகள் ஏற்ற இறக்கத்தின் காரணமாக தொகையில்  வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதற்கு நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று பதில்  நிதானமாக வரும்! ஆனால் அதற்குள் சில சமயம் ஆடிட் அலுவலகத்திலிருந்து    ஆட்சேபனைக் கடிதம் வரும்,  எட்டணா விஷயம்; வசூலிக்க எட்டு ரூபாய் செலவானது பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள்.
அதுவும் வராத பணத்திற்கு இத்தனை செலவு. (சில வருஷங்களுக்குப் பிறகு. ஐந்து  ரூபாய் வரை வித்தியாசம் இருந்தால் பரவாயில்லை என்று உத்தரவு போட்டுவிட்டார்களாம்!

 அட்லான்டா USA: இருமல் மிட்டாய்:  எட்டணா  விஷயம் -2
பல வருடங்களுக்கு முன்பு அட்லாண்டா நகரில் ஐந்து மாதம் தங்கி இருந்தோம். கோகா கோலா,  CNN  ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவலகம் அங்குதான் உள்ளது. ஒரு நாள், என் மகளுக்கு அறிமுகமான பேராசிரியர் “ என்னிடம் சிம்பொனி நிகழ்ச்சிக்கு இரண்டு டிக்கட்டுகள் இருக்கின்றன. நீங்கள் உபயோகித்துக்கொள்ளுங்கள்: என்று சொல்லி, கொடுத்தார். (டிக்கட் விலை 35 டாலர்!)

என் மகள் “ அம்மாவும் நீங்களும் போய் வாருங்கள். இந்த  நாட்டில்   இசை நிகழ்ச்சிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்று சொல்லி அனூப்பினாள்.
அந்த டிக்கட்டுகளில் ஒரு முக்கிய குறிப்பு இருந்தது: ட்ரஸ்  கோட் (  DRESS CODE) கோட், சூட், டை, ஷூவுடன்தான் வரவேண்டும். மேற்படி  ஆடை அலங்காரங்களைப்   (டிக்கட் மாதிரி, அவைகளும் ஓசிதான்!) போட்டுகொண்டு நிகழ்ச்சிக்குப் போனோம்.
அரங்கிற்குள் நுழையும்  வாயிலில் ஒரு உயரமான ஸ்டூலின் மீது அலங்காரமான பெரிய  கிண்ணத்தில்  நிறைய மிட்டாயை வைத்திருந்தார்கள். எனக்கு முன்னே போனவர் இரண்டு, மூன்று மிட்டாய்களை எடுத்துக் கொண்டதைப் பார்த்தேன். நானும் அது மாதிரி இரண்டு மிட்டாய்களை எடுத்துக் கொண்டேன். உள்ளே போய் உட்கார்ந்தோம்.
வந்திருந்தவர்களில் எண்பது பங்கு பேர் 60, 70 வயதானவர்களாக இருந்தார்கள்.
சீட்டில் உட்கார்ந்தவுடன், எல்லாரும் கோவில் பிரசாதம் மாதிரி அதை வாயில்  போட்டுக் கொள்வதைப் பார்த்தேன். நானும் மிட்டாயின் மேல் சுற்றப்பட்டிருந்த காகிதத்தை நீக்கி விட்டு, மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டேன்.
மெந்தால் போன்ற ஜலதோஷ, இருமல் மாத்திரை.  அதுவும் ஸ்ட்ராங் ரகம்! ஏன் இதை கொடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

திரை விலகியது. நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அரங்கில் நிசப்தம். இசை அருவியாகப் பொழிந்தது.  இடையில் 3,4 தடவை  எல்லாரும் ஒரு நிமிஷம் கைதட்டினார்கள்.
மற்றபடி அரங்கில் நிசப்தம். ஒருத்தர் கூட  இருமவில்லை!
அப்போதுதான் புரிந்தது, இலவச மிட்டாய் வினியோகத்தின் மர்மம்!
(டிசம்பர் சீசனில்  நம் ஊர் சபாக்காரர்கள்   இதைக் கடைப்பிடிக்கலாமே என்று அதிகப்பிரசங்கித் தனமாக எதுவும் நான் சொல்லப் போவதில்லை!)

டில்லி:   பெயர் விநோதம் -1
ஒரு சமயம் -- ஒரு சமயம் என்ன, 50 வருஷத்திற்கு முன்பு !-  டில்லி டெலிபோன் டைரக்டரியைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக ஒரு  வித்தியாசமான பெயர் கண்ணில் பட்டது. இப்படி ஒரு வித்தியாசமான,  யாருமே வைத்துக் கொள்ளாத பெயரை  வைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி, அவரையே பேட்டி கண்டு, குமுதத்தில் எழுதலாம் என்று எண்ணினேன், அவர், கல்காஜி என்ற பகுதியில் இருந்த டில்லி  SMALL SCALE INDUSTRIES-ல் ஒரு முக்கிய அதிகாரி. அவருக்குப் போன் செய்யலாமா கூடாதா என்று தயக்கம்  ஏற்பட்டது.  கேலி செய்கிறேன் என்று நினைத்து, அவர் கோபித்துக் கொள்வாரோ என்று லேசான பயமும் ஏற்பட்டது.

April 07, 2015

அன்புடையீர்!

அடுத்த பதிவு சற்று தாமாதமாக வரும்.

மன்னிக்கவும். ஒரு வாரத்திற்குள்
போடப் பார்க்கிறேன்.

-கடுகு

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$