June 11, 2014

தானே ஏற்றுக் கொண்ட எளிமை


சிறிய துவக்க உரை
ஒரு சமயம் கல்கத்தா போயிருந்தேன். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போவது என் வழக்கம். கல்கத்தாவில் ‘நியூ மார்க்கெட்’ ரொம்பப் பழமையானது என்றும் அங்குள்ள காலேஜ் வீதி  பழைய புத்தகங்களின் சொர்க்கம் என்றும் என் அலுவலக வங்காள நண்பர் சொல்லி இருந்ததால், கல்கத்தா போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாக அங்கு சென்றேன்.
அங்கு எனக்கு கிடைத்த  ஒரு புத்தகம்   PETER'S QUOTATIONS. லாரன்ஸ் பீட்டர் என்பவரால் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட அபாரமானப் பொன்மொழிகள் புத்தகம். அவர் ஒரு தொகுப்பாளர் என்றுதான் நினைத்திருந்தேன்  சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் பழையப் புத்தக் சந்தைகளில் அவர் எழுதிய ஒன்றிரண்டு புத்தகங்கள் கண்ணில் பட்டன,

சமீபத்தில் அவர் எழுதிய  ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’  என்றபுத்தகத்தை பற்றிய ஒரு துணுக்கைப் படிக்க நேர்ந்தது, அவர் ஒரு பிரபல எழுத்தாளர் என்பது எனக்கு அது வரைத் தெரியாது . அதனால் அவர் புத்தகங்களைப் படிக்க, லைப்ரரியில் தேடினேன்.
1979-ல் பிரசுரமான PETER'S PEOPLE  என்ற புத்தகம் கிடைத்தது. அதில் தனது ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’ புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு  அவர் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டார்  என்பதை ஒரு   கட்டுரையில்  விவரித்து இருந்தார். கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. அதைச் சற்று சுருக்கி (சுமார்)  தமிழில் தருகிறேன்.
அத்துடன் அந்த குறிப்பிட்ட துணுக்கையும் கடைசியில் தருகிறேன்.

நானே ஏற்று கொண்ட எளிமை - லாரன்ஸ் பீட்டர்
என் குழந்தைப் பருவம் மிகுந்த ஏழ்மை மிக்கது. பின்னால் நான் படித்து வேலைக்குச் சேர்ந்த பிறகு படிப்படியாக, மெதுவாக என் வாழ்க்கைத்தரம் உயர ஆரம்பித்தது.   பிறகு 1969-ல் நான் எழுதிய PETER PRINCIPLE என்ற புத்தகம் மிகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் காரணமாக என் வாழ்க்கைத் தரத்தை ஓரளவு உயர்த்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை ஒரு அவநம்பிக்கையுடன்தான் அணுகினேன்.
வசதிமிக்க என் உறவினர்களில் பலர் தங்கள் செலவினங்களை மிதமிஞ்சி  அதிகப் படுத்திக் கொள்வதையும்,   தேவையற்ற அந்தஸ்துகளையும் பொறுப்புகளையும் ஏற்று, சிக்கல்கள் நிறைந்த  வாழ்க்கையில் அகப்பட்டுக் கொண்டிருப்பதையும் என் மனவி IRENE-ம் நானும் பார்த்துள்ளோம். அது மட்டுமல்ல,   இப்படி வாங்கப்பட்டப் பொருள்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும்,  தங்கள் காலத்தையும், சக்தியையும் அவர்கள் செலவழிப்பதையும் கவனித்துள்ளோம். அவர்கள் பல பொருள்கள் வாங்கினார்கள் என்பதைவிட பல பொருள்கள் அவர்களை வாங்கிவிட்டன என்பதே சரி!

ஆரம்பகாலங்களில்  நிதிவசதி இல்லாத காரணத்தால் நாங்கள் எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. அதை  வெறுத்தோம் என்பது உண்மை. பிறகு எங்கள் சொந்த வருவாயில் கால் ஊன்றி நின்றோம். அது எங்களுக்கு மிக்க மன நிறைவைத் தந்தது.  
எங்களுக்குக் கிடைத்த வெற்றியின்  காரணமாகக் கூடுதலாகப் பலவற்றை அனுபவிக்க முடியும் என்ற நிலையில், வாழ்க்கைத்   தரத்தை உயர்த்தப் போகிறோமா அல்லது மேலும் பணம், பொருட்கள், அந்தஸ்து ஆகியவற்றை   நாடிச் செல்லும்  வாழ்க்கையில் அகப்பட்டுக் கொள்ளப்போகிறோமா என்ற கேள்வி எங்கள் முன்னே தோன்றியது. நாங்கள் ஆழ்ந்து சிந்தித்தபோது ஒரு விஷயம் புலப்பட்டது: வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக் கொள்வதே சிறந்தது என்பதை தெளிவாக உணர்ந்தோம்.
பண வசதி ஏற்பட்டதால். சில விஷயங்களில் நாங்களே சொந்தமாக - பிறர் தயவு இன்றி - முடிவெடுக்க முடியும். .  உதாரணமாக, எனக்குப் பிடித்த எந்த முயற்சியை எடுக்கும்போதும் அதன் மூலம் வருவாய் கிடைக்குமா    என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல் ஈடுபடமுடியும். எங்களுக்குப் பிடித்த ஊரில், இடத்தில் வசிக்க முடியும்.
வாழ்க்கையின் உன்னதத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய பொருள்களைச் சொந்தமாக்கிக் கொள்வதைத் தவிர்க்கத் தீமானித்தோம். மிகவும் எளிமையான வாழ்க்கையை  அமைத்துக் கொள்வதுதான்  இதற்கு ஒரே வழி.

எளிமையான புறவாழ்க்கை: நிறைவு மிக்க உள்வாழ்க்கை.
கிராமப்புற சூழலில் எளிமை நிலவுவதைப் பலர் கண்டறிந்திருக்கிறார்கள். இதை நாங்கள் உணர்ந்திருந்தாலும், புத்தகசாலைகள், கலையரங்குகள், கலாசார அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்காக நகரத்தை ஒட்டியே இருக்க விரும்பினோம். இந்த அமைப்புகள் மூலமாக வாழ்க்கையை மேன்மையுறச் செய்ய இயலும்.
இப்போது நாங்கள் கடலோரத்தை ஒட்டியுள்ள ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறோம். இந்த வீடு எங்கள் தேவையைத் திருப்திகரமாகப் பூர்த்தி செய்கிறது. அதே சமயம் அதைப் பராமரிப்பதற்கு  அதிக நேரத்தையோ சக்தியையோ செலவழிக்கச் செய்வதில்லை.நாங்கள் எடுத்த முடிவு சிக்கனமாக வாழும் முயற்சி அல்ல. எளிமையும் இருக்க வேண்டும்; வசதியும் இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியான விகிதத்தில்  கலந்துள்ள வாழ்க்கை. எந்தப் பொருள் வாங்கினாலும் மிகவும் யோசித்துதான் வாங்குவோம். அது நல்ல தரமான பொருளா, நீண்ட நாள் உழைக்குமா  என்பதுடன், அது நமக்கு உண்மையிலேயே தேவைப்படும் பொருளா எண்று சீர்தூக்கிப் பார்த்துதான் வாங்குவோம்.

அழகான கைவினை பொருட்கள் மீது எங்களுக்கு ஈடுபாடு உண்டு அதிகமான எண்ணிக்கையில் வாங்கமாட்டோம். எங்கள் கலைத்தாகத்தை நீண்ட நாள்  திருப்திப்படுத்தக் கூடியவைகளை மிதமான எண்ணிக்கையில் வாங்குவோம். 
- - - - - - - - 
 இப்படி நாமே எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நமக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் நல்லது.
*      *         *

 பின்குறிப்பு-1:
பீட்டர் எழுதிய ‘பீட்டர் பிரின்சிபிள்’  30 பதிப்பகத்தாரால் நிராகரிக்கப்பட்டது. நியூயார்க்கில் இருந்த வில்லியம் மார்ரோ என்ற  நிறுவனம் 1969- பிரசுரித்தது. அந்த வருஷத்தில் மட்டும் இரண்டு லட்சம் காபிகள் விற்றன. அதற்குப் பிறகு 70-களிலும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தொடர்ந்து  BEST SELLER  பட்டியலில் இருந்தது. முப்பத்தெட்டு மொழிகளில் புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
The Peter Plan   Peter's Quotations,  Peter's People   Peter's Almanac,The Laughter Prescription ,The Peter Pyramid  என்று பல புத்தகங்களை பீட்டர் எழுதியுள்ளார்.

 பின்குறிப்பு-2:
 ஒரு புத்தகத்தின்  வெற்றி பீட்டரின் வாழ்க்கையை  எத்தனையோ உயரத்திற்குத் தூக்கிப் போனது என்றாலும், செல்வம் அவருக்குப் போதையாக மாறவில்லை. போதனையாகப்  பல பாடங்களை அவரே உணர்ந்துகொள்ளும் மனப்பக்குவத்தைத் தந்தது.
 
அமெரிக்காவின் மற்றொரு எழுத்தாளரின் புத்தகங்ளும் இப்படி அவரை ஒஹோ என்று ஆகாயத்திற்கேத் தூக்கிச் சென்றுவிட்டன. மில்லியன்களில் அவர் புத்தகங்கள் விற்பனை ஆயின. செல்வம் அவருக்குப் போதையாக அமைந்துவிட்டது. அவர் தனது வாழ்க்கையை  எவ்வளவு கீழ்த்தரமாக அமைத்துக்கொண்டார் என்பதை, இங்கு பீட்டர் கட்டுரைப் பதிவில் போட மனம் வரவில்லை.லாரன்ஸ் பீட்டரின் கட்டுரை நம் மனதில் எற்படுத்தும் உயர்ந்த உணர்வுகளை அது அழித்து விடும். பின்னால் வேறு எப்போதாவது போடுகிறேன்.

6 comments:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.


    மிக மிக அருமையான பதிவு.

    பணக்காரர்கள் என்றாலே நிம்மதி இல்லாத வாழ்க்கை, நேர்மையற்ற வாழ்க்கை என்றொரு பிம்பம் எல்லோர் மனதிலும் உண்டு.

    அதனாலேயேதானோ என்னவோ, ‘என்னவாக விரும்புகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘பணக்காரனாக விரும்புகிறேன்’ என்று யாருமே பதில் சொல்வதில்லை.

    ’பண பலம் மிகப் பெரிய பலம்’. ஆனால் நிம்மதி என்பது இதற்கு எதிர்த் திசை என்பது பயத்தைக் கொடுக்கிறது.

    பணம் + நிம்மதி = அமைதியான வாழ்க்கை என்பதற்கான ஃபார்முலாவை அழகாக பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. அழகிய வார்த்தைகள்
    பணம் + எளிமை = மகிழ்ச்சி.

    இதைத்தான் பீட்டர் அவர்களின் வாழ்க்கை,
    நமக்கு படிப்பினையாகத் தருகின்றது.

    ReplyDelete
  3. Made a nice feeling to read about Peter. Contentedness is most important for happiness. - R. J.

    ReplyDelete
  4. அருமையானதோர் மனிதர் பற்றியும் அவரது புத்தகங்கள் பற்றியும் எளிமையாக எடுத்துரைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. Jayanthi SridharanJune 24, 2014 at 4:31 AM

    Generally, America is known for consumerism . Nice to know there are exceptions. That too such a successful personality. Made a great reading. Thank you very much.

    ReplyDelete
  6. தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளதா அய்யா?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!