February 14, 2014

சில புத்தகங்கள்: சில வரிகள். கடுகு

சில புத்தகங்கள்: சில வரிகள்.
  புத்தகங்களைப்   படிப்பது  ஒரு சுவையான பொழுதுபோக்கு. அதை விட சுவையான பொழுதுபோக்காக நான் கருதுவது அந்தப் புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தேடிப் படிப்பது.  எத்தனை விதமான, வித்தியாசமான. சுவையான, துணுக்குகளும் விமரிசனங்களும், அனுபவங்களும், அவை எழுதப்பட்ட சூழ்நிலைகளும் படிக்கப் படிக்க நம் மனதைக் கொள்ளை கொள்ளும். எழுதியவரின் அனுபவங்கள் மட்டுமல்ல, அச்சிட்டவர், பிரசுரம் செய்தவர், விற்பனை செய்தவர், படித்தவர்களின் அனுபவங்கள் அதிக சுவையுள்ளவைகளாக இருக்கும்.  
 
புத்தகம் என்றால்  அதில் எழுதப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல, புத்தகத்திற்குத் தலைப்பு தேர்ந்தெடுத்தது, சமர்ப்பணம், முகவுரைகள், முன்னுரைகள், விமர்சனங்கள், அட்டை வடிவமைப்பு, அச்சுப் பிழைகள், பாராட்டுகள், பரிசுகள் என்று நிறைய உள்ளன. இந்தக் கட்டுரை இந்த பத்திரிகையில் வந்த கட்டுரையின் காபி’ என்று ‘நக்கீரன்கள்’ கண்டுபிடித்துச் சொன்ன குற்றச்சசாட்டுகள் – எல்லாமே தெவிட்டாத விஷயங்கள்தான்.
BOOKS ON BOOKS என்ற வகை வரிசையில் நிறைய புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன நோபல் பரிசுகள் பின்னனணியில் இர்விங்க் வாலஸ் ’தி பிரைஸ்’ என்ற நாவலை எழுதினார். அது வெகு வரைவில் பிரபலமாகி விட்டது. நோபல் பரிசுகள் பற்றிய பல சுவையான தகவல்கள் அதில் இருந்ததாலும் அது மிகவும் புகழ் பெற்ற நாவலாகவும் ஆகிவிட்டது. 
அவர் அந்த நாவலை எழுத  எடுத்துக்கொண்டப் பிரயாசைகளை விவரித்து  ஒரு புத்தகமாகமே எழுதினார், The Writing of One Novel என்ற தலைப்பில். அதுவும் மிகப் பிரபலமான புத்தகமாக பெயர் பெற்றது. அதிலிருந்து சில பகுதிகளை எடுத்து தினமணி கதிரில் நான் எழுதினேன்.
(இடைச்செருகல்: அப்போது ஆசிரியர் சாவியிடம் ஒரு ஐடியா கொடுத்தேன். ”கதிரில் வாசகர்கள் கேள்விக்கு இர்விங்க் வேலஸ் பதில் எழுதினால் வித்தியாசமாகவும் பரபரப்பாகவும் இருக்கும்” என்றேன். “எழுதுவதற்கு
இர்விங்க் வேலஸ் சம்மதித்தாலும், சன்மானம், அதுவும் டாலரில் கொடுத்துக் கட்டுப்படி ஆகுமா?”  என்றார். சில வாரங்கள் கழித்து அவர் அமெரிக்க சென்றார். யார் யாரையோ  எப்படியோ பிடித்து  (சன்மானமில்லாமல்?)  வேலஸிடம் சம்மதம் பெற்று வந்து விட்டார்.)  
ஷேக்ஸ்பியர்  எழுதிய நாடகங்கள் சிலவற்றைவிட அவரைப் பற்றிய எழுதப்பட்ட வரலாறுகள் அதிகப் பிரபலமாகிவிட்டன. இத்தனைக்கும் அவரது வாழ்க்கை வரலாறு முழுமையாக இல்லை. அவர்  சுயசரிதமும் எழுதவில்லை. ஏன், அவர் பெயரைச் சரியாக எழுதுவது பற்றியே யாருக்குமே    தீர்மானமாகத்  தெரியவில்லை. அவரது கையெழுத்து ஐந்தோ ஆறோதான் இருக்கிறதாம். அவற்றிலும் வெவ்வேறு ஸ்பெல்லிங்.
* ஷேக்ஸ்பியரின் மனைவி அவரை விட 8 வயது மூத்தவர்.
வீட்டு வாசலில் சாணம் கொட்டி வைத்ததற்காக அவருடைய அப்பாவிற்கு  ஒரு ஷில்லிங் அபராதம் விதித்ததாம் முனிசிபல்  நிர்வாகம்.
* ஷேக்ஸ்பியருக்கு ஒரு பெண், 2 பிள்ளைகள் (இரட்டைக் குழந்தைகள்
* உலகில்  அதிகமான (ஆங்கிலப்) பொன்மொழிகளைத் தந்திருப்பவர்  ஷேக்ஸ்பியர். (சுமார் 33 ஆயிரமாம்). 
(அடுத்ததாக பைபிள் (25,000). மூன்றாவது: அலெக்சாண்டர் போப் (15000) என்கிறார்கள்.)
சமீபத்தில் BILL BRYSON  எழுதிய ஷேக்ஸ்பியர் வரலாறு பத்தகத்தைப் படித்தேன்.  ‘ஷேக்ஸ்பியர் பற்றி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வந்த பின்பு நம்மால் என்ன புதிதாக எழுதமுடியும்?’. என்று என்னையே நான் கேட்டு கொண்டு எழுதுகிறேன்’ என்று துவங்கி எழுதியுள்ளாார். நிறையத் தகவல்களைத் திரட்டி புத்தகம் மிக மிகப் பிரமாதமாக எழுதி இருக்கிறார்.  ஏராளமான,  சுவையான தகவல்கள் அதில் இருக்கின்றன .  தனிப் பதிவாகப் பின்னால் போடுகிறேன்.  இப்போது இங்கே ஒன்றிரண்டு தருகிறேன்.
* ஷேக்ஸ்பியரை பற்றிய புத்தகங்கள் மட்டும் வாஷிங்டனில் உள்ள  LIBRARY OF CONGRESS-ல் ஏழாயிரம் இருக்கின்றன.
இடைச் செருகல்: இரண்டு வருஷத்திற்கு முன்பு  பத்திரிகையில் ஒரு சுவையான கட்டுரை வெளியாயிற்று. ஷேக்ஸ்பியரின் கையெழுத்தை ஒரு பத்திரத்தில் பார்த்த பதிவு அலுவலக ஊழியர் ஒருவர், அவர் மாதிரியே எழுதிப் பழகி ஒரு முழு நீள நாடகத்தை எழுதிவிட்டார். ஏதோ  பழைய ரிகார்ட் ரூமில் கண்டெடுத்தாகக் கூறி வெகு நாள்பலரை ஏமாற்றிக் காசு பார்த்தராம்.  (பின்னால் அவரே இந்த அனுபவங்ளைப்  CONFESSIONS OF  WILLIAM HENRY IRELAND' என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதிவிட்டார்!)
*                    *          *
வாழ்க்கை வரலாறு என்னும் போது
  ஆபிரகாம் லிங்கனைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.  இதுவரை 
அவரது வாழ்க்கை வரலாறு உட்பட அவரை சம்பந்தமான புத்தகங்கள் 16000  வெளியாகி உள்ளனவாம். வாஷிங்டனில் உள்ள   மியூசியத்தில், கிட்டத்தட்ட எட்டாயிரம் புத்தகங்களை அடுக்கி, சுமார் 35 அடி உயரத்திற்கு புத்தகத் தூண் அமைத்திருக்கிறார்கள். 
சென்ற ஆண்டு கூட லிங்கன் படம் ஒன்று வெளியாயிற்று. அதில் லிங்கனாக நடித்தவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
*          *
தலைப்புகள் சிப்ஸ்

* ஹிட்லரின் /  MEIN KAMPF' ( ’என் போராட்டங்கள்’) புத்தகம் மிக பிரபலமானது. அதற்கு முதலில் ஹிட்லர் வைத்த தலைப்பு: பொய், முட்டாள்தனம், கோழைத்தனம் ஆகியவைகளுக்கு எதிராக என் நாலரை வருடப் போராட்டம் (Four and a Half Years (of Struggle) Against Lies, Stupidity and Cowardice). இந்த தலைப்பில் புத்தகம் வெளிவந்திருந்தால் பிரபலமாகி இருக்குமா?
 * நாவலின் கதாநாயகி PANSY யின் பெயரை தன் 1000 பக்க புத்தகத்திற்குத் தலைப்பாக வைத்தார் மார்க்கரெட் மிட்செல். பாபா ப்ளக் ஷீப் என்றும் வைக்க யோசித்தாரம். கடைசியில் நாவலின் முக்கியமான இடத்தில் கதாநாயகி பேசிய ஒரு வரி அவருக்குப் பிடித்தது. அதையே தலைப்பாக வைத்து விட்டார். அது” GONE WITH THE WIND. கிட்டதட்ட 3 கோடி காபிகள் விற்றுள்ளனவாம்.
 

6 comments:

  1. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அடடா.... எத்தனை எத்தனை தகவல்கள்......

    ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. Our days are not the same without reading your posts. Waiting for a new one for nearly 2 weeks. I wish you find time and are in good health to continue posting as frequently as possible. Thank you, - R. J.

    ReplyDelete
  4. Thank you for your comments.I am honoured by such comments. The point is though I have many posts almost ready (and many more on the anvil), keying the text takes lot of time. I will try to post as freqiuently as possible.-

    ReplyDelete
  5. Thank you Sir. We will wait till you can post them one by one. - R. J.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!