June 13, 2011

புதுக்கணக்கு -கடுகு

  இன்று புதுக் கணக்கு என்ற பெயரில் புதிய கணித முறை வந்திருக்கிறது.  என்னைக் கேட்டால் கணித முறையில் மேலும் சீர் திருத்தம் செய்ய நிறைய இடம் இருக்கிறது என்பேன்.  யதார்த்தமாக அமைக்கவும் வேண்டும்.  மாணவர்கள், உலகின் உண்மை நிலைகளை உணர முடியாதபடி கணக்குகளை அமைக்கவோ, விடைகளைக் கண்டு பிடிக்க முயலவோ கூடாது.  சில உதாரணங்களைப் பார்ப்போம்.

      ""நாலு பேர் ஒரு வேலையை முடிக்க இருபது நாட்கள் ஆகும் என்றால் 
16 பேர் அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?''  இது ஒரு கணக்கு.
      இதற்குச் சரியான விடை 5 நாட்கள் என்று ஆசிரியர் சொல்லுவார்.  தவறு என்கிறேன் நான்.  16 பேர் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்முதலில் யூனியன் தொடங்குவார்கள். யூனிபாரம், போனஸ், ஊக்க போனஸ், வீட்டு வசதி, மருத்துவ வசதி என்று கேட்பார்கள்.  இரண்டாவது நாளிலிருந்து வேலை நிறுத்தம் செய்வார்கள்.  ஒரு வாரம் வரை முதலாளி தாக்குப்பிடித்து விட்டு, கடைசியில் இறங்கி வருவார்.  அதன் பிறகு வேலை மறுபடியும் துவங்கும்.  லீவு வசதி சலுகை இருப்பதால் நாலு பேர் மூன்று நாள் லீவில் போவார்கள்.  லேட்டாக வேலைக்கு வரும் பறிப்புரிமையும் கிடைத்துவிடும்.  இதன் காரணமாக வேலை ஆமை வேகத்தில் நடந்து 37 நாட்களில் முடியும்.  இதுதான் உண்மையான (சரியான) விடையாக இருக்க, ஆசிரியர் 5 நாட்கள் என்று சொல்லித் தருவது அபத்தமல்லவா?
--------------
      "ஒரு பொருளை நூறு ரூபாய்க்கு வாங்கியவன் பத்து சதவிகிதம் நிகர லாபம் பெறுவதற்கு என்ன விலையில் அதை விற்க வேண்டும்?'' என்ற கணக்குக்கு இந்த ஆசிரியர்கள் 110 ரூபாய் என்று சொல்லித் தருவார்கள்.
      அவன் 110 ரூபாய்க்கு விற்றால் சேல்ஸ் டாக்ஸ் இன்ஸ்பெக்டர், கார்ப்பரேஷன் சூபர்வைசர், ஹெல்த் ஆபீசர், பீட் கான்ஸ்டேபிள் இவர்களுக்கு எல்லாம் கொடுத்தது போக எண்பது ரூபாய் கூட நிற்காது.  ஆக நிகர நஷ்டம் 20 ரூபாயாகும். அவனுக்குப் பத்து சதவிகிதம் லாபம் வரவேண்டுமானால் 140 ரூபாய்க்கு விற்க வேண்டும். இதுதான் சரியான விடை.
------------
      "ஒரு லேவாதேவிக்காரர் ஆயிரம் ரூபாயை 20 சதவிகித வட்டிக்கு கடன் கொடுத்தால் மூன்று வருடத்துக்குப் பிறகு அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்'' என்று ஒரு கணக்கு, இதற்கு விடையைக் கண்டு பிடிக்கக் கணக்குத் தெரியவே வேண்டாம்.  பணம் கடன் கொடுத்தால் வட்டியும் வராது, முதலும் வராது என்கிற யதார்த்த உண்மையை அல்லவா ஆசிரியர் போதிக்க வேண்டும்!
---------
      "இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறைவான தூரமுள்ள பாதை எது?'' என்று ஆசிரியர் மாணவனைக் கேட்கிறார்.
      பையன் விழித்துவிட்டு "அரை வட்டமாக வரும் பாதை' என்று சொல்கிறான்.
      "தப்பு. அந்தப் புள்ளிகளை இணைக்கும் நேர் கோடுதான்... இந்தச் சின்ன கணக்குக்கு விடை தெரியாதவன் நீ வாழ்க்கையில் எப்படிப் பொழைக்கப் போகிறாயோ!'' என்று அலுத்துக் கொள்கிறார்.
      உண்மையில் மாணவன் பிற்காலத்தில் நன்றாகத்தான் பிழைக்கப் போகிறான்.
அவனது அரை வட்டப் பாதை விடையைத்தான் தொழிலில் உபயோகித்து.  ஆம், பின்னால் அவன் ஆட்டோ ரிக் ஷா ஓட்டப்போகிறான்.
      சென்ட்ரலிலிருந்து எழும்பூருக்கு ராயபுரம் வழியாக 'மிகக் குறைவான தூரமுள்ள பாதையில்' போய் நிறையப் பணம் பண்ணும் "ஆட்டோ டிரைவராக' உயரப் போகிறான்.  ஆசிரியரோ அப்படியே "தப்பு விடை"யைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு ஆசிரியராகவே அவதிப்பட்டுக் கொண்டு இருக்கப் போகிறார்!   
இப்போது சொல்லுங்கள், புதுக் கணக்கையும் சீர்திருத்தம் செய்யவேண்டுமா, இல்லையா?

3 comments:

  1. உங்கள் கதையை படித்த பிறகு பத்தரிகைக்கு கதை எழதுவது தபாலில் கூடாது

    ReplyDelete
  2. super sir! Thanks for the post - SP

    ReplyDelete
  3. அருமையான போதனை.
    மிகவும் ரசித்தேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!