November 10, 2018

தப்புத் தபால் தலையும், கில்லாடி ஆசாமியும்!

      தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம்   பல நாடுகளில் நடக்கிறது. ஏன், ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது.  அலட்சியம்தான் காரணம். 
      ஒரு பெரிய பிரமுகரின் படத்தை ஒரு தபால் தலையில் வெளியிட்டார்கள். (எந்தப் பிரமுகர் எந்த நாடு என்பது முக்கியமல்ல.) அவர் மேஜை முன் உட்கார்ந்து எதையோ எழுதுவது போல் எடுக்கப்பட்ட படம் (அல்லது ஓவியம்). அச்சாகி தபால் தலை விற்பனைக்கு அனுப்பப்பட்டது.  சில நாட்கள் கழித்து அதில் ஒரு பெரிய தவறு இருப்பது தெரிய வந்தது. ஓவியம் வரைந்தவர், அவரது இடது கையில் ஆறு விரல்களைப் போட்டு விட்டார்! இதை ஒருவர் கூட கவனிக்கவில்லை!

 ஐ.நா சபையின் உறுப்பினராக இருந்த    டேக் ஹாம்மர்ஸ்ஷோல்ட் (DAG HAMMARSKJOLD)  காலமான பிறகு, முதலாம்  ஆண்டு நினைவு நாளன்று ( 23 அக்டோபர்,  1962 ) அவரை கௌரவிக்க நாலு சென்ட் தபால் தலையை அமெரிக்கா வெளியிட்டது. ஸ்டாம்பின் வடிவமைப்பு தயாரானதும், அந்த படத்தைப் பத்திரிகையில் வெளியிட்டு, இன்ன தேதியில் ஸ்டாம்பு வெளியிடப்படும் என்றும் அறிவித்து இருந்தார்கள்.  இளஞ்சிவப்பு வண்ண கலர் பேப்பரில் ஹாம்மர்ஸ்ஷோல்டின் படம் டிசைன் செய்யப்பட்டிருந்தது. 

சில நூறு தபால் தலைகளை  இளஞ்சிவப்புக்குப் பதில், மஞ்சள் கலரில் தவறாக அச்சகத்கதில்  அச்சடித்து விட்டார்கள். நல்லகாலம், எல்லா தபால் தலைகளையும் அடிப்பதற்கு முன் தப்பைக்  கண்டுபிடித்து விட்டார்கள். மீதி தபால் தலைகளைச் சரியான வண்ணத்தில் அச்சடித்தார்கள். 


சரியான கலரில், அச்சடிக்கப்பட்ட ஷீட்கள் விற்பனைக்கு  அனுப்பி விட்டார்கள். கவனக் குறைவால், தப்பு  கலைரில் அச்சடிக்கப்பட்ட சில ஷீட்கள் இவற்றுடன் கலந்துபோய்விட்டன. அதனால் தப்புக் கலர் ஷீட்கள் சில   விற்பனைக்கும்  போய் விட்டன.  

     தவறை யாரும் கண்டுபிடிக்கவில்லை. கலர் வித்தியாசத்தை யாரும் தப்பு என்று கருதவில்லை ஆனால் தபால் இலாகாவினரின் கவனத்துக்கு அது எப்படியோ வந்தவுடன் ஒரு காரியம் செய்தார்கள்.
     இந்த மாதிரி தப்புடன் அச்சடிக்கப்பட்ட தபால் தலைகளை,  பின்னால் எக்கசக்க விலை கொடுத்து ஸ்டாம்புசேகரிப்பவர்கள் வாங்குவார்கள். அந்த ஸ்டாம்பை வைத்திருந்தவருக்கு ஜாக்பாட்தான். இந்த வியாபாரத்தை முறியடிக்க ஒரு திட்டம் போட்டது தபால்துறை.   நாற்பது மில்லியன் தபால் தலைகள், வேண்டுமென்றே தப்புக் கலரில், அதாவது மஞ்சள் நிற வண்ண பேப்பரில் அச்சடிக்க நடவடிக்கை எடுத்தது,.  இப்படி அச்சடித்து, தபால் தலைகளை விற்பனை செய்து விட்டால், முதல் தின, தப்பு வண்ணத் தபால் தலைகள் தாரளமாக எல்லா தபால் நிலையங்களிலும் கிடைக்கும்; அதனால் யாரும் கொள்ளை விலக்கு விற்க முடியாது என்பது தபால் துறையின் கணிப்பு.!  
     நியூஜெர்ஸியில் உள்ள ஒருவர், தபால் துறை இப்படி அச்சடிக்கப் போகிறது என்று தெரிந்த உடனே, அதைத் தடுக்க வழக்கு போட்டார்.. ஆனால் வழக்கு போட்டு கோர்ட் விசாரணை ஆரம்பிப்பதற்குள் தபால் இலாகா ‘தப்புக் கலர்பேப்பரில் ஸ்டாம்புகளை அடித்து விட்டது.
      வழக்கு தொடுத்தவர் கில்லாடி. “என்னிடம் இருப்பதுதான் ஒரிஜினல் ‘தப்பு கலர் ஸ்டாம்புஎன்று அறிவித்ததுடன்  அவர் ஒரு சாமர்த்தியமான காரியமும் செய்தார்.  பின்னால் அடிக்கப்பட்ட தபால் தலைகள் ‘ஒரிஜினல்அல்ல. அது வேண்டுமென்றே தவறான கலரில் அச்சடிக்கப்பட்டவை என்று நிரூபிக்க அவருக்கு எளிதான ஒரு வழி புலப்பட்டது.
     ஸ்டாம்பு வெளியான தினத்தன்று இவர் தப்பு கலர் ஸ்டாம்புகளையும், முதல் நாள் கவர்களையும் வாங்கி,  அவற்றில்  ஸ்டாம்பை ஒட்டி, தபால் அலுவலகத்தின் தேதியிட்ட முத்திரையை போட்டுக் கொண்டார். இது ஸ்டாம்பு சேகரிப்பவர்கள் வழக்கமாக செய்வதுதான்.
     ‘பாருங்கள். 23-10-1962 ஸ்டாம்பு வெளியாயிற்று. அதே தேதி இந்த முதல் நாள் கவரில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டாம்பின் மீதுள்ள முத்திரையில் இருக்கிறது. என்னிடமிருப்பது தான் ‘ஒரிஜினல் தப்பு கலர் தபால் தலைஎன்று அறிவித்தார். தபால் துறையின் ‘பாச்சா’ அவரிடம் பலிக்க வில்லை. 
அவர்கள் தடுக்கின் கீழே நுழைந்தால், இவர் கோலத்திற்குக் கீழே நுழைந்த ஜெயித்து விட்டார்.
      அந்த நாலு-சென்ட் தபால்தலை 3500 டாலருக்கு விலை போயிற்றாம்!.

7 comments:

  1. நல்லா இருக்கு! அதிர்ஷ்டமும் அவர் பக்கம் இருந்திருக்கே! நாமெல்லாம் அப்படிச் செய்தால் நடக்குமா? சந்தேகமே! இதெல்லாம் அம்பேரிக்காவில் நடக்கும். :)

    ReplyDelete
  2. நம் நாட்டில் விசாரணை முடிவுக்கு வருவதற்குள் கேஸ் போட்டவர் ஆயுள் முடிந்து விடும்.

    ReplyDelete
  3. பல தவறுகளுக்கு அலட்சியமும் மெத்தனப் போக்கும் காரணம். இப்பொழுது இந்த நிலை பல இடங்களில்...

    தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  4. https://www.quora.com/How-do-I-use-punctuation-marks-like-the-period-the-comma-and-the-question-mark-in-Google-Voice-typing-English-India-on-Andriod

    ReplyDelete
  5. இன்றுதான் இடுகையைப் படிக்க நேர்ந்தது.

    லக்கும் சாமர்த்தியமும் இருந்தால் பணம் கொட்டும் என்று புரிகிறது.

    ReplyDelete
  6. இதையே வேண்டுமென்றே செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா? தனக்கு வேண்டியவர்களுக்குத் தெரிவித்து அந்தத் தபால் தலைகளையோ (அல்லது வேறு எதையோ) வாங்கி பணம் பண்ணுவதற்கு? இந்தியா என்றால் இந்த மாதிரி விஷயத்தில் கில்லாடிகளாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. <<<எந்த தப்புத் தபால்தலை ஷீட்கள் எங்கு போயிற்று என்று சுலபபத்தில் கண்டு பிடிக்க முடியாது. ஸ்டாம்ப் விற்பவர்கள் கூட மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ள முடியும். ஆனால் கொள்ளை விலயில் விற்க முடியாது. தப்புத் தலையாக இருந்தால் மட்டும் போதாது, அது RARITY-யாகவும் இருக்க வேண்டும்! -கடுகு.

    ReplyDelete

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!