December 20, 2011

சுவைகளில் நான் நகைச்சுவை -புதிய கீதை - பாகம்1

முன்னுரை
உலகில் உள்ள 732 கோடியே 76 லட்சத்து 13 ஆயிரத்து 768 ஜீவராசிகளில் -இந்தக் கணக்குத் தவறு என்று சொல்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம். வேண்டுமானால் நீங்களே எண்ணிப் பாருங்கள்! - இத்தனை ஜீவராசிகளில் சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் ஒருத்தன்தான். (யாரது அங்கே... ஆரம்பிச்சுட்டாரய்யா... ஆரம்பிச்சுட்டாரய்யா... என்று சொல்வது? அவரைக் கழுவிலே ஏற்றுங்கள்.)
நகைச்சுவை உணர்வைப் பற்றி பல மேதைகள் நிறைய கூறி இருக்கிறார்கள்.
மகாத்மா காந்தியின் பொன்மொழி மிகவும் பிரபலமானது. அது இங்கு தனியாகக் கொட்டை எழுத்தில் தரப்பட்டுள்ளது.
(எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்ச்சி இல்லாதிருந்தால் எப்போதோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.
-மகாத்மா காந்தி.)
நகைச்சுவை என்னும் வலை உள்ள இடத்தில் கவலையெனும் கொசுக்கள் உள்ளே நுழைய முடியாது.

*உடலுக்கும் உள்ளத்திற்கும் சிறந்த டானிக் நகைச்சுவை. மனச் சோர்வையும், மாற்ற வல்லது. வியாபாரிகளுக்கு அது மூலதனம். மக்களின் வாழ்க்கைச் சுமைகளை லேசாக ஆக்கக் கூடியது. மன அமைதிக்கும் நிறைவுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் விரைவுப் பாதை.  .-கிரின்பில் க்ளெய்ஸர்.

*பகுத்தறிவும் நகைச்சுவை உணர்வும் வேறுபட்டவை அல்ல. அவைகள் செல்லும் வேகம்தான் வேறு வேறு. குதித்துத் 
துள்ளியாடும் பகுத்தறிவு தான் நகைச்சுவை. -வில்லியம் ஜேம்ஸ்.
*நகைச்சுவை மனித குலத்திற்குக் கிடைத்த மாபெரும் உரம்! -மார்க் ட்வெய்ன்.
*வாழ்க்கை என்றும் கம்பி மீது தடுமாறாமல் நடந்து செல்வதற்கு உதவுவது நகைச்சுவை என்னும் கம்புதான். -வில்லியம் ஆர்தர் மார்ட்.

நகைச்சுவையில் எத்தனையோ வகைகள் உண்டு. அச்சில் வரும் நகைச்சுவையை பேச்சில் கூறுவது எளிதல்ல. அதுவும் படங்களுடன் வரும் நகைச்சுவையை படத்தைப் பார்த்தபடியே படித்தால்தான் அவை சிரிப்பு உண்டாக்கும். (ஆனால் பல பத்திரிகைகளில் படங்களுடன் வரும் ஜோக்குகளில் படம் ஒன்றும், ஜோக்குகளுக்கு உதவுவதில்லை. ஜோக்கில் வரும் வசனங்களில் படங்கள்தான் நகைச்சுவையை மிளிரச் செய்ய வேண்டும்.)
பேசும் போது கூறும் நகைச்சுவையில் பஞ்ச் லைன்தான் முக்கியம். ஜோக்ஸை விட ஜோக்கைச் சொல்வதில்தான் இருக்கிறது சூட்சுமம். பேசும்போது சரளமாகச் சொல்வதற்குப் பயிற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ அப்போது தான் தோன்றிய ஜோக் மாதிரி சொன்னால் சிறப்பு அதிகம்.
ஜோக்கில் எல்லாம் புதிய ஜோக்தான்.  .
 
2009 ஆண்டில் உலகின் மிகச் சிறந்த (!)  10 ஜோக்குகளை  ரீடர்ஸ் டைஜஸ்ட் (அமெரிக்கப் பதிப்பில்) மே 2009 இதழில் போட்டிருந்தார்கள். எல்லாமே பழைய ஜோக்குகளாகத்தான் எனக்கு  இருந்தன. காரணம் நான் ஆயிரக்கணக்கான ஜோக்குகளைப் படித்திருப்பதுடன் பலவற்றை நினைவிலும் வைத்திருக்கிறேன். அந்த ஜோக்கைப் படிக்காதவர்களுக்கும், படித்து மறந்து போயிருப்பவர்களுக்கும் அது புதிய ஜோக்காகத்தன் இருக்கும். 

ஆகவே, எல்லாரும் தாங்கள் படித்த ஜோக்குகளை மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு, உற்சாகமாகச் சொல்ல வேண்டியது அவசியம். அது மட்டுமல்ல, சொல்லும் போது நீங்களே ரசித்துக் கொண்டு சொல்ல வேண்டும். முதன்முதலாகச் சொல்வது போல் ரசனையுடன் சொல்வது அவசியம். ஐயோ, இந்த ஜோக்கை இதற்கு முன் பலர் படித்திருப்பார்கள் அல்லது கேட்டிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் ஜோக் சரளமாக சொல்ல வராது. ஜோக்கை விட இந்த நினைவுதான் உங்கள் மனதில் இருக்கும்.
*************
இப்போது சில புதிய ஜோக்குகள்!
*************
*வாக்கிங் போய்க் கொண்டிருந்த ஒருவர், ஒரு வீட்டு வாசலில் இருந்த அறிவிப்பைப் பார்த்தார். பேசும் நாய் விற்பனைக்குஎன்று எழுதி இருந்தது.
வியப்பு தாளவில்லை. உள்ளே போய் விசாரித்தார். நாயைக் கொண்டு வந்தார் அதன் சொந்தக்காரர்.
ஜிம்மி... உன்னைப் பற்றி இவருக்குச் சொல்”  என்றார்.
 ”அது பெரிய கதை. நான் இராக் யுத்தத்தின் போது இரண்டு வருஷம் உளவாளியாக இருந்தேன். பிறகு ஆல்ப்ஸ் மலையில் கேன்டீன் நடத்தினேன். இப்போது வயதாகி விட்டதால் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு பத்திரிகைகளைப் படிக்கிறேன்.”
அப்படியா... கிரேட்! ஆமாம் சார். இவ்வளவு திறமை உள்ள நாயை ஏன் விற்கிறீர்கள்?” என்று கேட்டார்.
திறமையா? மண்ணாங்கட்டி! சரியான சோற்றுத் தடியன். வாயைத் திறந்தால் பொய்தான். அவன் சொன்ன மாதிரி எதையும் செய்யவில்லை என்றார்.
* * *

November 28, 2011

எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் -கடுகு

"எட்டுக்குமேல் எப்போதும் வேண்டாம்."-  இப்ப்டி ஒருதலைப்பில் ஒரு நகைச்சுவைக் கதை வேண்டும் என்று கல்கியிலிருந்து ஒரு சமயம் கேட்டார்கள்.  அப்போது எழுதி அனுப்பிய  கதை
 =====================

"எட்டுக்குமேல் எப்போதும் வேண்டாம்.
 இந்த வாக்கியத்தைச் சொல்லிவிட்டு மௌனமாகிவிட்டார்  ஜோதிடப்புலி, ஆரூட சிங்கம், நியூமராலஜி நரி, கைரேகைக் கரடியான மூலைக்கொத்தளம் மன்னாரு ஜோதிடர்.
பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டு அவருக்கு முன்பு அமர்ந்திருந்த அஷ்டபுஜத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
நூற்றியொரு ரூபாய் கொடுத்து ஆரூடம் கேட்க வந்திருந்தார். ஒரு வாக்கியம் மட்டும் சொல்லிவிட்டுச் சும்மா இருக்கிறாரோ ஜோதிடர் என்று யோசித்தபடியே இருக்க, ஜோதிடரின் ஒரு சிஷ்யகோடி, "அவ்வளவுதான்! இனிமேல் ஒண்ணும் வாக்குலே வராது. சுவாமி மௌனத்தில் போய்விட்டார்" என்றார்.
ஆறு மாதம் காத்திருந்து அப்பாயிண்மென்ட் வாங்கி, சிபாரிசு பிடித்து நூற்றியொரு ரூபாய் கொடுத்து- அல்லது அழுது- ஜோதிடம் கேட்க வந்தால் ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட்டால் எப்படி? அட்சர லட்சம் என்பது மாதிரி அல்லவா இருக்கிறது!
திடீரென்று அஷ்டபுஜத்துக்குச் சந்தேகம் வந்தது. `எட்டுக்கு மேல் வேண்டாம்' என்று சொன்னாரா, ஏட்டுக்கு மேல்  வேண்டாம் என்று சொன்னாரா என்று சந்தேகம் தோன்றியது. காரணம் அஷ்டபுஜம் சாதாரண கான்ஸ்டபிள். அதுவும் கொத்தவால் சாவடி, சினிமாத் தியேட்டர் போன்ற இடங்களில் இல்லாமல்-- `வறண்ட' பிரதேசமான பெசன்ட் நகர் பகுதியில் டியூட்டி! விரைவில் `ஏட்டு' ஆகப் பிரமோஷன் வரக்கூடும். `அதற்கு மேல் பிரமோஷன் வந்தால் விட்டுவிடு' என்று ஜோதிடர் சொல்கிறாரா? சப் இன்ஸ்பெக்டர் மாதிரி உத்தியோகத்தில் ஆபத்துக்களும் அதிகம் என்பதால் சொல்கிறாரா? - புரியவில்லை.
வீட்டுக்கு வந்தார். சடாரென்று அவர் மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. வீட்டு நம்பர் ஒன்பது! ஆகா! எட்டுக்கு மேல் உள்ள நம்பர் வீடு... அதனால்தான் நமக்கு அதிர்ஷ்டம் இல்லையோ!
வீட்டுக்குள் நுழைந்ததும் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டினார். அப்போது அவரது ஜேபியிலிருந்து ஒரு லாட்டரிச் சீட்டு விழுந்தது. "ஹூம், நாமும் லாட்டரி டிக்கட் வாங்கிட்டுதான் இருக்கோம். ஒரு தபா கூட பரிசு விழுறதில்லை' என்று தமக்குள் சொல்லிக் கொண்டே சீட்டை எடுத்துப் பார்த்தார். `99999' என்ற எண் சீட்டு அது. ஒன்பது என்றால் அதிர்ஷ்டம் என்று ரேஸ் பிரியர்கள், சீட்டுப் பிரியர்கள் போன்ற பல `சூது விற்பன்னர்கள்' சொல்லி இருந்ததால் இந்த சீட்டை வாங்கியிருந்தார். அஷ்டபுஜம் என்ற தமது பெயரைக் கூட நவமணி, நவரத்தினசாமி என்று மாற்றிக் கொள்ளலாமா என்று சில சமயம் யோசித்தும் இருக்கிறார்!
=          =                     =
"என்னங்க... எந்திரிங்க.. தந்திகாரு வந்திருக்காரு இன்னமோ தந்தியாம்" என்று சொல்லிக் கொண்டே அஷ்டபுஜத்தின் மனைவி அவரை எழுப்பினாள்.
"தந்தியா.. இன்னாட இது?" என்று கேட்டபடியே தமது வயதான உறவுக்காரர்கள் எல்லாரையும் மனசில் வீடியோ போட்டு பார்த்தார்.
தந்தியை வாங்கிப் பிரித்தார். அடுத்த செகண்ட் தமது ஐம்பத்தெட்டு இன்ச் தொப்பையைத் துக்கிக் கொண்டு `ஹையா' என்று குரல் கொடுத்தபடியே குதித்தார் -இருந்த இடத்திலேயே.
"என்னங்க.. இன்னா ஆச்சு உங்களுக்கு.. அடி மாரியாத்தா.. உனக்கு கூழு வாக்கறேன்... இவருக்கு என்னவோ கிலி புடிச்சிக்கிச்சே" என்று அம்புஜம் அலறினாள்.
"அடியே ஒப்பாரி வெக்காதே. அய்யா இனிமே பாரி. வாரி வாரி வழங்கப் போற பாரி.. தந்தி இன்னாத் தெரியுமா? உல்டா பிரதேஷ் லாட்டரியிலே எனக்கு - மனசை தெகிரியமா வெச்சுக்கோ-  எனக்கு ஐம்பது லச்சம் வுயுந்திருக்குது.. ஐம்பது லட்சம் அம்புஜம்...
"என்னது அம்பது லட்சமா?.. சரியாப் பாருங்க அம்பதா ஒம்பதா? அவசரத்திலே 41 லச்சம் போயிடப் போவுது யார் வீட்டு பிள்ளை இல்லாத சொத்து?"
மறுநாள் தமிழ் தினசரிகள் எட்டுக்காலம் தலைப்பில் "ஏழை போலீஸ்காரருக்கு ஐம்பது லட்சம் பரிசு" என்று பல ஆச்சரியக்குறிகள் பின்தொடரச் செய்தி வெளியிட்டிருந்தன. அதன் பிறகுதான் அஷ்டபுஜத்திற்குத் தனக்கு அடித்த அபார அதிர்ஷ்டம் உறுதியாயிற்று. அந்த `யோகம்' அடிச்ச பிறகு பேரையும் நவரத்தினசாமின்னு மாற்ற முடிவு செய்தார் அஷ்டபுஜம்.
செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி பத்திரிகையில் அறிவிப்புக் கொடுத்து நவரத்னசாமி ஆனார்- முன்னாள் போலீஸ்காரரும் இன்னாள் லட்சாதிபதியுமான முன்னாள் அஷ்டபுஜம்!
=                  =                        =
பெயரை மாற்றிக் கொண்ட வேளை அதிர்ஷ்ட தினமாக அமைந்தது.
அவர் இருந்த வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய பாக்டரியை ஏற்படுத்தப் போவதாக அரசாங்க அறிவிப்பு வந்ததால், மனைகள் விலை சடசடவென்று ஏறத் தொடங்கின. பம்பாயிலிருந்து வந்த ஒரு சேட், நவரத்னசாமியுடன் பார்ட்னராகச் சேர்ந்து அவர் வீட்டு மனையில் ஒரு நட்சத்திர ஓட்டலைக் கட்ட முன் வந்தார்.
"இந்த மனை சின்னதாச்சே எப்படிங்க சேட் ஓட்டல் கட்ட முடியும்" என்று ந.சாமி கேட்டார்.
"ஒசரமாக் கட்டிப்பிட்டாப்  போச்சு. மேலே ஒரு ரிவால்விங் ரெஸ்ட்ராண்ட் சும்மா ஏழெட்டு மாடி கட்டிப்பிடலாம். நல்லா பிசினஸ் ஆவும். மெயின் ரோடுல உங்க வீடு இருக்கிறதும் அதிர்ஷ்டம்" -- சேட் போட்ட சோப்பில் நவரத்தினசாமி கரைந்து போனார்.
லாட்டரிப் பணம் செங்கல்லாகவும் சிமெண்ட்டாகவும் இரும்பாகவும் மாறி அவரது வீடு இருந்த இடத்தில் கட்டடம் எழும்ப ஆரம்பித்தது.
"சேட்.. இன்ஜினியரு சொல்றாரு எட்டு மாடி கட்டறதாக.. எனக்கு எட்டு ஆவுறதில்லை` ஒன்பதாகக் கட்டிப்பிடலாம்."
”சரி.. செஞ்சுடலாம்.”
"
கடைசி மாடியின் ரூஃபிங் போட ஜல்லியும் சிமெண்ட்டும் டன் டன்னாக மேலே ஏறிக் கொண்டிருந்தன.
திடீரென்று ஸெண்டரிங் பலகைகள் சரிய, ரூஃப் டாப்பில் இருந்த கலவைகள் மளமளவென்று விழ, அந்த அதிர்ச்சி வேகம் தாளாமல் கட்டடமே ஒரு கண் இமைக்கும் நேரத்தில் ஏகப்பட்ட சடபுட சப்தத்துடன் கன்னா பின்னாவென்று குப்பலாக இடிந்து விழுந்தது!
இன்ஜினீயர் கட்டடம் `நிக்குமா' என்று பார்க்காமல் நமக்கு எவ்வளவு `நிக்கும்' என்று மட்டும் கணக்குப் பார்த்ததில் வந்த வினை.
ஒன்பதாவது மாடியே கட்டடத்திற்கு வினையாக வந்தது. நவரத்னசாமியின் லாட்டரிப் பரிசுப் பணம் நிமிஷத்தில் தவிடு பொடியாகியது!
ஈரத் துணியைத் தலையில் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த நவரத்னசாமியின் காதில் அசரீரிக் குரல் கேட்டது. "எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்."
அடாடா! மன்னாரு எவ்வளவு பெரிய ஜோசியர். எட்டாவது மாடிக்கு மேல் கட்டாதே என்று அவர் சூசகமாகச் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் போனோமே என்று நவரத்னசாமி எட்டுக் கட்டைக் குரலில் ஒப்பாரி வைக்க ஆரம்பித்ததார்!

( தயவு செய்து பின்னூட்டம் போட்டு என்னைக் கிழிக்காதீர்கள்!)

November 16, 2011

கமலாவும் தங்கவேட்டையும் -கடுகு

கேட்டை, மூட்டை, செவ்வாய் ஆகிய மூன்றின் கலவையான என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சு - (ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்...... இந்த கே.மூ.செ அடைமொழிகள் என் அருமை மனைவியைக் குறிக்காது; அவளின் தம்பி தொச்சுவைக் குறிக்கும்! )-  என் வீட்டுக்கு வந்த போது என் இடது கண், இடது தோள், இடது காது, இடது கை, இடது பக்கம் இருக்கும் இதயம் எல்லாமே ஆயிரம் வாலா சரவெடியாய்ப் படபடத்தன!

கமலாவை நான் கல்யாணம் பண்ணிக் கொண்டபோது, சீதனமாக நிறையக் கொடுத்தார்கள். அத்தோடு இலவச இணைப்பாக தொச்சுவையும் சேர்த்துக் கொடுத்து விட்டார்கள். அவன் பின்னாளில் அங்கச்சியைக் கல்யாணம் செய்து கொண்டு தனியாகப் போய்விட்டாலும், அவ்வப்போது என் வீட்டிற்கு வந்து தன் தொப்பை, கைப்பை இரண்டையும் நிரப்பிக் கொள்வான். தாய்ப்பாசமே உருவான என் மாமியாரும், சகோதர பாசத்தை உருக்கி வடிவமைக்கப்பட்ட என் மனைவி கமலாவும்,  தொச்சு வரவேற்பு கமிட்டி என்ற நிரந்தர அமைப்பை நிறுவி, அவனுக்கு ராஜோபசாரங்கள் செய்வது பற்றி விவரமாகக் கூறினால், அது அபசாரம் ஆகிவிடும்.
சரி விஷயத்துக்கு வருகிறேன். “தொச்சு, என்னப்பா சமாசாரம்?” என்று கேட்டேன்.
“தொச்சுவா? வா... வா!” என்று மதுரை மணியின் ‘கந்தா வா... வா’ பாணியில் கமலாவும் மாமியாரும் அவனை வரவேற்றார்கள்.
“அத்திம்பேர்... ஒரு பிரமாதமான ஐடியாவோட வந்திருக்கேன்!”
“ஓஹோ...ஐடியா ஓட, நீ மட்டும் தனியா வந்திருக்கியா?” என்றேன் குதர்க்கமாக.
“கொன்னுட்டீங்க அத்திம்பேர்! எப்படித்தான் சட் சட்னு இப்படிப் புகுந்து விளையாடறீங்களோ!”
‘பெரிதாக அஸ்திவாரம் போடுகிறான்; சுதாரி!’ என்று உள்ளுணர்வு சொல்லியது. அதன் காரணமாக, வயிற்றில் புளி கரைத்தது. இப்படி புளி கரைக்கும் உணர்வு, பின்னால் என் பணம் கரையப்போகிறது என்பதற்கான அறிகுறி!
“வீட்டுக்கு வந்தவனை ‘வாடா உட்காரு! ஒரு கப் காபி சாப்பிடறியா?’ என்று கேட்க வேண்டாம்... இப்படி மட்டம் தட்டிப் பேசாமல் இருக்கலாம்” என்று நொடித்தாள் கமலா.
“காபிக்கு என்ன அவசரம் அத்திம்பேர்? உங்களுக்குத் ‘தங்கப் பானை’ தெரியும்தானே?”

“தங்கைப் பானை, அக்கா பானை... ஒரு மண்ணும் தெரியாது!” என்றேன்.
“சொல்லுடா... டி.வி.நிகழ்ச்சி ‘தங்கப்பானை’ தானே, நம்ம ஜிகினாஸ்ரீ நடத்தற நிகழ்ச்சிதானேடா? இப்ப என்ன அதுக்கு?” என்றாள் கமலா.
“அதேதான்! அதுக்கு எழுதிப் போட்டேன். வருகிற வாரம் வரச்சொல்லி இருக்காங்க. போட்டியிலே கலந்துக்கச் சொல்லியிருக்காங்க.  நீ, அத்திம்பேர்,அங்கச்சி  மூணு பேரும் போட்டிக்குப் போயிட்டு வாங்க...!”
“நான் எதுக்கு? இதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க போய் பரிசு, பணம் எல்லாம் ஜெயிச்சுண்டு வாங்க...!” என்றேன்.
“ஜெயிச்சுண்டு  வந்து அப்படியே இவர்கிட்ட கொண்டு வந்து கொடுத்தால், அக்காவுக்குப் பொங்கல், தீபாவளி, மதர்ஸ் டே, சிஸ்டர்ஸ் டே, காஃபிடேன்னு பாத்து பாத்து அனுப்புவார். ....குழந்தை வேலை மெனக்கெட்டு பதிவு பண்ணிட்டு வந்து கூப்பிடறான். இவர்   ஆயிரம் பிகு பண்றார்!”
“விடுக்கா...! அத்திம்பேர் வரலைன்னா அவரை டிஸ்டர்ப் பண்ணாதே! நீ, அங்கச்சி, நான் மூணு பேரும் போகலாம். நீதான் லீடர்!”
“சரிடா! பரிசு கிடைச்சா சந்தோஷம். இல்லாவிட்டாலும் டி.வி.யில நாம வந்ததே சந்தோஷம்னு இருந்துட்டா போச்சு...!”
“ஆனா, ஒரே ஒரு பிரச்னைக்கா!”
“என்னது?”
“டி.வி.ஷோவுக்கு வர்ற ரெண்டு பெண்களும் ஒரே மாதிரி புடவை கட்டிண்டு வரணுமாம்...”
இதைத் தொடர்ந்து என்னென்ன வசனங்கள் வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, வருமுன் காப்போனாக, “அதுக்கென்ன... இரண்டு புடவை வாங்கிட்டா போச்சு!” என்றேன்.
கமலா முகத்தில் ஆயிரம் வாட் பிரகாசம்! தொச்சுவின் முகத்தில் பத்தாயிரம் வாட் பிரகாசம்! என் மாமியார் முகத்திலோ, அரசியல் கட்சியின் மாநாட்டுப் பந்தல் போல் ஒளி வெள்ளம்!
“வாங்கறது வாங்கறோம். பட்டுப்புடவையாவே வாங்கிடலாம்! டி.வி. ஷோவுக்கு எடுப்பா இருக்கும். சரி தொச்சு...பரிசு கிடைத்தால், முதல் பரிசாக எவ்வளவு கிடைக்கும்?”
“டீமுக்கு ஒரு லட்சம் பரிசு ! நிகழ்ச்சி 100-வது நிகழ்ச்சியாம். அதனால பரிசு இன்னும் அதிகமாகக்கூட இருக்கும்கிறாங்க! சரி அக்கா, அங்கச்சியை எப்ப வரச் சொல்லட்டும்? புடவை வாங்கணுமே?” என்று கேட்டான் தொச்சு. சந்தடி சாக்கில் கந்தகப் பொடி வைப்பதில் மன்னன்!
“மத்தியானமே வரச் சொல்லேண்டா...!”
புடவைக் கடையில் கமலாவும் அங்கச்சியும் ஒரே மாதிரி இரண்டு பட்டுப் புடவை வாங்குவதற்குள் படுத்திய பாட்டை விவரிக்கலாம் என்றால், மூன்று மெகா சீரியல்களை ஒரே சமயத்தில் பார்ப்பது போன்று அழுகை அழுகையாக வருகிறது. ஆகவே தவிர்க்கிறேன்.

November 11, 2011

சில அரசியல் ஜோக்குகள்

 உலகில் சர்வாதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இல்லாமல் போய் விடலாம். ஆனால் அவர்களைப் பற்றி ஜோக்குகள் இல்லாமல் போகாது. (  ஒரு நகைச்சுவைப் புத்தகத்தைப் படித்தேன். எல்லாம் சர்வாதிகாரிகள் பற்றிய ஜோக்குகள்தான், கிட்டதட்ட 500 இருந்தன!)

ஒரு சர்வாதிகார நாட்டில் பார்க்கில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர்  ஏதோ சிந்தனையில் இருந்தவர்,. சட்டென்று, “ குப்பை..குப்பை” என்றார்.. அவரைப் பார்த்து மற்றவர் சொன்னார்:
``இதோ பாருங்கோ, நமது ஜனாதிபதியின் உரையைப் பற்றி பொது இடத்தில் அபிப்ராயம் தெரிவிப்பது தவறு.''
*
ஒரு  அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில் முழங்கினார் பெருமையாக. ``இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் நானேதான்'' கூட்டத்திலிருந்து ஒரு குரல்: `மன்னிப்பு ஏற்கப்பட்டது.'
*
ஒரு சர்வாதிகாரி பெரிய துணிக் கடைக்குச் சென்றார். விலையுயர்ந்த சூட் ஒன்று அவருக்குப் பிடித்திருந்தது. ``என்ன விலை?'' என்று கேட்டார். ``விலையெல்லாம் எதுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை'' என்று கடைக்காரர் குழைந்தார்.
``சேச்சே... இலவசமாக எதையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்'' என்றார்.
கடைக்காரர் உடனே, ``சரி, இதன் விலை இரண்டு ரூபாய்'' என்றார்.
சர்வாதிகாரி நாலு ரூபாயை அவரிடம் கொடுத்து, ``அப்படியானால் இரண்டு சூட் எடுத்துக் கொடு'' என்றார்.
*
ஹிட்லரைப் பற்றிய சில கேலி ஜோக்குகள் அவர் காதுக்கு எட்டின. யார் இந்த ஜோக்குகளை ஆரம்பித்து வைத்தவர் என்று கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அரும்பாடு பட்டு ஒரு முதியவரைக் கண்டுபிடித்து வந்து ஹிட்லரிடம் விட்டார்கள்.
``என்னய்யா, நீர்தான் என்னைப் பற்றி கேலி ஜோக்குகளைப் பரவ விடுகிறீரா? நான் இறந்தால் உலகம் முழுதும் கொண்டாடுவார்கள் என்கிற ஜோக் உங்களுடையது தானே?''
``ஆமாம்.''
``நான் ஆற்றில் மூழ்கிய போது ஒருவர் காப்பாற்றுகிறாராம். அவருக்கு நான் நன்றி தெரிவித்த போது, `நன்றி எதுவும் வேண்டாம். நான்தான் உங்களைக் காப்பாற்றினேன் என்று வெளியே யாருக்கும் சொல்லாமலிருந்தாலே பெரிய உதவியாயிருக்கும்' என்ற ஜோக்கும்...''
``ஆமாம். என்னுடையதுதான்.''
``இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு? நான் யார் தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமை படைத்தவன்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் என் வம்சம்தான் உலகை ஆளப் போகிறது என்பது தெரியாதா?''
``அய்யய்யோ, இப்போது நீங்கள் சொல்வதுதான் முதல்தர ஜோக்! ஆனால் இந்த ஜோக்கை நான் சொல்லவில்லை. இதுக்கு முன்னே நான் இதைக் கேட்டதுகூட இல்லை'' என்றார் அந்த முதியவர்.
*
சர்வாதிகாரிக்குப் பயங்கர கோபம் கேலி ஜோக்குகள் சொல்பவர்கள் மீது. ``இந்த மாதிரி யாராவது ஜோக் சொன்னால் அவனைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் நிறுத்துங்கள்'' என்று உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஒரு ஜோக் எழுத்தாளரைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.
சர்வாதிகாரியின் மாளிகைக்குள் நுழைந்த அவர், அதன் ஆடம்பர அலங்காரங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்.
அவரைப் பார்த்து சர்வாதிகாரி, ``என்ன, சாப்பிட்டு விடுவது போல் பார்க்கிறாய்?'' என்று கேட்டார்.
``பரவாயில்லை. நீங்கள் வசதியாகத்தான் இருக்கிறீர்கள.''
``அதற்கென்ன, பார்த்துக் கொண்டே இரு. இன்னும் இருபது வருஷங்களில் இந்த நாட்டில் உள்ள எல்லாரும் இப்படித்தான் இருக்கப் போகிறார்கள்'' என்றார்.
``ஆஹா, ஒரு புது ஜோக் எனக்குக் கெடைச்சுது'' என்றார் ஜோக் எழுத்தாளர்.
*
பயில்வான் போன்று இருந்த  ஒரு ஆசாமி, தெருவில் எதிரே வந்த நோஞ்சான் ஆசாமியின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
நோஞ்சான் திருப்பி அடிக்கத் தயங்கி, ``ஏ... என்னை நிஜமாக அடிச்சியா? இல்லை விளையாட்டா அடிச்சியா?'' என்று கேட்டான்.
``நிஜம்மாத்தான் அடிச்சேன். அதுக்கு என்ன?'' என்று கர்ஜித்தான் பயில்வான்.
``அதுதானே.கேட்டேன்.. ஆமா,.. எனக்கு விளையாட்டெல்லாம் பிடிக்காது. கெட்ட கோபம் வரும்...'' என்று சொல்லிக் கொண்டே நடந்தான் நோஞ்சான்.
*
பள்ளிக்கூட ஆசிரியை மாணவர்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ``அப்போது கடவுள் அங்கு தோன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் ரொட்டியும், வெண்ணெயும் கொடுத்தார்...'' என்றாள்.
ஒரு மாணவன், ``டீச்சர், கடவுள் என்பவர் கிடையாது என்று சர்வாதிகாரி நேற்றுகூட டி.வி.யில் சொன்னாரே'' என்றான்.
டீச்சருக்கு உதறலெடுத்தது. உடனே சமாளித்துக் கொண்டு, ``இது கற்பனைக் கதைதான். ரொட்டியும், வெண்ணையும் எங்கே இருக்கிறது நமது நாட்டில்? அதுபோல் கடவுளும் கற்பனைதான்'' என்றார்.

October 28, 2011

பாப்பாவுக்கு சில கதைகள்

இந்த வலைப்பூவில் குழைந்தகளுக்காக கதைகள் போடுவதில்லையே என்று  ஒருவர் எழுதி இருந்தார். அந்தக்  குறை யாருக்கும் இருக்க வேண்டாம் என்று  ’பாப்பாவுக்கு சில கதை'களை’ இப்போது தந்துள்ளேன்.
குறிப்பு: : To protect the innocent, I am withholding the name of the reader!

நத்தையின் கர்வ பங்கம்
.

ஒரு ஊரில் ஒரு நத்தை இருந்தது.உலகிலேயே மெதுவாக ஊர்ந்து செல்லும் ஜீவன் என்ற பட்டத்தை அது பெற்றிருந்தது.
என்னை விட மெதுவாக எவனாலும் போகமுடியாது" என்று ஜம்பம் அடித்துக்கொண்டிருந்தது.
ஒரு நாள்,  அது  குடியிருந்த மரத்திற்கு அருகில் நிறைய ஆட்கள் வந்து பூமியைத்தோண்ட ஆரம்பித்தார்கள். 'சர்க்கார் அலுவலகக் கட்டடம்' என்ற போர்டைப் போட்டார்கள். அங்கு பெரிய  கட்டடம் கட்டப் போகிறர்கள் என்று நத்தைக்குப் புரிந்து விட்டது. அதற்கு ஒரே குஷி.  கட்டடம் கட்டும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் தமாஷாகபொழுதுபோகும் என்று  எண்ணியது. சில நாள் கழித்து கட்டட வேலையும் ஆரம்பமாயிற்று.
செங்கல், மணல், கலவை ஆகியவற்றை சிற்றாட்கள் எடுத்து போவதை பார்த்தது. அப்போதுதான் அதன் கர்வத்திற்குப் பங்கம் ஏற்பட்டது. 'கட்டட சிற்றாட்கள் என்ற ஜீவராசிகளைப் பற்றி அறியாமலேயே ’நம்மை விட யாரும் மெதுவாகப் போகமுடியாது என்று நினைத்திருந்தோமே!' என்று மனதிற்குள் கூறிக் கொண்டது. அன்று முதல் அது ஜம்பம் அடித்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டது!

எல்லாம் நன்மைக்கே


ஒரு முயல் இருந்தது. அதற்குத் எப்போதும் தூக்கமே வருவதில்லை. இதனால் மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தது. "இது ஏதோ வியாதி. முதலில் டாக்டரிடம் போய்க் காட்டுங்கள்:" என்று திருமதி  முயல் சொல்லியது. டாக்டர் கரடியிடம் சென்று, தன் வியாதியைப் பற்றி முயல் சொல்லியது.
" பைத்தியக்காரா! தூக்கம் வராவிட்டால் என்ன? அதற்காகக் கவலைப்படுவார்களா? மருந்து சாப்பிடுவார்களா? தூக்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று  உலகில் பலர் ஏங்குகிறார்கள். இது வியாதியுமில்லை, ஒண்ணுமில்லை. அப்படியே வியாதி என்று நினைத்தால் 'எல்லாம் நனமைக்கே' என்று சும்மா இருந்துவிடு" என்று கரடியார் கூறினார்.


சில நாட்கள் கழித்து காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது..”ஓட்டப் பந்தயத்தில் என்னை ஜெயிக்க முடியாது" என்று முயல் சவால் விட்டது. பழைய பஞ்ச தந்திரக் கதையைப் படித்திருந்த ஆமை, "எங்கிட்டே உன் சவால் எல்லாம் நடக்காது" என்றது. " அப்ப்டியானால் பந்தயம் வைத்துப் பார்த்து விடுவோம்" என்றது முயல்.
பந்தயம் ஆரம்பமானது. முயல் சிட்டாய், 'ஜெட்' போல்  பறந்தது. வெகு தூரம் சென்று திரும்பிப் பார்த்தது. ஆமை வருகிற அடையாளமே இல்லை. 'சரி, சற்று நேரம் மரத்தடியில் தூங்கலாம்' என்று படுத்தது. தூக்கம் வந்தால்தானே,

October 18, 2011

அறுவை நேரம் ! (உங்களுக்கு முன்பே நான் சொல்லிவிட்டேன்!)


புள்ளிகள். -- ரிச்சர்ட் நிக்ஸன்

ஏழாவது பிரச்னை
அமெரிக்க உதவி ஜனாதிபதியா(1953-61) இருந்த  ரிச்சர்ட் நிக்ஸன்,  1962ல் ஒரு  புத்தகம் எழுதினார். அந்த புத்தகத்தின் தலைப்பு” ஆறு பிரச்னைகள்.
கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு  புத்தகக்கடையில் அந்த புத்தகத்தை விற்பனைக்கு வைத்தபோது,, நிக்ஸன் அங்கு வந்து,  புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுத்தர ஒத்துக் கொண்டார்..
புத்தகத்தைi வாங்கியவர்கள் அவரிடம் கையெழுத்து வாங்க வரும்போது அவர்களின் பெயரைக் கேட்டு, அதைப் புத்தகத்தில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டு வந்தார்.
அப்போது ஒரு இளைஞர் ,கையெழுத்துக்காக அவரிடம் புத்தகத்தைக் கொடுத்தார்.  அவரிடம் நிக்ஸன் “ உங்கள் பெயரைச் சொல்லூங்கள்” என்றார்.
அந்த இளைஞர் குறும்புடன் : ”என் பெயரைச் சொல்கிறேன்., ஆறு பிரச்னைகளைச் சந்தித்த உங்களுக்கு அது ஏழாவது பிரச்னையாகி விடும்?.. என் பெயர் STANISLAUS WOJECHLECHKI:”  என்றார்.
(1962-ம் ஆண்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் வந்த துணுக்கு!)

மீண்டும் மீண்டும் ஏன் அழவேண்டும்?


A wise man joke 

 A wise man once sat in the audience and cracked a joke..
all of them laughed like crazy
After a moment he cracked the same joke again &
a little less people laughed this time...

He cracked the same one again and no one laughed,
Then he smiled and said
"when you can’t laugh on the same joke again and again
then why do you keep crying over the same thing over and over again".
Forget the past and MOVE ON!

----------- 

October 12, 2011

வாழ்க பாரதியார்!

வாழ்க பாரதியார்!
 அன்றொரு நாள் நான் மகாகவி பாரதியின் பாடல்களை உரக்கப் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் என் நண்பரும் அரசியல்வாதியுமான திரு. அசமஞ்சம் என்னைப் பார்க்க வந்தார்.
      ""என்னய்யா படித்துக் கொண்டிருக்கிறீர்'' என்று கேட்டார்.
      ""மகா கவி பாரதியாரின் பாடல்களை இப்படிப் படிப்பது என் வழக்கம்.. இப்போது அவருடைய நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.''
      ""ஒரு பாட்டைப் படியேன்.''
      ""அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.  இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை...''
      ""பெர்மாதமா இருக்கே... இது போறும்பா.  இதை வச்சுக்கினு பாரதியார் புகழை நான் பரப்பிடுவேன்.  கூட்டத்துக்குக் கூட்டம் அவரைப் பத்திப் பேசறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனார் அசமஞ்சம்.  சொன்னபடியே அவர் எல்லாக் கூட்டங்களிலும் பாரதியாரைக் கொண்டு வந்தார்.
      அவர் கலந்துகொண்டு சில கூட்டங்களில் பேசிய உரைகளை இங்கு தருகிறேன்.

கோணி வியாபாரிகள் சங்கம்
      ''....எனக்கு முன்பு பேசியவர் "ஐயோ, பிளாஸ்டிக் பைகள் வந்து விட்டனவே... கோணி வியாபாரம் படுத்து விடுமா'' என்று கவலைப்பட்டார்.  பெட்ரோல்தான் பிளாஸ்டிக்குக்கு மூலப் பொருள்.  அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.  சணலோ ஆண்டவனால் தாராளமாகத் தரப்படும் செடி. 

புள்ளிகள்: குருஷ்சேவின் மனைவி


சரித்திரம் எப்படி மாறி இருக்கும்?

அமெரிக்க அதிபர் கென்னடி 1963-ல் சுடப்பட்டார். அ தற்குச் சில   வருஷங்களுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் கோர்பசேவிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார்: : "அதிபர் கென்னடிக்குப் பதிலாக குருஷ்சேவ் சுடப்பட்டிருந்தால் சரித்திரத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” 

ஆழ்ந்த யோசனை செய்து பதில் கூறும் பாவனையுடன் கோர்பசேவ் சொன்னார்: ”எனக்கென்னாவோ குருஷ்சேவின் மனைவியை அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் திருமணம் செய்து கொண்டிருப்பார் என்று தோன்றவில்லை!"

புள்ளிகள்: ருடால்ஃப் விர்ச்சோ

டாக்டர் பிழைக்க வேண்டுமே!
ருடால்ஃப் விர்ச்சோ (1821-1902) என்ற புகழ் பெற்ற ஜெர்மன் டாக்டரிடம் ஒருத்தர் மிகவும் சீரியஸாகக் கேட்டார்:” டாக்டர்.. எனக்கு ஒரு சந்தேகம். இந்த அப்பெண்டிக்ஸ் இல்லாமல் எல்லா மனிதர்களாலும் உயிர் வாழ முடியும், இல்லையா?

“அதில் சந்தேகமில்லை. அப்பெண்டிக்ஸ் இல்லாமல் எல்லா மனிதர்களாலும் உயிர் வாழ முடியும், ஒரு சிலரைத் தவிர!” என்று ருடால்ஃப்  சொன்னார்.

“ஒரு சிலரைத் தவிர என்றால், யார் அவர்கள்?” என்று நண்பர் கேட்டார்.

“அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்து சம்பாதிக்கும் டாக்டர்களால் மட்டும் உயிர் வாழ முடியாது!”

October 07, 2011

புவியை ஈர்த்த ஆப்பிள்

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத் தலைவர்   ஸ்டீவ் ஜாப்ஸ் (STEVE JOBS) அக்டோபர் 5’ம் தேதி இரவு காலமானார். மனித சமுதாயத்தின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த பல  மின்னணு சாதனங்களை தோற்றுவித்தவர். ‘அமெரிக்கன் ஜீனியஸ்’ என்று டைம் பத்திரிகை இவரை வர்ணித்துள்ளது.
ஸ்டீவ் அக்டோபர் 5.ம் தேதி இரவு காலாமானார்.  7’ம் தேதி அன்று கடைகளுக்கும் தபால் மூலம் சந்தாதாரர்களின் வீடுகளுக்கும் வந்த டைம் பத்திரிகை இதழ் கிட்டதட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் சிறப்பிதழ் என்று சொல்லும் அளவிற்கு அவரைப் பற்றி கட்டுரைகளையும் படங்களையும் போட்டு அசத்தியுள்ளது .அட்டையில் ஸ்டீவ் ஜாப்ஸின் படம்  ( அடடா, என்ன சுறுசுறுப்பு!)
.
 டைம் இதழில் கிடைத்த சில சுவையான தகவல்கள்:
டைம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வால்டர் ஐஸக்சன், சுமார் இரண்டு வருஷமாக ஸ்டீவ் ஜாப்ஸைப் பேட்டி கண்டு  ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறை இப்போது எழுதி முடித்திருக்கிறார், புத்தகமும் தயார். முன்னமேயே நிச்சயித்து இருந்தபடி அக்டோபர் 24’ம் தேதி புத்தகம் வெளியிடப்படுகிறது.

October 04, 2011

கோபி -- கேரக்டர்

புல்லாங்குழல் வித்வான் கோபாலன் என்னும் கோபிக்கு பெயர் பொருத்தம் அபாரம்! மனுஷனுக்கு எப்போது எதற்குத்தான் கோபம் வரும் என்பது தெரியாது. இவர் கோபமெல்லாம் தன் மனைவி, மக்களிடம் மட்டும் தான்! வீட்டை விட்டு வெளியே வந்தால் பரம சாந்த சொரூபி. மேடையில் உட்கார்ந்தால் இசை மன்னன் தான்!
கோபம் மட்டும் அவருடைய குறைபாடு அல்ல. தன் மனைவி, குழந்தை குட்டிகளின் நலனைப் புறக்கணிக்கும் அளவுக்கு, சொந்த சௌகரியம், சுகம் ஆகியவைகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் அளிப்பார்.
"ஊரெல்லாம் என்ன நல்ல பேர் இருந்து என்ன பிரயோஜனம்? வீட்டில் காலை வைத்தால் நரசிம்ம மூர்த்தி தான். "தோடியில் ஒரு கோடி காட்டும் போதே ஓடிப் போய் பாராட்டலாம்.' என்று சுப்புடு எழுதுகிறார். நீங்கள் உச்சி குளிர்ந்து போகிறீர்கள். இந்த தடவை நானே சுப்புடுவைப் பார்த்து சொல்கிறேன், உங்கள் குணத்தைப் பற்றி. அந்த அழகையும்தான் அவர் பத்திரிகையில் எழுதட்டுமே'' என்பாள் மனைவி.
"போய்ச் சொல்லேன்..  இன்னும் குடிகாரன், ஸ்திரீ லோலன், கடன்காரன், அப்பனைக் கொன்றவன், அண்ணன் வீட்டில் திருடியவன், குழந்தையின் கழுத்தை முறிக்கிறவன், கள்ளச் சாராயம் காச்சறவன் என்றெல்லாம் போய்ச் சொல்லு...... மூணு மணி நேரம் கச்சேரி பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தால் ஒரு கப் பால், காபி என்று ஒரு மண்ணும் கிடையாது.....

September 29, 2011

ஒரு தானத்தின் கதை


    செப்டம்பர் 11’ம் தேதி அமெரிக்க சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்ட தேதி. நியூயார்க் நகர இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு எரிந்து நொறுங்கி வீழ்ந்தது. ஏன்.  ராணுவ கேந்திரமான பென்டகன் கட்டடமும் தாக்கப்பட்டது.
   2001 செப்டம்பர் 12 அன்று நடந்த   உண்மைச் சம்பவம் ஒன்று சமீபத்தில் எனக்குத் தெரிய வந்தது. அதை இங்கு தருகிறேன்.
·                            *       
    ஒரு வகையான புற்று நோய்ப் பிணியாளர்களுக்குப் புதிதாக BONE MARROW செலுத்தப்பட்டால் அவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு. ரத்த தானம் மாதிரி. இதுவும் ஒரு தானம் தான், என்றாலும் தானம் செய்பவரை சில நாட்களுக்கு முன்னதாகத் தயார் செய்ய வேண்டும். அவருக்கு மருந்து,  மாத்திரைகளும் சில ஊசி மருந்துகளும் தரப்பட வேண்டும். இந்த மருந்துகள் மிகுந்த வலியை ஏற்படுத்துமாம்.;
ஒரு  நோயாளிக்கு BONE MARROW தேவை என்று  கேள்விப்பட்ட ஒருவர் தானம் கொடுக்க முன்வந்தார். (அவர் ஒரு மருத்துவர் மட்டுமல்ல; புற்றுநோய் மருத்துவரும் கூட. மேலும் அவர் ஒரு இந்தியர்..) தானம் BONE MARROW  செய்வதற்கு முன் போடப்படவேண்டிய மருந்துகளைக் கொடுத்தார்கள்.. செப்டம்பர் 11’ம் தேதி காலையில் அவரிடமிருந்து தேவையான அளவு BONE MARROW  எடுத்தார்கள், நார்த் கரோலினா மருத்துவமனை டாக்டர்கள். அதை நோயாளி உள்ள மருத்துவமனைக்கு மறு நாள் அனுப்ப வேண்டும்.

September 24, 2011

மர்ரே எஸ் ராஜம்

 ஐம்பதுகளில் தமிழ்ப் புத்தக பதிப்புலகில் ஒரு புதிய அலை வீசியது. மலிவுப் பதிப்பு
புத்தகங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாயின. பாரதியார் பாடல்கள், திருக்குறள் ஆகியவை இவற்றில் முதலிடம் பிடித்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், திடீரென்று ராஜாஜியின் ‘சக்கரவர்த்தித்  திருமகன்’ புத்தகத்தை ஒரு ரூபாய் விலையில் வெளியிட்டு, பதிப்பகங்களை சற்று உலுக்கி விட்டது. தொடர்ந்து  ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ புத்தகத்தையும் வெளியிட்டது. இதைப் பார்த்த மற்ற பதிப்பகங்க்கள் -- பிரேமா பிரசுரம், அருணா பதிப்பகம் போன்றவை -- மதனகாமராஜன் கதைகள், மகா பக்த விஜயம், சித்தர் பாடல்கள் போன்றவற்றையும், புலியூர் கேசிகன் உரையுடன் கூடிய பல சங்க இலக்கியங்களையும்  ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் விலைக்குப் பிரசுரித்தன.

இதில் முக்கியமாகக் குறிப்பட வேண்டியது மர்ரே கம்பெனி ராஜம் அவர்கள் செய்த பணி. மிகுந்த ஈடுபாட்டுடன்,   இலக்கியங்களை  தமிழ் வல்லுனர்களைக் கொண்டு, பதம் பிரிக்கச் செய்து, தரமான அச்சில் பல புத்தகங்களை மாதாமாதம் வெளியிட ஆரம்பித்தார். இவை யாவும் அற்புதமான பதிப்புகள். ஒரு ரூபாய், இரண்டு (?) ரூபாய் விலையில் வந்த ரத்தினங்கள்.
வில்லி பாரதம், கம்ப ராமாயணம், தொல்காப்பியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று தொடர்ந்து ராஜம் வெளியிட்டார்.  அவை எல்லாவற்றையும் நான் சற்று சிரமப்பட்டுதான் வாங்கினேன். காரணம் சில சமயம் நான்கு, அல்லது ஐந்து புத்தகங்களை ஒரே சமயம் ராஜம் வெளிட்டு விடுவார். ஐந்து ரூபாய் என்பது சற்று அதிகமான தொகைதான்!  இந்த புத்தகங்களின் மற்றொரு சிறப்பு இவைகளின் அட்டைப் படங்களை கோபுலு சிறப்பாக வரைந்து இருப்பார். அதுவும் கம்ப ராமாயண புத்தகங்களுக்கு - 9 பாகங்கள்-  அவர் வரைந்த படங்களில் அழகும் தெய்வீக ஜொலிப்பும்  மிளிரும்.
 (சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கம்பன் கழகம் தனது ஆண்டு விழாவில் கோபுலுவைக் கௌரவித்தது. அப்போது  இந்த அட்டைப் படங்களை எல்லாம்  டிஜிட்டல் பேனராக பெரிய அளவில் அச்சடித்து விழா ஹாலில் வைத்திருந்தார்கள். கண்கொள்ள காட்சியாக இருந்தது!)

ராஜம் அவர்கள் எழுத்தாளர் தேவனின் நண்பர்.  (ஆகவே அவர் கோபுலுவின் நண்பரும் கூட!) தேவன் தனது நாவலில் ராஜம் அவர்களையே ஒரு கேரக்டராக்கி விட்டார், திரு. ராஜம் அவர்கள்தான், ’ராஜத்தின் மனோரத’த்தில் வரும் ஜயம் என்ற கதாபாத்திரம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்,   .
ஒரு விதத்தில் ராஜம் அவர்கள் மற்றொரு உ.வே.சா தான்.  தமிழுக்கு  அவர் செய்த தொண்டு அளவிட முடியாதது.   
(. அவருடய புகைப்படம் எங்கு தேடியும் கிடக்கவில்லை. படம் கேட்டு மர்ரே கம்பனிக்கு  எழுதி உள்ளேன். கிடைத்தால் போடுகிறேன்.

(இந்தப் பதிவைப் பார்த்து விட்டு புரொஃபசர் பசுபதி அவர்கள் ( கனாடா)  அனுப்பிய புகைப்படத்தை இப்போது இங்கு சேர்த்துள்ளேன். புரொஃபசர் சார், நன்றி.)
+                   +              +
மர்ரே ராஜம் அவர்களைப் பற்றி, பதிப்புக் குழுவிலிருந்த பேராசிரியர் அ, ச. ஞானசம்பந்தன் அவர்கள் எப்போதோ எழுதிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் பார்க்கக் கிடைத்தது. அதை இங்கு தருகிறேன்.
===============
மர்ரே எஸ் ராஜம் -- பேராசிரியர் அ, ச. ஞானசம்பந்தன்

பழைய சாமன்களை ஏலம் விடும் மிக பெரிய நிறுவனம் மர்ரே அண்ட் கம்பெனி ஆகும். அரசாங்கத்தார் ஏலம் விடும் எதனையும் மர்ரே கம்பெனியார் மூலமாக்வே விடுவர். அப்படிப்பட்ட மர்ரே கம்பெனி உரிமையாளர் எஸ். ராஜம் ஆவார். 1945- வாக்கில் பெரும் செல்வராகிய திரு ராஜத்திற்கு ஒரு புதிய சிந்தனை. தோன்றிற்று.

September 19, 2011

படம் யாரோ: ஜோக் நான்!

 பல பல வருஷங்களுக்கு முன்பு குமுதம் இதழில் ஒரு போட்டி வைத்தார்கள். அரசியல் தலைவர்களின்  சம்பந்தமான  7,8 புகைப்படங்களைப்   போட்டு அதற்கு எற்ற மாதிரி சுவையான வசனங்களை எழுதச் சொல்லியிருந்தார்கள்.   (இப்போது  குமுதத்தில் வரும் கிளிக் கலாட்டா பாணியில்). அதில் நான் கலந்து கொண்டேன். முதல் பரிசும் பெற்றேன். அதிலிருந்து எந்தப் பத்திரிகையில் எந்த புகைப்படத்தை பார்த்தாலும், ஜோக் எழுத முயற்சிப்பேன். சும்மா டயம் பாஸ்தான்!
 இன்டர்நெட்டில் 60-70 வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த பல பத்திரிகைகளை  இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் வரும்  பல ஜோக்குகள்  புரிவதில்லை. சில படங்களுக்கு ஏற்ற மாதிரி நாமே ஜோக் எழுதலாமே என்று அதி அற்புதமான  (!) யோசனை தோன்றியது.. அதன் பலனை அனுபவியுங்கள்!  முதலில்  ஒரு படம் .

1. பைசா கோபுர ஸ்டாப் வந்தாச்சு.. எல்லாரும் இறங்கிடலாம்...

2. என்னிக்கும்  இவன் நம்ப மாதிரி  இருக்கமாட்டான்...கோணல் புத்திக்காரன்.

3. அவன் நிக்கற ஸ்டைலைப் பாரேன்.

4. இவர்தான் கோபுரத்தை கட்டின கான்டிராக்டராம்!

5. பாவம். இடது கால் ஊனம் போல் இருக்கிறது.

September 14, 2011

புள்ளிகள்; : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறுவனாக இருந்த போது வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டார். ஆனால் அதில் ஓரளவே தேர்ச்சி பெற்றிருந்தார்.
ஒரு சமயம அவர் ஒரு பிரபல  CELLO  கலைஞரைப் பர்க்கப் போனார். அவரிடம் “ உங்கள் முன் நான் வயலின் வாசித்துக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.
“செய்யுங்கள்.. வாசித்துக் காட்டுங்கள்: என்றார் அவர்.
ஐன்ஸ்டீன் வாசித்துக் காட்டினார்.சுமாராகத்தான் இருந்தது  அவரது வாசிப்பு.
பிறகு அவரிடம் ஐன்ஸ்டீன் “ நான் வாசித்தது எப்படி இருந்தது?” என்று ஆவலுடன் கேட்டார்.
 ஸெல்லோ கலைஞருக்கு என்ன சொல்வதென்று ஒரு கணம் தெரியவில்லை.
பிறகு அவர் ”  YOU PLAYED VIOLIN  RELATIVELY WELL!" என்றாராம்!

"நிஜ கிருஷ்ணன் வந்து

நாலாயிரமும் நானும் - பிற்சேர்க்கை   http://kadugu-agasthian.blogspot.com/2011/08/blog-post_08.html  பதிவிற்கு வந்த ஒரு  பின்னூட்டம். அதைப் பதிவாகப் போடுகிறேன். எழுதியவர்:: Ganpat
------------------:

//” புத்தகங்களையா தலையில் தூக்கிகொண்டு போகிறோம்? ஆழ்வார்களின் திருவடிகளைத்தானே தலை மேல் வைத்துக் கொண்டு போகிறோம்?” //
ஆஹா என்ன அறிவு! என்ன பக்தி!! என்ன ஞானம்!!! மெய் சிலிர்த்தேன்!

இதே போல ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி.. அன்று கோகுலாஷ்டமி தினம்.மதியம் ...

எல்லார் வீட்டிலும் பட்சணம் மணக்கிறது.
ஒரு குழந்தை (வயது 4 இருக்கும்)
தன் வீட்டு சமையல் அறையில் நுழைகிறது ..

அங்கு பட்சணம் செய்துகொண்டிருக்கும் தன அம்மாவிடம் பட்சணம் கேட்கிறது.அம்மா சொல்கிறாள்.
"சாயங்காலம் பூஜை முடிந்து நைவேத்தியம் ஆனதும் உனக்குதாண்டா கண்ணு முதலில்!!கொஞ்சம் பொறுத்துக்கோ ராஜா!!"
ஒரே ஓட்டம அங்கிருந்து குழந்தை போன இடம் தெரியவில்லை!
ஒரு அரை மணி நேரம் கழித்து அவன் திரும்ப வருகிறான்.வாய்,கையெல்லாம் பட்சணம்!

"எதுடா உனக்கு இது?" என அம்மா வினவ,
அவன் மழலை மாறாமல் "பக்கத்தாத்து மாமி கொடுத்தா!" என்கிறான்!

என்ன இது! இவன் ஏதாவது தெரியாமல் எடுத்து வந்து விட்டானா என்ன,என்ற ஐயத்துடன்,பக்கத்து வீட்டிற்கு விரைகிறாள் அம்மா.

அங்கு அந்த மாமியும் பட்சணம் செய்துகொண்டிருக்கிறாள்.

"மாமி! ரங்கப்பாவிற்கு பட்சணம்??" என்று இழுக்க,

"அட! அவன் ஆசையா கேட்டான்;நான்தான் கொடுத்தேன் மாமி!" என்கிறாள் அவள்.

"என்ன இது? இன்னும் பூஜை,நைவேத்தியம்!!", என்று அம்மா இழுக்க,அந்த மாமி சொல்கிறாள்..

"நிஜ கிருஷ்ணன் வந்து கேட்கும்போது,பொம்மை கிருஷ்ணனுக்கு என்ன மாமி நைவேத்தியம் வேண்டியிருக்கு?"

இதில் அம்மா எனது பாட்டி;குழந்தை என் அப்பா;
என் பாட்டி இதை சொல்லக்கேட்டு வியந்து போயிருக்கிறேன்!

அதே உணர்வு இவர்கள் சொன்னதை கேட்டதும் வந்தது!

September 08, 2011

கண்ணீர் வடிக்கத் தயாரா?

 IF YOU HAVE TEARS, BE PREPARED TO SHED THEM!

ஆம், இது உண்மையான நெகிழ்ச்சியூட்டும் தகவல்.

1996 ஆண்டு. அமெரிக்காவில் அட்லாண்டா நகரில்  உள்ள எமரி சர்வகலாசாலயில் பட்டமளிப்பு விழா. . சர்வகலாசாலயின்  எல்லா ’பள்ளி; மாணவர்களூம் அவர்களின் பெற்றோர்களும் பெரிய திறந்த வெளி அரங்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சுமார் 5000 பேருக்கு மேலிருக்கும்.
சுகமான, இதமான வெயில். மைதானத்தைச்சுற்றி வரிசையாக கோகா கோலா ஸ்டால்கள்..கோக்  இலவசம்.( அந்த சர்வகலாசாலைக்குக் கோக் நிறுவனம் கோடிக்கணக்கான டாலர்களை நன்கொடையாக ஆண்டு தோறும் கொடுத்து வருகிறது.)
நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. வரவேற்புரை, பட்டமளிப்பு உரை என்று வழக்கமான நடைமுறை நிகழ்ச்சிகள்.  இந்த விழா பொதுவிழா. இந்த விழாவில் சர்வகலாசாலையின் ஒரு சிறந்த மாணவனுக்கு அல்லது மாணவிக்கு மேடையில் பாராட்டும், பதக்கமும் அளிப்பார்கள். ஒரே  ஒரு பரிசுதான். அதன் பிறகு மாணவர்கள் அவரவர் பள்ளிகளுக்கு வரிசையாகச் செல்வார்கள். அங்கு பட்டமளிப்பு  விழா நடைபெறும்; பட்டங்கள் தரப்படும்..

இந்த பொதுவிழாவிற்கு நான்  போயிருந்தேன் -சும்மா வேடிக்கைப் பார்க்க!
யாருக்குச் சிறப்புப் பரிசு என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
சர்வகலாசாலையின் டீன்  மைக் முன் வருகிறர். சட்டென்று கூட்டத்தில் அமைதி:
நின்று நிதானமாக அவர் பேசத்துவங்குகிறார்.” இந்த ஆண்டு நமது சர்வகலாசாலையின் சிறந்த மாணவன் பதக்கத்தைப் பெறப் போவது ஒரு மாணவி அவர்......” என்று கூறிவிட்டு;;;;
 “ வெயிட், .. அவரை மேடைக்கு அழைக்குமுன் ஒன்றிரண்டு தகவல்களைச் சொல்ல விரும்புகிறேன். நான் சொல்லி முடித்த பிறகு அவர் இங்கு வந்து பதக்கத்தைப்  பெற்றுக் கொள்வார்...
”பதக்கம் பெறும் இம்மாணவியின் பெற்றோர்  பல வருடங்களுக்கு முன்பே விவாக ரத்து செய்து பிரிந்து விட்டனர். தாயிடம் வளர்ந்த இவருக்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்: இவரது தாய் சில வருடங்களிலேயே காலமானார்.பிறகு இவர் தன் தாத்தா - பாட்டியியின் அரவணைப்பில் வளர்ந்து பள்ளியிலும் , கல்லூரியிலும் படித்தார். இப்போது இங்கு மருத்துவக் கல்லூரியில்சேர்ந்து, நமதது சர்வகலாசாலையிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். .. இருங்கள்... கை தட்டாதீர்கள்.....இன்னும் நான் சொல்லவேண்டியது நிறைய உள்ளது...
இந்த அரிய பரிசை இவர் பெறுவதைப் பார்த்து மகிழ இவருடைய தாத்தாவும் பாட்டியும் நேற்று டெக்சாஸ்  நகரத்திலிருந்து (?)  விமானம் மூலம் வந்தணர்... துரதிர்ஷ்டம், அந்த விமானம் விபத்துக்குள்ளாகியது. அதுவும் நமது மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய சதுப்பு வனப் பகுத்யில் வீழ்ந்து புதைந்து விட்டது. நேற்றெல்லாம் விமானத்தைத் தேடிப் பார்த்தார்கள். இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவரது அருமைப் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இப்படி நேர்ந்தது  எத்தனை பெரிய இடி.. அதுவும் இவர் ஒரு சிகரத்தைத் தொடும் தருணத்தில்! அவரை  இப்போது அழைக்கிறேன் அதற்கு முன்பு அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌனம் காப்போம்  நம் எல்லாருடைய ஆறுதலை அவருக்கு அளிப்போம்” என்று கூறினார்..
அந்த மாபெரும் கூட்டம் அப்படியே அமைதியாகி விட்டது. பல பெற்றோர்களும் மாணவர்களும் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைக்காமலேயே எழுந்து நின்றார்கள். ஐயாயிரம் ஆறாயிரம் பேர் அமைதியாக எழுந்து நின்றார்கள்.  -- ஆடாமல் அசையாமல்.!
இரண்டு நிமிஷம் கழித்து அனைவரும் உட்கார்ந்த பிறகு, அந்த மாணவி மேடைக்கு வந்தாள்.. அவள் அழவில்லை.  ( அவளுக்குக் கண்ணீர் வறண்டு போயிருக்கவேண்டும்!)
அவளை பார்த்ததும்  கூட்டத்தில் பலர் மீண்டும் அழத் துவங்கினார்கள். சிலர்  விக்கி விக்கி அழுதார்கள்.
அதைப் பார்த்து அந்தப் பெண்ணின் சோகம் ஒரு சதவிகிதமாவது குறைந்திருக்கும்.


September 03, 2011

புள்ளிகள்:: ஆர்ட் லிங்க்லேட்டர்

போய்க் கேளு, சொல்லுவார்கள்!

அமெரிக்க ரேடியோ, டி.வி.களில் பல நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ் பெற்றவர் ஆர்ட் லிங்க்லேட்டர். (ART LINKLETTER) அவர்  KIDS SAY THE DARNDEST THINGS,  KIDS STILL SAY THTE DARNDEST THINGS,  Oops! Or, Life's Awful Moments, I Wish I'd Said That! My Favorite Ad-Libs of All Time என்று பல நகைச்சுவைப் புத்தகங்களை எழுதி உள்ளார். (சில புத்தகங்கள் என்னிடம் உள்ளன.)
ஒரு சமயம் அவர் ஒரு மன நோய் மருத்துவ மனைக்கு விஜயம் செய்தார். அங்கு ஒருமூதாட்டியைப் பார்த்தார். அவர் மன  நோயாளி மாதிரி இல்லாமல் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அவரிடம்  சென்று ” ஹல்லோ...குட் மார்னிங்...நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
மூதாட்டி அவரை ஏற இறங்கப்பார்த்து விட்டு “ தெரியலையே.. ஒண்ணு செய்.. இங்கு ரிசப்ஷனில் போய் கேட்டால், அவர்கள் நிச்சயமாகச் சொல்வார்கள்.. போ.. போய் கேட்டுத் தெரிஞ்சுக்கோடாப்பா..!” என்றார்!

லஞ்சத்துடன் ஒரு பேட்டி!

      ஆண்டவனுக்கு அடுத்தபடி அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சம் என்று எல்லாரும் சொல்கிறார்களே தவிர, யாரும் லஞ்சத்துடன் பேசிப் பேட்டி எதுவும் எழுதியதில்லை.  இவ்வளவு பிரபலமான திருவாளர் லஞ்சத்தை நானே சந்திக்கத் தீர்மானித்தேன்.
      லஞ்சம் எங்கும் அபரிமிதமாக இருப்பதால் யாரும் அதைப் பேட்டி கண்டு எழுத முன்வரவில்லை போலும்.
      ஒரு கோர்ட் வராந்தாவில் ""லஞ்சம் கொடுப்பதும் வழங்குவதும் ஒரு குற்றம்''  என்ற போர்டு இருந்த இடத்தில் மிஸ்டர் லஞ்சத்தைக் கண்டு பிடித்தேன்.
      ரொம்பவும் எளிமையாக இருந்தார்.  பேட்டிக்கு முதலில் மறுத்தாலும், நூறு ரூபாய்த் தாளைப் போட்ட ஒரு கவரை இளித்துக் கொண்டே கொடுத்ததும் சர்வ லகுவாக ஒத்துக்கொண்டார்.  ஜன்ம ஜன்மமாகத் தெரிந்தவர் போல் நேசம், பாசம், பரிவு ஆகியவையுடன் பேசினார்.
      ""மிஸ்டர் லஞ்சம், ஏன் உங்களைச் சமூக விரோதி என்கிறார்கள்?''
      ""அப்படிச் சொல்வது ஒரு பாஷன்.  ஆனால் எல்லாருக்கும் நான் வேண்டியவன்.  நான் ஒருத்தன் இருக்கவேதான் பலருக்கும் வேலை கிடைத்திருக்கிறது.  டெண்டர்கள் கிடைத்திருக்கின்றன.  வருமான வரிச் சலுகை, சிமெண்ட் கோட்டா, "கேஸ்' கனக் ஷன், இறக்குமதி லைசென்ஸ் இப்படி எத்தனை எத்தனையோ கிடைத்திருக்கின்றன பலரது செழிப்புக்கு நான் வழி வகுத்திருக்கிறேன்.'' 
      "ஊழல் உங்கள் உறவினர்தானே?''
      "  ஆமாம்.. இருந்தாலும் அவர் ஒரு வி ஐ பி.யாம். எத்தனை பெரிய லஞ்சமாக இருந்தாலும் ஊழலுக்குச் சமமாகாது என்று அவர் சொல்வார்.  போகட்டும்.  சாதாரண மக்களுக்குச் சேவை செய்வதே எங்களுக்குப் பெருமை; கௌரவம்.''
      ""முதல் முதலில் நீங்கள் எப்போது தோன்றினீர்கள்?''
      ""பல ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும் உங்களைப்போன்ற மேதைகள் தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.  ஔவையார் கூட "நாலும் கலந்துனக்கு நான் தருவேன்; சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று விநாயகரிடம் பாடியிருக்கிறாரே, அதிலிருந்தே தெரியவில்லையா, லஞ்சம் அப்போதே இருந்திருக்கிறது என்று!'
      ""உங்கள் எல்லோரும் இகழ்கிறார்களே?''
      ""யாரும் மனப்பூர்வமாக இகழ்வது கிடையாது.  எல்லாருக்கும் தான் ஏதாவது ஒரு சமயத்தில் நான் உதவி இருக்கிறேனே. .. இப்போது பாருங்கள், சினிமாவில், கதைகளில் ஆபாசம், செக்ஸ் அதிகமாகிவிட்டது என்று கத்துகிறார்கள்.  ஆனால் ஆதரவு தராமல் இருக்கிறார்களா: அப்படிப்பட்ட படம், கதை ஆகியவைகளுக்குத் தானே டிமாண்ட்?''
      ""ஆமாம் "சம்திங்' என்கிறார்களே. . .''
      ""அதுவா அது காலேஜ் டிகிரி வாங்கின லஞ்சம்!  இங்கிலீஷில் சொல்லிவிட்டால் மதிப்பாம்!''
      ""உங்களைப் பற்றித் தப்பு அபிப்பிராயங்கள் நிறைய இருக்கின்றன என்று நான் கருதுகிறேன்.''
      ""யூ ஆர் ரைட். . இப்போது பாருங்கள்.  பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.' "லஞ்சம், தலைவிரித்தாடுகிறது என்று.என் தலையைப் பாருங்கள். ஸ்டெப் கட்டிங் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.  நான் தலைவிரித்து ஆடுகிறேனா?”
       ”பேட்டிக்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி..”
       “ போகும்போது என் செகரட்டரியிடம் ஆயிரம் ரூபாய் கேஷாகக் கொடுத்து விட்டு போங்க.”

August 28, 2011

குட்டிக் கதைக்களஞ்சியம்

இப்போதெல்லாம் வாரப் பாத்திரிகைகளில் குட்டிக் கதைகளுக்கு ஏக மவுசு!  பிரபல எழுத்தாளர் ஏகாம்பரம் மட்டும் சும்மா இருப்பாரா? மிக இலகுவாக ஆயிரக்கணக்கில் குட்டிக் கதைகளை எழுதிக்குவித்தார்.  அவற்றில் சில:
கொலை விழுந்தது!
      கருகும்மென்று இருட்டு, கையை நீவிவிட்டுக் கொண்ட கருக்கரிவாளை கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டான் காளி.  "ஒரே வெட்டு, விழவேண்டும் கொலை' என்று தனக்குள் சொல்லிக் கொண்டே போனான்.
      மெதுவாகச் சுவரேறிக் குதித்தப் பூனை போல் அடியெடுத்து வைத்து முழு பலத்துடன் அரிவாளால் ஒரு போடு போட்டான்.  விழுந்தது "கொலை காளி ஒரு வாழைக்குலைத் திருடன்!


காபரே பார்க்கணும்
      ""ராஜம், எனக்கு ரொம்ப நாளா ஆசை, காபரே போய்ப் பார்க்கணும்னு.''
      ""என்ன சொன்னே, பட்டு...காபரேயா? அசிங்கம். அதுவும் நாம்ப போனால் நல்லா இருக்குமா? எல்லாரும் நம்மையே பார்ப்பாங்க.''
      "பார்க்கட்டுமே ராஜம்... நாம் மட்டும் என்ன அதிசயப் பிறவியா?
      "இல்லைதான்.  இருந்தாலும் பேப்பரில் போட்டாலும் போட்டுவிடுவாங்க பட்டு.''
     ""என் அப்பா அறநிலைய மினிஸ்டர் உங்க அப்பா சன்மார்க்க சபாத் தலைவர்.  அதனால் நாம் எதையும் அனுபவிக்கக்கூடாதா? ராஜம், நீ, பயந்தங்கொள்ளி பையண்டா'' என்றான் பட்டு தன் அரும்பு மீசையைத் தடவியபடியே.
சங்கிலியைக் காணோம்!
      நூறு படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த  மாதவிப்ரியா கோபமும் அழுகையுமாக இருந்தாள்.  ""என் சங்கிலி எப்படிக் காணாமல் போகும்சங்கிலி எப்படித் திருடு போகும்இங்கேதான் சோபா செட்டு மேலே வெச்சுட்டுக் குளிக்கப் போனேன்.  போலீசுக்குப் போன் பண்ணட்டுமா?'' என்று இரைந்து கொண்டிருந்தாள்.
      அரை டஜன் வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். 
      அப்போது வேலைக்காரிகளில் ஒருத்தி, "அதோ. . அதோ. . . சங்கிலி. . . அதோ!'' என்று கத்தினாள்.  அவள் காட்டிய திசையில் ஒரு சோபா செட்டின் கீழே இருந்து மெள்ள எட்டிப் பார்த்தது சங்கிலி என்னும் அந்த பத்தாயிரம் விலையுள்ள நாய்க்குட்டி!
சிலீர்! சிலீர்!
      ஊரடங்குச்சட்டம், கத்திக்குத்து, கொலை என்று ஹைதராபாத் இருக்கும் சமயத்தில், ரயில் தாமதமாக வந்தது, இந்த அகால நேரத்திலா வந்து இறங்க வேண்டும்? ரயிலடியில் இருந்த லாட்ஜ் மாடி அறையில் பால கோபாலுக்கு இடம் கிடைத்தது.
      "இதுவரை கத்திக் குத்துக்குப் பலியானவர் 70 பேர்' என்று நாளிதழ் வயிற்றில் பயத்தை விதைத்தது.
      நள்ளிரவு, கீழ்  அறையிலிருந்து சில குரல்கள் : ""கழுத்தை வெட்டுடா... பிசிர் இல்லாதே வெட்டு காதர், கையை வெட்டியாச்சா? அப்படியே  வை... காலைச் சின்னதாக வெட்டிடு...''  தீடீரென்று யாரோ அடிக்கயாரோ அழுகிறார்கள்.
     பாலகோபால் பயத்தால் மயக்கமான தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.
      காலையில் லாட்ஜை விட்டு வெளியே வந்து கீழ் அறையைப் பார்த்தார்.  "விக்டரி டெய்லரிங்க் ஷாப்' என்ற போர்டு அங்கு மாட்டப்பட்டு இருந்தது.!

August 22, 2011

எல்லா வீலர் வில்காக்ஸ்

நாலாயிர திவ்யப் பிரபந்தம் படிக்கும் போது `மகா விஷ்ணு' என்று ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு பல பாடல்கள் எழுதப்பட்டிருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன்.
போகட்டும், இதுவாவது 12 ஆழ்வார்கள் இயற்றியவை. கம்பன்? ஒரே ஒருத்தர் 10000 பாடல்களுக்கு மேல் பாடல்கள் கொண்ட ராமாயணத்தை இயற்றி இருக்கிறார். சாதாரண சாதனையா? இந்தப் பாடல்களை எழுதியதால் அவருக்கு என்ன ஆதாயம்? பத்திரிகைகளில் பேர் வரும் என்றோ புத்தக ஆர்டர் வரும் என்றா எழுதினார். புத்தகமாகப் போட்டு வருவாய் ஈட்டலாம் என்றா? அவரை எழுதச் செய்த உந்துசக்தி யாது?
பத்தாயிரம் பாடல்கள் எழுதிய சாதனையை வியந்து கொண்டிருக்கும் போது ஒரு அழகான ஆங்கிலக் கவிதை ஒரு பொன்மொழிப் புத்தகத்தில் காணப்பட்டது. அவருடைய கவிதைகளை மேலும் படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. தேடினேன். கடைசியில் அவர் எழுதிய பாடல்கள் யாவும் இன்டர்நெட்டில் இருந்தது. இலவசமாகப் படிக்கவும், பதிவிறக்கிக் கொள்ளவும் `குட்டன்பர்க்' வலைமனையில் இருந்தது. அவற்றை டவுன்லோட் செய்து நானே ஒரு புத்தகமாக வடிவைமைத்தேன். இரண்டு பகுதியாகத் தயாரித்தேன். புத்தகத்தில் எங்கு புரட்டினாலும் அழகான பாடல்கள்.
அவர்?
எல்லா வீலர் வில்காக்ஸ் (ELLA WHEELER WILCOX)  சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர். அமெரிக்காவின் கனக்டிகட் பகுதியில் வாழ்ந்த ஒரு ஏழை (மிக மிக ஏழை என்று கூடச் சொல்லலாம்) குடும்பத்துப் பெண். அவர் எழுதியவை  ஆயிரக்கணக்கானi பாடல்களுக்கு மேல்!

வில்காக்ஸிற்கு கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பவும் ஆர்வம் இருந்தது. ஆனால் தபாலில் அனுப்ப பணவசதி இல்லை (உண்மை.) மாதம் ஒரு கவர் மட்டும் எழுத அவருக்கு அனுமதியை அவளது தந்தை தந்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வில்காக்ஸ் தனது நெருங்கிய தோழிக்குக் கடிதம் எழுதவும் ஆசை. தனது தோழிக்கும் கடிதம் எழுதி, அத்துடன் ஒரு கவிதையையும் எழுதி வைப்பார். கவிதையை பத்திரிகைக்கு அவள் செலவில் அனுப்பும்படி கேட்டுக் கொள்வார். அப்படி அனுப்பப்பட்ட கவிதை முதன் முதலில் வெளியாகி வில்காக்ஸிற்கு  ஒரு டாலரோ இரண்டு  டாலரோ சன்மானமாகக் கிடைத்தது.
அதன் பிறகு மெள்ள மெள்ள பல கவிதைகள் பிரசுரமாயின. படித்தவர்களை அசந்து போகச் செய்யும் கவிதைகள்.
கவிதைகள் மட்டுமல்ல, நீண்ட கடித பாணியில் பலருக்கு அறிவுரைகள் போன்று கட்டுரைகளிலும் அவரது கவிதையின் அழகு பிரதிபலிக்கும். கருத்துக்கள் வைரமாக மின்னும்.
ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டு கட்டுரைகளின் சிறு பகுதிகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். எனக்கே திருப்தியாக இல்லை! அவரது ஒரு கவிதையை இங்கு தருகிறேன்:

You Never Can Tell

By Ella Wheeler Wilcox

You never can tell when you send a word,
Like an arrow shot from a bow
By an archer blind, be it cruel or kind,
Just where it may chance to go.
It may pierce the breast of your dearest friend.
Tipped with its poison or balm,
To a stranger's heart in life's great mart,
It may carry its pain or its calm.

You never can tell when you do an act
Just what the result will be;
But with every deed you are sowing a seed,
Though the harvest you may not see.
Each kindly act is an acorn dropped
In God's productive soil
You may not know, but the tree shall grow,
With shelter for those who toil.

You never can tell what your thoughts will do,
In bringing you hate or love;
For thoughts are things, and their airy wings
Are swifter than carrier doves.
They follow the law of the universe --
Each thing must create its kind,
And they speed o'er the track to bring you back
Whatever went out from your mind.

August 21, 2011

ஃபோர்ட்- எடிசன்



அமெரிக்க வடக்குக் கோடியில் உள்ளது டெட்ராய்ட் நகரம்  ஃபோர்ட் கார் என்றதும் நினைவுக்கு வரும்   நகரம். அங்கு போர்ட் மியூஸியம் இருக்கிறது. . முழுதாகப் பார்க்க மூன்று நாள் தேவைப்படும். அத்தனை வித கார்கள், ரயில் என்ஜின்கள், குட்டி விமானங்கள். (மியூசியப் பொருட்களை விவரிக்கத் தனிக் கட்டுரையே தேவைப்படும்.)


மியூஸியத்திற்குள் நுழையும்போது கண்ணில் படுவது ஒரு கண்ணாடி கேஸில் உள்ள  பெரிய மண்வெட்டி   ஈர சிமெண்டில் சற்று புதைந்த மாதிரி வைக்கப்பட்டிருக்கிறது. அது ஃபோர்ட் மியூஸியத்திற்கு அடிக்கல் நாட்டியவர் உபயோகித்த மண்வெட்டி  அதன்  அருகில் ஈர சிமெண்டில் அவர் தனது ஆள்காட்டி விரலால் பெரிதாகக் கையெழுத்திட்டிருக்கிறார்.


அவர் தாமஸ் ஆல்வா எடிசன்!
    எலெக்ட்ரிக் பல்ப் உட்பட 1100 கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்தவர் எடிசன். அந்த மேதை நின்ற இடத்தில் நான் ( பேதை!)  நிற்கிறேன் என்பதை நினைத்த போது மனதில் சிலிர்ப்பு ஏற்பட்டது!

பின்குறிப்பு:     ஃபோர்ட் மியூஸியத்திற்குள்  போனபோது  ஹென்ரி ஃபோர்ட் பற்றி 1950 வாக்கில்  ரீடர்ஸ் ட் டைஜஸ்ட் பத்திரிகையில்  படித்த ஒரு துணுக்கு நினைவுக்கு வந்தது.
அலுவலகத்தில் அவர் முக்கியமான வேலையில் இருக்கும்போது, வீண்  அரட்டை அடிக்க யாராவது அவரைச் சந்திக்க  வந்தால் அவர்களை ஒரு குறிப்பிட்ட நாற்காலியில்  உட்காரச் சொல்வாராம். அந்த நாற்காலிக்கு என்ன சிறப்பு? . அதன் முன் இரண்டு கால்களின்  உயரம் சுமார் அரை அங்குலம் குறைவாக இருக்கும்படி வெட்டச் செய்திருப்பாராம். இதனால் என்ன லாபம்? முன்பக்கம் உயரம் குறைவாக இருப்பதால்,உட்காருபவர்களை லேசாகச் சரியச் செய்யும். அதைத்  தடுக்க கால்களை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் நாற்காலியில் உட்காருவது ஒரு மாதிரி அசௌகரிய உணர்வை உண்டாக்கும்..  அவர்கள் அதிக நேரரம்  உட்காராமல்  விரைவில் எழுந்து போய்விடுவார்கள்.. அந்த மியூஸியத்தில் ஃபோர்ட்டின் அலுவலக அறையை அப்படியே வைத்திருக்கிறார்கள். அங்கு இருந்த பணியாளரிடம் அந்த குறிப்பிட்ட நாற்காலியைப் பற்றி கேட்டேன். அவருக்குத்  தெரியவில்லை.. யாரையோ ( மானேஜர்?)  கேட்டு விட்டு வந்து உதட்டைப் பிதுக்கினார்.!