April 29, 2010

நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் நானும் - கடுகு

      பல வருஷங்களுக்கு முன்பு.கல்கி தீபாவளி மலரில் ஆண்டாளின் `வாரணமாயிரம்' பாடல்களை அழகான படங்களுடன் (ஓவியர் ரவி என்று நினைவு) 5 பக்கங்களுக்குப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்ததும் தான் திருமணங்களில் பாடப்படும் இந்தப் பாடல்கள் ஆண்டாள் இயற்றியவை என்று அறிந்ததுடன் அவற்றின் அழகுத் தமிழில் மனதைப் பறி கொடுத்தேன். (திருமணங்களில் வாரணமாயிரம் பாடல்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் புரோகிதர்கள் சொல்வார்கள். ஆகவே பாடலே பாதி புரியாது.)
அதுவரை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஓரளவே ஈடுபாடு இருந்தது. அதன்பின் அதன் மேல் மிகுந்த ஈடுபாடு எனக்கு ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில் `மர்ரே' ராஜம் மலிவுப் பதிப்பாக மாதாமாதம் பல இலக்கியங்களை வெளியிடத்  துவங்கினார்.  நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை 4 பாகங்களாக ஒரு மாதம் வெளியிட்டார். நாலு புத்தகங்களின் மொத்த விலை ரூ.4/- (ஆம். அவர் வெளியிட்ட எல்லா புத்தகங்களுக்கும் ஒரே விலை: ஒரு ரூபாய் என்று நிர்ணயித்திருந்தார்.)  நாலு புத்தகத்தையும் வாங்கினேன்.. படிக்கப் படிக்க தமிழ் மொழியின் அழகும், வீச்சும், ஆழ்வார்களின் கற்பனைத் திறனும், பக்திப் பெருக்கும் என்னை ஆட்கொண்டன. இதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் எங்கள் வீட்டு புத்தக அலமாரியைப் பார்த்துக் கொண்டிருந்த போது நாலாயிரத்தின் ஒரு பாகம் என் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தேன். லேசான மகிழ்ச்சிகரமான அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், அந்த புஸ்தகத்தில் என் அப்பா, தன் கையெழுத்தையும் வாங்கிய தேதியையும் போட்டிருந்தார். அந்த தேதி நான் பிறந்த தேதிக்கு அடுத்த நாள்! அத்துடன் இன்னொரு பதிப்பும் இருந்தது. அது 1913-ல் பிரசுரிக்கப்பட்டது. கிட்டதட்ட 100 வருஷத்திற்கு முன் பிரசுரிக்கப்பட்ட அதைக் குடும்பப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.
அதன் பிறகு யார் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிரசுரித்தாலும் வாங்க ஆரம்பித்தேன்.
*                                   *                      *
திருமணம் ஆன பிறகு என் மனைவியும் நானும் நாலாயிரம் படித்தோம் எல்லாப் பாசுரங்களையும் ஒரு தரம் படித்தோம் . பிறகு 4000 பாடல்களையும் நோட்டுப் புத்தகத்தில் எழுதினேன். (அந்த கால கட்டத்தில் நான் அரசு ஊழியர். ஆதலால்  நேரத்திற்குப் பஞ்சமில்லை!) உத்தமூர், அண்ணங்கராச்சாரியார் புத்தகங்களைப் பார்த்து, `ராஜம்' பதிப்பு புத்தகங்களில் பள்ளி பாட புத்தகங்களில் செய்வது போல் கடினமான பதங்களுக்குக் கோடிட்டு அர்த்தமும் எழுதினேன். பிறகு நாங்கள்  இருவரும் 4000 பாசுரங்களையும் படித்தோம். எங்கள் குழந்தைக்கு இரண்டு வயது ஆனதுமே   திருப்பாவை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம்.
    அவளுக்கு இரண்டரை வயது ஆன சமயம் செங்கல்பட்டிற்கு வந்திருந்த கதாகாலட்சேப விற்பன்னர் எம்பார் விஜயராகவாச்சாரியாரை. என் மனைவியும் நானும் என் குழந்தை ஆனந்தியுடன் அவர் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்று சந்தித்தோம்.
``இவள் எங்கள் பெண்.. திருப்பாவையில்  முதல் பத்து பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறோம். அவள் சொல்வதைக் கேட்டு நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்'' என்றோம்.

April 28, 2010

புது மனைவி கமலாவிற்கு -கடுகு

ஒரு  கவிதை போல் நீ உறங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலை வேளையில் உன்னை எழுப்பிக் காப்பி போடச் சொல்லாததைத் தவறாக எண்ணாதே.
நேற்றுக் காலை நீ காப்பி போட்டபோது இடுக்கியின் பிடி தளர்ந்து வெந்நீர்ப் பாத்திரம் அப்படியே கீழே விழ, அருகில் நின்று கொண்டிருந்த என் காலில் கொட்டிச் சிறிது ரணத்தை ஏற்படுத்தியது. நான் அங்கு நின்றது என்னுடைய தவறு. இடுக்கி பிடி தளர்ந்தால் வெந்நீர்ப் பாத்திரம் கீழே விழுமே என்று எனக்குத் தெரிந்திருக்க வேண்டாமோ? சே. என்ன கணவன் நான்!
அப்புறம் காலைச் சிற்றுண்டிக்குத் தோசை வார்த்தாயே,  அடாடா///அதிலும் உன் சாமர்த்தியத்தைக் கண்டேன். ஆசைக் கணவன் சாப்பிடச் சின்னச் சின்ன விள்ளல்களாக இருந்தால் சௌகரியமாக இருக்கும் என்று தானே தோசையைத் திருப்பும்போது ஒன்பது துண்டுகளாத் திருப்பினாய்? ஒரேயடியாகத் திருப்புவதை விட இப்படிப் பல துண்டுகளைத் திருப்புவது சிரமமான வேலை. இருந்தும் என் மேல் இருக்கும் ஆசையினால் நீ சிரமத்தைப் பொருட்படுத்தவில்லை. தோசை முறுவலாக இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். ஊத்தப்பம் மாதிரி இருந்தாலும், எனக்குப் பிடிக்கும் என்று நான் சொல்லியிருந்ததை ஞாபகம் வைத்துக் கொண்டு ஒரு துண்டு படு
மெல்லிசாகவும் மற்றது ஒரு இஞ்ச் கனமாகவும் நீ வார்த்த சாமர்த்தியத்தை நான் எப்படி விவரிப்பேன்!
நமக்குக் கல்யாணமாகிய முதல் நாளிலேயே இத்தனை சாமர்த்தியத்தைக் காட்டி விட்டாயே, செல்லமே!
காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக பவுடர் உப்பைத் தவறுதலாகத்தான் போட்டுவிட்டாய். இருந்தாலும் நம்பு, என் மனோரஞ்சித மலரே, உப்புப் போட்ட காப்பியின் ருசி இவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று எனக்கு இதுவரை தெரியாது, அடாடா, என்ன டேஸ்ட்!

April 24, 2010

கறுப்பு தங்க மீன் எங்கே? - கடுகு

குப்புசாமி வீட்டிற்கு நான் போனபோது வீடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. ஆளாளுக்கு ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் மேல் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்கள்.
``ஜன்னலை ராத்திரி மூடி வைக்கணும்னு சொன்னேனே... யார் மறந்தது?'' என்று குப்புசாமி கத்த--
``கொக்கி உடைஞ்சு போச்சுன்னு கழுதையாகக் கத்தினது உங்க காதில விழுந்துதா..?''- என்று அவன் மனைவி பங்கஜம்..கத்த -
`` கத்தினேன்னு நீ சொன்னா போதும். `கழுதையா' என்ற அடைமொழிக்கு அவசியமே இல்லை. ...போச்சே... இப்ப என்ன செய்யறது?''

இனிமேலும் இந்த எபிஸோடைப் பார்த்துக் கொண்டிருப்பது நாகரீகம் அல்ல என்பதால் நான், ``என்னப்பா குப்புசாமி?  என்ன... என்ன ஆச்சு?'' என்று கேட்டேன்.
``வாப்பா... வா,,,இந்த மீன் தொட்டியிலே ஏழு தங்க மீனும் ஒரு கறுப்பு தங்க மீனும் இருந்தது. ராத்திரி இருந்தது. இப்ப காணோம்...''
``மீன் தொட்டியிலிருந்து துள்ளி வெளியே விழுந்திருக்குமோ என்னவோ... பூனை கீனை வந்த எடுத்துக்கிட்டுப் போயிருக்கும். இதுக்குப் போய் வீட்டை ரெண்டாக்கறீங்களே!'' என்று கேட்டேன்.
``பாத்தியா... பாத்தியா... பங்கஜம்... என்ன கேட்டார் பாத்தியா? வீடு இரண்டாக்கறோமாம். அப்படி நிச்சயமாக ஆகப் போகிறது. ஐயோ... இந்த மீன் போனதால என்னென்ன இரண்டு படப் போகுதோ'' என்றார் குப்புசாமி.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. குப்புசாமியைக் கேட்டேன்.
``அப்பா... மீன் தொட்டியில ஏழு தங்க மீனும், ஒரு கறுப்பு தங்க மீனும் இருந்தால் வீட்டில் லக்ஷ்மி தாண்டவமாடுவாள்னு சாஸ்திரம் சொல்லுது!''
``எந்த சாஸ்திரம் அப்படி சொல்றது?  வேடிக்கையான சாஸ்திரமாக இருக்கிறதே!''
``வாஸ்து அப்பா... வாஸ்து சாஸ்திரம்!''

April 21, 2010

எம். எஸ். தரிசனம்

செங்கற்பட்டு சேவா சங்கத்திற்காக எம். எஸ் அவர்கள் ஒரு கச்சேரி 1952-ல் செய்தார். சங்கத்தின் தொண்டன் என்ற முறையில் கச்சேரி செய்ய வந்த எம். எஸ். அவர்களுக்கு நமஸ்காரம் போட்டேன்.  பிறகு கச்சேரி முடிந்து அவர் விடைபெறும்போது அவ்ரிடம் கையெழுத்து வாங்கினேன்..
அதன் பிறகு 1985-ல் அவரது உறவினர் திருமணத்திற்குப் போயிருந்து போது அவர் இங்கும் அங்கும் போய் எல்லாரையும் விசாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து வியந்து போனேன். குறுக்கே போன என்னிடம் “சாப்பிட்டீங்களா?” என்று பரிவோடு கேட்டார்.

2004-ல்  ஒரு நாள் என் டில்லி நண்பர் போன் செய்தார்.: என் பையன் ரவி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். அவன எம்.எஸ். அவர்களைப் பார்த்து ந்மஸ்காரம் சொல்ல ஆசைப்படுகிறான். நாளைக்குப் பகல் சென்னை வருகிறான். சாயங்காலம்  பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள்... ஆகட்டும், பார்க்கிறேன் அது இது என்று எது சொன்னாலும் என் காதில் விழாது... நீங்கள் தான் பிரபலமான ஆசாமியாச்சே!” என்று சொன்னார்.
எம். எஸ் அவர்களோ உடல் நலமில்லாமல் இருக்கிறர் என்பது எனக்குத் தெரியும். என்ன செய்வது என்று புரியவில்லை. ‘எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாமே: என்று திரு. ஆத்மா அவர்களுக்குப் போன் செய்தேன்
 என்னை அறிமுகம் செய்துகொண்டேன். ஆத்மா உடனே உற்சாகமாக: ”அடேடே.. நீங்களா? எப்படி இருக்கீங்க?  டில்லிதானே?” என்று மிகவும் பரிச்சியமானவரைப் போல கேட்டார். ( அவர் என் விசிறி என்பதைப் பின்னால் அறிந்தேன்.)

தமிழ் முத்து - 9 வேயுறு தோளி பங்கன்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்

உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!

வேயுறு தோளி பங்கன் - மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்

விடம் உண்ட கண்டன் - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்

மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு

April 20, 2010

கமலாவும் நிட்டிங்கும் - கடுகு

    ஆண்கள் ஸ்வெட்டர் பின்னியது கிடையாது என்று ஒரு பத்திரிகையில் படித்ததும் எனக்கு ரத்தம் கொதித்து. அதன் விளைவே இந்த உண்மைக் கதை.    டில்லி வந்த புதிதில் நான் நிட்டிங்கில் முனைந்தேன். அதுவும் இந்த டெல்லிப் பெண்கள் பழைய கால சார்லி சாப்ளின் படங்களில் வேக வேகமாக கைகால்களை ஆட்டுவதைப் போல் படுவேகமாக, ஊர் அரட்டை அடித்துக் கொண்டு, ஊசிகளைப் பார்க்காமல், மடமடவென்று நிட்டிங் செய்வதைப் பார்த்து, நானும் இதில் இறங்கத் தீர்மானித்தேன்.
    அப்பளம் இடுவது, இலை தைத்தல் போன்ற நச்சுப் பிடித்த காரியங்களைக் கூட செய்தவன் நான். என்றாலும், இந்த நிட்டிங் போரடிக்க ஆரம்பித்தது. என் மனைவியோ, பத்து சதவிகிதம் அன்பு ,  தொண்ணூறு சதவிகிதம் திட்டு கலந்து சொல்லிக் கொடுத்தாள்.

பெரிய மனிதர் ஸ்ரீஸ்ரீ பிரகாசா

 ஸ்ரீஸ்ரீ பிரகாசா என்ற பெயரை உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்,
காரணம் இவர் 55 வருஷத்திற்கு முன்பு தமிழ்நாட்டின் கவர்னராக இருந்தவர். அந்த பதவிக்கே தன் கண்ணியத்தாலும் நடவடிக்கைகளாலும் பெருமை சேர்த்தவர்.
1956’ம் வருஷம் அவர் சென்னையிலிருந்து பம்பாய்க்கு  மாற்றப்பட்டார். பம்பாய்க்கு புறப்படுவதற்கு முன் தினம் அவர் வேடந்தாங்கல் போய் வர விரும்பினார். அங்கே போய்த் திரும்புவத்ற்குள் மாலை ஆகி விட்டது.
கவர்னர் வரும்போது ரயில் கேட்டுகள்: மூடி இருந்தால் அவருடைய கார் நிற்கவேண்டி  இருக்கும் எண்ணி, எல்லா கேட்களையும்  திறந்து வைத்திருக்கும்படியும், அந்த வழியே செல்லும் ரயில்களை அங்கங்கே நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள்..
       அப்போது  நான் மாணவன். தாம்பரம் கிருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருருந்தேன்.  செங்கற்பட்டிற்குப் போவதற்கு தாம்பரத்தில்  மாலை ஆறு மணிக்கு ரயில் ஏறினேன்.  ரயிலும் புற்ப்பட்டது. நாலைந்து நிமிஷங்களுக்குப் பிறகு, அதாவது அரை பர்லாங்கு  தூரம் போனதும்  ரயிலை நிறுத்திவிட்டார்கள்.
கவர்னரின் கார் சென்ற பிறகுதான் கேட்  மூடப்படும். அப்புறம்தான் ரயில் போகும்” என்றார் ரயிலின் கார்ட்..வேறு வழியில்லாமல் காத்திருந்தோம். சுமார் இரண்டு மணி நேரம் கழிந்த பிறகு கவர்னரின் கார் லெவல் கிராசிங்கைக் கடந்து சென்றது.   அதன் பிறகு எங்கள் ரயில் கிளம்பியது..

April 18, 2010

சிவாஜிகணேசனும் நானும்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் பல தடவை பேசி இருக்கிறேன். ரேடியோவிற்காகப் பேட்டி எடுத்திருக்கிறேன். படப் பிடிப்பில் பார்த்து இருக்கிறேன். ஆனால் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று கூற மாட்டேன்.
ஸ்ரீதர் என் நண்பர் என்பதால் ஸ்ரீதரின் படப்பிடிப்பிற்கு நிறைய தடவை போய் இருக்கிறேன். அப்போது சிவாஜியைப் பார்த்திருக்கிறேன் .
பேசும் படம் பத்திரிகை உதவி ஆசிரியருடன் சென்று அவரைச் சந்தித்து  இருக்கிறேன். அவருடைய படத்தை வரைந்து அவர் வீட்டிற்குச் சென்று அதில் கையெழுத்து வாங்கி இருக்கிறேன். தமிழ் மொழியின் அழகை அவர் பேசும் போது தான் முழுமையாக ரசிக்க முடியும்.
அவர் முதன் முதலாகக் கட்டபொம்மன் நாடகத்தை தேனாம்பேட்டை காங்கிரஸ் கண்காட்சியில் அரங்கேற்றினார். நாடகத்திற்கு அனுமதி இலவசம்.
கட்டபொம்மன் நாடகம் .நடிப்பது , சிவாஜிகணேசன், அனுமதி இலவசம் - இந்த மூன்றும் என் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு மாலை 5 மணி வாக்கில் கண்காட்சிக்குப் போய் திறந்தவெளி அரங்கை அடைந்தோம். கூட்டம் நீக்கமற நிறைந்திருந்தது.
எல்லாரும் ஒரு புல் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். நடுநடுவே பாத்தி கட்டிய மாதிரி இடைவெளி விட்டு உட்கார வைத்திருந்தார்கள். அந்த பாத்தி பாதையில் வேகமாக நடந்தோம். எங்கேயும் இடம் இல்லை. டவல், கைக்குட்டை, பை என்று பலர் துண்டைப் போட்டு வைத்திருந்தார்கள்.
”கொஞ்சம் இடம் கொடுங்கள்” என்று சொல்லியபடி உட்கார்ந்தால் உடனே ”எழுந்திரு... எழுந்திரி... தம்பி வரான்,  அத்தை வராங்க” என்று எல்லா உறவினரையும் குறிப்பிட்டு விரட்டினார்கள். (முதல் முறையாக பல உறவுப் பெயர்களைக் கேள்விப்பட்டேன் என்பது தொடர்பில்லாத தகவல்) போதாதற்கு எங்கோ நின்று கொண்டிருந்த போலீஸ்காரரை உதவிக்கு அழைத்தார்கள். இப்படி இடத்திற்கு இடத்திற்குத் தாவிக் கொண்டிருந்தோம். ஒட்டிக் கொள்ள இடம் கிடைக்கவில்லை. ஒரு மூலையில் காலே அரைக்கால் அங்குல இடம் இருந்தது. அசடு வழியும் சிரிப்புடன் அங்கு உட்கார்ந்தேன்.

வள்ளுவர் சொன்னது...






















படமும் ஜோக்கும்: ’க’

April 14, 2010

அன்புடையீர்...

வணக்கம். 

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
என் பிளாக்கிற்கு வந்து, நான் எழுதியவகளைப் படித்துவரும் உங்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றி,.
 நான ஒரு விளம்பரக் கம்பெனியில் கிரியேட்டிவ்  டிபார்ட்மெண்டில் 50-வது வயதில் வேலைக்குச் சேர்ந்தபோது அவர்களுக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது.  ஐம்பது வயதிற்குப்  பிறகு கற்பனைத் திறன் குறைந்து போய்விடுமே, இவரை வேலைக்கு எடுத்துக்கொள்வது  ‘ரிஸ்க்’தானோ என்று யோசித்தார்  கிரியேட்டிவ்  டைரக்டர் டெனிஸ் ஜோசஃப்.  ஆனால் சுமார் பத்து வருஷங்களுக்குப் பிறகு, ஒரு நாள் அவரிடம் “  டெனிஸ்.. நான் அடுத்த வாரம் ரிடயர் ஆகிறேன்” என்றேன்.
“ அப்படியா?...நத்திங்க் டூயிங்... என்ன கதையாக இருக்கிறது? ஒரு வருஷம் எக்ஸ்டென்ஷன் தரச் சொல்லி இப்பவே மேனே ஜிங்  டைரக்டருக்கு லெட்டர் எழுதறேன் ” என்றார். அவருடைய  கடிதத்திற்கு மறு நாளே பம்பாயிலிருந்து எம்.டி ஃபேக்ஸில்  . உத்தரவை அனுப்பிவிட்டார். இதில் முக்கியமானது டெனிஸ் அனுப்பிய கடிதத்தில் இருந்த ஒரு வாசகம்தான்.”  "Age cannot wither him nor custom stale his spelndor"  என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டு ஆரம்பித்து. ” The quotation implies that he has a lot more years in his Tamil head than his "sixty" shown on his birth certificate."  என்று எழுதி இருந்தார். (டெனிஸ் விளம்பர உலகில் ஒரு  பெரிய விருதான : COPYWRITER OF THE YEAR:"  விருதை அதற்கு இரண்டு வருஷத்திற்கு முன்புதான் வென்ற ஜீனியஸ்.)

இந்த தாளிப்பு பிளாக்கை  ஆரம்பிக்கும் போது நான் சற்று பயந்தது உண்மைதான்.. பல துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இதைப் படிக்கக்கூடும்,.ஆகவே அவர்களிடம் பாஸ் மார்க்காவது வாங்க முயற்சி பண்ண்வேண்டுமே என்ற கவலை தொத்திகொண்டது.
பரவாயில்லை. இந்த நாலு மாதத்தில் டிஸ்டிங்க்‌ஷன் கிடைத்ததா இல்லயா என்பது முக்கியமில்லை, ஃபெயில் ஆகவில்லை என்பதே முக்கியம்! டெனிஸ் ஜோசஃப் எழுதிய மாதிரி. இந்த தலையில் கொஞ்சம் சரக்கு இருக்கிறது போலும்!
ஆண்டவனுக்கு நன்றி.
பின்னூட்டம் போட்டுப் பாராட்டியவர்களுக்கு நன்றி.
அதை விட “ என்னய்யா போர் அடிக்கிறீங்க” என்று எழுதாமல் இருந்த நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு கூடுதல் நன்றி.
மீண்டும் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

கணினி எழுத்துருக்களும் நானும் - கடுகு

முன் குறிப்பு:
1) எழுத்துருக்கள் என்றால் FONTS  என்று பொருள்!
2)  இந்தக் கட்டுரை புத்தாண்டு ஸ்பெஷல் என்பதால் வழக்கத்தை விடக் கூடுதலாக போர் அடிக்கக் கூடும்!

        கணினியில் எழுத்துகளை அச்சடிக்கத் தேவையானவை: எழுத்துருக்கள். அதாவது ஃபாண்ட்ஸ் (  FONTS). இந்த  எழுத்துருக்களை உருவாக்குவது ஒரு வித்தை. நிறைய நகாசு வேலை செய்தால் அழகாக அமையும். எனக்கு ஃபாண்ட்ஸ் மேல் மிகுந்த மோகம் உண்டு. . இவைகளை உருவாக்கும் முறைகளை நானாகவே விழுந்து எழுந்து   கற்றுக் கொண்டு நிறைய எழுத்துருக்களை உருவாக்கி இருக்கிறேன். இத்தனைக்கும் நான் கணினி படிப்பு எதுவும் படித்தவனல்ல!
துவக்கம்.
சிறு வய்து முதலே (” ஆரம்பிச்சுட்டார்யா என்று யாரோ சொல்வது என் காதில் விழவில்லை!”) சித்திர எழுத்துகள்.  CALLIGRAPHY, ஆகியவகளில் ஆர்வம் உண்டு. பத்திரிகைகளில் வரும் கதைத் தலைப்புகளைப் பார்த்து எழுத முயற்சிப்பேன். பேசும் படம் என்ற பத்திரிகையில் பி.எஸ்.ஆர் (!) என்று ஒரு ஆர்டிஸ்ட் மிக அழகாக லெட்டரிங்க் செய்வார்.  ஓவியர் மணியம் எழுதும் தலைப்புகளும் மிகப் பிரமாதமாக இருக்கும். பொன்னியின் செல்வன், அமரதாரா, பாலும் பாவையும் தொடர்களுக்கு அவர்தான் தலைப்புகள் எழுதியவர்.
 கல்லூரியில் என் பக்கத்து சீட்காரனான ஜி. ராமகிருஷ்ணாவின் மாமா தான் பிரபல விளம்பர டிசைனர் ஜி.எச்.ராவ். அந்த காலத்தில் இவர் டிசைன் செய்யாத தமிழ்ப் படங்கள் மிகக் குறைவு. லெட்டரிங்க் அபாரமாக இருக்கும். ராமகிருஷ்ணா என்னைப் பல தடவை  ராவின் அரண்மனைக்கார ஸ்டூடியோவிற்கு அழைத்து போயிருக்கிறான். அங்கு லெட்டரிங்க் வித்தையை ஓரளவு புரிந்து கொண்டேன்.

  இந்த சமயம் :ஸ்பீட்பால் நிப்ஸ் என்று அமெரிக்க கம்பனி, லெட்டரிங்க் புத்தகத்தை வெளியிட்டது. சென்னை இருளப்பன் தெருவில் ஒரு வீட்டில் இருந்த ஸ்டேஷனரி கடையில் மட்டும்தான் கிடைக்கும் என்று கண்டுபிடித்து
அங்கு போனேன். விலை முழுதாக ஐந்து ரூபாய் என்றார்கள். மயக்கமே வந்து விட்டது. கல்கி இரண்டணா விற்ற காலகட்டம்.( என்பது நினைவு).  ஒரு மாதிரி கஷ்டப்பட்டு வாங்கினேன். அதில் பல வித லெட்டரிங்க் நிப்புகளை உபயோகித்து எழுதும் முறைகளை விளக்கி இருந்தார்கள். நிப்புகள் சைனா பஜாரில் இருந்த ’நாதன் அண்ட் கோ’வில் கிடைக்கும் என்று அறிந்து அங்கு போய்க் கேட்டேன்.28 நிப்புகள் கொண்ட பெட்டி 14 ரூபாய் என்றார்கள். இரண்டு  மூன்று மாதங்களில் எட்டு நிப்புகள் வாங்கிவிட்டேன். 60 வருஷங்கள் ஆகின்றன். இன்னும் 2,3 நிப்புகள் உள்ளன. அந்த நிப்புகளை உபயோகித்து சித்திர எழுத்துகளை ஓரளவு சுமாராக எழுதக் கற்றுக்கொண்டேன்.
     சில வருஷங்கள் கழித்து டில்லிக்கு மாற்றலாகிப் போனேன். அங்கே ஆபீஸ் ரிஜிஸ்டர்களின் பெயர்களை ஸ்பீட்பால் நிப்பால் (ஓரளவு) அழகாக எழுதி ஒட்ட ஆரம்பித்தேன். எதற்கோ ஒரு ரிஜஸ்டர் ஒரு உயர் அதிகாரிக்குச் சென்றபோது அவர்  என் லெட்டரிங்கைப் பார்த்து. ’யார் எழுதியது?’ என்று கேட்டு, என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.  அவர் ஒரு துர்க்கா பூஜை கமிட்டியின் தலைவர்.  பூஜை விழாவைப் பற்றி நலைந்து போஸ்டர் எழுதித் தரச் சொன்னார்.  எழுதித் தந்தேன்.
சில மாதங்கள் கழித்து அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.
“தபால் தலைகளை டிசைன் பண்ண ஒருத்தரை நியமிக்கப் போகிறோம். நீங்கள் அப்ளை பண்ணுங்கள்” என்றார். (தேர்வுக் கமிட்டியில் அவர் ஒரு உறுப்பினர்.) மனு செய்தேன். ஆனல் எனக்கு வேலை கிடைக்கவில்லை! மற்றொரு உயர் அதிகாரியின் பெண் கலியாணத்தைப் போட்டோ எடுத்தவரை நியமித்து விட்டார்கள்!
   தபால் தலை டிசைனராக ஆக வேண்டும் அன்று என் தலையில் பிரமன் லெட்டரிங்க் பண்ணவில்லை போலும்!
       பல வருடங்கள் அரசு வேலையில் இருந்துவிட்டு ஒரு நாள் வேலையை உதறிவிட்டு, ஒரு  பிரபல விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே நான் கற்றுக் கொண்டவை ஏராளம். (அவற்றையெல்லாம் பின்னால் பிட்டு பிட்டுக் கொடுக்கிறேன்). அந்த விளம்பரக் கம்பனியில் பல லெட்டரிங்க் ஓவியர்கள் இருந்தார்கள். அற்புதமான கலைஞர்கள். அபாரத் திறமைசாலிகள். திரு வரதன், திரு ஏகாம்பரம் என்று இரண்டு மேதைகள்  லெட்டரிங்க் செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். விரல்களின் லாகவம் என்னை வியக்கச் செய்தன..  மறுபடியும் என்னை லெட்டரிங்க் பைத்தியம் பிடித்துக்கொண்டது
(சரி. இந்த  கதையெல்லாம் எதற்கு? ஃபான்ட்ஸ் பற்றி ஆரம்பித்துவிட்டு ஆட்டோக்காரர் மாதிரி எங்கெங்கோ போய்க் கொண்டே இருக்கிறாயே என்று நீங்கள் கேட்பதற்குமுன் என் மனசாட்சியே கேட்டுவிட்டது!)
    கணினி வந்த பிறகு  ஆயிரக்கணக்கான விதங்களில் ஸ்பீட்பால் நிப் மாதிரி பிரஷ்களை ஃபோட்டோஷாப்பில் உருவாக்கிக் கொள்ள முடிந்தது.  நிறைய எழுதி பழகினேன்.
இந்த சமயம் 1992-ல் இந்திய அரசின் அங்கமான புனே கம்ப்யூட்டர் சென்டர் (சிடேக்) ஆறு எழுத்துருக்களுடன்..(பாரதி, கம்பன், இளங்கோ, கபிலன் முதலியன.) தமிழ் மென்பொருளை உருவாக்கியது.   டில்லியில் பயிலரங்கம் நடத்தியது ஆயிரம் ரூபாய் செலுத்தி அதற்குச் சென்றேன். எல்லாருக்கும் இலவசமாக ஹிந்தி மென்பொருளைக் கொடுத்தார்கள். ”ஹிந்திக்குப் பதில் எனக்கு தமிழ் மென்பொருள் கொடுங்கள்” என்று கேட்டேன்..” ’தமிழ் மென்பொருள் விலைக்குத்தான் கொடுக்கப்படவேண்டும்’ என்று அரசு உத்தரவிட்டுள்ளது” என்றார் புனே கம்ப்யூட்டர் சென்டர் அதிகாரி.
ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு டில்லி டிரேட் ஃபேர் (TRADE FAIR) வந்தது. அதில் ‘சிடேக்: ஸ்டால் வைத்திருந்தது. தமிழ் மென்பொருளை வாங்கிவிடுவது என்ற தீர்மானத்துடன் போனேன். என் மனைவியும் வந்திருந்தாள். சிடேக் ஸ்டாலில்  அந்த அதிகாரி இருந்தார்.
என்னை மீண்டும் அறிமுகப்படுத்திகொண்டு ( பிரபல எழுத்தாளர் என்பது போன்ற ரீல்கள்!) ”தமிழ் மென்பொருளை கொஞ்சம் தள்ளுபடியில் தர முடியுமா”என்று கேட்டேன்.  என் மனைவி கமலா. “பாவம். இவருக்கு தமிழ் ஃபாண்ட்ஸ் மேல் ரொம்ப ஆர்வம். ‘விலை 2500 ரூபாய் அதிகமாக இருக்கிறதே’ என்று யோசிக்கிறார்”என்றாள்.   விட்டால் “ தாயில்லாப் பிள்ளை” என்று சென்டிமெண்ட்டால் கூடவளைத்திருப்பாள்!
அவர் சட்டென்று  “சரி. என்ன விலைக்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்கள்?” என்று கேட்டார்.
“‘வித் மை காம்ப்ளிமெண்ட்ஸ்’ என்று சொல்லிக் கொடுங்கள். வாங்கி கொள்கிறேன்” என்றேன்.
அவர் சிரித்தபடியே ”சரி. 500 ரூபாய் கொடுங்கள். என் பசங்க (‘மை பாய்ஸ்’) ஐந்து வருஷம் கஷ்டப்பபட்டு உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு மதிப்பு கொடுக்க வேண்டாமா?”- என்று கேட்டு அவர் என்னை சென்டிமெண்ட்டால் கவிழ்த்து விட்டார்!
    சிடேக்கின்  தமிழ் மென்பொருளை முதலாவதாக வாங்கியவன் நான்தான்!.

         முதன் முதலில் கணினியின் திரையில் தமிழ் எழுத்துகள் மலர்வதை பார்த்தபோது விவரிக்கமுடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. தமிழ் எழுத்துருக்களை உருவாக்க வேண்டும் எனும் ஆர்வம் என்னைப் பிடித்துக் கொண்டது.
*               *            *                  *        *   
அதற்கு ஃபான்டோகிராஃபர்  என்ற மென்பொருள்  தேவைப்பட்டது.. கரோல்பாக்கில் ஒருவரிடம் இருப்பது தற்செயலாகத் தெரிந்தது. அதை உபயோகிக்கும் முறை தனக்குத் தெரியாது என்று சொன்னார், அதைக் கடன் வாங்கி வந்தேன். சுமார்  பத்து நாள் போராடி ஒரு எழுத்துருவை உருவாக்கினேன்.  சுமாராக வந்தது.  திருப்தி இல்லை. அந்த மென்பொருளுக்கான விளக்கப் புத்தகம் - போட்டோ காபி செய்யப்பட்டது - 600 ரூபாய்க்கு கிடைத்தது. அதன் பிறகு 3,4 மாதம் உழைத்து  ஃபான்ட்ஸ்கள் பலவற்றைச் சிறப்பாக உருவாக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டேன்,
ட்ரூ டைப் ஃபாண்ட்ஸ் ஸ்பெசிஃபிசேஷன்  எனறு மைக்ரோசாஃப்ட்டின் 400 பக்க இலவச டாக்குமெண்ட்டைக் கஷ்டப்பட்டுப் படித்தேன். 90 சத விகிதம்  புரியவில்லை!
இந்த சமயத்தில் ஆனந்த விகடனில் பல புதிய ஹெட்லைன் எழுத்துருக்கள் உபயோகிக்க ஆரம்பித்திருப்பதைப் பார்த்தேன்.. அவற்றில் பல குறைபாடுகள் இருந்தன. எழுத்துகளின் மேற்புள்ளிகள் பல சமயம் எழுத்துகளை விட்டு வெளியே போயிருந்தன. சாய்வு எழுத்துகளில் அடுத்த  எழுத்தின் மேலேயே புள்ளிகள்  போய்விட்டன.
விடுமுறையில் சென்னைக்கு வந்த போது, “எழுத்துகளை புதிதாக உருவாக்கித் தருகிறேன். நான் கேரண்டி.” என்று விகடனுக்குக் கடிதம் எழுதினேன். ( “என்ன தன்னம்பிக்கை!”)
“வந்து சந்திக்க முடியுமா?” என்று பதில் வந்தது.. போனேன். போன பிறகு தான் தெரிந்தது அந்த ஃபா ன்ட்ஸை நேரடியாக அச்சடிக்க முடியாது. ஸ்க்ரீனில் எல்லா எழுத்துகளும் தெரியும். ஒவ்வொரு எழுத்தாகத் தேடி எடுத்து கோர்க்க வேண்டும். அரை நிமிஷத்தில் அடிக்கக்கூடிய மேட்டரை இப்படி கம்போஸ் செய்ய 10, 15 நிமிஷம் ஆகிவிடும்.. மேலும் பல எழுத்துகள் அதில் இல்லவே இல்லை. எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை:  அவர்கள் 50, 55 ஆயிரம் கொடுத்து வாங்கிய பேஜ்மேக்கர் இந்த எழுத்துருக்களை ஏற்றுக் கொள்ளவில்லை!.         அவர்களிடமிருந்த   எழுத்துருக்களை  சற்று பெரிய அளவில் அச்சடித்து வாங்கிக் கொண்டேன். கிட்டத் தட்ட எழுபது எண்பது பக்கங்கள். விடுபட்ட ஐம்பது அறுபது எழுத்துக்களை நானே கணினியில் வரைந்து கொண்டேன்.  பிறகு ஒவ்வொரு ஃபான்டாக உருவாக்கினேன் அவை பேஜ்மேக்கர் ஏற்கும் விதத்திலும்  செய்தேன். மூன்று ஃபாண்ட்ஸ்களை  (வாசன், மதன், குஷ்பு!) துல்லியமாகத் தயாரித்து கொடுத்தேன். அவை நன்றாக இருந்ததுடன் பேஜ்மேக்கரிலும் வே;லை செய்தன. விகடன் டி.டி.பி. டிபார்ட்மென்டில் இருந்தவர்கள் எல்லோரும் என்னைக் கட்டிப்பிடிக்காத குறைதான்.“ஐயோ பிரமாதமாக வேலை செய்கிறது சார். ஸூப்பர்”  என்று சொல்லிக் கை குலுக்கினார்கள். “உங்களை ஜாயின்ட் எம். டி. பார்க்கவேண்டுமென்று சொன்னார்” என்று சொல்லி அழைத்துப் போனார்கள்.. அவரும் பாராட்டினார். மற்ற ஃபான்ட்ஸ்களையும் விரைவில் செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு விடை பெற்றேன்.
    சில நாட்கள் கழித்து விகடனிலிருந்து ஒரு பெரிய தொகைக்கு செக் வந்தது. தொகை எவ்வளவு என்று சொன்னால் திருஷ்டி பட்டுவிடும். அதற்குப் பிறகு மேலும் ஆறு ஃபான்ட்ஸ்களை செய்து கொடுத்தேன். அதற்கும் செக் வந்தது.     சில வாரங்கள் கழித்து, பத்து ஃபாண்ட்ஸ்களை செய்து  “ இவை என்னுடைய   அன்பளிப்பு. பணம் அனுப்பாதீர்கள்” என்று சொல்லிக் கொடுத்தேன். நான் செய்த ஃபான்ட்ஸ் சிலவற்றை இங்குள்ள படத்தில் காணலாம்.) .
     இவ்வளவு பணம் செலவு செய்து விகடன் வாங்கிய ஃபான்ட்ஸ்கள் சில மாதங்களிலேயே அங்கிங்கெனாதபடி தமிழ் நாடு பூரா பரவி விட்டது
           என் எழுத்துருக்களில் ஒரு ரகசிய அடையாளம் வைத்திருக்கிறேன். இதை நான்  சொல்லிக்கொள்ளலாமே தவிர வேறெதுவும் என்னால் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட எழுத்தில் இருந்த சின்ன குறையை   சரி செய்வதற்கு  மறந்து போய்விட்டது.. என் கண்ணில் மட்டும்  படக்கூடிய குறையுடன்தான் அதைப் பலர்  இன்று உபயோகப்படுத்துகிறார்கள். கல்கி இதழுக்கும் ஆறுஃபான்ட்ஸ் செய்து தந்தேன். மதிப்பிற்குரிய கோபுலு லெட்டரிங்க் பண்ணித்  தந்தார். கோபுலு  என்ற ஃபான்டையும்  செய்தேன்.
அழகி          
இதன் பிறகு 2002-ல் சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற கணினி நிபுணர் ஒரு தமிழ் மென்பொருளை உருவாக்க முனைந்தார். அவருக்கு தமிழ் ஃபாண்ட்ஸ் செய்து கொடுப்பவர்கள் கிடைக்கவில்லை. பலரை அணுகிப் பார்த்தார் .பலனில்லை. இந்த சமயம் அவருடைய மென்பொருளின் முயற்சியைப் பற்றி இன்டர்நெட்டில் பார்த்தேன். அவருக்கு ஃபான்ட்ஸ் தேவையாயிருப்பின் செய்து தருகிறேன் என்று எழுதினேன். (அப்பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன்.) டிஸ்கி டைப் எழுத்துருக்கள் கிடைக்காமல் அவதிப்படுவதாக எழுதினார். அந்த சமயம் ஃபான்டோகிராஃபர் என்ற மென்போருளின் புதிய வர்ஷன் வெளி வந்தது. விஸ்வநாதனுக்கு உதவுகிறேன் என்று சாக்குச் சொல்லிவிட்டு அந்த மென்பொருளை பதினேழாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். பதினைந்து நாட்களில்ஒரு  டி. டி. எஃப் .(TTF FONT)  எழுத்துருவை, விஸ்வநாதன் சொன்னபடியெல்லாம் மாற்றி மாற்றி தயார் பண்ணினேன், சுமார் இருபது தடவைக்குப் பிறகு ஓ. கே. ஆனது. அழகி என்ற பெயரில் உருவாக்கிய அபாரமான மென்பொருளில் அதைச் சேர்த்து விஸ்வநாதன்  விற்பனைக்கு விட்டார். (அழகி பற்றி மேலும் அறிய  www.azhagi.com  தளத்திற்குச் செல்லவும்)
     சென்ற வாரம் விஸ்வநாதன் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை எனக்கு மெயிலில் அனுப்பினார். அமெரிக்காவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் படிவங்களை பூர்த்தி
செய்யலாம் என்று அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது என்றும் தமிழில் இரண்டே இரண்டு ஃபான்ட்களை அங்கீகரித்து இருக்கிறார்கள் என்றும் எழுதி இருந்தார். அந்த இரண்டு ஃபாண்ட்களில். ஒன்று இந்திய அரசின்  ’சிடேக்’ சென்டர்  உருவாக்கிய வள்ளுவர் ஃபான்ட்.  இரண்டாவது:  ’அழகி’யின் சாய் இந்திரா ஃபான்ட்  என்றும் தெரிவித்தார். சாய் இந்திரா எழுத்துரு  (SAIINDIRA.TTF ) நான் உருவாக்கியது என்பதை   கர்வத்துடனும் பெருமிதத்துடனும்  தெரிவிக்க விரும்புகிறேன். சுமார் 50 ஆண்டு காதலுக்குக் கிடைத்த வெற்றி!
    டிஸ்கி ஃபாண்ட் தவிர யூனிகோட் எழுத்துருக்களையும்  உருவாக்க முனைந்தேன் ( விண்டோஸில் உள்ள லதா ஒரு . யூனிகோட் எழுத்துரு ) வோல்ட் என்ற மென் பொருளை உபயோகித்துத் தான் யூனிகோட் எழுத்துருவை உருவாக்க முடியும். இந்த VOLT மென்பொருளைப்   புரிந்து கொள்ள மிகவும் கஷ்டப்பட்டேன், இன்டர்நெட்டில் பலர் என் சந்தேகங்களை விளக்கினார்கள். துபாயிலிருந்த உமர் என்பவர் எனக்கு மிகவும் ஊக்கமளித்து என் முதல் யூனிகோட் ஃபான்ட்டை  (யூனி-வைகை) உருவாக்க உதவினார். (வருத்தத்திற்குரிய விஷயம் உமர் சமீபத்தில் நோய் வாய்ப்பட்டு காலமாகிவிட்டார்.) அவர் மறைவு எனக்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கே பெரிய இழப்பு..
தஞ்சை சரஸ்வதி மஹாலுக்காக கி. மு. நான்காம் நூற்றாண்டு கல்வெட்டெழுத்துக்களையும், கி.வா. ஜ. அவர்களின் புதல்விக்காக திருப்புகழ் ஸ்வர-சாகித்தியப் புத்தகம் அச்சடிக்க ’முருகா’ என்ற விசேஷ ஸ்வர ஃபான்ட்டைச் செய்து தந்தேன்.
    சமீபத்தில் சிவகாமி, குந்தவி, நந்தினி, வந்தியத்தேவன், புலிகேசி, ராஜராஜன் என்ற பல எழுத்துருக்களைச் சேர்த்து ஆனந்தி என்ற தமிழ் மென்பொருளை நானே உருவாக்கினேன்.இந்த மென்பொருளின் சிறப்பை பிறகு எப்போதாவது பார்க்கலாம்.
      டிஸ்கி வகை எழுத்துருக்களில் காவேரி, தாமிரபரணி, பாலார், வைகை, பொன்னி பொருனை என்ற பல நதிகளின் பெயர்களில் உருவாக்கினேன். அனைத்தும் இலவசம்.
இவை யாவும் தமிழ்த் தாயின் பாதங்களில் நான் வைத்த மலர்கள்.
       என் தயாரிப்புகள் அழகில்லாமல் இருக்கலாம்; மணமில்லாமல் இருக்கலாம். எனினும் அவைகள் மலர்களே!

    நான் ஒரு எழுத்தாளன் என்று பெருமைப்படுவதைவிட எழுத்துக்களை உருவாக்கியவன் என்று சொல்லி ஒரு படி அதிகமாகவே பெருமைப்படலாம் என்று நினைக்கிறேன்.

கணினி எழுத்துருக்களும் நானும் - கடுகு

முன் குறிப்பு:
1) எழுத்துருக்கள் என்றால் FONTS  என்று பொருள்!
2)  இந்தக் கட்டுரை புத்தாண்டு ஸ்பெஷல் என்பதால் வழக்கத்தை விடக் கூடுதலாக போர் அடிக்கக் கூடும்!

        கணினியில் எழுத்துகளை அச்சடிக்கத் தேவையானவை: எழுத்துருக்கள். அதாவது ஃபாண்ட்ஸ் (  FONTS). இந்த  எழுத்துருக்களை உருவாக்குவது ஒரு வித்தை. நிறைய நகாசு வேலை செய்தால் அழகாக அமையும். எனக்கு ஃபாண்ட்ஸ் மேல் மிகுந்த மோகம் உண்டு. . இவைகளை உருவாக்கும் முறைகளை நானாகவே விழுந்து எழுந்து   கற்றுக் கொண்டு நிறைய எழுத்துருக்களை உருவாக்கி இருக்கிறேன். இத்தனைக்கும் நான் கணினி படிப்பு எதுவும் படித்தவனல்ல!
துவக்கம்.
சிறு வய்து முதலே (” ஆரம்பிச்சுட்டார்யா என்று யாரோ சொல்வது என் காதில் விழவில்லை!”) சித்திர எழுத்துகள்.  CALLIGRAPHY, ஆகியவைளில் ஆர்வம் உண்டு. பத்திரிகைகளில் வரும் கதைத் தலைப்புகளைப் பார்த்து எழுத முயற்சிப்பேன். பேசும் படம் என்ற பத்திரிகையில் பி.எஸ்.ஆர் (!) என்று ஒரு ஆர்டிஸ்ட் மிக அழகாக லெட்டரிங்க் செய்வார்.  ஓவியர் மணியம் எழுதும் தலைப்புகளும் மிகப் பிரமாதமாக இருக்கும். பொன்னியின் செல்வன், அமரதாரா, பாலும் பாவையும் தொடர்களுக்கு அவர்தான் தலைப்புகள் எழுதியவர்.
 கல்லூரியில் என் பக்கத்து சீட்காரனான ஜி. ராமகிருஷ்ணாவின் மாமா தான் பிரபல விளம்பர டிசைனர் ஜி.எச்.ராவ். அந்த காலத்தில் இவர் டிசைன் செய்யாத தமிழ்ப் படங்கள் மிகக் குறைவு. லெட்டரிங்க் அபாரமாக இருக்கும். ராமகிருஷ்ணா என்னைப் பல தடவை  ராவின் அரண்மனைக்கார ஸ்டூடியோவிற்கு அழைத்து போயிருக்கிறான். அங்கு லெட்டரிங்க் விததையை ஓரளவு புரிந்து கொண்டேன்.
  இந்த சமயம் :ஸ்பீட்பால் நிப்ஸ் என்று அமெரிக்க கம்பனி, லெட்டரிங்க் புத்தகத்தை வெளியிட்டது. சென்னை இருளப்பன் தெருவில் ஒரு வீட்டில் இருந்த ஸ்டேஷனரி கடையில் மட்டும்தான் கிடைக்கும் என்று கண்டுபிடித்து
அங்கு போனேன். விலை முழுதாக ஐந்து ரூபாய் என்றார்கள். மயக்கமே வந்து விட்டது. கல்கி இரண்டணா விற்ற காலகட்டம்.( என்பது நினைவு).  ஒரு மாதிரி கஷ்டப்பட்டு வாங்கினேன். அதில் பல வித லெட்டரிங்க் நிப்புகளை உபயோகித்து எழுதும் முறைகளை விளக்கி இருந்தார்கள். நிப்புகள் சைனா பஜாரில் இருந்த ’நாதன் அண்ட் கோ’வில் கிடைக்கும் என்று அறிந்து அங்கு போய்க் கேட்டேன்.28 நிப்புகள் கொண்ட பெட்டி 14 ரூபாய் என்றார்கள். இரண்டு  மூன்று மாதங்களில் எட்டு நிப்புகள் வாங்கிவிட்டேன். 60 வருஷங்கள் ஆகின்றன். இன்னும் 2,3 நிப்புகள் உள்ளன. அந்த நிப்புகளை உபயோகித்து சித்திர எழுத்துகளை ஓரளவு சுமாராக எழுதக் கற்றுக்கொண்டேன்.

கமலாவும் சூரிய அடுப்பும் - கடுகு

டெல்லி தூர்தர்ஷனில் வந்தத் தலைப்புச் செய்திகளில் ஒன்று : நாளைக் காலை முதல் சூபர் பஜாரில் சூரிய அடுப்பு விற்பனைக்கு வருகிறது.
உடனே, செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த என் அருமை மனைவி கமலா, "நாளைக்குப் போய் ஒரு ஸோலார் குக்கர் வாங்கிக் கொண்டு வந்துடுங்க. என்ன, திக்பிரமை பிடிச்ச மாதிரி பார்க்கறீங்க? ஆரம்பத்தில் 200 ரூபாய் குறைத்துக் கொடுக்கிறார்கள்'' என்று ஆரம்பித்த அவளை இடைமறித்து,
"ஒரு காஸ் அடுப்பு, இரண்டு ஸ்டவ், ஒரு நூதன், ஒரு எலக்ட்ரிக் அடுப்பு இத்தனை இருக்கிறது. இன்னொரு அடுப்பு எதுக்கு?'' என்றேன்.
"காசு செலவு இல்லாமல் சமையல் ஆயிடுமே இதில்? இரண்டு மணி நேரம் வெய்யிலில் வைத்தால் போதும். நாலு பாத்திரத்தில் சமையல் ரெடி. இரண்டு மணி நேரம் சூடு ஆறாது...''
"உனக்கெப்படித் தெரியும்?''
"இப்பத்தான் டி.வி.யில் சொன்னார்களே, என்ன நியூஸ் கேட்டீர்களோ?''
"சரியாகக் கவனிக்கலை...''
"கவனிக்கலையா?   நியூஸ் படிக்கிறவளைச் சாப்பிடுகிற மாதிரி கண் கொட்டாமல் பார்த்துட்டு இருந்தீங்களே? நன்னா தான் கவனிச்சீங்க.  எந்தக் கற்பனை லோகத்தில் இருந்தீங்களோ. சரி...சரி, நாளைக்கு முதலில் ஒரு குக்கர் வாங்கணும்.'' என்றாள் தீர்மானமாக.

கேரக்டர்: பூபதி - கடுகு

குறுகலான மார்க்கெட் வீதியின் ஆரம்பத்தில் உள்ள பழையகால கடையில், சுற்றும் பல வித டின் டப்பாக்கள் சூழ, நடுநாயகமாகச் சின்ன ஸ்டூலில் சம்மணமாக உட்கார்ந்து கொண்டு, ஒரு கையால் உத்திரத்திலிருந்து தொங்கும் கயிற்றைப் பற்றியபடியே மற்றொரு கையால் சாமான்களை எடுத்துக் கொடுத்து, பணத்தை வாங்கிப் பக்கத்தில் உள்ள கல்லாப் பெட்டியில் பணத்தைப் போடுபவர் பூபதி. ஊரின் ஒரே நாட்டு மருந்து கடையின் அதிபர்.
கடை பரம்பரை சொத்து. மருந்து சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும் டின்களின் மேல் உள்ள துருவே, கடையின் வயது ஐம்பதுக்கு மேல் என்பதை நிரூபிக்கும். அந்த டப்பாக்களின் மேலே கோணல் மாணலாக வசம்பு, திப்பிலி, கண்டங்கத்திரி, இந்துப்பு, கிச்சிலிக்கிழங்கு, குங்கிலியம், ஏலரிசி என்று பல நாட்டுமருந்துப் பெயர்கள்.  கடைப் "பையனு'ம் ரொம்ப புராதன ஆசாமிதான்.
பளிச்சென்ற வெள்ளை வேட்டி. ஸ்லாக், கழுத்தில் தங்கப் பூண்போட்ட ஒற்றை ருத்திராட்சம், இடது கையில் தங்கச் செயின் போட்ட கோல்ட் வாட்ச், விரலில் இரண்டு மூன்று மோதிரங்கள், உட்கார்ந்தே வியாபாரம் செய்வதால், சற்றுப் பருமனடைந்த உடல், உப்பி இருக்கும் கன்னம், புல்தரை போன்ற மீசை, சதா பேசிக்கொண்டிருக்கும் வாய் ---இவைதான் பூபதி.

லைப்ரரியில் ஒரு அனுபவம் -- கடுகு

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது ட்யூக் சர்வகலாசாலையில் (நார்த் கரோலினா) உள்ள லில்லி லைப்ரரிக்குச் சென்று புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
லண்டனிலிருந்து வெளி வந்த `சாடர்டே புக்' இதழ்களின் பைண்ட் வால்யூம்கள் கண்ணில் பட்டன அந்த காலத்தில் இது  மிகவும் மதிப்பு மிக்கப்  பத்திரிகை.. 1944ம் வருடத் தொகுப்பை எடுத்துப் புரட்டிய போது முதல் பக்கத்தில் யாரோ எழுதியிருந்தார்கள். அதைப் படிக்கப் படிக்க வியப்பு ஏற்பட்டது.
ஃப்ரெட் ஜோசப் என்று கையெழுத்திட்டு ஒருவர் எழுதியிருந்தார்.
``இது 1944 வருஷத்திய சாடர்டே புக் இதழின் தொகுப்பு. இதில் கடைசிக் கட்டுரையை எழுதியிருப்பவன் நான். அடுத்த 12 வருடங்கள் ஒவ்வொரு ஆண்டு தொகுப்பிலும் என் கட்டுரை இடம் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். (இந்தக் குறிப்பை 1956ம் வருடம் எழுதுகிறேன் என்பதைக் கவனிக்கவும்.) இப்படி, தொடர்ந்து 12 வருடங்கள் எவருடைய கட்டுரையும் இடம் பெற்றதில்லை.
இப்படிப்பட்ட பெருமையைப் பெற்ற நான் ஒரு எழுத்தாளன் இல்லை.
லண்டனில் நான்காம்தர பகுதியில் நடைபாதையில் பழைய புத்தகங்களை விற்கும் மூன்றாம் தர ஆசாமி நான்.

ஒருநாள் கடையை விரித்து விட்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். அருகே இருந்த சாடர்டே புக் இதழைப் படித்துப் பார்த்தேன். அதில் ஒரு கட்டுரையைப் படித்தேன். மிக மிகச் சாதாரணமாக இருந்தது கட்டுரை. இதைவிட நன்றாக என்னால் எழுத முடியும் என்று தோன்றியது. உடனே எழுதத் துவங்கினேன். எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் சாமர்செட் மாமின் கதைகள். அவரது எழுத்துக்களின் மேல் எனக்கு ஒரு மோகம் உண்டு. அவரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அதை விரிவாக எழுதி அனுப்பினேன். சாடர்டே ரீடரில் அது பிரசுரமாகியது. அந்தக் கட்டுரைதான் இந்தத் தொகுப்பில் உள்ளது.
12 வருடங்கள் தொடர்ந்து கட்டுரைகள் வந்தாலும் நான் மாறவில்லை. அதே நடைபாதையில், அதே கோட், குல்லா போட்டுக் கொண்டு புத்தகம் விற்றுக் கொண்டிருக்கிறேன்'' என்று எழுதியிருந்தது.

April 11, 2010

தமிழ் முத்து- 7 அரவம் கரந்ததோ

அரவம் கரந்ததோ  அச்சுமரம் இற்றுப்
புரவி கயிறுருவிப் போச்சோ - இரவிதான் செத்தானோ
இல்லையோ தீ வினையோ பாங்கி எனக்கு
எத்தால் விடியும் இரா.        
                                     - ஒப்பிலாமணிப்  புலவர்
-----------
 தலைவனின் வரவுக்காக காத்திருக்கும் தலைவி, இரவுப் பொழுது நீண்டு கொண்டே போகிறதே என்ற ஆதங்கத்தில், சூரியன் வராததற்குக் காரணம் அவனைப்  பாம்பு கடித்ததோ என்பது போன்ற பல காரணங்களை வெறுப்புடன் பட்டியல் இடுகிறாள்!

கமலாவும் டூரும் - கடுகு

P.M..மின் டூர் புரோகிராம் ( P.M. என்பது ”பிரியமுள்ள மனைவி” என்பதன் சுருக்கம்!)
   
         நமது பிரதம மந்திரி எங்கேயாவது சுற்றுப் பயணம் செய்தால், அவரது நிகழ்ச்சி நிரலை மணிப்பிரகாரம் விவரமாகத் தயாரிக்கிறார்கள். எங்கள் வீட்டு பி. எம். (பிரியமுள்ள மனைவி!) மிற்கும் இம்மாதிரி ஒரு டூர் புரோகிராம் போட்டால்?
   
     வியாழக்கிழமை 2’ம் தேதி :
      காலை 7 :
சாயங்காலம் மிஸஸ் சுதாமூர்த்தி வீட்டு நவராத்திரிக்கு எந்தப் புடவை கட்டிக் கொண்டு போவது என்பதை ஆராய்வார்.
     காலை 8 :
மேற்படி பிரச்சினையைத் தொடர்ந்து ஆராய்வார். (நாள், கிழமைக்குக் கட்டிக் கொண்டு போக டீசண்டா ஒரு புடவை கிடையாது. சாயம் போனதும், தையல் போட்டதும் தான் என் ராசி ஹும்.'' என்று அலுத்துக் கொள்ளுதல்.)
     காலை 9:
ஒரு பட்டுப் புடவையைத் தவணை முறையில் வாங்குவதற்குக் கணவரிடம் அனுமதி பெறுதல் (அதே சமயம் புடவை தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு லேசாகப் புன்னகை புரிதல்.)

கனகாம்பரம் - கடுகு

திருவாளர் கனகாம்பரம் அவர்களைச் சுருக்கமாக வர்ணிக்க வேண்டுமானால் `இலக்கியக் காதலன்' என்று சொல்லலாம். நிறைய இலக்கியங்களைப் படிப்பதுடன் எழுத்தாளர்களுடன் கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொண்டால் நல்ல எழுத்தாளனாக உருவாகலாம் என்பது அவரது எண்ணம். இது மட்டும் அல்ல; கல்கத்தா வரும் எழுத்தாளர்களுக்குப் பல விதங்களில் உதவி செய்வார். ஹெளரா ஸ்டேஷனில் வரவேற்பார். அவர்களுக்கு ஊரைச் சுற்றிக் காட்டுவார். பாலிகஞ்ச், சௌத் இந்தியா கிளப்பில் பொங்கல், வடை சாப்பிடச் செய்வார். அவர்கள் கேட்கும் பொருள்களை - இரண்டு அலுமினிய வாணலி, நான்கு ரஸகுல்லா டின்கள், இரண்டு பெங்கால் காட்டன் புடவை - வாங்கித் தருவார்.
  இப்படி எல்லாம் உதவி செய்து அவர்களை நன்றிக் கடன்படச் செய்துவிடுவார். அவர்களும் நன்றிக் கடனைத் தீர்க்க, கனகாம்பரத்தின் ஆராய்ச்சிக் கட்டுரையை ஒரு துணுக்கு அளவுக்குச் சுருக்கித் தங்கள் பத்திரிகையில் வெளியிடுவார்கள்!  கனகாம்பரம் டல்ஹெளசியில் ஒரு அச்சகத்தில் புரூஃப்ரீடர். (இதுவும் எழுத்துத்துறை சம்பந்தப்பட்டது என்று அதில் பணிபுரிகிறாரோ!)

April 08, 2010

அன்புள்ள டில்லி - 18

ஸ்ரீதருடன் ஜலந்தருக்கு
டைரக்டர் ஸ்ரீதர் என் நண்பர் மட்டுமல்ல. நானும் அவருக்கு நண்பர். ’ஸ்ரீதரும் நானும்’ கட்டுரையில் விரிவாக எழுதி இருக்கிறேன்.)

 ஸ்ரீதர் ஒரு சமயம் டில்லி வந்திருந்தார். அவர் தயாரித்து வந்த ஹிந்திப் பட பிஸினஸ் விஷயமாக ஜலந்தர் போக வேண்டியிருந்தது. நானும் அவரும் ஒரு  காரில் சென்றோம்,  மறுதினம் மாலைதான் திரும்பினோம். . இதில் வேடிக்கை என்னவென்றால் காரில் போகும்போது பேசியது போதாது என்று, ஜலந்தர் ஹோட்டல் அறையில் இரவு முழுதும் பல விஷயங்களை விடாமல் பேசித் தீர்த்தோம்.
நாங்கள் சென்றது பயங்கர டிசம்பர் குளிரின் போது. பல வருஷங்களாக டில்லியில் இருந்த எனக்கே குளிர் கடுமையாக இருந்தது. ஸ்ரீதருக்கு? நம்ப மாட்டீர்கள். இரவு ஷர்ட்டைக் கழற்றிவிட்டார். போதாதற்கு மின் விசிறியையும் சுழல விட்டார்.நான் குளிரில் மரவட்டை மாதிரி சுருண்டு விட்டேன்.
ஸ்ரீதர் என்னிடம் சொன்ன விஷயங்களைக் கிசுகிசுவாக எழுத ஆரம்பித்தால், பல நூறு துணுக்குகளை எழுத முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஜலந்தரில் ஸ்ரீதரைச் சந்தித்த சில பஞ்சாபி டிஸ்ட்ரிப்யூட்டர்கள், தமிழ் நடிகர், நடிகைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்த விவரங்களுக்கு முன் இவை ஒன்றுமே இல்லை. அத்துடன் பல படத் தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள், டெக்னீஷியன்கள் ஆகியவர்களைப் பற்றியும் நிறையத் தெரிந்து வைத்திருந்தார்கள். லேட்டஸ்டாக இருந்தார்கள். பேச்சில் லட்சங்கள்தான் அதிகம் அடிபட்டன.
ஸ்ரீதருக்கு அவர்கள் காட்டிய மரியாதையைப் பார்த்து அசந்து போய்விட்டேன். ஸ்ரீதரே நேரே வந்து விட்டதால் காரியம் பத்து நிமிஷத்தில் முடிந்து விட்டது. என்னையும் ஒரு வி.ஐ.பி.யாக கருதி உபசரித்தார்கள்!
பிரியா விடை
டில்லியில் உள்ள ஒரு விளம்பர எஜன்ஸிக்கு ஒரு தமிழ் எழுத்தாளர் முழு நேர காபிரைட்டராகப் பணியாற்றத் தேவை என்று அறிந்து என்னைப் பற்றி குறிப்புகளை அனுப்பினேன். கதை, கட்டுரை எழுதும் போது தோன்றும் கற்பனைகளை விட, என்னைப் பற்றி சுயப் பிரதாபம் அடித்துக் கொண்டபோது பெருக்கெடுத்த கற்பனைகள் பல மடங்கு அதிகமானவை! ( வலைப்பூவைப் படித்துவரும் உங்களுக்கு நான் சொல்லவேண்டிய அவசியமில்லை.)
அந்த ஏஜன்ஸிகாரர்கள் அதில் உள்ளவற்றைப் படித்து நம்பினார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஆசாமி கற்பனை வளம் உள்ளவன் என்று தெரிந்து கொண்டார்கள். சுயப்பிரதாபம் என்பதும் ஒரு விளம்பரம தானே!  ஆகவே பேட்டிக்குக் கூப்பிட்டார்கள்.

கைதியின் கடைசிக் கடிதம் - கடுகு

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது      மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.
``என் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளை அப்படியே இக்கடிதத்தில் எழுதுகிறேன். என் கைகளில் விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் என் கையில் இல்லாமல் என் எண்ணங்களுக்கு போடப்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.
எங்களைப் போன்றவர்களுக்கு உலகில் இரண்டே இரண்டு `சாய்ஸ்'தான் உள்ளன. மேலும் மேலும் மேன்மை பெறுவது; அல்லது பின்தங்கிப் போவது. இதற்கு இடைப்பட்ட நிலை கிடையாது. கடவுளை நெருங்குவதற்காக கடினமான பணிகளைச் செய்தவர்களுக்கும் இதுதான் நிலைமை. இடையில் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எப்படி ஒரு ராணுவம் வெற்றிப் பாதையில் செல்லும் போது பல தோல்விகளைக் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கிறதோ அது போல்தான்! ஆகவே நம்பிக்கை இழந்து விட்டு, எடுத்த பணியை கைவிடக் கூடாது. மாறாக மேலும் நெஞ்சுரத்துடன் செயல்பட்டு நம் குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும்.
நீ கடவுளை நேசி. உன் அண்டையில் உள்ளவர்களை நேசி. இந்த இரண்டு விதிகளில் எல்லாமே அடங்கியுள்ளன.
நாட்டில் எவை எப்படி உள்ளனவோ அப்படி இருப்பதே சிறந்தது என்று பலர் நம்புகிறார்கள். நாட்டில் அநீதி தலைவிரித்தாடினால் நாமும் அப்படியே அநீதியைக் கடைப்பிக்க வேண்டும் என்றாகி விடும். ஆகவேதான் நான் உண்மையை அப்படியே கூற வேண்டும் என்று உறுதியாக உள்ளேன். இதன் விளைவாக என் உயிரையே இழக்க வேண்டியிருந்தாலும் கவலையில்லை. ஆட்சியாளர்கள், நிர்ப்பந்தப்படுத்தும் சத்தியப் பிரமாணத்தை நான் எடுத்துக் கொண்டு அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க என்னால் இயலாது.
அன்புள்ள மனைவியே, உன் துயரத்திற்கும் எரிச்சலுக்கும் காரணமான காரியங்களை நான் ஏதாவது செய்திருந்தால், என்னை மன்னிக்கவும். நம் ஊரில் உள்ள எவரையாவது புண்படுத்தியிருந்தாலோ எரிச்சலடையச் செய்திருந்தாலோ என்னை மன்னிக்கும்படி அவர்களிடம் சொல்லவும். என்னைப் பொறுத்த வரை நான் எல்லாவற்றையும் மன்னித்து விட்டேன்...''
* * *
இது  சிறையிலிருந்து , உயர்ந்த  கொள்கை பிடிப்புள்ள கைதி தன் மனைவிக்கு எழுதிய கடைசிக் கடிதம். .

April 06, 2010

அந்தக் காலம்

இது தான் உண்மையான நன்றி - கடுகு

-------------------------------------------------------

-------------------------------------------------------- அமெரிக்காவில் பிரசுரமான ‘பிக்கர்சன்ஸ்’ என்ற ஒரு புத்தகத்தைச் சமீபத்தில் அமெரிக்காவில் வாங்கினேன். ஆசிரியர் முன்னுரையில் எழுதி இருந்தது என் கவனத்தைக் கவர்ந்தது, 
டைப் செய்த  என். லோகநாதனுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்!

April 05, 2010

கடவுள் கை கொடுத்தார் - கடுகு

ஒரு உண்மைச் சம்பவம். முப்பது வருடத்திற்கு முன்பு நடந்தது.
என் நண்பரின் அப்பாவிற்குக் கரோல்பாக்கில் அஜ்மல்கான் ரோடுக்கு வெகு அருகில் மூன்று அடுக்கு மாடி வீடு சொந்தமாக இருந்தது. அவருக்கு மூன்று பிள்ளைகள். மூன்று பிள்ளைகளும் ஒவ்வொரு மாடியில் இருந்தார்கள். என் நண்பர் தன் தந்தையைத் தம் வீட்டிலேயே வைத்துக் கவனித்துக் கொண்டு வந்தார். தந்தை காலமாவதற்கு முன்பு தன் உயிலை மாற்றி எழுதினார்.  ( படம்: அஜ்மல்கான் தெருவை ஒட்டிய வீதியில் அவர் வீடு உள்ள வீதி) அந்த வீட்டை முழுமையாக என் நண்பரின் பெயரிலேயே எழுதி விட்டார். இப்படி மாற்றி எழுதியது  பிள்ளைகளுக்குத் தெரியாது. உயிலில் சாட்சியாக ஒரு வக்கீல் நண்பரையும், டாக்டர் நண்பரையும் கையெழுத்துப் போடச் செய்திருந்தார்.
தந்தை காலமானதும் உயில் விவரங்களை என் நண்பர் தெரிவிக்க மற்ற இரு சகோதரர்களும் கொதித்து எழுந்தார்கள். வாய்ச் சண்டை, கைச் சண்டை என்று நடந்தது. உயில் பொய் என்று கேஸ் போட்டார்கள்.
தன் சகோதரர்களைக் கூப்பிட்டு ஒரு சமாதான ஏற்பாட்டைச் சொன்னார் என் நண்பர். ``இந்த உயில் பொய் என்று வழக்குப் போட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஜெயிக்கப் போவதில்லை.நம் அப்பா இப்படி உயில் எழுதினார் என்று எனக்குத் தெரியாது. இறந்து போவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் உயிலைப் பற்றி என்னிடம் கூறினார். அப்பா உங்களுக்குப் பங்கு தராவிட்டாலும் பரவாயில்லை. நான் ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் தருகிறேன். அதைப் பெற்றுக் கொண்டு வீட்டைக் காலி பண்ணி விடுங்கள். நமது உறவு கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை'' என்றார்.

April 03, 2010

தமிழ் முத்து - 7 சூலாயுதம் கொண்டு

சூலாயுதம் கொண்டு எமதூதர் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டால்
வேலா வேலா என்றழைப்பேன் அவ்வேளையில்
மாலான வள்ளி தெய்வ யானையுடன் மயில் விட்டிறங்கி
இரு காலால் நடந்து வரவேணும் என் திருத்தணி கந்தப்பனே

---????

பாப்ஜி - கடுகு

எந்த விழாவிலும், கூட்டத்திலும், நிகழ்ச்சியிலும் பாப்ஜியின் தலையைப் பார்க்கலாம். மிகப் பெரிய நிகழ்ச்சியிலும் மேடையில் இருப்பார். சாதாரணமாக நாலே பேர் வரக்கூடிய சின்ன கூட்டத்திலும் அவர் இருப்பார். எல்லா சமயத்திலும் ஒரே ஆர்வத்துடன் இயங்குவார்.
     பாப்ஜியின் வேலை என்ன? வருவாய்க்கு என்ன செய்கிறார்? என்று கேட்காதீர்கள். சங்கங்களை நடத்துவதே அவர் வேலை அகில உலக அறிவு ஜீவி வாக்காளர் மன்றம், டிம்பக்டு ஆசிரியர் போராட்ட ஆதரவு குழு, இந்தியா பராகுவே நேசக் கழகம், உலக வறுமை ஒழிப்புக் கமிட்டி, ஆளுக்கொரு வீடு இயக்கம், விதேசிப் பொருள் விலக்க மன்றம், இந்திய கமர்கட் வியாபாரிகள் சம்மேளனம், தொடர்கதை படிப்போர் குரூப், சினிமாவில் நடிக்கும் பிராணிகள் ரசிகர் மன்றம் என்பன போன்ற பல அமைப்புகளில் அவருக்குத் தொடர்பு உண்டு.
அவரது சின்னக் காரில் பின்சீட்டில் ஏதாவது நிகழ்ச்சிக்கான நோட்டீஸ், போஸ்டர், சாவனீர் என்று நிறைய காகிதங்கள் எப்போதும் இருக்கும். பாப்ஜியிடம் மாட்டிக்கொண்டால் தப்புவது கஷ்டம்.
"உங்களைப் பார்க்கத்தான் வருகிறேன். இந்தாருங்கள் இன்விடேஷன். நாளைக்கு ஈவினிங்க் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் வீட்டில் டிஸ்கஷன். கட்டாயம் வரணும்'' என்பார்.

April 01, 2010

உதிரிப்பூ - துவளாதீர்கள்

 வெற்றியைக் கண்டு துள்ளினாலும் தவறில்லை. தோல்வியைக் கண்டு துவளக் கூடாது. அப்படித் துவண்டால் தோல்வி உங்களை வெற்றி கொண்டு விடும்.
    என் மிக நெருங்கிய  நண்பன் ராமசாமியின் கதையைக் கூறுகிறேன். நானும் அவனும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.
    அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு முன் பள்ளிக்கூடத்தில் "செலக் ஷன்' பரீட்சை என்று வைப்பார்கள். அதில் நல்ல மார்க் வாங்குகிறவர்களைத் தான் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுத அனுமதிப்பார்கள். நிறையப் பேர் வடிகட்டப்படுவார்கள்.
 பரீட்சையில் என் நண்பன்  பொதுவாக 100க்கும் மேற்பட்ட  மார்க்குகளை வாங்கக் கூடியவன். கணக்குப் பாடத்தில் கோட்டைவிட்டு விட்டான்.
    எல்லா மாணவர்களின் மார்க் லிஸ்ட்டையும் அவரவர்களிடம் ஹெட்மாஸ்டர் கொடுத்தார். ஆனால் ராமசாமியின் லிஸ்டைத் தரவில்லை. ராமசாமி செலக் ஷனில் நிறுத்தப்பட்டிருந்தான். அது தான் நோட்டீஸ் போர்டில் போட்டாயிற்றே. ஏன் மார்க்லிஸ்டைத் தரவில்லை.
    ஹெட்மாஸ்டர் சற்றுக் கிண்டலாக "கடைசியாக ராமசாமியின் மார்க்கைப் படிக்கிறேன். நமது பள்ளிக்கூட வரலாற்றில் ராமசாமி ஒரு சாதனை படைத்திருக்கிறான்.

அன்புள்ள டில்லி- 17

அன்புள்ள டில்லி கணேஷ்
    டில்லியில் பல சங்கங்கள் உள்ளன அவைகளில் நான்கு அமெச்சூர் நாடகக் குழுக்களும் உள்ளன. (இருந்தன என்று சொல்வதும் சரியாக இருக்குமோ?) இந்த நான்கு குழுவினருக்கும் நான் நாடகம் எழுதிக் கொடுத்தேன். அதன் காரணமாகவும் வேறு பல காரணங்களாலும்  இந்த நாடக மன்றங்கள் இப்போது செயலிழந்து உள்ளன. வருஷத்திற்கு ஓரிரு நாடகம் கூடப் போடுவதில்லை. இப்படிப்பட்ட குரூப்களில் இருந்த கணேசன் என்ற இளைஞர் நல்ல திறமைசாலி. நகைச்சுவை உணர்வும், விரைவில் எல்லாரையும் கவர்ந்துவிடும் சாமர்த்தியமும் இருந்தது. பேச்சில் நகைச்சுவை சரளமாகப் பொழியும். அவர் என் நண்பர்.
        ஒரு சமயம் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஆர். கே. புரம் கழகத்தின் ஆண்டு விழாவிற்குப் போயிருந்தேன். தலைவரோ வேறு யாரோ வரத் தாமதமாகவே, அரை மணி நேரம் ஏதாவது புரோகிராம் நடத்தித் தரும்படி என்னைக் கேட்டார்கள். நான் பெரிய கில்லாடி என்பதால் அல்ல. ஆளில்லா டில்லிப் பட்டணத்தில் என்னைப் போல் பல இலுப்பைப் பூக்கள் உண்டு.
    விண்வெளிப் பயணக் கதாகாலட்சேபத்தை நடத்தலாம் என்று தீர்மானித்தேன். பின் பாட்டு பாடவும், "ஆமாம் சாமி' என்று சொல்லவும் சில துணை நடிகர்கள் தேவை. ரிகர்சல் எதுவுமில்லாமல் எப்படி நடத்துவது? சங்கக் காரியதரிசியோ பரபரத்தார். கணேசனிடம் சரியாக மூன்று நிமிஷத்தில் கதையைச் சொன்னேன். அவர்தான் முக்கிய பின்பாட்டுக்காரர்.. சுமாராக பாடக்கூடியவர், "சமாளிக்கலாம்' என்று சொன்னார். மேடை ஏறிவிட்டோம்.
அடுத்த அரைமணி நேரம் ஒரே தமாஷாகக் கதை நடந்தது. எங்களுக்கே ஆச்சரியம், ஒரு ரிகர்சல் கூட இல்லாமல் நடத்தும் கதா காலட்சேபத்திற்கு  இவ்வளவு வரவேற்பா என்று!  கதையை எழுதியவன் நான் என்பதால் எனக்கு ரிகர்சல் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் கணேசனுக்கு?   உண்மையான திறமைசாலியாகவும் கற்பனைத் திறனும் உள்ளவரகவும் இருந்ததால்  அவர் வெளுத்துக் கட்டி விட்டார்.
இந்த கணேசன் தான் டில்லி கணேஷ்  என்று பின்னால் பிரபலமடைந்து தமிழ்த் திரை உலகில்  கொடி கட்டிப் பறந்து கொண்டிருப்பவர். கொஞ்சம் டில்லி கணேஷைப் பற்றி இங்கு கூற விரும்புகிறேன்.
டிண்டா மாமி
டில்லியில் இருந்த போது கணேசன் பேச்சலர். எதோ ஒரு மெஸ்ஸில் சாப்பாடு. அது போரடிக்கும் போதெல்லாம் என் வீட்டிற்கு வருவார். கூட ஒரு நண்பரையும் அழைத்து வருவார். வீட்டிற்குள்ளே வந்ததும் முதல் காரியமாகத் தன் நண்பருடன் ஒரு சின்ன நாடகம் நடத்துவார்.
"எண்டா அவஸ்தைப்படறே? இப்போதுதானே உள்ளே நுழையறோம். அதுக்குள்ளே சாப்பிடறீங்களான்னா மாமி கேட்பாங்க? ஐந்து நிமிஷம்  பொறுத்தால் தட்டு போடுவாங்க. சும்மா இருடா...... சார், இவன் சரியான காய்ஞ்ச கிராக்கி'' என்பார். அவர்களுக்குச் சாப்பாடு பண்ணி போடுவோம். சில சமயம், நாங்கள் சாப்பிட்டு எல்லாவற்றையும் காலி பண்ணிய பிறகு வருவார். "அதுக்கென்ன மாமி அவசரம்? அரை மணியிலே சட்புட்டுன்னு ஒரு வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு கறி பண்ணி அப்பளம் பொரிச்சுட மாட்டீங்களா? உங்க சாமர்த்தியம் யாருக்கு வரும்?'' என்று சொல்வார். கமலாவும் இந்த ஐஸிற்கு மயங்கி சமையல் பண்ணிவிடுவாள்.