February 27, 2010

சுஜாதாவும் நானும் - கடுகு

ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் கணையாழியில் சுஜாதா எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். நானும் கணையாழியில் சில இதழ்களில் டில்லி வாழ்க்கை என்ற தலைப்பில் எழுதி உள்ளேன். கணையாழி ஆசிரியர் திரு.கஸ்துரிரங்கன் என் நண்பர்.குமுதத்தில் சுஜாதா என்ற பெயரில்  ”இதுமட்டும்” என்ற அவருடைய கதை  வந்ததும் அவர் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியவர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தார்.
அவருடைய கதை வெளியான வாரம் நான் கரோல்பாக் போக  வேண்டிய வேலை இருந்தது. அங்கிருந்த அவர் வீட்டிற்குச் சென்று பாராட்டினேன். அப்போது  குமுதத்தில் நானும் ஒரு ஆஸ்தான வித்வானாக இருந்தேன்.
         அவரது அலுவலகம் சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்தது..  பார்லிமெண்ட், கன்னாட் பிளேஸ் போன்ற மத்திய டில்லியிலிருந்து சற்றுத் தள்ளியிருந்தது. அதனால் யு.என்.ஐ கேன்டீன் ஜமாவிற்கு அவர் எப்போதாவதுதான் வருவார்.

வித்தியாசமான நடை மட்டுமல்ல, வித்தியாசமான பதப் பிரயோகங்கள், சற்று கவர்ச்சியான வர்ணணைகள் காரணமாகவும் குமுதத்தில் நைலான் கயிறு தொடர்கதை வெளியானதும் அவருடைய பெயர் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டது.
அச்சமயம் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தேன்.
அந்தக் கதை மறந்து விட்டது. ஆனால் அதில் சில லே அவுட், சில வார்த்தைகளுக்கு வித்தியாசமான ஸ்பெல்லிங், சில எழுத்துக்களைத் திருப்பிப் போட்டிருந்தது, சில வரிகள் சாய்வுப் பாதையாக அமைந்திருப்பது போன்று பல சர்க்கஸ் வித்தைகள் செய்திருந்த அந்தப் புத்தத்தை சுஜாதாவிடம் கொடுத்தேன்.  ( உதாரணமாக அதில் வந்த ஒரு புதுமையைச் சொல்கிறேன்.    “அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிஷம் மௌனமாக இருந்தாள்” என்று  எழுதிவிட்டு, அடுத்த ஒரு பக்கத்தைக் காலியாக விட்டிருந்தார்கள்,) ”என்னென்னமோ பண்ணியிருக்கான்” என்று வியந்து ரசித்தார். இந்த புஸ்தகத்திலிருந்து அவர் எந்த ஐடியாவையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் வித்தியாசமாக சிந்திக்க அந்தப் புத்தகம் ஒரு சதவிகிதமாவது அவருக்கு உதவியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

February 24, 2010

அன்புள்ள டில்லி - 11

எழுத்தாளர் தி. ஜானகிராமன் எவ்வளவுக்கெவ்வளவு திறமை வாய்ந்த  எழுத்தாளரோ அவ்வளவு எளிமை மிக்கவர். அலட்டல் இல்லாதவர். 'இலக்கியப் பத்திரிகைகள் அவரைச் சொந்தம் கொண்டாடினாலும், அந்த ஒரு சின்ன வட்டத்திற்குள் அகப்பட்டுக்  கொள்ளவில்லை.
அவர் டில்லியில் ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றி வந்தார். அவரது அலுவலகமும் என் ஆபீசும் எதிர் எதிர் கட்டடம். யு.என்.ஐ. கான்டீனில் இடைவேளைகளில் அவருடன் எத்தனையோ முறை அளவளாவியுள்ளேன். அவர் எல்லா  பத்திரிகைகளையும் விடாமல் படிப்பவர் அல்ல. ஆனால் படிப்பவைகளை ரசித்துப் படிப்பார்.
ஒரு சமயம் "மோனா"விற்கு  மாத நாவல் ஒன்றை எழுதித் தரும்படி "சாவி' கேட்டிருந்தார். நாவலை வாங்கி அனுப்புவது என் பொறுப்பாக இருந்தது. நான் தினமும் அவரைச் சந்தித்து 10,15 பக்கங்கள் என்று வாங்கி விமான மூலம் அனுப்பி வந்தேன்.
"சார், உங்கள் நாவல் எத்தனை பக்கம் வரும்?'' என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு வியப்பை அளித்தது மட்டுமல்ல, ஒரு அரிய பாடத்தையும் போதித்தது.
"நான் கதாபாத்திரங்களை நன்கு தீர்மானித்து விடுவேன். அதன் பிறகு, கதை என் கையில் இல்லை. பாத்திரங்கள் கையில் உள்ளது. ஆகவே கதையை எத்தனை பக்கங்கள் எடுத்துச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்'' என்றார்.
 ( ஒரு இடைச் செறுகல். பின்னால் நான் ஒரு நாவல் எழுதும்போது அவர் சொன்னபடி கேரகடர்களைத் துல்லியமாக  மனதில் உருவாக்கிக் கொண்டேன். அடுத்து கதையை 16  அத்தியாயங்கள் என்று  நிர்ணயித்து, அந்தந்த அத்தியாயத்தின் கதையை ஒன்றிரண்டு வரிகளில் எழுதினேன். தி.ஜா, சொன்னதை பின்பற்றி எழுதினேன். இரண்டே நாளில் 60 பக்க நாவலை எழுதினேன். அந்த  நாவல் பற்றி இன்னும் பல விவரங்கள் உள்ளன. பின்னால் பார்க்கலாம்.)
 \           சரி, தி ஜா.வின்  நாவலுக்கு வருவோம். ஒரு 29’ம் தேதி கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொடுத்தார். முதல் தேதிக்குள் புத்தகத்தை அச்சடித்து நாலைந்து பிரதிகளை விமான மூலம் ஆசிரியர் சாவி  எனக்கு அனுப்ப, அவற்றை தி.ஜா.விடம் கொடுத்தேன். "அட, ரொம்ப வேகமான் வேலையாக இருக்கிறதே. பாவம், உங்களை மிகவும் சிரமப்படுத்தி விட்டேன்'' என்றார்.
பதிலுக்கு நான் அவரை சிரமப்படுத்திய விஷயத்தைச் சொல்லுகிறேன்.

டாக்டர் தர்மராஜன்- கடுகு


ஒரு சிறு குறிப்பு:
அன்புள்ள டில்லி -11ல் லால்குடி ஜயராமன், என் டில்லி டெலிபோன் நம்பரைக் கண்டுபிடித்து முதன் முதலில் என்னுடன் பேசியதை எழுதியுள்ளேன். அப்போது, தங்கள் ஊர் டாக்டரை அப்படியே அச்சு அசலாகக்  கேரக்டர் கட்டுரையில்  நான் எழுதி இருப்பதாகக் கூறினார். . அந்த கேரகடர் கட்டுரை இதுதான்.
%%%%%%%%%%%
         அந்த போர்டை சற்று உற்றுப் பார்த்தால் தான் "விக்டோரியா டிஸ்பென்சரி,  ஸ்தாபிதம் 1932" என்று எழுதப்பட்டிருப்பதைச் சிரமப்பட்டு படிக்க முடியும்.
"விழுந்து விடுவேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓலைப்பந்தல் அலங்கரித்துக் கொண்டிருக்கிற அந்த பழைய கட்டிடத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே போனால், --ஜாக்கிரதை அங்குமிங்கும் பெயர்ந்திருக்கும் செங்கல்கள் உங்கள் கால் நகங்களைப் பெயர்த்துவிடப் போகிறது-- உள்ளே டாக்டர் தர்மராஜனைப் பார்க்கலாம்.
"வி" கழுத்து மல் ஜிப்பா, "நேரு மாடல்" வழுக்கை, முன் மூக்கில் தங்கப் ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி, பரந்த மேஜையின் முன் எட்டாம் எட்வர்ட் காலத்து நாற்காலியில் அமர்ந்து மருந்து சீட்டு எழுதிக் கொண்டிருப்பவர் தான் டாக்டர். வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார், முக்கியமாய் நோயாளிகள் தங்கள் நோயைப் பற்றிச் சொல்வதற்கு சான்ஸே கொடுக்காமல்! அவ்வப்போது டெலிபோன் மணி வேறு அடிக்கும்.
        அந்த அறையில் இருபதாவது நூற்றாண்டைச் சேர்ந்தது அந்த டெலிபோன் தான். மற்றதெல்லாம் டாக்டரின் தாத்தாவின் காலத்தைச் சேர்ந்தவை. மேஜைமேல் தொங்கும் டோம் விளக்கு, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படங்கள், காலண்டர் எல்லாம் டிஸ்பென்சரியின் வயதைப் பளிச்சென்று எடுத்துக் கூறும்.

February 21, 2010

கமலாவும் ஷாப்பிங்கும்

  மனைவியுடன் ஷாப்பிங் போவதற்குச் சில பேருக்குப் பிடிக்காது. எனக்கு அப்படி அல்ல. என் அருமை மனைவி கமலா ஷாப்பிங் போகக் கிளம்பினால் நானும் கூடவே செல்வேன். ஷாப்பிங்கிற்கு மட்டுமல்ல, காய்கறி கடைக்குப் போகும் போதும்கூடச்  செல்வேன். இதனால் பல தொல்லைகளும் செலவுகளும் ஏற்பட்டாலும், சில சமயங்களில் (கவனிக்க:சில சமயங்களில்!) லாபமும் ஏற்பட்டிருக்கிறது.
    கறிகாய்க் கடைக்குச் சென்றால் கமலா விலை அதிகமாக இருக்கும் காய்கறிகளையே வாங்குவாள்.
    ''...காலிஃபிளவர் என்ன விலை?'' என்று தான் ஆரம்பிப்பாள்.
    "அதன் விலையை ஏம்மா கேக்கறீங்க?... அதெல்லாம் சேட்டுங்க வாங்கறது''  இது கடைக்காரரின் வழக்கமான மனோதத்துவ அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பதில்.
    "நாங்களும் சேட்டுதாம்பா, சொல்லு'' என்பாள் கமலா.
    "பதினெட்டு ரூபாய்'' என்று சொல்ல நினைத்தவர் "இருபது ரூபாய் கிலோ" என்பார்.
    திருமதி கமலா 'சேட்' மறுபேச்சு சொல்லாமல் வாங்கி விடுவாள். அதுவும் கறிகாய்க் கடையில் வேறு சில "ஜரிகை புடவைகள்' வந்திருந்தால் இப்படி ஜம்பத்திற்காகவே வாங்கிவிடுவாள். ஆகவே என் பொருளாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள நானும் அவளுடன் போக ஆரம்பித்தேன்.
    அவள் "காலிஃப்ளவர் என்ன விலை?'' என்று கேட்டதும். உடனே நான் "என்ன கமலா, தினமும் காலிஃப்ளவரும் பச்சை பட்டாணியும் தானா?'' என்று முகத்தில் அலுப்பை வரவழைத்துக் கொண்டு கேட்பேன். (நான் ஒரு சின்ன நடிகர் திலகம்!)
    "அதனாலென்ன, அவ்வளவும் ரத்தம்!'' என்பாள் சற்று உரக்க. மார்க்கெட்டுக்கு வந்திருந்த மாமிகளில் யாருக்காவது காது மந்தமாக இருந்தால்? என்ற முன் யோசனை காரணமாக.
    "ரத்தமாக இருந்தால் என்ன? நாம் என்ன மூட்டைப் பூச்சியா அல்லது சைதாப்பேட்டை கொசுவா?'' என்று மனத்திற்குள் கேட்டுக் கொண்டு, "கமலா ஒரு சேஞ்சிற்குக் கத்திரிக்காய் வாங்கு'' என்பேன். (என் பர்ஸில் வெறும் "சேஞ்ச்' இருப்பது எனக்குத் தானே தெரியும்?)
    கமலா வேண்டா வெறுப்பாகக் கத்திரிக்காய் வாங்குவாள். இந்த நாடகத்தால் எனக்குப் பணமும் மிச்சம், கமலாவின் ஜம்பத்திற்கும் லாபம்.   

February 20, 2010

மணமகன் தேவை!

அம்புஜம் அம்மாள் - கடுகு

மதுராந்தகத்தில்,ஏழெட்டுக்  குடும்பத்தினருக்கு,  பால் "ஊற்றும்" பால்கார அம்புஜம்மாள், உறவினரைவிட நெருங்கினவர்.
சிறிது தடித்த சரீரம். அதை விட தடித்த சாரீரம்.  ஒரு ரூபாய் அளவு குங்குமப் பொட்டு. அறுபதை தாண்டியவள் என்று  சொல்ல முடியாத அளவு சுறுசுறுப்பு
           "என்ன அம்புஜம்... நேற்று பால் ஒரே தபாலா இருந்துதே... இப்படிக் குழாய்த் தண்ணியைக் காசாக்கினால் வருஷத்துக்கு இரண்டு டில்லி எருமை வாங்கிடுவே" என்று யாராவது சொல்லிவிட்டால் போதும். அவ்வளவு தான்--- பிலு பிலு என்று பிடித்துக்கொண்டு விடுவாள்.
           "இதோ பாரு பத்மா... நான் பார்த்துப் பொறந்தவ நீ... இன்னா பேச்சு பேசறே. உன் அம்மா கூட இந்த முப்பது வருஷத்திலே இப்படிக் கேட்டதில்லை.  நேத்து பொறந்த பொண்ணு... பாலு தண்ணியா இருந்தா வுட்டுடேன்.... சைக்கிள் பால் கொண்டாந்து கொடுக்கறாங்களே வாங்கிக்கோ... பால் பவுடரையும் மைதா மாவையும் கரைச்சு ’திக்'காக ஊத்து வாங்க... என்னமோ பரம்பரையா வந்த தொழிலுன்னு தான் இதைச் செய்யறேன். எனக்கு ஆறு பிள்ளைங்க, சம்பாதிச்சுப் போடறாங்க. அவங்க கூட ”ஏன் மாட்டை கட்டிக்கிட்டு அழுவறே” அப்பிடின்னு என்கிட்டே சொல்றாங்க.... பணம், காசுக்கு ஆசைப்பட்ட காலம் மலையேறிப்போச்சு... இது ஒரு பொழுது போக்கு எனக்கு. அவ்வளவுதான். என் மருமவப் பொண்ணுங்க எல்லா வேலையையும் பார்த்துக்கிடுதுங்க... எனக்கும் கிழவனுக்கும் ஏதாவது வேலை வேண்டாமா?... இன்னொரு தபா தண்ணி கிண்ணின்னு பேசாதே, கொயந்தே" என்பாள். பேச்சில் எப்போதும் வாஞ்சை ஓரளவு இருக்கும். உண்மையில் அம்புஜம்மாளுக்கு பால் வியாபாரம் ஒரு பொழுது போக்குதான். பிள்ளைகளின் வருவாயே போதுமானது.

February 19, 2010

ஜோக் போடுவது ஜோக் அல்ல!

இங்கு ஒரு சிரிப்பு படம் இருக்கிறது. இதன கடைசி கட்டத்தில்தான் ஜோக் இருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்றுயோசியுங்கள்!
 
விடையைப் பார்க்க அவசரப்படாதீர்கள்.
விடைக்கு சொடுக்குங்கள்!

அன்புள்ள டில்லி-- 10

ஒரு நாள் விடிகாலைப் பொழுது. டெலிபோன் மணி அடித்தது. சென்னையிலிருந்து டைரக்டர் பாலசந்தர்தான் பேசினார்.
"ஹலோ, ஒரு சந்தோஷமான சமாசாரம். நம்ப படம் 'வறுமையின் நிறம் சிவப்பி'ற்கு தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்திருக்கிறது. இப்போதுதான் பேப்பரைப் பார்த்தேன். சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள முதன்முதலில் உங்களுக்குத்தான் போன் பண்ணுகிறேன். படம் டில்லியில் தயாரிக்கப்பட்ட போது நீங்கள் செய்த உதவிகளை...'' (என் தற்பெருமையைத் தவிர்க்க மீதி வார்த்தைகளை இங்கு தரவில்லை!)
இதே ’நம்ப’ படம் ’வறுமையின் நிறம் சிவப்பு' பின்னால் பெரிய துயரத்தையும் தரப்போகிறது என்று அப்போது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.
இதை இந்தியில் எடுக்க மறுபடியும் கே.பி., கமல் அண்ட் கோ டில்லி வந்தனர். டில்லியில் சில நாள் படம் எடுத்து விட்டு சிம்லா போய்த் திரும்பினார்கள். பாலசந்தர், கமல் முதலானோர் விமானத்தில் வந்து, சென்னைக்கு சென்று விட்டனர். படப்பிடிப்புக் குழுவினர் பஸ்ஸில் டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.  இமாசல் பிரதேஷில்ஒரு பெரிய பள்ளத்தில்  பஸ்  விழ, எட்டு பேர் அனாமதேய மலைப் பாதையில் இறந்து போனார்கள். செய்தி அறிந்ததும் பாலசந்தர் மறுநாளே டில்லிக்கு பறந்து வந்து சண்டிகாருக்குச் சென்றார். காயமடைந்தவர்கள் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.  சென்னைக்குப் பயணம் செல்லக் கூடிய நிலையில் உள்ளவர்கள் எல்லாரையும் டீலக்ஸ் பஸ் ஒன்றில் ஏற்றி  டில்லிக்கு அனுப்பினார். இவர் விமானத்தில் டில்லிக்கு வந்தார். 
எல்லோருக்கும் விமான டிக்கட்
டில்லியிருந்து செய்ய வேண்டிய எற்பாடுகளை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். விமான நிலையத்தில் அவரைச் சந்தித்து, தமிழ்நாடு ஹவுஸிற்கு அழைத்துப் போனேன். "சார், யூனிட் எல்லோருக்கும் விமான் டிக்கட் வாங்க வேண்டும். யூனிட் மொத்த பேரையும் விமானத்தில் அழைத்துப் போகப் போகிறேன்'' என்றார்.
இறந்து போனவர்களின் உறவினர்களை விமானத்தில் அழைத்து வந்திருந்தார். இந்த வகையிலும் ட்ரங்க் கால், ஓட்டல் செலவு, டாக்ஸி செலவு என்று பல ஆயிரங்கள் செலவாகி இருந்தது.
"எல்லோரையும் விமானத்தில் அழைத்துக் கொண்டு போனால் செலவு பல ஆயிரம் ஆகுமே!'' என்று கேட்டேன்.
"தெரியும். தயாரிப்பாளர் தலையில் இந்தச் செலவைக் கட்டப் போவதில்லை. நானே 25000 ரூபாய் திரட்டி எடுத்து வந்திருக்கிறேன். சந்தோஷமான சமயத்திலும் சரி, சங்கடமான சமயத்திலும் சரி, அவரவர் தங்கள் குடும்பத்தினருடன் இருக்கத்தான் விரும்புவார்கள். நம்ப மாட்டீர்கள். சண்டிகர் போனதும், "எல்லாரும் விமானம் மூலம் சென்னைக்குப் போகிறோம்' என்று நான் அறிவித்ததும், பாதிப் பேருக்குக் காயங்களின் வலி மறைந்துவிட்டது. எத்தனை முகமலர்ச்சி'' என்றார்

February 16, 2010

கமலாவும் சிக்கனமும் - கடுகு

என் அருமை மனைவி கமலாவைப் போல் ஒரு சிக்கன திலகம் இருக்க முடியுமா என்ப்து சந்தேகமே! கமலாவின் பல அற்புத சிக்கன யோசனைகளைப் பலருக்கும் தெரியப்படுத்த முன்வருகிறேன். அனைவரும் பலன் பெற்று இன்புற்று இருப்பீர்களாக!
*    1958-ல் நாலு ரூபாய் எட்டணா கொடுத்து ஒரு  இரும்புப் பக்கெட்டை  கமலா வாங்கினாள்.   சில மாதங்கள் கழித்து அதன் அடியில் ஓட்டை விழுந்து விட்டது வேறு யாராவதாக இருந்தால் அதைத் தூக்கிப் போட்டு விட்டு புதிதாக ஒரு பக்கெட் வாங்கிருப்பார்கள்.. அந்த மாதிரி ஊதாரித்தனமெல்லாம் கமலாவுக்குத் தெரியாது. ஆகவே  பக்கெட்  ரிப்பேர் செய்பவனிடம் கொடுத்து அடியை வெட்டி வேறு ஒன்று போடச் செய்தாள். கொஞ்சம் உயரம் குறையுமே த்விர கிட்டதட்ட புது பக்கெட் மாதிரி ஆகிவிடும். இப்படி வருடா வருடம் செய்து வருகிறாள்.  இத்தனை வருடங்களாகியும் அதே பக்கெட் உழைக்கிறது என்றால் கமலாவின் சிக்கன முறைதான் காரணம். (ரகசியப் பின் குறிப்பு. இத்தனை வருடங்களில்  ரிப்பேருக்காக ஆன செலவு 93 ரூபாய் என்பதை நான் சொல்லப் போவதில்லை!)  எங்கள் விட்டுக்கு வந்தால் பக்கெட்டைக் காண்பிக்கிறேன். அதன் பிறகுதான் நம்புவீர்கள் ! தாம்பாளத்திற்குக் கைப்பிடி வைத்த மாதிரி இருக்கும் பக்கெட் உலகத்திலேயே எங்கள் வீட்டில் மட்டும் தான் இருக்கிறது. வருஷா வருஷம் வெட்டியதில் உயரம் குறைந்து விட்டது.  இருந்தால் என்ன, முழுதாக ஒரு டம்ளர் தண்ணீர் பிடிக்குமே!)
*    ஒரே ஒரு கெஜம் துணி வாங்கி என் மூன்று வயதுப் பெண்ணுக்குப் பாவாடை தைத்தாள் கமலா. என் பெண் மூன்று வருஷம் அதைப் போட்டுக் கொண்டாள். தழையத் தழைய இருந்த பாவாடை, கணுக்காலுக்கு ஏறி பாதி காலுக்கு ஏறி
முழங்காலுக்கு வந்து விட்டது. அதைப் பிரித்து அரை ஸ்கர்ட்டாகத் தைத்தாள். ஒரு வருஷம் கழித்து, அதைப் பிரித்து டேபிள் கிளாத்தாக மாற்றினாள். ஆறு மாதத்துக்குப் பின் டேபிள் கிளாத் ரேடியோவுக்கு உறையாக மாறியாது. பின்னும் ஒரு வருஷத்துக்குப் பிறகு அதை ஜோல்னாப் பையாகத் தைத்தாள். ஆறு மாதத்தில் ஜோல்னாப் பை நைந்து விடவே, பிரித்துச் சாதாரண  கைப் பையாகத் மாற்றினாள். ஒரு வருஷம் ஆயிற்று. கைப் பையைப் பிரித்து, சமயலறையில் உபயோகிக்க ஆறு பிடிதுணியாகத் தைத்து உபயோகித்து வருகிறாள்.

February 14, 2010

அல்லா பக் ஷ்

முப்பது  வருஷமாக அதே "பீட்'டில் தபால் வினியோகம் செய்து வரும் தபால்காரர் அல்லா பக் ஷ்.. அந்தப் பகுதி மக்களின் ஒரு பிரியமான நபர்; நண்பர். எல்லாக் குடும்பங்களின் நல்லவைக் கெட்டவைகளைத் தெரிந்து  வைத்துக் கொண்டு, தேவையான (பல சமயம் தேவையற்ற) இலோசனைகளையும் தருவார்.அவருக்கு வினியோக நேரம் என்கிற ஒழுங்கெல்லாம் கிடையாது. அவர் கொண்டு வந்து கொடுக்கிற நேரம் தான் டெலிவரி டைம் என்று நாம் வைத்துக்  கொள்ள வேண்டும்.
         வயதுக்கு மீறிய வயோதிகத் தனம். கவனிப்பாரற்ற தோட்டத்தில் வளரும் புல் மாதிரி வளர்ந் திருக்கும் தாடி, மீசை. காக்கி நிற யூனிபாரம். தலையில் குல்லாய். பளபளக்கும் பேட்ஜ். தோளில் பை. காதில் பென்ஸில். நடையில் ஒரு விந்தல்.தெருக்கோடிக்கு வரும் போதே சிலர் "என்ன போஸ்ட் மேன், லெட்டர் இருக்குதா?'' என்று அவரை அணுகிக் கேட்பார்கள்.
அருகில் உள்ள வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால் அரை மணிக்கு நகர மாட்டார். அங்கேயே போகிறவர்கள் வருகிறவர்களைக் கூப்பிட்டு வினியோகம் பண்ணிவிடுவார்!
"எலே... ஜிப்பிரமணி... இப்படி வா... இந்தக் கடிதாசியை உங்க வூட்டு மாடியிலே இருக்கிறவங்ககிட்ட கொடுத்துடு... போவச்சே டீக்கடைக்காரரை இங்கே வரச் சொல்லு... அட சொல்லுடான்னா... மணியார்டர் வந்திருக்குதுன்னு சொல்லு, உய்ந்து அடிச்சிக்கினு ஓடி வருவான்... இங்கே வந்தாதானே தெரியும் வக்கீல் நோட்டீஸ்னு... யாரு... ஜானகி அம்மாவா... கோவிலுக்கு போயிட்டுப் போவறியா... இப்படி அந்த வாழைப்பழத்தைக் கொடுத்துட்டுப் போ... லெட்டரா?... நேத்துதானே கொடுத்தேன். மருமவளுக்கு மூணு மாசம்னு சம்பத்து எழுதியிருந்ததே. இன்னிக்கு என்ன நாலு மாசம்னு கடிதாசி வருமா..?.''
"அடப்பாவி. எல்லா லெட்டரையும் படிச்சுட்டுத்தான் கொடுக்கறையா?.. உன் பேரில் கம்பளைண்ட் கொடுக்கணுமடா...''
"கொடேன்... போஸ்டல் சூப்ரண்ட் நான் பார்த்து வளர்ந்த புள்ளை.

பத்மஸ்ரீக்கு ஒரு பாராட்டு விழா - கடுகு

            டாகடர் ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்திக்கு  ( ஜே,ஆர்.கே) பத்மஸ்ரீ விருது கிடைத்தது பற்றி எழுதி இருந்தேன். வழக்கமாகப் பாராட்டு விழா நடத்தி தங்கள் படத்தைப் பேப்பபரில் போட்டுகொள்ளும் “பண்பாட்டுக் காவலர்கள்' கூட அவரைக் கண்டு கொள்ளவில்லை.
       அவருடைய தம்பி  பாக்கியம் ராமசாமி அவர்களும், டாக்டரின் பிள்ளைகளும் சேர்ந்து ஒரு குடும்பப் பாராட்டு  ப்ளஸ் சாப்பாட்டு விழா நடத்தினார்கள். ரா.கி. ரங்கராஜன், கிரேசி மோகன், எஸ், வி, சேகர்,  நகைச்சுவை எழுத்தாளர் ஜே. எஸ். ராகவன், ராணி மைந்தன். ’கல்கி’ சாருகேசி, ஹிந்து நடராஜன், அறந்தை மணியன்,  கல்கி சந்திரமௌலி, பூர்ணம் தியேட்டர்ஸ் எம். பி. மூர்த்தி, எழுத்தாளர் காந்தலக்‌ஷ்மி, புகைப்பட நிபுணர் கிளிக் ரவி, நகுபோலியன்  மற்றும் பல எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள்.
இரண்டு மணி நேரம் நடந்த  இந்த  விழாவில் பேசியவர்கள் உண்மையாகப் பேசினார்கள்; உண்மையாகப் பாராட்டினார்கள்.
             முப்பது வருடம் கழித்து ஒரு இந்திய மருத்துவ முறை டாக்டர் ஒருவருக்கு  விருது கிடைத்திருக்கிறது.  இதற்கு முன் விருது பெற்றவர் கூட டாகடர் கிருஷ்ணமூர்த்தியின் நெருங்கிய நண்பர்.
         இந்த விழாவின் ஹைலைட் : எண்பதைக் கடந்த இந்த டாக்டரின் பிள்ளைகள், மாப்பிள்ளை, நாட்டுப்பெண்,  தம்பி பிள்ளைகள்  ஆகியவர்கள்  பேசியவைதான். எல்லாரும் இருதய டாக்டர்கள், எம். பி. ஏ. பட்டம் பெற்றவர்கள்,  குழந்தை மருத்துவர்கள் மற்;றும் உயந்த பதவியில் இருக்கும் எளிமையானவர்கள். ( டாக்டரிடமிருந்து எளிமை ’தொற்றி’ கொண்டிருக்க வேண்டும்!)
         அவருடைய பிள்ளைகள் கூறியது: எங்கள் அப்பாதான் எங்களுக்கு  ரோல் மாடல். அடுத்த ஜன்மத்திலும் அவருக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் எனபதே.  எங்கள் பிரார்த்தனை. மாப்பிள்ளையும் ”அவர்தான் ரோல் மாடல்” என்று சொன்னார். மருமகள் கவிதை படித்தார். “ மாமாவால்தான் என்  பிள்ளகளையும் நான் முன்னுக்கு கொண்டு வர முடிந்தது” என்று ஒரு மருமான்(60+)  பேசினார்.
       இந்த குடும்பம் ஒரு நிகரில்லாப் பல்கலைக் கழகம் ( கவனிக்கவும்: நிகர்நிலைப்  பல்கலைக்  கழகம்’ என்று  நான் மறந்துபோய்கூட சொல்லாததை!)
பின் குறிப்பு: படத்தில் நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி அவர்கள் இல்லை. படம் அவர்தான் எனக்கு அனுப்பினார்.  பாருங்கள், தான் இல்லாத படங்களைப் பொறுக்கி எடுத்து அனுப்பி இருக்கிறார். எளிமை என்பது இதுதான்!

February 12, 2010

சோவின் அப்பாவும் நானும் -- கடுகு

” சோவும் நானும்” என்று ஒரு கட்டுரை எழுதத்தான் ஆரம்பித்தேன். அப்போது அவருடைய அப்பா என் நினைவுக்கு வந்தார். ஆகவே கட்டுரையின் தலைப்பை ”சோவின் அப்பாவும்  நானும்” என்று மாற்றிவிட்டேன்.. சோவைப் பற்றி வேறொரு கட்டுரையைப் பின்னால் எழுதுகிறேன்.
*               *                  *                   *
               சோவின் அப்பா திரு சீனிவாச ஐயர் ஒரு அட்வகேட். எப்போது  .  அவர் சென்னையை விட்டு செங்கற்பட்டுக்கு அருகில் மூன்று மைல் தூரத்தில் இருந்த ஆத்தூர் கிராமத்திற்கு வந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஐம்பதுகளில் அங்கு நிறைய நிலங்களை வாங்கி பெரிய அளவில் நவீன முறையில் விவசாயம் பண்ண ஆரம்பித்தார்- கிட்டத்தட்ட தனி ஆளாக! 


(இவருடைய பண்ணைக்கு  கல்கி விஜயம் செய்ததையும், அதைப் பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியதையும் ஏற்கனவே டாம் டாம் பண்ணி இருக்கிறேன்!)
           அவருடைய பண்ணை வீட்டில்ஒரு பெரிய சுவரில்,  கருப்பு வர்ணம் அடித்துக் கட்டங்கள் போட்டு, வயல்களைப் பற்றிய விவரஙகள், எந்தெந்த பயிர்கள் சாகுபடி ஆகின்றன, என்றைக்கு உரம் இட வேண்டும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும் போன்ற பல புள்ளி விவரங்கள் குறிக்கப்பட்டு இருக்கும். இண்டர்காம் டெலிபோன்களை வயல்களில் கொம்பு நட்டு வைத்திருப்பார்.”முருகேசா, பம்ப் போட்டு அரை மணி ஆச்சு. மடை மாத்திடு” என்று போனில் சொல்வார்.
“என் பண்ணைக்குள் உப்பும். கிரசினும், உங்களை போன்ற் உதவாக்கரை ஆசாமிகளும்தான் வெளியிலிருந்து வரவேண்டும்” என்று நண்பர்களிடம் த்மாஷாகக் கூறுவார். தீவிர விவசாயி என்ற முறையில் வெளிநாடுக்ளுக்குச் சென்று வந்திருக்கிறார். அப்போதும் தன் கட்டுக்குடுமியை அவர் எடுக்கவில்லை.

February 11, 2010

அன்புள்ள டில்லி - 9

பிரபல பத்திரிகையின் ஆசிரியர் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்; பெரிய நிறுவனத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை. ஆகவே அவர் பணம் கேட்டவுடன் கொடுக்கத்தான் தோன்றியது. கொடுத்தேன். அதே சமயம் சங்கடத்தை விலை கொடுத்து வாங்கினேன்.
சென்னை திரும்பியதும், அவர் என்னை மறந்து விட்டார். சுமார் மூன்று
மாதங்கள் பொறுத்துப் பார்த்துவிட்டுக் கடிதம் போட்டேன். பதில் இல்லை. அப்புறம் போன் பண்ணினேன். டில்லியிலிருந்து போன் என்றால் "இல்லை' என்று சொல்ல அந்த போனுக்கே பழக்கப்படுத்தி விட்டாரோ என்னவோ, சுலபமாக அகப்படவில்லை. சக பத்திரிகை ஒன்றிலிருந்து பேசுவதாகப் பொய்சொன்ன போது  போனில் அகப்பட்டார். "அடேடே பணம்தானே! ஏழாம் தேதி அனுப்பி விடுகிறேன்'' என்றார். (அவர் சொன்ன தினத்தின் தேதி எட்டு!)
நானும் பொறுமையாக இருந்து, பிறகு பல தடவை போன் செய்தேன். (டில்லி-சென்னை எஸ்.டி.டி. வாழ்க!) ஒவ்வொரு தடவையும் ஏதாவது கற்பனையாகச் சொன்னார். (எழுத்தாளராயிற்றே, கற்பனை இல்லாமல் இருக்குமா?)
சென்னை நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவரும் பில் கலெக்டர் மாதிரி சென்று வசூல் செய்ய முயற்சி செய்தார். ஆனால் பணம் என்னவோ வரவில்லை.
சுமார் எட்டு மாதங்கள் போய்விட்டது. அப்புறம் ஒரு நாள் போனில் அகப்பட்டார். அவர் சொன்னார். "உங்கள் பணம் டிராஃப்ட் வாங்கி அனுப்பி விட்டேன். நேற்று அனுப்பினேன். உங்களுக்கு ஓரிரு நாளில் வந்து விடும்... அப்படி வராவிட்டால் (!!), தபாலில் தொலைந்து போனால் (!!!) சொல்லுங்கள். உடனே ட்யூப்ளிகேட் வாங்கி அனுப்பி விடுகிறேன்'' என்றார். இப்படி இவர் சொன்னபோதே  அப்பன் குதிருக்குள் இல்லை என்று அவர் சொல்கிறார் என்று தெரிந்து விட்டது.. டிராஃப்ட் ’எதிர்பார்த்தபடி' வரவில்லை.

இரண்டு மாதம் கழித்து சென்னை வந்தேன். அவர் அலுவலகத்திற்குப் போனேன். என்னை பார்த்தும் அவருக்கு ‘ஷாக்’!

February 09, 2010

கமலாவும், கர்நாடக சங்கீதமும் -- கடுகு

இன்று கர்நாடக இசை உலகில் முன்னணியில் இருப்பவர்கள் கமலாவிற்கு, அதாவது என் அருமை மனைவிக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள். கமலாவிற்குக் குரல் வளமும், இசை ஞானமும், கற்பனா சக்தியும் இருந்திருந்தால், அவள் எல்லாரையும் சாப்பிட்டு இருப்பாள். துரதிர்ஷ்டம். இந்த மூன்றும் அவளுக்குத் துளிக்கூட இல்லை. அதைவிட துரதிர்ஷ்டம்! இந்த மூன்றும் தன்னிடம் இருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருப்பது தான். நினைப்பதோடு இருந்தால் பரவாயில்லையே.  பாடவும் ஆரம்பித்து விடுவாள்!
அதுவும் டிசம்பர் வந்துவிட்டால் போதும், எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிடும்.
"ஏன்னா, உங்களைத்தான், பரணிலிருந்து ஆர்மோனியத்தை எடுத்துக் கொடுங்கள். நாலு நாள் சாதகம் பண்ணினால், திருவையாறு போனால் பாட முடியும்'' என்பாள். பரணிலிருந்து ஆர்மோனியத்தை எடுக்கும்போது அதில் வாசம் செய்யும் எலிக் குடும்பம் தாறுமாறாக ஓடிக் கீழே குதித்து ஓடும். அதைக் கண்டு பயந்து கமலா கத்துவாள். இந்தக் கத்தலைக் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரர்கள், "கமலா மாமி, சங்கீதம் சாதகம் செய்கிறாள்'' என்று பேசிக் கொள்வார்கள்!
ஹார்மோனியத்தை சுருதி கூட்டிக் கமலா பாட ஆரம்பிப்பாள். அதைக் கர்நாடக இசை என்பதைவிட கர்நாடக இ(ம்)சை என்று கூறுவதுதான் சரி.
அப்போது நான் ரேடியோவை உரக்கப் போட்டு விடுவேன்.
உடனே கமலா, "அடடா... கொஞ்ச நேரம் நிம்மதியாகப் பாட முடியாது... உங்களைத்தான்! நான் பாடறது காது கேட்கலை?'' என்பாள்.
"கேட்கிறது கமலா, நல்லா கேக்கிறது. அதனால்தான் ரேடியோவைப் போட்டேன்'' என்று முணுமுணுத்து விட்டு, ரேடியோவை நிறுத்துவேன்.
இரண்டு நிமிஷம்கூட "ஸ ப ஸ' என்று பாடியிருக்க மாட்டாள். அதற்குள் ஹார்மோனியத்தின் ஏதோ ஒரு கட்டை சுயாட்சி பெற்று, தன்னிச்சையாக உரிமைக் குரலை எழுப்பும். (கமலாவின் கட்டைக் குரலுக்கு ஆர்மோனியக் கட்டையின் குரல் எவ்வளவோ தேவலாம் என்பேன்.)
கமலா உடனே, 5 கட்டை சுருதியில், "உங்களைத் தானே'' என்று கத்துவாள். கமலா பாடும் போது சுருதி சேராது. ஆனால் இப்படிக் கத்தும் போது சுருதி சுத்தமாகச் சேரும்!
"உங்களைத் தானே. இதைக் கொஞ்சம் சரி செய்யுங்களேன்.''நான் அதை சரி செய்வேன்.

February 07, 2010

அன்புள்ள டில்லி -- 8

கரண் சிங்கின் திறமை
டில்லியில் இருந்த போது, எம்.பி.க்களுடன் ஒரு சில அமைச்சர்களைத் தனிமையில் சந்தித்து இருக்கிறேன். அப்படி நான் சந்தித்த அமைச்சர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர் டாக்டர் கரண் சிங்.
தமிழர்கள் நடத்தும் கலை, கலாசார, இலக்கிய விழாக்களில் இவர் அதிகம் பங்கு கொள்வார். (அதாவது அவரைப் பங்கு கொள்ளச் சொல்வார்கள்.) அழகாக உரையாற்றுவார். ஜபர்தஸ்து எதுவும்  இருக்காது. அமைச்சராக இருந்த போதும் பலரை அவர் கவர்ந்தார்.
         ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்.. இது என் சொந்த அனுபவம்.  ஒரு சமயம் நான் ஒரு துக்ககரமான சூழ்நிலையில் டில்லியிலிருந்து அஸ்ஸாமில் உள்ள ஜோர்ஹட் நகருக்கு விமானத்தில் போக வேண்டியிருந்தது. ராணுவ டாக்டரான என் சிறிய சகோதரன் (26) சென்ற விமானம் அஸ்ஸாம்- சீனா எல்லையில் எதிரி குண்டுகளுக்கு பலி ஆனது. முன் தினம் பங்களாதேஷ் போர் முடிந்திருந்தது..ஈமக் கடன்கள் செய்ய நான் போக வேண்டியிருந்தது          
பதினைந்து நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலகத்தா விமான சேவை அன்று தான் துவங்கி இருந்தது. ஆகவே கல்கத்தா விமானத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை. ,உயர் ராணுவ அதிகாரிகளின் சிபாரிசில் டிக்கெட் கிடைத்தது. விமானம் கிளம்பப் பத்து நிமிஷத்திற்கு முன்புதான் விமான நிலையத்திற்குப் போக முடிந்தது. செக்-இன் பண்ணும் போது. பெட்டியை விமானத்திற்கு அவசரமாக அனுப்பும்படிச் சொல்லிவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடி விமானத்தை அடைந்தேன். (அந்த காலத்தில் விமானத்தின் கீழே எல்லா பெட்டிகளும் சேர்த்து  வைக்கப்பட்டிருக்கும். பயணிகள் தங்கள் பெட்டிகளை அடையாளம் காட்டிய பிறகுதான்  விமானத்திற்குள் ஏற்றுவார்கள். பாதுகாப்புக்காக இப்படி ஒரு ஏற்பாடு. விமானத்தில் ஏறியதும், நான் ”பெட்டி ஏறிவிட்டதா என்று தெரியவில்லயே. நான் அடையாளம் காட்டவில்லையே” என்று டிராபிக் அசிஸ்டென்டிடம் சொன்னேன். . "அதெல்லாம் வந்திருக்கும். இப்போது செக் பண்ண நேரமில்லை. சீட்டில் உட்காருங்கள்'' என்றார்.
"எப்படி சார் வந்திருக்கும்? நானே ஓடி வந்திருக்கிறேன். பெட்டியை உங்கள் ஆட்கள்தானே கொண்டு வர வேண்டும்?''
"சார் வீணாக விவாதம் செய்யாதீர்கள். பைலட் விமானத்தைக் கிளப்ப அவசரப்படுத்துகிறார்'' என்றார். அந்தச் சமயம் பைலட்டும் வந்து, "இனிமேல் டிலே பண்ண முடியாது'' என்றார். டிராபிக் அதிகாரி, "சார்..பெட்டி, கிட்டி என்று தகராறு பண்ணினால், உங்களை இறக்கிவிட்டு பிளேனைக் கிளப்பி விடுவோம்'' என்றார்.
"என்னப்பா, டிக்கெட் வாங்காதவன் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள? என் தம்பி ஒரு ஃப்லைட் லெஃப்டினென்ட். டாக்டர். இந்த யுத்தத்தில் செத்து விட்டான். அவனுக்கு ஈமக்கடன்கள் செய்யப் போகிறேன். உங்களுக்கு இரக்கமே கிடையாதா? பெட்டி, துணிமணி இல்லாமல், முன்பின் தெரியாத ஊரில் நான் என்ன செய்வேன்?'' என்று கதறினேன்.

February 05, 2010

ஜோதி ஆசீர்வாதம் -- கடுகு

அந்த போர்டு ஸ்கூல் மணி "ணங் ணங்' என்று அடித்ததைத் தொடர்ந்து ஊளையிட்டுக்கொண்டு வரும் சிறுவர், சிறுமியர் பட்டாளத்தின் பின்னால் ஒற்றை நாடியாக, சராசரிக்கும் அதிகமான, உயரமாக, கொசுவம் வைத்த உயரக்கை ப்ளவுஸும், ப்ரூச்சில் கொசுவப்பட்ட பூப்போட்ட புடவையுமாக, தலையில் பிச்சோடாவும், கையில் குடையுமாக வருபவர் தான் பள்ளிக் கூடத்தின் "மிஸ்' ஸான திருமதி ஜோதி ஆசீர்வாதம். அவர் பெயர் ஜோதி என்பதே பலருக்குத் தெரியாது. காரணம், அந்த சின்ன ஊரில் ஒரே பள்ளியின்
"மிஸ்'ஸாக  இருபது வருடங் களாக இருப்பதால் ஊராருக்கு அவர் "மிஸ்' தான். ஆனால் சில சமயம் மிஸ்ஸுக்கு வேறொரு பெயரும் தரப்படும். "நர்ஸ்'! ஆம், பிரசவம் பார்க்கத் தெரிந்த ("மெட்ராஸ் ஜி.எச்.லே நானு ட்ரெய்னிங்கு எடுத்தேன், ஆம்மாம்.'') ஒரே பெண்மணி அவர். படிப்பு அறியாத பெண்கள் இவரை நரசம்மா என்றும் அழைப்பார்கள்.
"என்ன. பாப்பம்மா, நரசம்மா நரசம்மாவுன்னுக் கூப்பிடறே, நர்ஸ் என்று சொல்ல என்னிக்கித்தான் நீங்க கத்துக்கப் போறீங்களோ? நாளைக்கு நரசிம்மான்னு கூட கூப்பிட ஆரம்பிச்சுடுவீங்க. ஒங்களைக் கர்த்தரு தான் காப்பாத்தணும்... அதிருக்கட்டும், இன்னா விஸயம்? இஸ்கோல் இன்ஸ்பெக்டர் வராரு. வேலை இருக்குது. பேஸ்ஸிக்கிட்டு இருக்க நேரமில்லை. ஸமையல் ஸெய்யக்கூட நேரமில்லாமல் ரெண்டு கேக்கைத் துண்ணுட்டு போய்க்கிட்டிருக்கேன் ஸ்கூலுக்கு... இன்னா சொல்றே, ஒம் பொண்ணு வந்திருக்குதா? ஆயிடுச்சா மாஸ்ஸம். வலி எடுத்ததும் சொல்லியனுப்பு.  ஆமாம், அதிருக்கட்டும், உம் பொண்ணுக்குத் தானே போன வருஸம் பொங்கலன்னிக்குக் குளந்தை பொறந்திச்சு. மறுபடியும் பொங்கலுக்கு வந்திருக்குதா? ஸரியாப் போச்சு, வருஸா வருஸம் மாரியம்மனுக்குக் கூழ் வார்க்கறாப் போல வருஸா வருஸம் எனக்கு பீஸ் கொடுக்கறே.....''

கமலாவும் நகைகளும் - கடுகு

  என் அருமை மனைவி கமலாவைப் பற்றி நான் சதா குறைப்பட்டுக் கொண்டு இருப்பதாகத் தான் பலர் நினைக்கிறார்கள்.
    "ஏனய்யா... உம்ம ஒய்ஃபைப் பற்றி உசத்தியாகச் சொல்ல எதுவுமே கிடையாதா? அவனவன் தன் மனைவியைப் பற்றி எத்தனை பெருமை பீற்றிக் கொள்கிறான்? வார்த்தைக்கு வார்த்தை "என் மனைவி ஒரு காரியம் செய்தால் அதைப் போல் வேறு யாரும் செய்ய முடியாது' என்கிற ரீதியில் ஜம்பமடித்துக் கொள்கிறான்?'' என்று சற்றுக் காராசாரமாக என் நண்பர் என்.ஆர்.கே. கேட்டார்.
    அவர் கேட்டது எனக்கு உரைத்தது. யோசித்துப் பார்த்தேன். அப்போது என் தலைக்குள் சடாரென்று பல்ப் எரித்தது. ஞானோதயம் உண்டாயிற்று. கமலாவின் அருங்குணங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
    அப்போது தான் எனக்கே தெரிந்தது. கலியாணம் ஆகி இத்தனை வருடங்களாகியும் அவள் ஒரு நகை கூட வாங்கிக் கொடுக்கும்படி கமலா என்னைக் கேட்டதில்லை! சற்றுப் பின்னோக்கிப் போய் யோசிக்கிறேன்.
கலியாணம் ஆகி சரியாக ஒரு வருஷம் ஆயிற்று!
    "என்ன கமலா, இன்னிக்கு நம் மேரேஜ் ஆனிவர்சரி... ஏதாவது ஒரு சின்ன நகை வாங்கித் தருகிறேன். அரை சவரனில் நெளி மோதிரம் வாங்கித் தரட்டுமா?'' என்றேன்.
    "நீங்க ஆசையாய்க் கேட்டதே  எனக்குக் காசுமாலை பண்ணிப் போட்டதற்குச் சமம். மோதிரம் போட்டுக் கொண்டு மினுக்கற ஆசை எல்லாம் கிடையாது. இருந்தாலும் உங்க ஆசைக்கு, அதுக்குப் பதிலா ஒரு ஸ்டீல் பீரோ வாங்கிக் கொடுத்துடுங்கோ'' என்றாள்.     ’அதுக்குப் பதிலாக' என்று சொல்லியிருக்க வேண்டாம். ஒரு பீரோவை வாங்கிக் கொடுத்தேன்.

February 03, 2010

பத்மஸ்ரீ விருது பெற்ற ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி?

யார் இவர்? வழக்கம் போல்,  நமது பத்திரிகைகள் (தினமணி நீங்கலாக) இந்தத் தமிழரைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.  இவர் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் (ஜலகண்டபுரம் ராமசாமி சுந்தரேசன் - ஜ. ரா.சு)  சொந்த சகோதரர். டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை பற்றி பிரபல எழுத்தாளர்  குமுதம் ரா.கி. ரங்கராஜன்.  அண்ணா நகர் டைம்ஸில்  எழுதியுள்ளார். அதை இங்கு தருகிறேன். .அண்ணா நகர் டைம்ஸிற்கு நன்றி          -- கடுகு
=======================
சென்ற ஜனவரி இருபத்தாறாம் தேதி நான் சொல்லவொண்ணா சந்தோஷத்தில் இருந்தேன்.
‘குடியரசு தினத்தன்று சந்தோஷமாக இல்லாமல் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டா இருப்பீர்கள்?’ என்று கேட்காதீர்கள். என் சந்தோஷத்துக்குக் காரணம் குடியரசு தினம் மட்டுமல்ல; என் மதிப்புக்குரிய பிரியமான நண்பர் டாக்டர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு அன்று பத்மஸ்ரீ விருது வழக்கப்பட்டிருந்தது.
  பேப்பரில் ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி என்று நீளமாகப் போட்டிருந்தாலும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அவர் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ‘குன்றத்தூர் டாக்டர்’தான். இந்நேரம்
எல்லோருக்கும் தெரிந்திருக்கும் டாக்டர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி நகைச்சுவைப் பேரரசு ஜ. ரா. சுந்தரேசன் என்ற பாக்கியம் ராமசாமியின் தமையனார் என்பது. புரசைவாக்கம் வெள்ளாளத் தெரு, 116ம் எண் வீட்டின் முன்பக்கத்து அறையில் சகோதரர்கள் இருவரும் வசித்து வந்தார்கள். இரண்டு பேருமேபிரம்மசாரிகள். ஆனால் ஒண்டிக்கட்டைகள் அல்ல.
ஏதோவொரு மாபெரும் குடும்பம் அங்கே குடியிருப்பது போல இளைஞர்களின் அட்டகாசமும் இரைச்சலும் அட்டூழியமும் அமர்க்களப்படுகிற அறை அது. இன்னார்தான் வருவார். இன்னார்தான் போவார் என்ற விவஸ்தை கிடையாது. நிரந்தர அறைவாசியாக ஒருத்தர் இருந்தார். என்னவோ ஒரு ராவ். இவர் ஒருவர்தான் எங்கள் அமர்க்களங்களில் ஈடுபடாதவர். சீரியஸான பேர்வழி. விருட் விருட்டென்று சுந்தரேசனும் புனிதனும் நானும் எழுதுவதைப் பார்த்துவிட்டு ‘பூ! கதை எழுதுவதென்றால் இவ்வளவுதானா! நான் என்னமோ பெரிசாய் நினைத்திருந்தேன்!’ என்று வாய் விட்டே ஒரு நாள் சொன்னார்.

கமலாவும் 'கண்மணி'யும்

என் அருமை மனைவி கமலாவிற்கு அப்படி ஒரு ஆசை தோன்றியிருக்க வேண்டாம். ஒரு நாய்க் குட்டியை வளர்க்க வேண்டும் என்று ஒரு நாள் சொன்னாள்.

ஆசைதான் எல்லா துன்பங்களுக்கும் காரணம் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் கமலாவின் ஆசை, என் துன்பங்களுக்குக் காரணமாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. (எதிர்பார்த்திருந்தாலும் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பது வேறு விஷயம்!)
கமலா தினமும் ஏதாவது ஒரு கிளப், அமைப்பு, குழு, சங்கம்,  நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாள். மாதர் இசைக்குழு, சமையல் ராணி குரூப், சமூக சேவை மன்றம், தையல் பிரியர்கள் குழு, யோகா கிளாஸ் என்று போவாள். ஒவ்வொரு நாளும் போய்வந்த பிறகு எனக்குச் சின்னதும் பெரியதுமாய்ச் செலவு வைப்பாள். புது புடவை, வித்தியாசமான டீப்பாய், மாடர்ன் ஓவியம், நவ திருப்பதி சுற்றுலா என்று  பல பல! எப்படி அவளுக்கு  நாய் வளர்க்கும் ஆசை ஏற்பட்டது என்று தெரியவில்லை. அதைத் தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதால் அதைப் பற்றி யோசிக்காமல், நாய்க்குட்டி எங்கு கிடைக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
"என்ன நாய் உனக்கு வேண்டும்? நல்ல ஜாதி நாய் என்றால் பணம் செலவாகுமே!''
"தெருக்கோடி குப்பைத் தொட்டிகிட்ட ஒரு கறுப்பு சொறி நாய்க்குட்டி இருக்குது. அதை எடுத்துட்டு வந்துடுங்கோ... செலவே இருக்காது.... இல்லாவிட்டால் ஒண்ணு செய்யுங்க. இப்பதான் எங்கே பார்த்தாலும் ”ஓ.... போடு' ’ஓ.... போடு' என்று கத்தறாங்களே... அதனால் நாய்க்கும் ஒரு "ஓ' போட்டு ஒரு ஓநாய்க்குட்டி வாங்கி ண்டு வந்துடுங்க... அது என்னை நன்னா பிராண்டிடும். உங்களுக்குப் பால் பாயசம் சாப்பிட்ட மாதிரி இருக்கும்!'' என்றாள் கமலா!

கல்கியும், பக்தியுடன் நானும் -- கடுகு

,ஒரு சிறிய முன்னுரை.
இந்த தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இட்லி-வடையில் சமீபத்தில் பிரசுரமாயிற்று. உங்களில் பலர் படித்து இருப்பீர்கள். இருந்தாலும் அதை - அவர்கள் அனுமதியுடன் இங்கு போடுவதற்கு இரண்டு காரணங்கள்:
முதலாவது: கல்கி அவர்களைப் பற்றி என் பதிவில் இல்லாவிட்டால், எனக்கு விமோசனமே கிடையாது!
இரண்டாவது: இட்லி வடையில் எழுதிய போது, கட்டுரை அதிக நீளமாகிவிடப் போகிறதே என்ற அச்சத்தில், சில செய்திகளை எழுதவில்லை. இப்போது என் பதிவில் அவைகளையெல்லாம் சேர்த்திருக்கிறேன்.  ஆகவே முழுமையாக மீண்டும் படியுங்கள்.  கல்கியை பற்றி எத்தனை தடவைப் படித்தாலும் நல்லதுதான்.
என்னுடைய தாளிப்புப் பதிவை டிசம்பர் 5’ம் தேதி துவக்கினேன். காரணம் அது கல்கி என்னும் அரிய தமிழனின் நினைவு தினம்

-------------------------                              +++++++++
நான் எழுதிய எல்லா புத்தகங்களின் முன்னுரைகளிலும் கீழ்கண்ட வாசகம் இருக்கும். ஏதோ ஒப்புக்கோ, என்னைப் பற்றி உயர்வான எண்ணம் படிப்பவர்களின் மனதில் தோன்ற வேண்டும் என்பதற்காகவோ எழுதப்பட்டதல்ல இது!

என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை , சிரத்தால் வணங்கி , கண்களில் ஒற்றிக் கொண்டு இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி எனக்கு என்றும் கிடைப்பதாக!.

கல்கி அவர்கள்தான் எனக்குள் எழுத்தார்வத்தை விதைத்தார். முதல் முதலில் 1952’ல் பொன் விளையும் பூமி என்ற கட்டுரையை கல்கியில் வெளியிட்டார். (இந்தக் கட்டுரையை எழுத எனக்கு எப்படி வாய்ப்பு வந்தது  என்பதைப் பின்னால் சொல்லுகிறேன்.) ’தம்பி உனக்கு எழுத்துத் திறமை இருக்கிறது’ என்பதை "பேஷ்" என்று ஒரே வார்த்தையில் சொல்லி எனக்கு ஊக்கமளித்தவர் அவர். என் பூஜையில் உள்ள அவரது படம். 12. 12. 1954. தேதியிட்ட ( கல்கி அவர்கள் மறைந்த அடுத்த வாரம்) விகடனில் வெளியான அட்டைப்படம், அந்தப் படம், அந்த காந்த சக்தி அவ்வப்போது அசரீரி மாதிரி ’பேஷ்’ என்று சொல்லி என் ஆர்வத்திற்கு உரமிட்டு வந்து கொண்டிருக்கிறது.

கல்கி அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு இரண்டு வருடங்களே தான் கிடைத்தது. 1952’ல் கீழ்ப்பாக்கம் குருசாமி ரோடில் கல்கி அலுவலகத்தில்
அவரை முதல் முதலாகச் சந்தித்தேன். அதற்குப் பிறகு பல முறை சந்திக்க  வாய்ப்புகள் கிடைத்தன. அந்த இரண்டு வருடங்களை எப்படி நான் மறக்க முடியும்.! புத்தி தெரியும் பருவத்திலிருந்த எனக்கு அந்த சந்திப்புகள் போதித்த பாடங்கள் ஏராளமானவை!

February 01, 2010

ஜயச்சந்திரன் -கடுகு

"இந்த வாட்டர் பிராப்ளம் இப்படிப் படாத பாடு படுத்துகிறது. இதைச் சுலபமா சால்வ் பண்ண முடியும். அமெரிக்காவிலிருந்து ஆளுங்களை வரவழைக்க வேண்டிய அவசியமில்லை..
"கடலில் தண்ணீர் இருக்கு. அதிலிருக்கிற உப்பைப் பிரிச்சு எடுத்தால் போதும். உப்புக்கு உப்பும் கிடைக்கும்;  குடி தண்ணீரும் கிடைக்கும். பிரிக்கிறதுதான் முக்கியம்.
"அணுவை எப்படிப் பிளந்தான்? அதே பிரின்ஸிபள்தான். ஒரு எலக்ட்ரானிக் முறையில் பிரிச்சுடலாம்.
"தண்ணீரையும் பாலையும் கலந்து வெச்சால் அன்னம் எப்படி பாலை மட்டும் குடிக்கிறது? கேவலம் ஒரு பறவை செய்யற காரியத்தை மனுஷனால் செய்ய முடியாதா? நான் யோசிச்சேன். இதுக்காக நூற்றுக்கணக்கான அன்னங்களை வாங்கி ஆராய்ச்சி பண்ணினேன். அந்த சமயத்தில் தான் கடல் தண்ணீரைப் பிரிக்கிற மெதட் தெரிஞ்சது.
"நம்மவங்க என் ஐடியாவை அலட்சியம் பண்ணிட்டாங்க. அதை அமெரிக்காவிற்கு அனுப்பி வெச்சிருக்கேன்.
"இரும்பு இல்ல இரும்பு.  அதில் எப்படி துரு பிடிக்கிறது? தண்ணீர் படவே தான். சரி, துருவை எடுத்துக் கொண்டு அதை ஒரு முறைப்படி பிராஸஸ் பண்ணால், நிச்சயம் இரும்பும் தண்ணீரும் கிடைக்கும். இதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறேன்